EPISODE 49
அனைவரும் கிளம்பி ஷாப்பிங் செல்ல… துர்காவிடம் லட்டு டப்பாவை வாங்கித் தனியே வைத்துக்கொண்ட விக்கி, “இதில் இருந்து யாரும் எடுக்கக் கூடாது. இது நான் பிள்ளையாருக்காகச் செய்து வாங்கி இருக்கேன். அவருக்கு நான் நிவேதனம் கொடுக்க வைத்திருக்கிறேன்,” என்று சொன்னான்.
நல்லவேளையாக துர்கா லட்டு செய்ததும், முதலில் விக்கிக்காகத் தனியாக ஒரு டிபன் பாக்ஸில் எடுத்து வைத்திருந்ததால், யாருடைய எச்சில் படாமல் எடுத்து வைத்தது ஒருவகையில் நல்லதாகப் போய்விட்டது.
சிட்டியின் பிரபல ஷாப்பிங் மாலுக்கு வந்ததும், டிரைவரிடம் காரைப் பார்க் செய்யச் சொல்லிவிட்டு அனைவரும் இறங்கி மாலுக்குள் சென்றனர்.
அவர்கள் மாலுக்குள் வரவும், கீர்த்திகாவின் மொபைலில் ரிங் வரவும் சரியாக இருந்தது. போனை எடுத்துப் பார்க்க நிலானி தான் கீர்த்திகாவிற்கு அழைத்திருந்தாள். அதைப் பார்த்ததும் போனை எடுத்து அட்டென்ட் செய்தவள், “ஏய் நிலானி… எங்கடி இருக்க? நாங்க இப்போதான் மாலில் உள்ள வந்துட்டோம். நீ வந்துட்டியா? எங்கே இருக்கே?” என்று கீர்த்திகா கேட்க… “நான் இப்பதான் மாலுக்கு வெளியே வந்துட்டு இருக்கேன். நீ எங்கே இருக்கேன்னு கேட்டுட்டு வரலாம்னு உனக்குக் கால் பண்ணினேன்,” என்று நிலானி கூற… “சரி, நீ அங்கேயே வெயிட் பண்ணு. நான் இப்ப வந்துடறேன் உன்னைக் கூப்பிடுவதற்கு,” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.
இவை எல்லாம் அவள் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த விக்கி, கீர்த்திகா செல்வதைக் குறுக்காகத் தன் இரு கைகளையும் நீட்டித் தடுத்து நிறுத்தியவன், “தங்கச்சி….” என்று கீர்த்திகாவை அழைக்க… கீர்த்திகாவும் “அண்ணா….” என்று பதிலுக்கு அவனைப் போலவே அழைத்தாள்.
“ஏன் அண்ணா என் வழியை மறிச்சு நிக்கிறீங்க? வழி விடுங்க. நான் போய் என் ஃப்ரெண்டு வந்துட்டா. அவளைக் கூப்பிட போகணும்,” என்று கீர்த்திகா சொல்ல…
“உனக்கு ஏண்டா சிரமம்? அங்க இருந்து நீ இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கே. உன் கால் எல்லாம் வலிக்கும் இல்லையாடா…. நான் வேணும்னா போய் உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு வரட்டுமா?” என்று கீர்த்திகாவின் மேல் அக்கறை இருப்பவன் போல விக்கி பேச…
“எனக்குக் கால் எல்லாம் ஒண்ணும் வலிக்கலை அண்ணா. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்,” என்று கீர்த்திகா அவனைத் தாண்டிச் செல்லப் போக…
விக்கி மறுபடியும் வேகமாக ஓடிச் சென்று அவள் குறுக்கே நின்றவன், “அண்ணன் சொன்னா தங்கச்சி கேட்கணும்… சரியா? நீ இங்கேயே இருப்பியா…. நான் ஓடிப்போய் உன் ஃப்ரெண்டை கூட்டிட்டு சீக்கிரமா வந்துடுவேனா….” என்று விக்கி சொல்ல…
உடனே துர்கா சிரித்துக்கொண்டே கீர்த்திகாவின் கைகளைப் பிடித்தவள், “விக்கி, நீ போடா… நீயே போய் உன் ஆளைக் கூட்டிட்டு வா. இவளுக்கு அறிவே இல்லை. நீ எதுக்காக இவள் மேல் அக்கறை இருக்குற மாதிரி நடிக்குறேன்னு அவளுக்குத் தெரியலை,” என்று சொன்னவள்.
“நான் இவளைப் பார்த்துக்கறேன்,” என்று அவள் கை பிடித்துக் கொள்ள… தன்னுடைய எண்ணம் துர்காவுக்குப் புரிந்துவிட்டதை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தவன், “துர்கானா…. துர்கா தான்!” என்று அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வேகமாக நிலானியைக் கூப்பிட வெளியே சென்றான்.
நிலானியைக் கூப்பிட வெளியே செல்லும் ஆவலில் துர்காவின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளிவிட்டுச் செல்ல… இங்கே ஒருவனுக்கு விக்கியின் செயலைப் பார்த்து வயிறு எரிந்தது.
வேற யாருங்க? நம்ம ஹீரோவுக்குத்தான்! என் மனைவியிடம் என்னால் இவ்வளவு சகஜமாகப் பேச முடியவில்லை. ஆனால் இங்கு இருப்பவர்கள் எல்லாம் அவளிடம் உரிமை கொண்டாடுகிறார்கள், என்று நினைத்த ஆதி, சீக்கிரமாகவே அந்த அத்தனை உரிமையும் எனக்கு மட்டுமே வரும்படி நான் செய்கிறேன், என்று மனதில் நினைத்தவன் துர்காவை முறைக்க… துர்கா இவன் தன்னை முறைப்பதை அறியாமல் கீர்த்திகாவைக் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்களுடன் பேசிக்கொண்டே கதிரும் சென்றான்.
இன்று எப்படியாவது கீர்த்திகாவிடம் துர்காவைப் பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவளுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துதான் ஆதி இவர்களுடன் வெளியில் ஷாப்பிங்கிற்கு வந்தான். ஆனால் இவர்கள் எல்லாம் கீர்த்திகாவைப் பிடித்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்க… அவளிடம் எப்படித் தனியாகப் பேசுவது என்று யோசித்தவாறு, கையில் மொபைலில் நோண்டிக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றான்.
*****
இங்கே நிலானியைத் தேடி வெளியே வந்த விக்கி அவளைத் தேட… அவள் தூரத்தில் ஷாப்பிங் மாலில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலானியைத் தூரத்திலிருந்து பார்த்தவன், அவள் முதன் முதலில் பார்த்ததை விட இப்போது இன்னும் அழகாக இருந்தாள். வெள்ளை நிற டீ-ஷர்ட்டும் நீல நிற பேன்ட்டும் அதற்கு ஏற்றார் போல ஷூவையும் மாட்டிக் கொண்டு, தலையில் முடியைக் கொண்டை போட்டு, கண்ணில் எப்போதும் அவள் அணியும் கண்ணாடியும் அணிந்துகொண்டு மிகவும் ஸ்டைலாக நின்றிருந்தாள் நிலானி.
ச்சே… என் ஆள் எவ்வளவு ஸ்டைலாக… அழகாக இருக்கா…. டேய் விக்கி, நீ…. ரொம்பக் கொடுத்து வெச்சவன்டா. இத்தனை நாளா ஒரு பொண்ணு கூட உன்னைத் திரும்பிப் பார்க்காம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்ப.
ஆனா இன்னைக்கு உனக்குன்னு ஒருத்தி உனக்குப் பிடிச்ச மாதிரி வந்திருக்கா…. நீ ஜமாய்டா…. ஜமாய்டா…. எப்படியாவது அவகிட்ட நல்ல விதமாகப் பேசி, நல்ல விதமா நடந்துட்டு, அவளை உன்னைக் காதலிக்க வச்சிருடா விக்கி. அவள் மனசுல எப்படியாவது இடம் பிடிச்சிருடா… என்று தன் மனதிற்குள் பேசிக்கொள்ள…
“அது நான் நினைச்சா….தான் நடக்கும்,” என்று விக்கியின் பக்கத்தில் இருந்து ஒரு குரல் கேட்க… “யார்?” என்று திரும்பிப் பார்த்தவன், அவன் அருகில் ஒரு சிறுவன், நன்கு கொழுகொழுவென்று இருந்த அந்தச் சிறுவனைப் பார்த்து, “யாருடா… தம்பி நீ…. நீ எதுக்கு ‘நான் நினைச்சா தான் நடக்கும்’னு சொன்னே?” என்று கேட்டான் விக்கி.
“என்னை நல்லாப் பாரு. நான் யாருன்னு உனக்குத் தெரியலையா?” என்று கேட்டான் அந்தச் சிறுவன். அவன் முகத்தையே சற்று உற்றுப் பார்க்க, “பிள்ளையாரப்பா… நீயா… இது என்ன இப்படி வந்திருக்கீங்க?” என்று விக்கி கேட்க…
“அது ஒண்ணுமில்லை விக்கி. சும்மா நானும் உங்க கூட ஜாலியா ஷாப்பிங் வரலாம்னு தான் இந்தக் கெட் அப்பில் வந்திருக்கேன்,” என்றார்.
“உன்னை எப்படி பிள்ளையாரே எங்க கூட கூட்டிட்டு போறது? என்னைப் பார்த்து யாருன்னு கேட்டால் நான் என்ன சொல்லி சமாளிக்குறது பிள்ளையாரே?” என்று கேட்டான் விக்கி.
“அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப் படாதே. நான் பார்த்துக்கறேன் அதை எல்லாம்,” என்று சொன்னவர். “சரி சரி, நீ உன் ஆளைப் போய் கூப்பிடு,” என்றார்.
“நீங்க இங்க இருக்க… அப்போ நான் போய் அவளைக் கூப்பிட்டா, உங்களை யாருன்னு கேட்டால் நான் என்ன சொல்றது பிள்ளையாரே?” என்று விக்கி கேட்க…
“நீ முதல்ல கூட்டிட்டு வா… அதுக்கு அப்பறோம் எல்லாமே நடக்கும்,” என்று பிள்ளையார் சொல்ல… “ஓகே. நீங்க இங்கயே இருங்க. நான் போய் என் ஆளைக் கூட்டிட்டு வரேன்,” என்றான்.
“இன்னும் அவ உன் லவ்வுக்கு ஓகே சொல்லவே இல்லை. அதுக்குள்ள உன்னோட ஆளுன்னு உரிமை கொண்டாடுறே?” என்று அவனை வார… “அய்யா அப்பனே விநாயகா! நீ இருக்கிற தைரியத்துல தான் நான் இப்படி சொல்லிட்டு சுத்திட்டு இருக்கேன். எனக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க பிள்ளையாரே,” என்றவன் திரும்பி நிலானியைப் பார்க்க…
இதுவரை எங்கேயோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலானி, எதேச்சையாகத் திரும்ப… அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் சந்தோஷத்தில் “ஹாய்….” என்று கை அசைத்தாள். என்னடா… இது என் ஆளா? இது என்னைப் பார்த்து கை எல்லாம் அசைக்குது, என்று நினைத்தவன் பதிலுக்கு விக்கியும் கை அசைத்தான்.
“இங்க என்ன பண்ற?” என்று சைகையால் கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்து கொண்டிருந்தாள் நிலானி.
“உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்,” என்று விக்கியும் சைகையாலேயே கூற… அதற்குள் அவன் அருகில் வந்தவன் தன் கைகளை அகல விரித்து அவனை கட்டிப்பிடிப்பது போல அவன் அருகில் வர… விக்கிக்கு ஆச்சர்யமாகிப்போக… அவனும் தன் கையை விரித்து அவளை வரவேற்பது போல நிற்க… அவன் அருகில் வந்த நிலானி அவனை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தவள், அவன் கையைத் தட்டி விட்டு அவனைத் தாண்டி நின்ற பிள்ளையாரைப் பார்த்து, “டேய் பிள்ளையார்… நீ என்னடா பண்ற இங்கே?” என்று பிள்ளையாரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே வந்து அவரை அணைத்துக்கொள்ள…
அவர்கள் இருவரையும் மாறி மாறி அதிர்ச்சி விலகாமல் பார்த்த விக்கியைப் பார்த்து, “எப்படி?” என்று தன் புருவத்தை உயர்த்தியவாறு பிள்ளையார் கேட்டார்.
“இல்லை… எனக்குப் புரியல,” என்று விக்கி கேட்க… “என்ன புரியலை உங்களுக்கு?” என்று நிலானி விக்கியிடம் கேட்டாள். “இவரை… பிள்ளை…” என்று அவரை யார் என்று சொல்ல வர… பிள்ளையார் தன் கண்ணை அகல விரித்து “சொல்லாதே,” என்று ஜாடை செய்தார்.
அதைப் புரிந்து கொண்ட விக்கி, “இல்லை, இந்தச் சிறுவன் உனக்கு எப்படித் தெரியும்?” என்று விக்கி கேட்க… “ஓ… இவனா… எங்க ஹாஸ்டல் வார்டன் மேம் உடைய பையன்,” என்று பிள்ளையாரைப் பற்றிக் கூற…
ஏதோ புரிந்தவன் போல விக்கி “சரி” என்று தலையை ஆட்டியவன், “சரி, நாம உள்ளே போலாமா? நமக்காகத் தான் அங்கே எல்லாரும் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க,” என்றவன் தன் கையோடு கொண்டு வந்திருந்த லட்டு டப்பாவை பிள்ளையாரிடம் நிலானிக்குத் தெரியாமல் விக்கி காட்ட…
அதைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே தன் கட்டை விரலை உயர்த்தியவர் திரும்பி நிலானியைப் பார்த்து, “அக்கா… இந்தா… எங்க அம்மா வீட்ல எனக்குச் சாப்பிடறதுக்காகச் செஞ்சு கொடுத்தாங்க. நீயும் சாப்பிடு,” என்று கூறித் தன் கையில் இருந்த லட்டு டப்பாவை அவள் முன்பு நீட்ட…
அதைப் பார்த்த விக்கி, தன் கையில் இருந்த டப்பாவைப் போலவே எப்படி இவர் கையில் என்று யோசித்துக் கொண்டே அவன் கையைப் பார்க்க… அவன் கையில் அந்த டப்பா இல்லை.
அவரை ஆச்சர்யமாகத் திரும்பி விக்கி பார்க்க… “என்ன?” என்று இவனைப் பார்த்துக் கணேஷ் புருவம் உயர்த்த… “ம்ஹும்…. ஒண்ணுமில்லை,” என்று தலையை இடவலமாக ஆட்டினான்.
பிள்ளையார் கொடுத்த லட்டைச் சாப்பிட்ட நிலானி, “சூப்பரா இருக்கு பிள்ளையார்…” என்று ருசிக்க… அவள் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டே எச்சில் விழுங்கியவன், இருவரும் லட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க… அவர்களுக்கு இடையில் தன் கையை நீட்ட… அவனை நிமிர்ந்து பார்த்த இருவரும் “என்ன?” என்று ஒரே நேரத்தில் கேட்க…
“எனக்குக் கொஞ்சம் கொடுத்துட்டுச் சாப்பிடலாமே? ஏன்னா இந்த லட்டுவை நான் என் துர்காகிட்ட சொல்லி ஒருத்தருக்காகச் செஞ்சு கொண்டு வந்தேன். அதை இந்தச் சிறுவன் அவன் வீட்ல இருந்து கொண்டு வந்ததாப் போய் சொல்லி உன்கிட்ட கொடுத்திருச்சு,” என்று பிள்ளையாரை முறைத்துக்கொண்டே கூற…
“அச்சோ… அப்போ இது நீங்க கொண்டு வந்ததா? சாரி. நான் பிள்ளையார் தான் கொண்டு வந்தான் என்று தெரியாமல் சாப்பிட்டுட்டேன்,” என்றால் நிலானி.
“ச்சே… ச்சே… அது எல்லாம் ஒண்ணுமில்லை. நான் யாருக்குக் கொண்டு வந்தேனோ, அவரே உன்கிட்ட கொடுத்துச் சாப்பிடச் சொல்லிட்டாரு,” என்று விக்கி உளறி விட…
“என்ன?” என்று நிலானி புரியாமல் பார்க்க… அதற்குள் பிள்ளையார் இடையில் புகுந்து, “அக்கா இவரு வீட்டுப் பக்கத்திலதான் எங்க வீடு இருக்கு. எனக்குக் கொடுக்கத்தான் கொண்டு வந்தாரு. அதைத்தான் சொல்லறாரு,” என்று பிள்ளையார் கூற…
“அப்போ உங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே தெரியுமா?” என்று நிலானி கேட்க… இருவரும் “ஆம்” என்று தலையை ஆட்டினர்.
“சரி, எனக்குக் கொஞ்சம் கொடுங்க,” என்று விக்கி கையை நீட்ட… “இருங்க நான் வேற எடுத்துத் தரேன்,” என்று சொல்லிவிட்டுத் தன் கையில் இருந்ததை அவள் வாயில் போடப் போக… “வேற எல்லாம் எனக்கு வேண்டாம். உன் கையில் இருப்பதே எனக்குப் போதும்,” என்று சொன்னவன், நிலானியின் கையில் இருந்த லட்டை வாங்கி… இல்லை… இல்லை… பிடுங்கி அவன் வாயில் போட்டுக்கொண்டு, “சரி வாங்க போலாம்,” என்று சொல்லிவிட்டு முன்னே நடக்க…
நிலானி அவனை முறைத்துக்கொண்டே அவன் பின்னால் பிள்ளையாருடன் மாலுக்குள் சென்றாள்.
