Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 13

உன் ரகசிய ரசிகை நான் 13

by Layas Tamil Novel
732 views

EPISODE – 13

காலையில் தாமதமாகக் கண்விழித்த துர்கா, படுக்கையறையில் ஆதி இல்லை என்பதைக் கண்டாள். அவன் எழுந்து சென்றிருப்பான் என நினைத்து மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தவள், நேராகக் குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு, வெறும் துண்டுடன் வெளியே வந்தாள். கண்ணாடி முன் நின்றவள், தன் செல்போனை எடுத்து அவளுக்குப் பிடித்த பாடலை ஒலிக்கவிட்டு, அதன் தாளத்திற்கு ஏற்ப ஆடிக்கொண்டே மற்றொரு துண்டால் தன் உடலைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

பாடல் பாடிக்கொண்டே, கிரீமை எடுத்துத் தன் உடலில் தடவிவிட்டு, அதன் மூடியை மூடப்போக, அது தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க அவள் குனியவும், சரியாக அதே நேரத்தில் ஆதி அவர்கள் படுக்கையறையின் கதவைத் திறந்து வெளியே வந்தான். வெறும் துண்டுடன் குனிந்திருந்த துர்காவைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டான்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு, மூடியை அவசரமாகக் கையில் எடுத்துக்கொண்டு அவள் எழப்போக, அப்போது சரியாக அவள் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து கீழே விழுந்தது. “கடவுளே…!” என்று அவள் அலற, அவளைப் பிறந்த மேனியில் பார்த்த ஆதிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே உறைந்துபோய், அவளை மேலிருந்து கீழாக முழுவதுமாகப் பார்த்து அப்படியே நின்றான். அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்த துர்கா, தன்னை மறைத்துக்கொள்ள அவசரமாகக் கீழே இருந்த துண்டை எடுத்துக்கட்டிவிட்டு நகரப் போனாள். அவள் குளித்துவிட்டு ஈரத்தோடு வந்திருந்ததால், தரை வழுக்கி அவள் விழப்போக, அதைப் பார்த்த ஆதி பதறிக்கொண்டு ஓடி வந்து அவளைப் பிடிக்கப்போனான். அவளைப் பிடிப்பதாக நினைத்து அவளுடைய துண்டை இழுக்க, அது அவன் கையோடு வந்துவிட, அவள் தரையில் ‘பொத்தென’ விழுந்தாள்.

தரையில் ஆடையில்லாமல் விழுந்தவள், “ஆ…!”வென அலறித் தன் உடலில் கட்டியிருந்த துண்டு அவன் கையில் இருப்பதைக் கண்டு, குனிந்து தன் உடலைப் பார்த்தாள். ஆதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தவன், பின் துர்கா தன்னைப் பார்க்கிறாள் என்று கண்களை இருக்க மூடிக்கொண்டான்.

அவன் கண்களை மூடவும், அவன் கையில் இருந்த துண்டைப் பிடுங்கிக்கொண்டு எழுந்து, அதை அவசரமாகத் தன் உடலில் சுற்றிக்கொண்டு குளியலறைக்குள் ஓடினாள். குளியலறைக் கதவு திறந்து மூடும் சத்தம் கேட்கவும், கண்களைத் திறந்த ஆதி, அறையை ஒருமுறை நோட்டமிட, அங்கே துர்கா இல்லாமல் போனதும், “அப்பாடா” என்று அவள் வருவதற்குள் தயாராகி கீழே வந்துவிட்டான்.

கீழே, துர்காவைப் பிறந்த மேனியில் பார்த்த ஆதிக்கு அந்த அதிர்ச்சி இன்னும் போகாமலேயே இருந்தது. அவள் நினைவாக இருந்தவனுக்கு, அவளை அப்படிப் பார்த்தபோது அவளுடைய மார்பில் ஒரு மச்சம் இருந்ததையும் பார்த்துவிட்டான். அந்த மச்சம் ஏனோ அவனை வசீகரித்துவிட்டது.

துர்கா மேல் எந்த ஈர்ப்பும் இல்லாதிருந்த ஆதிக்கு, அவளை இந்தக் கோலத்தில் பார்த்ததினால் மட்டுமல்லாமல், அந்த மச்சத்தினால் அவள் மேல் ஈர்ப்பு வந்தது. அதை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனுக்கு ஏற்பட்டது. அவன் கண்ணுக்குள் அவள் மார்பில் பார்த்த மச்சம் வந்துகொண்டே இருக்க, ஆதி தன்னை கட்டுப்படுத்த முடியாமல் தலையை வேகமாக உலுக்கிக்கொண்டான். “ச்சே… ஆதி, என்ன உன் புத்தி இப்படிப் போகுது? ஒரு மச்சத்தைப் பார்த்ததற்காக அவ பின்னாடி உன் மனசு போகுது. இல்லை, அவள் உன்னோட ஃபிரெண்ட். கொஞ்சம் முன்னாடி நடந்தது ஒரு விபத்து மாதிரிதான் நடந்திருக்கு. இதைப்போய் பெரிதுபடுத்தி அதையே நீ நினைத்துக்கொண்டிருக்கக் கூடாது” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

அப்படி இனிமேல் துர்காவைப் பற்றித் தவறான எண்ணம் தன் மனதில் தோன்றக் கூடாது என்று தனக்குத்தானே உறுதியாகக் கட்டளையிட்டுக் கொண்டவன், படிகளில் கொலுசு சத்தம் கேட்க ஆவலுடன் தன் முகத்தைத் திருப்பி அவள் வந்ததைப் பார்த்தான். அவள் மஞ்சள் வண்ணச் சேலையில் எளிமையாக உடை உடுத்தி, அழகாகப் படிகளில் இறங்கி வருவதைப் பார்த்தவன் மனது, எப்போதோ அவள் பின்னால் சென்றுவிட்டதை உணரவில்லை.

தன் மனதிற்குப் போட்ட கடிவாளங்கள் எல்லாம் காற்றோடு பறந்துபோனதை உணராத அவன், அவளையே மெய்மறந்து பார்த்துக்கொண்டிருக்க, படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த துர்கா, ஆதி ஹாலில் அமர்ந்துகொண்டு தன்னை இமைக்காமல் பார்ப்பதைக் கண்டாள். சற்று முன் அவன் படுக்கை அறையில் தன்னைப் பார்த்ததை நினைத்துதான் அவன் இப்படிப் பார்க்கிறான் என நினைக்கும்போதே, துர்காவின் முகம் வெட்கத்தில் இரத்தமெனச் சிவந்தது. வேகமாக இறங்கி வந்து கொண்டிருந்தவள், அவன் பார்வையின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி இமைக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க, ஆதியையும் துர்காவையும் வீட்டில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டு, தங்களுக்குள் ஏதோ கூறி சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டனர். ஹாலில் இப்போது துர்காவும், ஆதியும் மட்டுமே இருந்தனர். துர்கா மெது மெதுவாக ஒவ்வொரு படியாக இறங்கி ஆதிக்கு அருகில் வர, ஆதிக்கு இதயத் துடிப்பு வேகமாக இருந்தது. அவன் முகம் லேசாக வியர்த்துவிட்டது. தன் முகத்தில் இருந்த வியர்வையைத் துடைக்கக் கைகளை உயர்த்தித் துடைத்துக்கொண்டவன் அப்போதும் துர்காவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அருகில் வந்த துர்கா, “ஆதி” என்று மெதுவாக அழைத்தாள். அவள் கூப்பிட்டது அவனுக்குக் கேட்டால் தானே! தன் முன்னே அழகுச் சிலையாக நின்றிருந்த துர்காவை மேலிருந்து கீழாகச் சுழலவிட்டான். இலேசாகப் பின்னலிட்டு, அதில் மல்லிகை பூ வைத்து, வகுட்டின் நடுவே சிறிதாக ஒரு குங்குமம் வைத்திருந்ததுதான் அவள் திருமணமான பெண் என்பதை காட்டிக் கொடுத்தது. அது அவளின் அழகுக்கு மேலும் மெருகூட்டியது. அவளை இதுவரை இப்படி அவன் பார்த்ததே இல்லை. அலுவலகத்தில் எப்போதும் வாரிச் சீவி கொண்டை போட்டுக் கொண்டிருந்த தலையையும், எப்போதும் பேண்ட், சட்டை அணிந்தும்தான் அலுவலகம் வருவாள். தங்களை அழகுபடுத்திக்கொள்ள மெனக்கெட்டுச் செலவு செய்வதும், ஆடைகளைக் கவர்ச்சியாக உடுத்துவதிலும் எப்போதுமே துர்காவுக்கு உடன்பாடு கிடையாது.

அப்படியே தினம் தினம் இவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், இவள் தன்னைத் திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்து சேலையிலேயே பார்க்க, அன்றுவிட இன்று ஏனோ அவன் கண்ணுக்கு மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தாள் துர்கா. பதிந்து சிறிய தலையில் பூவை சூடி, சிறிய ஜிமிக்கி ஒன்றை அணிந்து, இரு புருவங்களுக்கு இடையே மெரூன் கலர் வட்டப் பொட்டு ஒன்றை வைத்து, ஒப்பனையே இல்லாத அவள் முகத்திலிருந்து அப்படியே கண்களில் இருந்து கீழே இறங்கி, அவள் ரோஸ் நிறத்தில் இருந்த இரு கன்னங்களையும் பார்த்தவன், அதைத் தொட்டு கிள்ள வேண்டும் போலத் தோன்ற, தன் கைகளை அடக்கிக்கொண்டு அப்படியே கீழே வந்து அவள் செவ்விதழ்களைப் பார்த்தான். அந்த உதட்டிலிருந்து ஏதோ சத்தம் மட்டுமே வருவதும், அது அசைவதும் மட்டுமே அவனுக்குப் புரிந்தது. ஆனால் அது எதுவுமே ஆதியின் காதில் விழவே இல்லை. அவளின் உதடு வளைவுகளைக் கவனித்தவன், ஒரு கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியம் போல அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்த உதடு லேசாக ஈரம் இருக்க, அதைப் பார்த்ததும் ஏனோ அவனுக்கு அதைச் சுவைக்க வேண்டும்போல தோன்ற, தன் எச்சில் விழுங்கிக்கொண்டு பார்த்திருக்க, அவன் முகத்திற்கு நேராகக் கைகளை அசைத்து, “ஆதி… ஆதி…” என்று துர்கா சத்தமிட, அப்போதுதான் நினைவு வந்தவனாகத் தலையை உலுக்கி அவளைப் பார்த்தான். அவள் “என்ன ஆதி, அப்படி என்ன பார்க்கிறாய்?” என்று கேட்க, அவள் உதட்டை ஒருமுறை பார்த்துவிட்டு, கஷ்டப்பட்டு அவளிடம் இருந்து பார்வையை விலக்கி, வேறு பக்கம் திருப்பியவன், “ஒன்னும் இல்லை. என்ன வேணும், சொல்” என்றான் கடுகடுப்பாக. அப்படிப் பேசியதும் துர்காவுக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது.

“ஆதி, சாப்பிட்டியா? அதைக் கேட்கத்தான் நான் வந்தேன்” என்று தயங்கிக்கொண்டே அவனிடம் பேசினாள். அவனின் கோபம் எப்படி இருக்கும் என்று துர்காவுக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். ஆதலால் அவன் மனநிலை சரி இல்லை என நினைத்து, அவனிடம் எதுவும் பேசாமல் இதைக் மட்டும் கேட்டாள்.

“நான் சாப்பிட்டேன். நீயும் போய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பு” என்றான். அவன் தன்னையும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பச் சொன்னதைக் கேட்டுச் சந்தோஷமாக, “2 நிமிடத்தில் ஆதி. நான் சீக்கிரம் சாப்பிட்டு வந்துவிடுகிறேன்” என்று வேகமாகச் சாப்பிடச் சென்றாள்.

சீக்கிரமே சாப்பிட்டு வந்த துர்கா அவனிடம் வந்து நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன், “போலாமா?” என்று கேட்க அவளும் “சரி” என்று தலையாட்டிவிட்டுச் சிறுபிள்ளை போல அவன் பின்னே சென்றாள். இருவரும் காரில் ஏற, “டிரைவர், துர்கா வீட்டுக்கு போங்க” என்று ஆதி கூறினான். துர்காவுக்கு மனதுக்குள் மிகவும் சந்தோஷமாக இருந்தது. சொல்லாமலேயே தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆதியைப் பார்த்துச் சந்தோஷப்பட்டாள்.

துர்காவின் வீட்டில் அவள் திருமணம் ஆன பின்பு முதல் முறையாக மறுவீடு வருகிறாள் என்பதால், ஏற்பாடுகள் எல்லாம் அமோகமாக நடந்துகொண்டிருந்தது.

தன் அறையில் கதிரைப் பற்றிய நினைவிலேயே இருந்த கீர்த்திகா, தன் அறையை விட்டு காலையிலிருந்து வெளியே வராததால், அவளுடைய அம்மா வெளியில் இருந்து, “கீர்த்திகா, என்னடி? நானும் பார்த்துட்டு இருக்கேன். உங்க அக்கா இன்னைக்கு மாப்பிள்ளை உடன் வீட்டுக்கு வரப்போறா. கொஞ்சம் வெளிய வந்து அம்மாவுக்கு ஏதாவது ஒத்தாசையா வேலை பார்க்கணும்னு இல்லாம, ரூம்க்குள்ளயே நேற்றுல இருந்து அடைந்து கிடக்கிற. அப்படி என்னதாண்டி ஆச்சு உனக்கு?” என்று கேட்டார் அவள் அம்மா.

கீர்த்திகாவின் அம்மா அவளைச் சத்தம் போடவும், அறையை விட்டு வெளியே வந்தவள், “அம்மா, நான் தயாராகி வரத்தான் நேரம் ஆயிடுச்சு. வேற எல்லாம் ஒண்ணும் இல்லை. இதோ நான் வந்துட்டேன் பாருங்க. என்ன பண்ணணும்னு சொல்லுங்க, நான் செய்றேன்” என்று கூறிவிட்டு அவர் அருகில் வர, அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “தயாராகியாச்சா? சரி, போ அந்தச் சாமி படத்துக்கு பூவெல்லாம் போட்டு விளக்கு பற்றவை” என்றார். “சரிமா” என்று கூறிவிட்டு அவள் பூஜை அறைக்குச் சென்றாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விசாலாட்சி அவர் கணவருடன், கதிரும் விக்கியும் வந்துவிட, உள்ளே வந்தவர்களை வரவேற்ற துர்காவின் அம்மா, “மாப்பிள்ளையும் இன்னும் வரல சம்மந்தி” என்று கேட்க, “அவங்க வந்துட்டு இருக்காங்க சம்மந்தி அம்மா. ஒரு அஞ்சு நிமிடத்தில் வந்துடுவாங்க” என்று கூறிவிட்டு விசாலாட்சி உள்ளே செல்ல, பின்னாலேயே துர்காவும் ஆதியும் வந்துவிட்டனர்.

இருவரையும் வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டு, இருவருக்கும் துர்காவின் அம்மா ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, இருவரையும் உள்ளே அழைத்தார். ஆரத்தித் தட்டை கீர்த்திகாவின் கையில் கொடுத்து, வெளியே சென்று ஊற்றிவிட்டு வருமாறு அவளை அனுப்பி வைத்துவிட்டார்.

அவள் வந்ததிலிருந்து கதிரையே பார்த்தாள், ஆனால் கதிர் அவள் இருக்கும் இடமே திரும்பிப் பார்க்கவில்லை. சோகமாக அவள் அம்மாவின் கையில் இருந்து தட்டை வாங்கிக்கொண்டு போய் வெளியில் ஊற்றிவிட்டு உள்ளே வந்தவள், அனைவருக்கும் பழச்சாறு எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். அனைவருக்கும் பழச்சாறு கொடுத்துவிட்டு, கதிரிடம் சென்று கையை நீட்ட, கதிர் அவள் இருக்கும் இடமே பார்க்காமல் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்து விக்கி, “டேய், என்னடா பண்ணிட்டு இருக்க? ஒழுங்கா பழச்சாறை எடுடா” என்று அவனை அதட்ட, அவளைப் பார்க்காமலேயே பழச்சாறைக் கையில் எடுத்தவன், அதை குடிக்காமல் அப்படியே கையில் வைத்திருந்தான்.

அனைவரும் பேசிக்கொண்டிருக்க, துர்கா நேராக சமையலறைக்குச் சென்றாள். அங்கே பாத்திரத்தில் வைத்திருந்த உணவு வகைகளை எல்லாம் திறந்து பார்த்து, “அம்மா, என்னம்மா செய்து வச்சிருக்க?” என்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். “எல்லாம் உனக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சது தாண்டி. நான் நேத்தே சம்மந்தி அம்மா கிட்ட மாப்பிள்ளைக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு தான் வந்திருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சதுதான் சமைச்சு வச்சிருக்கேன். கொஞ்ச நேரம் பொறு, எல்லாரும் சாப்பிடலாம்” என்று கூறினார் துர்காவின் அம்மா.

அனைவரும் சாப்பிடும் நேரம் வர, அனைவரையும் சாப்பிட அழைத்தார். அனைவருக்கும் உணவு பரிமாற, அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கீர்த்திகாவும் அவள் அம்மாவும் ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துப் பரிமாற, கீர்த்திகா வேண்டும் என்றே கதிரின் இலையில் உணவுகளை அதிகமாக வைக்க, எதுவுமே சொல்லாமல் கதிர் அமைதியாக இருந்தான்.

துர்காவும் ஆதியும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, கீர்த்திகா ஆதியைப் பார்த்து, “மாமா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க சாப்பிடக்கூடாது. முதல்ல எங்க அக்காவுக்கு ஊட்டி விடுங்க, அதுக்கப்புறம் நீங்க சாப்பிடுங்க” என்றாள். அவள் கூறியதும் ஆதி அமைதியாக இருக்க, விசாலாட்சி ஆதியிடம், “ஆதி, உன் இலையிலிருந்து ஒரு ஸ்வீட் எடுத்து துர்காவுக்குக் கொஞ்சம் ஊட்டிவிடுப்பா. துர்கா, நீயும் அவனுக்கு ஊட்டிவிடுமா” என்றார்.

ஆதி அமைதியாகவே இருக்க, துர்கா தன் இலையிலிருந்து ஒரு ஸ்வீட்டை எடுத்து ஆதியின் வாய் முன் நீட்ட, அவன் வாயைத் திறக்காமல் அவளையே பார்த்தான். “ப்ளீஸ்” என்று பார்வையால் கெஞ்சி, சுற்றி இருப்பவர்களுக்காக என்று மெதுவாகக் கூற, ஆதி மெதுவாக ஸ்வீட்டின் ஒரு ஓரத்தில் இலேசாகக் கடித்தான். அவன் சாப்பிட்டுவிட்டு, துர்கா வாய் அருகே ஸ்வீட்டை நீட்ட, துர்காவும் சிரித்துக்கொண்டு அவன் கொடுத்த ஸ்வீட்டை விரும்பி உண்பது போல நடித்து, ஸ்வீட்டை வாயில் வைத்து கடிக்க, அவளுடைய உதடு அவன் விரலில் படவும், அதன் பூ போன்ற மென்மையான இதழ்களின் ஈரத்தை உணர்ந்த ஆதி, அவள் உண்ணும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பூ போன்ற அவள் இதழைச் சுவைக்க ஆசைகொண்டான். தன்னை மறந்து துர்காவைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரும் விக்கியும், “ஆதி, உன் பொண்டாட்டியோட அழகை ரசித்தது போதும். முதல்ல சாப்பிடு. எங்களுக்கெல்லாம் பசிக்குது. நீ சாப்பிட்டால் தான் நாங்க சாப்பிடணும்னு வேற எங்களைச் சாப்பிட விடாமல் பிடிச்சு வச்சிருக்காங்க” என்று விக்கி கூறினான்.

அவன் ரசித்ததை விக்கி கண்டுபிடித்துவிட்டான் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாதவாறு, திரும்பி அவனை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் சாப்பிடத் தொடங்கினான் ஆதி. அனைவரும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மற்ற அனைவரும் கிளம்ப, ஆதியும் துர்காவும் அங்கே இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருமாறு விசாலாட்சி கூற, வேறு வழி இல்லாமல் ஆதி துர்கா வீட்டில் இருப்பதற்குச் சம்மதித்தான்.

அனைவரும் கிளம்பும்போது துர்கா வீட்டிலிருந்து எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, கதிர் மட்டும் அனைவரிடமும் சொன்னவன் கீர்த்தியைக் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றுவிட்டான். “உரிமையாவது தன்னை ஒருமுறை பார்த்துவிட மாட்டானா?” என்று ஏங்கிய கீர்த்திக்கு, அவனின் இந்த ஒதுக்கல் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

அவர்கள் சென்று சிறிது நேரத்தில் ஆதியின் அலுவலகத்திலிருந்து அவனுடைய மேலாளர் குமார் போன் செய்திருந்தார். அதை அட்டென்ட் செய்த ஆதி, “சொல்லு குமார், என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“சார், நீங்க கொஞ்சம் ஆபீஸுக்கு வர முடியுமா? இங்கே சங்கவி மேடத்தால் ஒரு பெரிய பிரச்சனை” என்றார். “வாட்? சங்கவியா? அவள் எதுக்கு அங்க வந்தாள்?” என்று கேட்டான் ஆதி. காலையில் அவள் அலுவலகத்திற்கு வந்ததிலிருந்து, கதிர் மற்றும் விக்கிக்கும் அவளுக்கும் நடந்தது வரை ஒன்று விடாமல் கூறிய மேலாளர், அவள் இப்போது அலுவலகத்தில் ரகளை செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவர்கள் இருவருக்கும் கால் செய்ய, அவர்கள் எடுக்காததால் தனக்குக் கால் செய்ததாக மேலாளர் கூற, “சரி, நான் இன்னும் 5 நிமிடத்தில் கிளம்பி அங்கு வரேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

போனை வைத்துவிட்டுத் தன் எதிரே ஹாலில் கீர்த்திகாவுடன் அமர்ந்திருந்த துர்காவைப் பார்த்தான். அவன் யாருடன் பேசுகிறான் என்பது புரிந்துகொண்டு அமர்ந்திருந்த துர்கா, அவன் தன்னைப் பார்க்கவும், “சரி, போயிட்டுச் சீக்கிரம் வந்துடுங்க. அம்மாவும், அப்பாவும் கேட்பாங்க” என்று தயங்கித் தயங்கி அவனிடம் பேசினாள்.

தான் என்னவென்று கூறாமலேயே தான் பேசியதை வைத்தே தன்னைப் புரிந்து கொண்ட துர்காவை நினைத்து, “இப்படி ஒரு ஃபிரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன்” என்று நினைத்தவனின் இன்னொரு மனம் அவன் தலையில் தட்டி, “டேய் முட்டாள், அவள் உன்னோட ஃபிரெண்ட் இல்லைடா. இப்போ அவள் நீ தொட்டுத் தாலி கட்டிய மனைவி” என்றது. “அப்படியானால் நீ என்ன நினைக்க வேண்டும்? இப்படி உன்னைப் புரிந்து கொண்ட ஒருத்தி உனக்கு மனைவியாக வந்திருப்பதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று மனசாட்சி கூறியது. அது சரிதானே என்று யோசித்தவன், முதல் முறையாக துர்காவைத் தன் மனைவியாகப் பார்த்தான்.

சங்கவியை சந்தித்த பிறகு தனக்கு மனைவியே வேண்டாம் என்று அவன் முடிவெடுக்கப் போவது அவனுக்கே தெரியாமல் அவளை ரசித்தான். அவளிடமும், கீர்த்திகாவிடமும் கூறிவிட்டு கிளம்பி அலுவலகம் வர, அங்கே உள்ளே நுழைந்தவன் அதிர்ச்சியாகி அப்படியே நின்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured