FLING 29
லண்டனின் அந்தப் பனிக்காலக் காலைப் பொழுது, வழக்கத்தை விடக் கூடுதலாகக் குளிர்ந்து காணப்பட்டது. ஆனால், அகலிகாவின் மனதிற்குள் ஒரு கனல் எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழியாகத் தெரிந்த மூடுபனியைப் பார்த்தபடி நின்றிருந்தவளின் கண்களில் ஒரு தெளிவு பிறந்து இருந்தது. கடந்த பல மாதங்களாகத் தீரனின் பிடியில் சிக்கி, ஒரு பொம்மையைப் போல ஆட்டிப்படைக்கப்பட்ட அகலிகா, இன்று ஒரு முடிவோடு இருந்தாள்.
“இனி முடியாது… இந்த நிழல் வாழ்க்கை எனக்கு வேண்டாம்,” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அவள் குளித்துவிட்டு, குளிருக்கு இதமான உடையைத் தேர்ந்தெடுத்தாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தபோது, கண்களுக்குக் கீழே இருந்த கருவளையங்கள் அவள் இழந்த தூக்கத்தைச் சொல்லின. ஆனால், இன்று அவள் விழிகளில், முகத்தில் ஒரு உறுதி தெரிந்தது. முகேஷைச் சந்திக்கும்போது அவனது கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்த அந்தத் தவிப்பிற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அங்கே ஒரு விழாக்கோலம் போலத் தெரிந்தது. அகலிகாவின் இதயம் வேகமாகத் துடித்தது. ‘இன்று தான் கடைசி நாள்… தீரனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும்’ என்று எண்ணியபடியே தன் இருக்கைக்குச் சென்றாள்.
அங்கே முகேஷும், ரியாவும் ஏதோ ஒரு கோப்பைப் பார்த்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். முகேஷ் அகலிகாவைப் பார்த்ததும் மலர்ச்சியுடன் கையை அசைத்தான்.
“குட் மார்னிங் அகலிகா! இன்னைக்கு ரொம்ப பிரைட்டா இருக்கே?” என்றான் முகேஷ்.
அகலிகா ஒரு செயற்கையான புன்னகையை உதிர்த்தாள். “ஆமா முகேஷ்… ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும். ஆனா அதுக்கு முன்னாடி நான் தீரன் சாரைப் பார்த்துட்டு வந்திடுறேன்.” என்றாள்.
“கண்டிப்பா அகலிகா, தீரன் கூட உன்னைத் தான் தேடிட்டு இருந்தான் . ஏதோ முக்கியமான அப்டேட் இருக்குன்னு நினைக்கிறேன்,” என்றான் முகேஷ் எதையும் அறியாதவனாய்.
அகலிகா தீரனின் அறையை நோக்கி நடந்தாள். அந்தப் பளிங்குத் தரையில் அவளது காலணி எழுப்பிய சத்தம், அவளது இதயத் துடிப்பைப் போலவே அழுத்தமாகவும் , வேகமாகவும் இருந்தது. அந்தக் கண்ணாடி அறை… அவளது ரகசியங்களின் சிறைக்கூடம் என்று தான் அவளுக்கு தோன்றியது.
அகலிகா கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். தீரன் தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவளது வருகையை அவன் ஏற்கனவே உணர்ந்திருந்தான்.
அகலிகா அவன் அறைக்கதவை தட்டி உள்ளே அவரை அனுமதி கேட்டாள்.
“உள்ளே வா ,” என்றான் தீரன், அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல்.
அகலிகா அவன் முன்னே போய் நின்றாள்.
“தீரன், நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். இது நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலான விஷயம்.”என்றாள் .
தீரன் மெதுவாகத் திரும்பி அவளைப் பார்த்தான். அவனது கண்களில் எப்போதும் இருக்கும் அந்த ஆதிக்கம் இப்போது மங்கிக் காணப்பட்டது. “சொல்லு அகலிகா, என்ன விஷயம்?” என்றான்.
அவன் கண்களில் தெரிந்த அமைதி அகலிகாவை அசைத்தது.
அகலிகா மூச்சை ஆழமாக இழுத்துவிட்டுப் பேசத் தொடங்கினாள். “நான் முடிவெடுத்துட்டேன். இனி இந்த உறவு வேண்டாம். நீங்க என்னை பிளாக்மெயில் பண்ணி உங்க கூட வச்சிருக்கிறது எனக்கு நரகமா இருக்கு. நான் முகேஷ்கிட்ட எல்லா உண்மையும் சொல்லப் போறேன். அவன் என்னை மன்னிச்சாலும் சரி, வெறுத்தாலும் சரி… ஆனா நான் இந்தப் பொய்யான வாழ்க்கையை வாழ விரும்பல. நீங்க என்ன செஞ்சாலும் சரி, நான் பயப்படப் போறது இல்லை.” என்றாள் தீர்க்கமாக .
அவள் பேசி முடித்ததும் ஒரு பெரிய பாரம் அவளது நெஞ்சிலிருந்து இறங்கியது போல உணர்ந்தாள். அவள் தீரனின் கோபத்தை எதிர்பார்த்தாள். அவன் கத்துவான் அல்லது மீண்டும் மிரட்டுவான் என்று நினைத்தாள்.
ஆனால், தீரன் அமைதியாக இருந்தான். அவனது உதடுகளில் ஒரு மெல்லிய, வேதனையான புன்னகை அரும்பியது.
“அகலிகா! ஒரு நிமிஷம்! நீ இந்த முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி, இது உனக்குத் தேவைப்படும்,” என்று கூறி, தனது மேசை மீது இருந்த ஒரு நீல நிறக் பைலை அவளிடம் தள்ளினான்.
அகலிகா சந்தேகத்துடன் அந்தப் ஃபைலைப் பிரித்தாள். முதல் பக்கத்திலேயே பெரிய எழுத்துக்களில் ‘REPATRIATION & TRANSFER ORDER’ என்று இருந்தது.
அவள் வரிகளை வாசிக்க வாசிக்க, அவளது கண்கள் விரிந்தன. அது அவளை லண்டன் கிளையிலிருந்து விடுவித்து, இந்தியாவில் உள்ள சென்னைத் தலைமை அலுவலகத்திற்கு உடனடியாகத் திரும்ப அனுப்பும் ஆவணம். அதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டிருந்தன.
“இது… இது என்ன தீரன்? டிரான்ஸ்பர் ஆர்டரா?” என்று திகைப்புடன் கேட்டாள்.
“ஆமாம் அகலிகா. நீ கேட்ட விடுதலை,” என்றான் தீரன் மெல்லிய குரலில்.
“ஏன்? எதுக்காக திடீர்னு இப்படி ஒரு முடிவு? நான் இங்க ப்ராஜெக்ட்ல இருக்கேனே?”
தீரன் எழுந்து அவளது அருகில் வந்தான்.
அவனது உடல்மொழியில் இப்போது மிரட்டல் இல்லை. “நீ ஏன் என்னைப் பிரிய நினைக்கிறேன்னு எனக்குப் புரியுது அகலிகா. உன் கண்ணுல முன்னாடி இருந்த அந்தச் சிரிப்பு இப்போ இல்லை. நான் உன்னை அடைஞ்சிட்டதா நினைச்சேன், ஆனா உன்னோட மனசை நான் கொன்னுட்டேன்னு இப்போதான் புரியுது.”
அகலிகா பேச வார்த்தையின்றி நின்றாள்.
“உன்னோட ப்ராஜெக்ட் முடிஞ்சதா நான் ரிப்போர்ட் தயார் பண்ணிட்டேன். இதோ உன்னோட டிக்கெட்ஸ். நீ இன்னைக்கே இந்தியாவுக்குப் புறப்படலாம். முகேஷும் உன்கூடவே வருவான். அவனுக்கும் அங்கே வேலை வேலை நிரைய இருக்கு அவன் உனக்காக தான் இங்கே வந்திருக்கான் ,” என்றான் தீரன்.
அகலிகாவிற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அவளைத் தன் பிடியில் வைத்திருக்கப் பல சூழ்ச்சிகளைச் செய்த மனிதனா இப்படிப் பேசுகிறான்?
“நீங்க… நீங்க நிஜமாவேதான் சொல்றீங்களா? இதுவும் ஏதாவது ஒரு விளையாட்டா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.
தீரன் அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். “இல்லை அகலிகா. இது விளையாட்டு இல்லை. இத்தனை நாள் உன்னை அதிகாரம் பண்ணிப் பார்த்தேன், மிரட்டிப் பார்த்தேன். ஆனா, ஒவ்வொரு முறையும் நீ என்னை வெறுக்கும்போது என் மனசுக்குள்ள ஏதோ ஒன்னு வலிச்சது. நீ முகேஷ்கூட இருக்கும்போது கிடைக்கிற அந்தச் சந்தோஷம் என்கூட இருக்கும்போது ஏன் கிடைக்கலன்னு யோசிச்சேன். அன்புங்கிறது பிடிச்சு வைக்கிறது இல்லை, விட்டுக்கொடுக்கிறதுன்னு இப்போதான் புரியுது.”
அவன் குரல் தழுதழுத்தது. “நீ என்கூட இருந்தால், உனக்குக் குற்ற உணர்ச்சியா இருக்கு. உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீ முகேஷ்கூட சந்தோஷமா வாழப் போகிறாய்னு நான் நம்புறேன். உன்னோட பிரைவசில நான் இனிக் குறுக்கிட விரும்பல. நான் உன்னை விட்டு ரொம்பத் தூரம் விலகிப் போகப் போறேன்.” என்றான்.
அகலிகாவின் கண்கள் கலங்கின. இத்தனை நாள் அவளை வாட்டியெடுத்த அந்த மனிதனிடம் இவ்வளவு மாற்றமா? அவனது வார்த்தைகளில் தெரிந்த அந்தத் தனிமையும், இழப்பும் அவளை என்னவோ செய்தது.
“தீரன்… நான்…”என்று பேசவந்தாள்.
“ஒன்னும் சொல்லாத அகலிகா. உன்னோட மௌனம் தான் எனக்கான தண்டனை. இந்தியா போயிட்டு நல்லபடியா முகேஷ்கூட கல்யாணம் பண்ணி வாழ ஆரம்பி. நான் கொடுத்த அந்தப் பழைய நினைவுகளை அங்கேயே விட்டுட்டுப் போயிடு. இனி உன் வாழ்க்கையில தீரன் என்கிற நிழல் வராது,” என்று கூறிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.
அகலிகா அந்தப் ஃபைலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அவளுக்கு இப்போது என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு பக்கம் பெரும் விடுதலை, மறுபக்கம் ஒரு மனிதனின் மனமாற்றம் தந்த அதிர்ச்சி.
கண்ணாடி அறையை விட்டு வெளியே வரும்போது, அவளது உலகம் தலைகீழாக மாறியிருந்தது. அவள் விடுதலையைப் பெற்றுவிட்டாள், ஆனால் அந்த விடுதலையைக் கொடுத்தது அவளது எதிரி என்று நினைத்த ஒருவனின் அன்பு என்பதுதான் அவளுக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.
உள்ளே செல்லும்போது இருந்த மன உறுதி , அறையைவிட்டு வெளியே வரும்போது இல்லை, ஒரு வலி தீராத வலி இருப்பதை உணர்ந்தாள்.
