Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 2

உன் ரகசிய ரசிகை நான் 2

by Layas Tamil Novel
937 views

EPISODE 2

ஆதி, துர்காவைத் தன் அறையிலிருந்து அழைத்து வந்த விசாலாட்சி, ஐயரிடம் பூஜைக்குத் தேவையான வேலைகளை எல்லாம் துர்காவிடம் கேட்டு வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் தன் தோழிகளுடன் துர்காவைப் பற்றியும், ஆதி திருமணம் செய்துகொள்ளப் போகும் சங்கவியைப் பற்றியும் பேசி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்.

தன் நண்பன் விக்கியுடன் மணமேடைக்கு வந்த ஆதி, மேடையில் அனைவருக்கும் வணக்கம் சொல்லி வந்திருந்தவர்களை வரவேற்றவன், பின் அமர்ந்து ஐயர் கூறுவது போலத் திருமணச் சடங்குகளைச் செய்தான்.

பின் ஐயர், “கல்யாணப் பெண்ணை அழைச்சுட்டு வாங்கோ” என்று கூற, சங்கவியை அழைக்க அவள் அறைக்குச் சென்ற பெண் அவள் அறைக்கதவைத் தட்ட, கதவைத் திறந்த பெண் “என்ன?” என்று அவளைக் கேட்க, “நேரமாச்சு, பெண்ணை அழைத்து மணமேடைக்கு வரச் சொன்னாங்க ஐயர்” என்றாள்.

“அப்படியா, சரி நீ போ. நான் பெண்ணை கூட்டிட்டு வரேன்” என்று கூறி அந்தப் பெண் இவள் பதிலுக்குக் காத்திராமல் கதவைச் சாத்திவிட்டாள். மணமேடையில் ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருக்க, “எங்கம்மா பொண்ணு இன்னும் வரலையா? நேரம் ஆகுது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, “யாரம்மா நீங்க? போய் பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ, முகூர்த்தத்திற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு” என்று கூற, ஐயர் அருகில் நின்றிருந்த சங்கவியைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட, ஆதி ஒன்றும் புரியாமல் தன் அருகில் நின்றிருந்தவளை நிமிர்ந்து பார்க்க, அங்கே சங்கவி மணப்பெண் அலங்காரத்தில் இல்லாமல், சாதாரணமாக ஒரு ஜீன்ஸும் பனியனும் போட்டு நின்றிருந்தாள்.

மணப்பெண் அலங்காரத்தில் இல்லாமல் அவள் அப்படி நின்றிருப்பதைப் பார்த்த ஆதிக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உடனே மேடையிலிருந்து எழுந்தவன், “என்ன சங்கவி? என்ன ஆச்சு? ஏன் இப்படி டிரஸ் பண்ணிட்டு இருக்க? கல்யாணத்துக்கு ரெடியாகாம ஏன் இப்படி வந்து நிக்கிற?” என்று கேட்டான் ஆதி.

அதற்குள் மேடைக்கு வந்த ஆதியின் பெற்றோரும், சங்கவியின் பெற்றோரும் சங்கவியைப் புரியாமல் பார்க்க, சங்கவியின் அருகில் வந்த சங்கவியின் அப்பா, “நீ சங்கவி என்ன ஆச்சு உனக்கு? இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்து நின்னுட்டு இருக்க? கல்யாணத்துக்கு எப்படி டிரஸ் பண்ணிட்டு வரணும்னு உனக்குத் தெரியாதா என்ன? இது என்ன?” என்று அவளை அதட்டினார்.

அவர் பேசுவதைக் காதில் வாங்கிக்கொள்ளாத சங்கவி, “இப்போது இத்தனை பேர் முன்னால் என் விருப்பத்தைச் சொன்னால் தான் என்னுடைய கல்யாணத்தை நிப்பாட்டுவாங்க. அப்படி இல்லைன்னா என் அப்பா எதையாவது பேசி என்னை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருவாரு” என்று மனதில் நினைத்தவள், அவரை சட்டை செய்யாமல் ஆதியைப் பார்த்து, “ஆதி, எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. எங்க அப்பா என்னைக் கட்டாயப்படுத்தினதுனால தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்” என்று கூறினாள்.

அவள் கூறியதைக் கேட்ட ஆதி அதிர்ச்சியானவன், “என்ன சங்கவி சொல்ற? இந்தக் கல்யாணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா? நீ சந்தோசமா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொன்னதனால் தானே நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். எப்படித்தான் இருந்தாலும் நீயும் நானும் லவ் பண்ணிட்டு தானே இருக்கோம்?” என்று ஆதி கேட்க,

அவன் “நீயும் நானும் லவ் பண்ணிட்டு தானே இருக்கோம்” என்று சொன்னதும் சங்கவி அவனை திரும்பிப் பார்த்து, “வாட்? நீயும் நானும் லவ் பண்றோமா?… அப்படின்னு உனக்கு யார் சொன்னது? நான் வந்து உன்னை லவ் பண்றேன்னு சொன்னேனா? நீ இப்படி நினைச்சிட்டு இருக்குறதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது.

எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க துளி கூட விருப்பமே இல்லை. என் அப்பா பிசினஸ் கத்துகிறதுக்காக உன் ஆபீஸ்ல உனக்கு கீழ தான் வேலை பார்க்கணும்னு சொன்னப்ப, வேற வழி இல்லாம தான் உன் கூட சகஜமா சிரிச்சு பேசி பழகினேன். என் வேலை ஆகணும்னு தான் நான் அமைதியா நீ என்கிட்ட வழிஞ்சு வர அப்போ எல்லாம் சும்மா இருந்தேன். அதுக்காக நான் உன்னை லவ் பண்றேன்னு அர்த்தம் இல்லை” என்றாள்.

“எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விருப்பமே இல்லை. நான் என் அப்பாகிட்ட எவ்வளவு சொல்லி பாத்துட்டேன். ஆனா அவர் நான் சொல்றதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதனால்தான் வேற வழி இல்லாம தாலி கட்டுற சமயம் வரைக்கும் நான் காத்திருந்தேன்.

எனக்குப் பிடிச்சது பிடிக்காதது எதுவா இருந்தாலும் எனக்கு விருப்பப்படி, நான் நினைச்ச படி தான் நடக்கணும். அப்படி நடக்க நான் என்ன வேணா செய்வேன்” என்று கூறியவள், “ஓகே, டன்… என் வேலை முடிஞ்சுது, நான் கிளம்புறேன்” என்று கூறி மேடையை விட்டு இறங்க போனவளை, சங்கவியின் அப்பா அவள் கையைப் பிடித்து நிறுத்தி, அவளை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்றார்.

அவளை அறைக்குள் விட்டு தானும் வந்து அரைக்கதவை சாற்றிவிட்டு திரும்பி சங்கவியை “பளார்” என்று ஓங்கி அறைந்தார். அவர் அறைந்ததில் சங்கவி அருகில் போய் கீழே விழுந்தாள்.

கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவள் அப்பா அடித்த இடத்தை தேய்த்து பார்த்துக்கொண்டே எழுந்து நிற்க, அவர் சங்கவியிடம், “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நீ?… உனக்காக நான் அந்த வெங்கடாசலத்திடம் அதையும் இதையும் சொல்லி, இந்த திருமணத்திற்கு சம்மதம் வாங்கி அதற்கு முன் உன்னை அந்த ஆதியின் கம்பெனிக்கு அனுப்பி, அவனுக்கு உன்னைப் பிடிக்க வைக்க நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நான் என்னவென்று சொல்வது?

அந்த வெங்கடாசலம் குடும்பத்திற்கு எத்தனை சொத்துக்கள் இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? அவன் எவ்வளவு நாடுகளில் பிசினஸ் செய்து பேரும் புள்ளியாக இருக்கிறான் என்று உனக்குத் தெரியுமா? நாம் நினைத்தாலும் நம்முடைய சொத்துக்கள் எல்லாம் அவர்கள் சொத்துக்களுக்கு முன்னால் ஒரு சிறு துரும்பு தான்.

அவ்வளவு பணக்காரன், ராஜ வம்சத்து வாரிசான அந்த ஆதியை உனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க நான் எவ்வளவு சிரமப்பட்டு இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறேன்.

நீ என்னவென்றால் உனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம் என்று அதனை பேர் முன்னாலும் வந்து சொல்லிக்கொண்டு இருக்கிறாய். உனக்கு என்ன பைத்தியமா?” என்று மறுபடியும் அவளை அறைய,

“அப்பா…. எனக்கு அவன் முகத்தைப் பார்க்கவே பிடிக்கலை. அவன் உடம்பில் இருக்கும் அந்த சிவப்பு கொப்புளங்களை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது..

அப்படி இருக்க நான் எப்படி அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியும்?” என்று கூறிய சங்கவியைப் பார்த்து, “அவன் தான் திருமணம் ஆனதும் சென்று அந்த கொப்புளங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வருவதாக கூறினானே” என்றார்.

“அப்படியும் உனக்கு அவனுடன் வாழ பிடிக்கவில்லை என்றால், அவன் தம்பியை உன் கைக்குள் போட்டுக்கொள். எப்படியோ அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் நமக்கே வந்து சேர வேண்டும். ஞாபகம் வைத்துக்கொள்.

இப்போ நீ இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால், என் சொத்தில் இருந்து ஒரு நயா பைசா கூட உனக்குக் கொடுக்க மாட்டேன்” என்று அவர் கூற, இதுவரை அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சங்கவி, “எப்படியும் தனக்கு ஆதியை எனக்கு பிடிக்கப் போவதில்லை. அவனை இப்போது அப்பா சொல்வது போலத் திருமணம் செய்து கொண்டு, அவன் சொத்துக்களை எல்லாம் அனுபவிப்பதற்கு நான் ஒரு தியாகம் மட்டுமே செய்திருக்க வேண்டும். அந்த அசிங்கம் பிடித்த ஆதியை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

அவன் தம்பிக்கும் வேறு ஒருவனைப் பார்த்து திருமணம் செய்து வைக்கக் கூடாது. அப்படியே அவன் திருமணம் செய்வதாக இருந்தால் அந்தப் பெண் என் கைக்குள் இருப்பவளாக இருப்பது தான் எனக்கு நல்லது.

அண்ணனை திருமணம் செய்துகொண்டு முடிந்தால் தம்பியை என் கைக்குள் போட்டுக்கொள்ள வேண்டும்” என்று யோசித்தவள்.

அவள் அப்பாவிடம், “அப்பா, நீங்க சொல்றது கரெக்ட் தான். எனக்கு அந்த ஆதி சுத்தமா பிடிக்கல. ஆனால் அவனோட தம்பியைத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க சொன்ன மாதிரி இப்போதைக்கு இந்த ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

அதுக்கப்புறம் என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு நான் பார்த்துக்கிறேன். எனக்கு இந்த கல்யாணத்துக்கு முழு சம்மதம் என்று நீங்க போய் சொல்லுங்க. வித்தின் டென் மினிட்ஸ் நான் ரெடி ஆகி வரேன்” என்று கூறி அவரை வெளியே அனுப்பி வைத்தாள்.

அவர் சென்றதும் சங்கவி தன் அறைக்குச் சென்று தானே மேக்கப் போட்டு 10 நிமிடத்தில் மணப்பெண் அலங்காரத்தில் மேடைக்கு வந்தாள். அவள் வருவதற்குள் சங்கவியின் அப்பா அங்கு இருப்பவர்களிடம் பேசி சமாதானம் செய்து, அவள் ஏதோ புரியாமல் செய்துவிட்டாள் என்று அங்கிருப்பவரிடம் மன்னிப்பு கேட்பது போல நடித்து, நாடகம் ஆடி அனைவரையும் சம்மதிக்க வைத்தார்.

ஆதியின் மனதில் இப்போது ஏதோ ஒரு நெருடலோடு தன் அறையில் அமைந்திருந்தான். “சங்கவிக்கு என்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று தானே சொன்னாள்? இப்போது அப்போ இத்தனை நாள் அவள் வேலை ஆக வேண்டும் என்று என்னிடம் நெருங்கிப் பழகி இருக்கிறாளா?” என்று யோசித்துப் பார்த்தவன் அதிர்ச்சி ஆனான்.

“கடைசியில் இவளும் மற்றவர்கள் போல என்னுடைய சொத்திற்கு ஆசைப்பட்டுதான் இப்போது என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லி இருக்கிறாளோ?… இப்போது நான் என்ன செய்வது? எப்படி இந்தத் திருமணத்தை நிறுத்துவது? இப்படிப்பட்டவளை நான் திருமணம் செய்துகொண்டு என் வாழ்க்கையை நாசம் செய்வது போதாது என்று என் குடும்ப கெளரவத்தையும், என் குடும்பத்தினரையும் நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை” என்று மனதில், “இப்படிப்பட்டவளை நான் கண்டிப்பாகத் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. எப்படியாவது இந்தத் திருமணத்தை நிறுத்த வேண்டும்” என்று எண்ணியவன், தன் தம்பி மற்றும் நண்பன் இருவரையும் போன் செய்து தன் அறைக்கு வரச் சொன்னான்.

மண மேடையில் சங்கவி தயாராகி வந்து வெகு நேரம் காத்திருந்த பின்னும் தன் அறையில் இருந்து ஆதி வராததால் அனைவரும் பதட்டமாக நின்றிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஆதி தன் அறையில் இருந்து அதே மாப்பிள்ளை கோலத்தில் வெளியே வந்தான். அவன் மணவறைக்கு வந்து நிற்க, சங்கவியின் அப்பா, “வாங்க மாப்பிள்ளை, என் பொண்ணு பேசினதை எதுவும் மனசில் வெச்சுக்காதீங்க மாப்பிள்ளை. அவளுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்று அவனிடம் கெஞ்சுவது போல நடித்தார்.

அவரை சட்டை செய்து கொள்ளாத ஆதி தன் தாய் தந்தையிடம் சென்றான். அவர்கள் வாடிய முகத்தைக் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தான். அவன் அப்பாவிடம், “அப்பா” என்று அவன் ஏதோ பேச வருவதற்குள், “என்னை மன்னிச்சிருடா ஆதி. உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் நான் சங்கவியை உனக்குக் கட்டிவைக்க இந்த ஏற்பாடு எல்லாம் செய்தேன்.

ஆனால் இப்படி அந்தப் பொண்ணு அனைவரும் முன்னிலையிலும், உன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லி ஒரு குழப்பத்தை ஏற்படுத்திவிட்டாள்.

இப்போதைக்கு இந்தத் திருமணம் நின்றால், நம் முன்னோர்கள் இவ்வளவு நாள் சேர்த்து வைத்த அந்தஸ்து, கெளரவம் எல்லாம் காற்றோடு காற்றாகப் போய்விடும். எனக்கு இப்போது இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. என்னதான் சங்கவியை சமாதானம் செய்து உனக்குத் திருமணம் செய்து வைத்தாலும், உன்னைப் பிடிக்காத ஒருவளுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்க எனக்கு விருப்பம் இல்லை” என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

அவர் அருகில் நின்றிருந்த விசாலாட்சி என்ன கூறுவது என்று தெரியாமல் அழுதுகொண்டு நின்றிருந்தார். அவன் அம்மாவிடம் வந்தவன், “அம்மா, நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். நான் எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டான்.

“உன்னுடைய சந்தோசம்தான் ஆதி, எனக்கும் சந்தோஷம். நீ என்ன முடிவு எடுத்திருந்தாலும் எனக்கு சம்மதம் தான்” என்றார். அவர் அப்படி கூறியதும், அதுவரை நெருடலோடு இருந்த ஆதியின் மனதில் இப்போதுதான் நிம்மதி பிறந்தது.

அவன் அப்பாவைப் பார்த்தவன் நேராக மணமேடைக்குச் சென்றவன், “சங்கவி, எனக்கு உன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை. நீ இங்கிருந்து போகலாம்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்ட அனைவருக்கும் இப்போது மேலும் அதிர்ச்சியையே தந்தது. ஆதி கூறியதைக் கேட்ட சங்கவிக்கு இப்போது பெருத்த அவமானமாக இருந்தது. “இத்தனை பேர் முன்னிலையில் தன்னை வேண்டாம் என்று ஆதி கூறிவிட்டானே” என்று ஆத்திரம் வந்தது அவளுக்கு.

மேடையிலிருந்து எழுந்த சங்கவி, “ஆதி என்ன விளையாடுகிறாயா?” என்று கேட்க, அவளை ஒரு அறைவிட்ட ஆதி, “நான் விளையாடினேனா? இல்லை இவ்வளவு நேரம் நீ என் வாழ்க்கையோடு விளையாடினாயா?” என்று கேட்டான்.

சங்கவியை அறைந்ததும், அவள் அப்பா “ஆதி…” என்று கத்திக்கொண்டு அவன் அருகில் வர, “என்ன சார்? உங்க பொண்ணை இத்தனை பேர் முன்னிலையில் வேண்டாம் என்று கூறி அடித்ததும் உங்களுக்கு கோவம் வருகிறதா?” என்று கூறியவன் அவரை ஒரு முறை முறைக்க, அதுவரை ஆதியின் முன்பு நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தவர் அவனின் இந்த பார்வை அவரை நடுங்க வைத்தது. அவர் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டார்.

ஆதி வந்திருந்த அனைவரிடமும் திரும்பி, “இந்தத் திருமணம் நடக்காது. வந்திருந்தவர்கள் அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்” என்று கை கூப்பி தலை வணங்கி நின்றான்.

தன் மகனை இதுவரை இப்படி பார்த்திராத விசாலாட்சி தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே கீழே சரிய, “அம்மா…” என்று ஓடிச் சென்று அவரைத் தாங்கிப் பிடித்தாள் துர்கா….

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured