EPISODE 41
சங்கவி தன் அறையில் கோபமாக அமர்ந்திருக்க, அவளைக் கிளம்பச் சொல்வதற்காக வந்த சங்கவியின் அப்பா வேதாச்சலம், அவள் எதுவுமே செய்யாமல் காலையில் ஃபங்ஷனுக்குப் போட்டிருந்த அதே உடையுடன் படுத்திருப்பதை கவனித்தார்.
“சங்கவி… ஏன் டா, டிரஸ் கூட மாத்தாம அப்படியே படுத்திருக்க? என்ன ஆச்சு?” என்றார்.
அவர் வந்ததும் எழுந்து அமர்ந்த சங்கவி, “அப்பா, இந்த ஆதியை எப்படி என் வலைக்குள்ள விழவைக்கிறதுன்னே தெரியலையேப்பா எனக்கு,” என்று சலித்துக்கொண்டாள்.
“ஏன் டா? என்ன ஆச்சு?” என்றார் அவள் தலையைத் தடவிக் கொடுத்தவாறே. “நேத்து நைட் நாம போட்ட பிளானை விட ஒரு நல்ல சந்தர்ப்பம், ஆதியுடன் தனியே இருக்க வாய்ப்பு கிடைச்சுது அப்பா.
அவன்கிட்ட நான் க்ளோஸா இருக்கலாம்னு அவன் பக்கத்துல போய் அவனை கட்டிப்பிடிச்சுக் கிஸ் பண்ணினேன் அப்பா. ஆனா, அவன் என்னைப் பிடிச்சு வேகமாகக் கீழே தள்ளி விட்டுட்டான். அவன் என்னைத் தள்ளி விட்டதில் என் பிளவுஸ் கிழிஞ்சிருச்சு. அதை பார்த்ததும் என்ன நினைச்சானோ தெரியலை, அவனோட கோட்டைக் கழட்டி எனக்குப் போட்டுவிட்டுப் போயிட்டான்.
சரி, அந்தக் கோட்ல அவனோட பர்ஸ் இருந்துச்சு. அவன் பர்ஸைக் கொடுக்கிறதைச் சாக்கா வெச்சு அவன்கிட்ட பேசலாம்னு போனேன். அந்தக் ஆதி, கேவலம் அந்த வேலைக்காரி (துர்கா) முன்னாடி, என்னை அவமானப்படுத்துற மாதிரி ‘இனிமேல் இப்படி எல்லாம் வந்து என் முன்னாடி நிக்காதே’ன்னு சொல்லிட்டு, அந்த துர்காவை கூட்டிட்டு அங்கிருந்து போயிட்டான்ப்பா,” என்று சங்கவி சொன்னாள்.
“என்னை கீழ தள்ளி விட்டதற்காக இப்போ வரை ஒரு ‘சாரி’ கூட சொல்லலைப்பா அவன். நான் அவன்கிட்ட நெருங்கிப் போனாலே என்னை அவமானப்படுத்தி அனுப்பறான் அப்பா, அந்த இடியட் ஆதி. அவனை எப்படி என் வலைக்குள்ள விழவைக்கிறதுன்னு எனக்குத் தெரியவில்லை அப்பா,” என்றாள்.
“இதுக்காக நீ இவ்ளோ கோவமா உட்கார்ந்திருக்க? ஒரு விஷயம் நாம நினைச்சது நமக்கு வேணும்னா, நம்ம கொஞ்சம் பொறுமையா இருந்துதான் ஆகணும்மா. எல்லாமே எடுத்ததும் கிடைக்கணும்னு எப்பவும் நினைக்கக் கூடாது. அது நமக்கு வேற நல்ல விஷயமா இருந்தாலும் சரி, அல்லது அடுத்தவங்களுக்கு நாம செய்ற கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி, உன் முயற்சியை விடாமல் செஞ்சிட்டே இருந்தோம்னா தான், அதுக்கான பலன் ஒருநாள் நிச்சயம் கிடைக்கும்.
நான் உன்கிட்ட ஏற்கனவே என்ன சொன்னேன்? ஆதிகிட்ட உன்ன மாதிரி ஃப்ரெண்டா இருக்கிற மாதிரி தானே பழகச் சொன்னேன். ஆனா, அதை விட்டுட்டு நீ போய் அவனைக் கட்டிப் பிடிக்கவும் முத்தம் கொடுக்கவும் செஞ்சேன்னா, அவனுக்குக் கண்டிப்பா கோபம் தானே வரும்? இதெல்லாம் யதார்த்தமா நடக்கணுமா.
முதல்ல நீ அந்த ஆதிகிட்ட பழையபடி ஃப்ரெண்டா இருக்க ட்ரை பண்ணு. அவனோட மனசுல உன்னைப் பத்தி நல்ல அபிப்பிராயம் வர மாதிரி நீ முதல்ல நடந்துகோ. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா, உனக்குத் தகுந்த மாதிரி அவனை உன் வழிக்குக் கொண்டு வர வழியைப் பாரு. அதை விட்டுட்டு, ‘இப்பவே எனக்கு அவன் வேணும், இப்பவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்’னு சொன்னா அது எப்படிமா நடக்கும்? கொஞ்சமாவது ப்ராக்டிகலா யோசிக்கப் பாருமா. ஏற்கனவே அவன் அத்தனை பேர் முன்னாடி ‘வேண்டாம்’னு சொல்லி உன்னை அவமானப்படுத்தினான். பதிலுக்கு அவனும் உன்னை அவமானப்படுத்தி அனுப்பி வெச்சிருக்கான். அப்போ அவனுக்கு உன் மேல எவ்வளவு கோபம் இருக்கும்?
அதெல்லாம் சரியாகக் கண்டிப்பா கொஞ்சம் டைம் எடுக்கும். அதுக்கு நீ அவனுக்குக் கொஞ்சம் இடம் கொடுக்கணும். அது எல்லாவற்றையும் விட, அவன் உன்னை முழுசா ‘நீ திருந்திட்டேன்னு’ நம்பணும். அதை அவன் கண்ணு முன்னாடியே நீ நல்லவளா இருக்கிறதைப் பார்த்து உணரனும். அப்போதான் அவனுக்கு உன்மேல கொஞ்சமாவது இரக்கம் வந்து உன்கூட பழையபடி பழக ஆரம்பிப்பான். புரியுதா நான் சொல்றது உனக்கு?” என்றார் வேதாச்சலம்.
புரிதல் வந்தவளாக, எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த சங்கவி, “சரிப்பா, நீங்க சொல்றதெல்லாம் எனக்குப் புரியுது. இனிமேல் பாருங்க, நான் எப்படி நடந்துக்கிறேன்னு! அவன் என் கூட முதல்ல ஃப்ரெண்டா பழக வைக்கிறேன். அதுக்கப்புறம் எனக்கு எப்படித் தெரியும், அப்படி அவனை மாத்திக்கிறேன்… இல்லை… இல்லை… மாற்றுவேன்,” என்றாள் சங்கவி.
“வெரி குட்… தாட்ஸ் மை கேர்ள்… இப்படித்தான் இருக்கணும், சரியா? நம்ம மற்றதெல்லாம் ஊருக்குப் போய் பேசிக்கலாம். இப்ப நீ சீக்கிரம் ரெடி ஆகு, டைம் ஆகுது. நம்ம கிளம்பலாம். உங்க அம்மா இன்னும் அங்க என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியல. அந்த ‘லூசை’ போய் கிளம்பச் சொல்றேன். நீ ரெடி ஆயிட்டு நம்ம ரூமுக்கு வந்துடுடா,” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பினார். “சரிப்பா, சீக்கிரம் நானும் வரேன்,” என்று கூறிவிட்டு அவளும் கிளம்பத் தயாரானாள்.
*****
ஊருக்குச் செல்வதற்காக அனைவரும் கிளம்பி வரலட்சுமி, ஆதி, விக்கி, கீர்த்திகா, கதிர் என அனைவரும் காரில் ஏறிப் புறப்பட்டனர். விக்கி காரை ஓட்ட, கதிர் அவன் அருகில் அமர்ந்திருந்தான். பின் சீட்டில் கதிர் உட்கார்ந்திருந்த நேர் பின்னால் இருந்த சீட்டில், பின்னால் அமர்ந்துகொண்டாள் கீர்த்திகா. அவள் பக்கத்தில் துர்கா, அதற்கடுத்து ஆதியும் அமர்ந்திருந்தனர்.
கார் கிளம்பி ஊருக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருக்க, துர்காவுக்கு ஆதியின் மிக அருகில் இப்படி உட்கார்ந்திருப்பது ஏனோ போல இருக்க, நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவள் நெளிந்து கொண்டே இருப்பதை கவனித்த கீர்த்திகா, “ஏன் இப்படி நெளிஞ்சிட்டே இருக்க? பேசாம ஒரு இடத்தில் உட்கார மாட்டியா? என்னால இங்க உட்காரவே முடியல. நீ இப்படி நெளிஞ்சிட்டு இருந்தா எனக்குக் கம்பர்டாக இருக்க மாட்டேங்குது. பேசாம உட்காரு,” என்றாள்.
கீர்த்திகா, துர்கா எழுந்து கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துச் சொன்னதும், அதுவரை தன் போனில் ஏதோ முக்கியமான மெயிலை அனுப்பிக்கொண்டிருந்த ஆதி, திரும்பி துர்காவை பார்க்க, துர்கா அவனிடம் நெருக்கத்தில் அமரக் கூச்சப்பட்டுக்கொண்டு நெளிந்து கொண்டிருப்பதைக் கவனித்தான்.
மெதுவாக துர்காவின் காதருகில் குனிந்து, “இப்பவும் என் கூட நெருக்கமா இருக்கிறது உனக்கு உடம்பெல்லாம் எரியற மாதிரி இருக்கு துர்கா? நீயும் அப்படி நினைச்சிட்டு இருக்காத துர்கா. நீ நினைக்கிற ஆதி நான் இல்லை. கண்டிப்பா உன்னை நான் எல்லா விஷயத்தையும் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். முதல்ல சகஜமா இருக்க முயற்சி பண்ணு. அப்போதானே ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்க முடியும்? நல்லா ஃப்ரீயா உட்காரு துர்கா!
இப்ப மட்டும் இந்தக் காருக்குள்ள யாரும் இல்லாம நீயும் நானும் மட்டும் இருந்தோம்னு வெச்சுக்கோ, இப்படி நெளிஞ்சிட்டு உட்கார்ந்துட்டு இருக்க உன்னைப் பிடிச்சு இழுத்து என் மடி மேல உட்கார வச்சு, நம்ம ஊருக்குப் போற வரைக்கும் அப்படியே உன்னை…” என்று அழுத்திச் சொன்னவன், ஒரு நிமிடம் அப்படியே பேச்சை நிறுத்த… துர்காவுக்கு அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று பதட்டத்தில் விரல்கள் நடுங்கின. அதைப் பார்த்து ஆதி தன் கைக்குள் துர்காவின் நடுங்கிய விரல்களைக் கோர்த்தவன்,
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கையெல்லாம் நடுங்குது உனக்கு?” அவள் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டவன், “நான் என்ன சொல்ல வந்தேன்னா, நம்ம ஊருக்குப் போற வரைக்கும் உன்னை என் மடி மேலே உட்கார வைத்து வந்திருப்பேன் என்று சொல்ல வந்தேன்,” என்றான் ஆதி.
அவன் அப்படி கூறியதும் ஆச்சரியமாக துர்கா அவனைத் திரும்பிப் பார்க்க, “என்ன அப்படி பார்க்கிற? நீ இப்ப கூட ஓகேன்னா சொல்லு. உன்னை என் மடி மேல உட்கார வைத்துக் கூட்டிட்டு வரேன்,” என்று ஆதி கூற, அவனை அடித்து விடுவது போல் பார்த்த துர்கா, திரும்பி வெளியில் வேடிக்கை பார்ப்பது போல அமர்ந்துகொண்டாள்.
ஆனால், உள்ளுக்குள் மிகவும் பதட்டமாகவே இருந்தது. இப்போது வரை துர்காவின் கையைப் பிடித்திருந்தவன், அவள் கையை விளக்க எவ்வளவு முயற்சி செய்தும், அதை விடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தான்.
அப்புறம் துர்கா காதருகில் வந்து, “நான் உன்னை காருக்குள்ள வெச்சு எதுவும் பண்ணிட மாட்டேன். அதுவும் இத்தனை பேர் முன்னாடி, சரியா? உன்னை நான் ஒன்னும் செய்ய மாட்டேன். கவலைப்படாம பேசாம வா. உன் கையைப் பிடித்து இருக்கிறதுனால நான் உன்னை எதுவும் செஞ்சிடுவேன் என்று அர்த்தம் இல்லை,” என்று மேலும் துர்காவை பதட்டப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்தவன், சீட்டில் ரிலாக்ஸாக சாய்ந்துகொண்டு, தன் இடது கையால் துர்கா வலது கையைக் கோர்த்து பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் போனை நோண்டிக் கொண்டு வந்தான்.
அவள் கையைப் பிடித்திருந்தவன் இப்போதைக்கு துர்காவின் கையை விடுவதாகத் தெரியவில்லை என்று உணர்ந்த துர்கா, இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று பேசாமல் அமர்ந்திருந்தாள். இருந்தாலும், ஆதியின் இந்தத் திடீர் மாற்றத்தால் துர்கா குழம்பிதான் போனாள்.
இவனுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறான்? என்கிட்ட இப்படி திடீர்னு நெருங்கி வர்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு, என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்ள… அப்போது துர்காவின் கைக்குள் தன் கையை வைத்திருந்த ஆதி, துர்காவின் உள்ளங்கையைக் கிள்ளினான்.
சட்டென்று ஆதியின் இந்தச் செய்கையாலும், அவன் நறுக்கென்று கிள்ளி வைத்ததாலும் துர்கா பதறியவள், “ஷ்… ஆ…” என்று லேசாகக் கத்திவிட…
அவள் அருகில் அமர்ந்திருந்த கீர்த்திகா, துர்காவைப் பார்த்து, “அக்கா, என்ன ஆச்சு? ஏன் இப்போ கத்தின?” என்று கேட்டாள்.
“என்னக்கா, நான் கேட்டுட்டு இருக்கேன். எதுவுமே சொல்லாம நீ அமைதியா இருக்க. ஏன் என்ன ஆச்சு? எதுக்கு இப்போ கத்தின?” என்று கேட்டாள் கீர்த்திகா.
“ஒ… ஒன்னும் இல்லை கீர்த்திகா. ஒரு கொசு என்னைக் கடிச்சிருச்சு,” என்றாள் துர்கா. “என்னது அக்கா? இவ்ளோ பெரிய காருக்குள்ள கொசு இருக்கா? என் கண்ணுக்கு ஒண்ணுமே அகப்படவில்லையே,” என்று கீர்த்திகா சொல்ல…
“எனக்கும் தான் தெரியல கீர்த்திகா. அப்படியெல்லாம் கொசு வந்து காருக்குள்ள கடிக்கும்,” என்று சொல்லிட்டு பேசாமல் அமர்ந்திருக்க…
மீண்டும் துர்கா காதருகில் குனிந்தவன், “நான் உனக்கு கொசுவா? இப்படித்தான் சரியா உள்ளங்கையில வந்து கடிக்குமா? அது எங்கெல்லாம் கடிக்கும் தெரியுமா?” என்றவன், சிறிதும் யோசிக்காமல் துர்காவின் இடுப்பைப் பிடித்து கிள்ளி வைக்க, இப்போது துர்கா சத்தமாக “ஆ…” என்று கத்திவிட்டாள்.
துர்கா போட்ட சத்தத்தில், கார் ஓட்டிக்கொண்டிருந்த விக்கி சட்டென்று காரை நிறுத்திவிட, அதில் காரின் பின் சீட்டில் நடுவில் சீட் பெல்ட் போடாமல் அமர்ந்திருந்த துர்கா, கீழே விழப்போக… அவளை இடுப்போடு கை கொடுத்துப் பிடித்து இழுத்து, காரில் முட்டிக் கொள்ளாமல் தன் அருகில் அமர வைத்திருந்தான் ஆதி.
துர்காவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ஆதி கொடுத்துக் கொண்டே இருக்க, அவன் இப்படி தன் இடுப்பில் கையைப் போட்டு, இத்தனை பேர் முன்னால் இப்படி நெருக்கமாக அமர வைத்திருப்பதில் கூச்சமடைந்த துர்கா, அவன் கையைத் தன் இடுப்பிலிருந்து பிரிக்க முயற்சி செய்ய… அவள் பிரிக்க முயற்சி செய்வதை உணர்ந்தவன், மேலும் அவனது பிடியை இருக்கமாக்கினான்.
காரை சடன் பிரேக் போட்டு நிறுத்திய விக்கி, பின்னால் திரும்பி துர்காவைப் பார்க்க… துர்கா, ஆதியின் கை வளைவுக்குள் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியமான விக்கி, இதைக் கண்டுகொள்ளாதவன் போல, “துர்கா, ஏன் இப்ப கத்தின? என்ன ஆச்சு?” என்று கேட்க… “அது ஒண்ணும் இல்ல அண்ணா. ஒரு பெரிய சைஸ் கொசு என் அக்காவைக் கடிச்சுட்டு இருக்கும் போல இருக்கு. அதனால தான் அவ சத்தம் போட்டிருக்கா காருக்குள்ள,” என்ற கீர்த்திகா, ஓரக்கண்ணால் ஆதியையும், துர்காவையும் பார்த்துக் கொண்டு.
“என்ன கீர்த்துமா சொல்ற? காருக்குள்ள பெரிய சைஸ் கொசு இருக்கா? என் கண்ணுக்கு தெரியலையே,” என்று விக்கி வேண்டுமென்று எதுவும் தெரியாதவன் போலக் கேட்க…
“அண்ணா, அந்தக் கொசு நம்ம யாரையுமே கடிக்காது. துர்காவை மட்டும் தான் கடிக்கும். அதனால அது துர்கா கண்ணுக்கு மட்டும் தான் தெரியும். நமக்கு யாருக்கும் தெரியாது. விடுங்க! இதை நம்ம கண்டுக்கக் கூடாது. நீங்க பேசாம வண்டி எடுங்க. நம்ம சீக்கிரமா ஊருக்குப் போகலாம். இந்தக் கொசுத் தொல்லை ரொம்பத் தாங்கல,” என்றாள் கீர்த்திகா.
உடனே முன்னாள் அமர்ந்திருந்த கதிர், இவர்கள் பேசியதின் அர்த்தமெல்லாம் எதுவும் புரியாமல், “காருக்குள்ள எப்படி கொசு வந்திருக்கும்? நான்தான் காலையில காரை ஃபுல்லா கிளீன் பண்ணச் சொல்லி டிரைவர்கிட்ட சொல்லித்தானே இருந்தேன். எப்படி காருக்குள்ள கொசு வரும்?” என்று கேட்க… உடனே கீர்த்திகா, “நீ முன்னால உட்கார்ந்திருந்த. பின்னாடி இருக்கிறதைப் பத்தி உனக்கு எதுவும் தெரியாது. நீ கொஞ்சம் பேசாம அமைதியா வா,” என்று சொன்னவள், “அண்ணா, நீங்க காரை எடுங்க. நம்ம போகலாம்,” என்று சொல்ல… விக்கி ஒருமுறை திரும்பி துர்காவைப் பார்க்க… இவர்கள் பேசுவதை எதையுமே கவனிக்காமல் அவள் இப்பவும் தன் ஆதியின் கையை இடுப்பிலிருந்து பிரிப்பதிலேயே குறியாக இருந்தால். ஆனால் ஆதி அவளை இறுக்கமாகப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான்.
விக்கி இவர்கள் இருவரையும் பார்ப்பதைக் கவனித்த ஆதி, அவனைப் பார்வையாலேயே புருவம் இரண்டையும் தூக்கி, “என்ன?” என்று கேட்க… விக்கி, “ம்ம்ஹும்… ஒன்றும் இல்லை,” என்று தோளைக் குலுக்கயவன் திரும்பி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
“ஏன், இந்தக் காருக்குள்ள இருக்கிறவங்க யாருமே பேசவே மாட்டீங்களா? ரொம்ப அமைதியாவே இருக்கு இல்ல விக்கி அண்ணா? நீங்களும் நானும் தான் பேசிக்கிட்டே இருக்கும். ஆனா இவங்க யாருமே பேச மாட்டேங்கிறாங்க. பேசாம ஏதாவது பாட்டு போடுங்க. அட்லீஸ்ட் நம்ம பாட்டைக் கேட்டுவிட்டு வருவோம்,” என்று கூறினாள் கீர்த்திகா.
“ஆமா தங்கச்சிமா. இந்தக் காருக்குள்ளேயே வெச்சு நீயும் நானும் தான் கலகலன்னு இருக்கோம். பாரு இந்த மூணுங்களும் எப்ப பார்த்தாலும் மூஞ்சை ‘உர்’ என்று வெச்சுட்டே வர்றதை. இவங்க கூட எல்லாம் எப்படித்தான் நம்ம காலம் தள்ளுவதோ தெரியல,” என்றான் விக்கி.
“ஆமா அண்ணா, நீங்க சொல்றதும் சரிதான். என்ன பண்றது? நம்மளுக்கு இதுதான் விதி என்று இதை சகிச்சுட்டுப் போய் தானே ஆகணும்,” என்றால் கதிரை நினைத்து. இது கதிர்க்கும் புரியத்தான் செய்தது.
“இப்ப நீங்க ரெண்டு பேரும் பேசாம வந்தாதான் பாட்டு போட முடியும். இல்ல, நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க. நான் பாட்டு போடல,” என்றான் கதிர்.
“சரி, சரி, கதிர் மாமா…” என்று அழுத்தம் கூட்டிக் சொன்னவள், “நான் எதுவும் பேசல. நீங்க பாட்டு மட்டும் போடுங்க,” என்றாள். அடியே, யாரும் இல்லாதப்ப என்ன ‘மாமா’ன்னு கூப்பிட சொன்னா கூப்பிட மாட்டேன்னு, எப்ப பாரு யாராவது இருக்கும்போதே என்ன ‘மாமா மாமா’ன்னு கூப்பிட்டு என்ன வெறுப்பேத்துறியா? இருடி, நீ தனியா என்கிட்ட மாட்டாமலா போயிடுவே… அப்ப வெச்சுக்கிறேன் உன்னை, என்று நினைத்தவன் பாட்டை ஆன் செய்தான்.
பாடல் ஒலிக்கத் தொடங்கியது:
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
… (பாடல் வரிகள் தொடர்ந்தன)
…
பாட்டு ஓடிக்கொண்டிருக்க, அந்தப் பாட்டை ரசித்தவாறே கீர்த்திகா ஜன்னல் வழியாக வெளியில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு வந்தாள்.
ஆனால், இங்கு துர்காவின் நிலைதான் மிகவும் மோசமாகிவிட்டது. இறுக்கமாய் அவளை மிக அருகில் இழுத்து அமர வைத்திருக்க, நெளிந்துகொண்டே அமர்ந்திருந்த துர்காவின் காதருகில் குனிந்த ஆதி,
“இந்தப் பாட்டுல வர்ற லைன் எல்லாம், நான் உன்னைப் பார்த்து சொல்ற மாதிரியே இல்லையா துர்கா?” என்று கேட்டான் ஆதி.
துர்கா புரியாமல் ஆதியைப் பார்க்க, ஆதி அந்தப் பாட்டில் வரும் வரிகளை அவள் காதில்…
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தனும் கடத்தனும் உன்ன!
இந்த நாலு வரிகளை அவள் காதில் சொல்லியவன், “இதுல வர்ற மாதிரி உன்னைக் கடத்திட்டு போகணும்னு எனக்கு அவசியம் இல்லை துர்கா. ஆனா என்னவோ, எனக்கு உன்னைப் பார்த்ததும் ஒரே ரொமான்டிக் மூடா இருக்கு…” என்றான் ஆதி. மேலும் இவன் அருகில் அமர முடியாத துர்கா, அவன் கையை நறுக்கென்று கிள்ளிவிட்டு, அவன் கையைப் பிடித்தவள் அவனிடமிருந்து தள்ளி அமர… அவள் கிள்ளியதில் ஆதி இப்போது “ஆ” என்று சத்தமிட…
காரை ஓட்டிக்கொண்டிருந்த விக்கி, “என்னடா, உன்னையும் கொசு கடிச்சிடுச்சா?” என்று கேட்டான். காரின் முன் சீட்டில் இருந்த கண்ணாடி வழியாக ஆதியைப் பார்க்க, ஆதி அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
என்னதான் மாஸ்க் போட்டு இருந்தாலும் முறைக்கிறது மட்டும் நிறுத்த மாட்டேங்கிறானே. வெறும் கண்ண வெச்சு எல்லாத்தையும் பயமுறுத்திட்டு இருக்கான், என்று முணுமுணுத்த விக்கி, “நான் எதுவும் சொல்லலப்பா. நீங்க கண்டினியூ பண்ணுங்க. நான் காரை மட்டும் ஓட்டிட்டு வரேன்,” என்றான் விக்கி.
வெட்கத்தில் தன்னை விட்டுத் தள்ளி அமர்ந்திருக்கும் துர்காவைப் பார்த்தவன், இதற்கு மேலும் அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று அமைதியாகிவிட்டான் ஆதி.
காரில் பாடல் ஒலித்துக்கொண்டே வர, துர்கா அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே சீட்டில் சோர்வாகச் சாய்ந்து அமர்ந்தவள், தன்னை மறந்து அப்படியே தூங்கிப் போனாள்.
நன்றாகத் தூங்கிய துர்கா, அப்படியே ஆதியின் தோளில் சாய… துர்கா தன் தோள் மீது சாய்ந்ததும் அவளைத் திரும்பிப் பார்த்த ஆதி, அவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், அதுவரை நோண்டிக் கொண்டிருந்த தன் போனை கீழே வைத்தவன், தன் கையை எடுத்து அவள் தோள் மீது போட்டு, தன் கை வளைவுக்குள் துர்காவைக் கொண்டு வந்து, தன் மார்பின் மீது அவளைச் சாய்த்துக் கொண்டு வந்தான்.
இதையெல்லாம் காரை ஓட்டிக்கொண்டே முன்னால் இருந்த கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி, மனதிற்குள், எப்படியோ, ஆதி கொஞ்சம் கொஞ்சமா துர்கா பக்கம் சாய்ந்துட்டு வர்றது நல்லாவே தெரியுது. இப்படியே அவன் முழுசா துர்காவைப் புரிஞ்சுகிட்டு, அவள் காதலைப் புரிஞ்சுகிட்டு அவ கூட சந்தோஷமா வாழ்ந்தால், என்ன விட சந்தோஷப்படுவேன் வேறு யாருமே இருக்க மாட்டேன், என்று மனதில் நினைத்தவன்.
ம்ஹும்… இங்க அவன் ஆள்கூட ஜாலியா இருக்கானுங்க. ஆனா என் ஆளு என்னடான்னா, என் கூட பேச மாட்டேன்னு என்ன ப்ளாக் பண்ணி வெச்சிருக்கா. கடவுளே! கூடிய சீக்கிரம் என் ஆளுக்கு என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சு, அவ என் கூட நல்லா பேசணும். அதுக்கு நீ தான் துணையா இருக்கணும், என்று வேண்டிக்கொண்டான் விக்கி.
