Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 26

உன் ரகசிய ரசிகை நான் 26

by Layas Tamil Novel
692 views

EPISODE 26

கோட்டை போல இருக்கும் ஆதியின் வீட்டின் உள்ளே கார் நுழையும் சத்தம் கேட்டதும், உள்ளே வேலை ஆட்களிடம் பூமிகாவின் திருமணத்திற்கு கிளம்புவதற்காக வேலை வாங்கிக் கொண்டிருந்த விசாலாட்சி, வெளியே காரின் சத்தம் கேட்டதும் வேகமாக வாசல் வந்தவர், அனைவரும் காரில் இருந்து இறங்க அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் நேராக துர்காவிடம் வந்தவர், “துர்கா! வா டா… எப்படி இருக்க? நல்லா இருக்கியா? ஏன் டா, எதுவுமே சாப்பிடறது இல்லையா? இப்படி இளைச்சுப்போன மாதிரி இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலையா? முகம் எல்லாம் வாடி இருக்கு,” என்று விடாமல் பேசிக்கொண்டே இருக்க.

விசாலாட்சி தங்கள் மூவரையும் கண்டு கொள்ளாமல் துர்காவிடம் செல்ல, அதைப் பார்த்துக் கொண்டிருந்த கதிரும், விக்கியும் அவர் அருகில் வந்து, துர்காவிடம் பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியின் கையை ஆளுக்கு ஒருபுறமாக பிடித்து, அவரை தங்களைப் பார்க்குமாறு திருப்பி நிற்க வைத்து, “ஹலோ தாய்க்குலமே! இங்க நாங்க மூணு பேர் இருக்கோம். எங்களை எல்லாம் என்னன்னு கூட கேட்காம நேரா உங்க மருமகள் கிட்ட போய் இவ்ளோ அக்கறையா விசாரிக்கிறீங்க. எங்களை எல்லாம் கண்ணுக்குத் தெரியலையோ?” என்றான் கதிர்.

“டேய்! நீங்க ரெண்டு பேரும் காலைல தான டா இங்க இருந்து போனீங்க? உங்க கிட்ட என்ன டா விசாரிக்க வேண்டி இருக்கு?” என்றார்.

“சரி மா.. எங்க ரெண்டு பேரையும் காலைல தான் பார்த்தீங்க. சரி. உங்க மகனும் மருமகளும் இப்பதானே வராங்க? அவனை விட்டுட்டு துர்காவை மட்டும் கேட்கிறீங்க,” என்று விக்கி கேட்க.

“அவனை நான் கேட்கலைனாலும், அவன் முகத்தைப் பார்த்தே நான் கண்டு பிடிச்சிருவேன் டா. நல்லா இருக்கானா இல்லையானு,” என்றார்.

“ஓஹோ! அவன் மாஸ்க் போட்ட முகத்தைப் பார்த்து நீங்க தெரிஞ்சுப்பீங்க. அப்படி தானே?” என்று நக்கல் அடித்த கதிரைப் பார்த்து, “ஆமா டா! நான் சரியா சொல்லட்டுமா? நீ, விக்கி, அப்புறம் ஆதி மூணு பேரும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டு நல்லா ஃப்ரெஷ் ஆக இருக்கீங்க. ஆனா என் மருமகள் முகத்தைப் பாருங்க. அவ முகமே சரி இல்லை. டல்லா இருக்கா.. சரியா சாப்பிடாம உடம்பு முடியாம இருக்கவ மாதிரி இருக்கு,” என்றார் விசாலாட்சி.

அவர் சொன்னதும் மூன்று பேரும் திரும்பி துர்காவின் முகத்தைப் பார்க்க, அவர் சொல்வது போல தான் துர்காவின் முகம் இருந்தது.

“இவ்ளோ நேரம் நாங்க கூட தான் இருந்தோம், எங்களுக்கு இது தெரியலையே,” என்ற விக்கி, “துர்கா, உனக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா?” என்று கேட்க.

அதற்கு ஆதி, “ஆமா. நேற்று முழுவதும் அவளுக்கு குளிர் காய்ச்சல். காலையில் தான் அவளுக்கு ஒரு அளவுக்கு சரி ஆகிருக்கு. நைட் முழுவதும் காய்ச்சலில் என்னை படாத பாடு படுத்தி விட்டாள்,” என்று அவள் நேற்று இரவு ஆதியிடம் தூக்கத்தில் பேசியதையும், அவனை விடாமல் கட்டிக்கொண்டதையும் நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்படவன், வெளியில் வெறுப்பாக பேசுவது போல காட்டிக் கொண்டான்.

ஆதி பேசியதை கேட்ட கதிருக்கும், விக்கிக்கும் ஷாக்காகி போனது. அவனை திரும்பிப் பார்த்த இருவரும், “என்ன, துர்காவுக்கு நேத்துல உடம்பு முடியலையா?” என்றனர் ஒருசேர.

அவர்கள் இருவரும் ஷாக்காகிக் கேட்க, ஆதி அவர்களைப் பார்த்து “ஆமா” அசால்டாக. “என்னடா இவ்வளவு அசால்ட்டா சொல்ற? துர்காவுக்கு நேத்து எல்லாம் குளிர் காய்ச்சல்னு சொல்லிட்டு, அப்புறம் ஏன் அவ சாப்பிடாம கூட இங்க கூட்டிட்டு வந்த? காலையிலிருந்து எதுவுமே சாப்பிடலைங்க. நீ மட்டும் நல்லா வயிறு முட்ட சாப்பிட்ட தானே இருந்த?” என்று விக்கி கோபத்தோடு கேட்க.

“டேய்! நான் எங்கடா வயிறு முட்ட சாப்பிட்ட? கொஞ்சமாதான் சாப்பிட்டேன். அதுவும் நல்லா இல்லைன்னு பாதியை பிளேட்டிலேயே வச்சிட்டுதானே வந்தேன்? நீங்களும் பார்த்து தனியாக இருந்தீர்கள்,” என்றான் ஆதி.

“உங்க அண்ணனுக்கு ‘குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை’ என்கிற கதைதான். நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு, அவளுக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு, இப்ப என்னடான்னா கொஞ்சம் தான் சாப்பிட்டேன்னு சொல்றான் பாரு. கொஞ்சம் கூட வெக்கமே இல்லடா உங்க அண்ணனுக்கு,” என்றான் கதிரிடம்.

“என்ன பண்றது? எங்க அண்ணன் அப்படித்தான்,” என்றான் கதிர் அவனிடம் சேர்ந்து கொண்டு.

இவர்கள் எல்லாம் மாறி மாறி பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த விசாலாட்சி, “ஏன்டா! இந்த புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு, காலையில சாப்பிட வைக்காமல் கூட இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்களா? உங்களையெல்லாம் என்னடா பண்றது? உங்களை நம்பி எப்படி நான் என் மருமகளை உங்க கூட அனுப்பி வைக்கிறது? இப்படித்தான் பார்த்து இருக்கீங்களா? ஏன் ஆதி! உனக்குமா இப்படி? ஏன் இப்படி நீ இந்த மாதிரி எல்லாம் நடந்துக்கொள்கிறாய்? நீ அப்படிப்பட்டவன் இல்லையே. அவ சாப்பிடாமல் உடம்பு முடியலன்னு தெரிஞ்சு, அவளை இவ்வளவு தூரம் சாப்பிடாம இங்க அழைச்சிட்டு வந்திருக்க,” என்று கூறியவர், துர்காவை பார்த்து, “வா டா.. கண்ணு…முதல்ல நம்ம போய் சாப்பிடலாமா?” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க, “ஐயோ.. அத்தை, எனக்கு பசி எல்லாம் ஒன்னும் இல்ல அத்த. அவங்க எல்லாம் ஏதோ சொல்றாங்க. நிஜமாவே எனக்கு பசிக்கல,” என்று துர்கா சொல்ல, “நீ பேசாம இரு. பொய் பேசாத. வா முதல்ல சாப்பிடலாம்,” என்று கூறி, துர்காவை அழைத்துக்கொண்டு டைனிங் டேபிளில் சென்று அமர வைத்தவர், அங்கிருந்து உணவுகளை எடுத்து அவளுக்குப் பரிமாற சாப்பிட சொன்னார்.

தன் அம்மாவை விட்டு பிரிந்து இங்கே வந்து விட்டோம் என்று வருத்தம் ஒருபுறம் துர்காவின் மனதில் இருந்தாலும், ஆனால் அந்தக் குறையை விசாலாட்சி இப்போது தீர்த்து வைத்து விட்டார் என்று மனதிற்குள் சந்தோஷம் அடைந்தவள், அவர் வைக்க வைக்க நன்றாக சாப்பிட்டால்.

துர்கா பசியில் அவர் வைத்த உணவை எதுவுமே வேண்டாம் என்று சொல்லாமல் அனைத்தையும் சாப்பிட, அவள் சாப்பிடுவதை அவள் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்கி, கதிர், ஆதி மூவருமே ஆவென வாய்ப்பிளந்து கொண்டு பார்த்தனர்.

ஆதி மனதிற்குள், “அப்போ இவ்ளோ பசியை வைத்துக்கொண்டு தான் நான் கூப்பிட்டது எதுவும் பேசாமல் கிளம்பி வந்துட்டாளா? ஏற்கனவே உடம்பு சரியில்லாதவளை நான் வேற சாப்பிடாம வேற கூட்டிட்டு வந்துட்டேன். எனக்குத்தான் அறிவு இல்லாம போச்சு,” என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ள, அவன் முகபாவனை பார்த்துக் கொண்டிருந்த விக்கி, “என்னடா? ஏதோ தீவிரமா யோசனையில் இருக்க?” என்று கேட்க, “ஒன்னும் இல்லையே,” என்றான் ஆதி.

“அப்புறம் எதுக்கு நீ துர்காவையே விழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்க?” என்று விக்கி கேட்க, அவனை முறைத்தவன் தன் ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்.

“ம்க்கும்… இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா ஊனா முகத்தைத் தூக்கி வச்சுக்க வேண்டியது. எங்க தான் இவனுக்கு மட்டும் இப்படி டிசைனா மூஞ்சி செஞ்சாங்களோ,” என்று மனதிற்குள்ளேயே ஆதியை திட்டிக் கொண்டான் விக்கி.

துர்கா சாப்பிட்டு முடிக்கவும், வெங்கடேசலமும் வெளியே சென்று இருந்தவர் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவரை “வாங்க மாமா,” என்று அழைத்த துர்கா, அவரிடம் சென்று சிறிது நேரம் பேசியவள், விசாலாட்சி விடம் வந்து, “அத்தை, நான் ஏதாவது எடுத்து வைக்கணுமா? அத சொல்லுங்க. ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க,” என்று கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா. எல்லா வேலையும் முடிச்சாச்சு. நம்ம கிளம்புனா மட்டும் போதும். உங்க மாமாவுக்காக தான் நான் காத்துட்டு இருந்தேன். அவரும் வந்துட்டாரு. சரி, நாம எல்லாம் கிளம்பலாமா?” என்றவர், “எங்க துணி எல்லாம்? எனக்கு ஊருக்கு நான் எதுவுமே எடுத்து வைக்கல,” என்று துர்கா சொல்ல, “நான் எல்லாத்தையுமே அரேஞ்ச் பண்ணிட்டேன். அங்க போய் உன்னோட டிரஸ்ஸையும், ஆதியின் டிரஸ்ஸையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். சரியா? போலாமா இப்போ?” என்று கூற, “சரி,” என்று அனைவரும் கிளம்ப.

அனைவரும் கிளம்ப போக, விசாலாட்சி துர்காவிடம், “உங்க அம்மா, அப்பாவையும், கீர்த்திகாவையும் அழைச்சிட்டு வருவதற்கு ஒரு கார் அனுப்பி இருக்கேன் டா. அவங்கள நேரா அங்க இருந்து நம்ம தங்கி இருக்கிற இடத்துக்கு வந்துருவாங்க. நீ எதுக்கும் ஒரு வாட்டி போன் பண்ணி அவங்க கிளம்பிட்டாங்கன்னு மட்டும் விசாரிச்சுக்க,” என்று கூற, கீர்த்திகா வருகிறாள் என்று கேட்டதும் கதிரின் முகத்தில் “தவுசன்ட் வாட்” பல்பு எரிந்தது. அதைக் கவனித்த விக்கி, “நடத்து நடத்து,” என்று நினைத்துக் கொண்டு, “என் ஆளு இந்நேரம் என்ன பண்ணிட்டு இருக்கோ? என்ன நினைச்சிட்டு இருக்கிறாளோ இல்லையோ? யாருக்கு தெரியும்?” என்று புலம்பிக்கொண்டு காருக்குச் சென்றான்.

வெங்கடாசலம், விசாலாட்சி டிரைவருடன் ஒரு காரிலும், ஆதி, துர்கா காரின் பின்னே அமர்ந்துகொள்ள, கதிர் காரை ஓட்ட, விக்கி அவன் அருகில் அமர்ந்து கொண்டு நால்வரும் ஒரு காரில் கிளம்பினர் பூமிகாவின் திருமணத்திற்கு.

****

சங்கவியின் வீட்டில் சங்கவியின் அம்மா இதே பூமிகாவின் கல்யாணத்திற்கு கிளம்புவதற்காக துணிமணிகளை எல்லாம் பேக் செய்தவர், சங்கவி ஹாலில் அமர்ந்து போன் நோண்டிக்கொண்டு இருக்க, “ஏய்! நீ வரலையா டி கல்யாணத்துக்கு? உன் டிரஸ்ல நீ எதுவுமே எடுத்து வைக்காமல் இப்படி உட்கார்ந்து இருக்க? இல்லை நான் போய் எடுத்து வைக்கட்டுமா?” என்று சங்கவி அம்மா அவளிடம் கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவள், “இங்கே உன் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு இப்படி ஆயிடுச்சு. நீ கொஞ்சமாவது வருத்தப்படுறியா? யாரோ வீட்டு கல்யாணத்துக்கு இவ்ளோ சந்தோசமா கிளம்பி போற,” என்று அவரை முறைத்த சங்கவியைப் பார்த்தவர்.

“நானா உன் கல்யாணத்தை நிறுத்துன? நீ தான் அந்த பையனை பிடிக்கலைன்னு சொல்லி கல்யாணத்தை வேண்டாம் என்று அத்தனை பேரும் முன்னாடி அவ்வளவு அமர்க்களம் பண்ணுன. நல்ல வேலை உன்னை கல்யாணம் பண்ணிட்டு அந்த தம்பி எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்குமோன்னு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தேன். நல்ல வேலை தப்பிச்சிருச்சு,” என்று மனதில் நினைத்தவர், சங்கவியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க.

அவர் தன் முகத்தையே பார்த்துக் கொண்டு ஏதோ மனதில் யோசிப்பதைப் பார்த்த சங்கவி, அவரிடம் எழுந்து வந்து, அவர் முகத்தை முன் சொடக்கிட, அப்போதுதான் நினைவுக்கு வந்தவராக, “என்ன?” என்று அவளை நிமிர்ந்து பார்க்க, “என்னமா! மனசுக்குள்ள என்னதான் ஏதோ திட்டிட்டு இருப்ப போல,” என்று சங்கவி கேட்க.

“இல்லடா. நான் எதுக்கு உன்னை திட்ட போறேன்? நீ இப்படி சொன்னது எனக்கு உன் மேல ரொம்ப வருத்தமாயிடுச்சு. ஐயோ! என் பொண்ணு இப்படி கல்யாணம் நின்னு போச்சு அப்படின்னு சொல்லிட்டு,” என்று அவர் சொல்ல, “போதும். ரொம்ப நடிக்காத. உன் அக்கறை எனக்கு நல்லாவே தெரியும்,” என்றவள், “நீயும் அப்பாவும் தானே கிளம்ப போறீங்க? நான் அங்க வராட்டி என்ன?” என்று அவள் சொல்ல, அப்போது வெளியே சென்று சங்கவியின் அப்பா வீட்டிற்குள் வந்தார்.

“என்ன அம்மாவும், பொண்ணும் காலையிலேயே ஹால்ல நின்னு சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்று கூறிக் கொண்டே வந்தவர், அவர் மனைவியைப் பார்த்து, “என்னடி! என் பொண்ணு கிட்ட வம்பிழுத்துட்டு இருக்க?” என்று கேட்க.

“இதோ வந்துட்டான்டா பைத்தியக்கார பையன். அப்பன் மாதிரியே பிள்ளை, பிள்ளை மாதிரியே அப்பன். இந்த ரெண்டும் சேர்ந்துச்சுன்னா எதுவுமே விளங்காது,” என்று மனதிற்குள் வருத்தப்பட்டவர், “அது ஒண்ணும் இல்லைங்க. நம்ம இன்னைக்கு உங்க ஃபிரெண்ட் அருணாச்சலத்தோட பொண்ணு கல்யாணத்துக்கு போறோமே, அதுக்கு சங்கவியும் வரலையான்னு கேட்டேன். அதுக்காக என்ன கோவிச்சுக்கிறா,” என்று கூற, “அதை நான் பாத்துக்கிறேன். நீ போ,” என்று அவரை அனுப்பி வைக்க, “அப்பாடி! இதுக இரண்டுதிலிருந்து தப்பிச்சுட்டோம்டா,” என்று சொல்லிக்கொண்டு வேகமாக சென்று விட்டார்.

அவர் சென்றதும் சங்கவியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தவர், அவள் கட்டிலில் அமர வைத்து, அவர் கதவை சாத்திவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தவர், “இப்ப ஏன்டா நீ இந்த கல்யாணத்துக்கு வரலைன்னு சொன்ன?” என்று கேட்க.

“இல்லப்பா. எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல,” என்றால் சங்கவி. “அப்படி எல்லாம் சொல்லாதடா. இப்ப நீ என் கூட அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும். ஏன்னா வெங்கடாசலத்துக்கும் எனக்கும் அந்த அருணாச்சலம் ஃபிரெண்டு தான். அதனால தான் எங்க ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணி இருக்காரு. வெங்கடாசலம் ஃபேமிலியோட கல்யாணத்துக்கு கிளம்பியாச்சு. நான் விசாரிச்சிட்டு தான் வரேன். நீ கண்டிப்பா அங்க வரணும். நீ அங்க வந்து எப்படியாவது அந்த ஆதியை வளைச்சு உன் கைக்குள் போட்டுக்கோ. அன்னைக்கு நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா? அவன் கம்பெனில போய் பிரச்சனை பண்ணி, நீ மறுபடியும் அவன்கிட்ட பகையை வளர்த்துக்கிட்ட. அதெல்லாம் இல்லாம, அவங்க கிட்ட நீ ரொம்ப கோவமா நடந்துக்கிட்ட. போதாக்குறைக்கு அந்த துர்கா வேற வந்துட்டு இருக்கா. அவ கிட்ட அடியும் வாங்கி இருக்கே. இதெல்லாம் சரியா இருக்குமா? இந்த நேரத்துல கொஞ்சம் உன் கோபத்தைக் குறைமா. அப்பதான் நம்ம நினைச்ச காரியத்தை நடத்த முடியும். புரியுதா நான் சொல்றது?” என்றவர்.

“அதை எல்லாம் சரி பண்ணி நீ அந்த ஆதியை கண்டிப்பா உன் வலைக்கு உள்ள சிக்க வைக்கணும். இந்த பிராஜெக்ட் முடியுற வரைக்கும் தான் நம்மளுக்கு டைம் கிடைக்குது. அதுக்குள்ள உனக்கு எப்ப சான்ஸ் கிடைச்சாலும், நீ ஆதி கூட மிங்கில் ஆகுற வழியை பாரு. அப்பதான் நீ நினைச்ச மாதிரி அந்த சொத்து எல்லாத்தையும் அடைய முடியும். நான் சொல்றது புரியுதா இல்லையா?” என்று சொல்ல, அவர் சொல்வதைக் கேட்டபோது, “சரி அப்பா. நீங்க சொல்றது எனக்கு புரியுது. சரி, நான் போய் திங்ஸ்ல பேக் பண்ணிட்டு கிளம்புறேன்,” என்றவள் சிரித்துக் கொண்டே வேகமாகத் தன் அறைக்குச் சென்றால் கிளம்புவதற்காக.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured