EPISODE 3
ஆதி தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், நேராக அவன் அப்பா, அம்மாவிடம் சென்று அவர்களிடம் பேசிவிட்டு மணமேடைக்கு வந்தவன், சங்கவியைப் பார்த்து “எனக்கு உன்னைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை” என்று கூறினான். அதைக் கேட்ட சங்கவி அதிர்ச்சி அடைந்தவள், எழுந்து வந்து அவனிடம் சண்டையிட, அவளை அறைந்த ஆதி அவள் செய்த செயலையே கூறி அவளைத் திட்ட, அவளுடைய அப்பாவும் சங்கவிக்குத் துணையாக வந்து நின்று ஆதியிடம் சண்டையிட, அவரைத் தன் பார்வையாலே அடக்கிய ஆதி, “இப்போ நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணுனீங்கன்னு நான் சொல்லட்டுமா?” என்று கூறியவன்,
திரும்பி தன் நண்பன் விக்கியைப் பார்க்க, அவன் மண்டபத்தில் மணமகன், மணப்பெண் திருமணத்தை ஒளிபரப்புவதற்காக வைத்திருந்த டிவியில் தான் கொண்டு வந்திருந்த பென்டிரைவை இணைத்து ஆன் செய்தான். அங்கிருந்த அனைத்து டிவியிலும் அது பெரியதாகக் காட்டப்பட்டது.
அதில் சங்கவியும் அவள் அப்பாவும் உள்ளே அறையில் பேசிக்கொண்டிருந்தது ஒளிபரப்பாக, அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி அவர்களைப் பார்க்க, அனைவரின் முன்னிலையும் தங்களை அவமானப்படுத்திய ஆதியைப் பார்த்து முறைத்த சங்கவியும் அவளுடைய அப்பாவும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று இருந்தனர்.
அவர்களைப் பார்த்த ஆதி, “இப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து நான் கல்யாணம் பண்ணி என்னோட ராஜ வம்சத்தை அவமானப்படுத்த விரும்பல. எனக்கு என்னோட ராஜ வம்சமும் அதனுடைய பாரம்பரியமும் ரொம்ப முக்கியம்.
இப்படிப்பட்ட ஒரு குணம் உள்ளவள் இந்த ராஜ வம்சத்துக்கு கண்டிப்பா பொருத்தமாகவே இருக்க மாட்டாள். நல்லவேளை எனக்குக் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க சுயரூபம் முழுசும் தெரிஞ்சிருச்சு. இன்னும் ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்க? முதல்ல இங்கிருந்து வெளியே போங்க” என்று மண்டபமே அதிரும்படி கர்ஜித்தான் ஆதி.
அவர்களை வெளியே போகச் சொல்ல, அவன் கூறிய விதத்திலேயே பயந்துகொண்டவர்கள், சங்கவியும் சங்கவியைச் சேர்ந்தவர்களும் மண்டபத்தை விட்டு வேகமாக வெளியே சென்றனர்.
அவர்கள் சென்றதும், ஆதி அங்கு இவர்கள் திருமணத்திற்காக வந்திருந்த தன் சொந்தங்களிடம் கைகூப்பி வணங்கி, “இந்தக் கல்யாணம் நின்றுவிட்டது. அதற்காக நான் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி இந்தக் கல்யாணம் நடக்காது” என்று கூறி தலை வணங்கி அவன் மன்னிப்பு கேட்டான்.
தன் ஆசை மகன் அவ்வாறு அனைவர் முன்னிலையிலும் தலை வணங்கி, கைகூப்பி நின்று மன்னிப்பு கேட்டு நின்றதைப் பார்த்த விசாலாட்சிக்கு மனதில் ஏதோ செய்வது போல இருக்க, தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிய,
அவர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழுவதைப் பார்த்த துர்கா, “அம்மா…..” என்று கத்திக்கொண்டு கையில் இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தாள்.
“அம்மா” என்று கத்திக்கொண்டு துர்கா ஓடுவதைப் பார்த்து ஆதி, “என்ன?” என்று திரும்பிப் பார்க்க, அங்கே அவன் அம்மா கீழே விழுவதைப் பார்த்தவன், அவனும் ஓடி வந்து பிடிக்க, இருவரும் சேர்ந்து விசாலாட்சியைத் தாங்கிப் பிடித்தனர்.
கீழே விழப்போன தன்னைத் தன் மகனும், தனக்குப் பிடித்த பெண்ணும் தாங்கிப் பிடிப்பதைப் பார்த்த விசாலாட்சிக்குச் சிறிது மன நிம்மதியாக இருந்தாலும், வலி தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே தரையில் அமர்ந்தார்.
அவரைத் தன் மடி மீது சாய்த்துக்கொண்டு துர்கா, “அம்மா…. என்னம்மா ஆச்சு? ஏன்மா இப்படி ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்க, அவரால் பதில் பேச முடியவில்லை துர்காவிடம்.
கண்களில் கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டிருக்க, அதைப் பார்த்த ஆதியின் மனதில் கணம் மேலும் கூடியது. “அம்மா என்னை மன்னிச்சிடுங்கம்மா. என்னால தானே உங்களுக்கு இத்தனை வலியும் வேதனையும் வந்துச்சு. ஆரம்பத்திலிருந்து என்னால் மட்டும்தான் உங்களுக்கு எப்பவுமே கஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் நான் எப்படி சரி பண்ண போறேன்னு எனக்குத் தெரியவில்லை” என்று மிகவும் மன வருத்தத்தோடு அவர் கையைப் பிடித்துக்கொண்டு ஆதி பேசினான்.
அவன் அவ்வாறு வருத்தப்பட்டு கூறியதைக் கேட்டு, விசாலாட்சி அவன் வாயைப் பற்றியவள், “அப்படி எல்லாம் பேசாதப்பா. உன்னால எப்பவுமே எனக்குக் கஷ்டம் வந்ததே கிடையாது. எங்களால தான் உனக்கு இப்போ ஒரு நல்ல பொண்ணு பார்த்து கல்யாணம் கூட பண்ணி வைக்க முடியாமல் போயிடுச்சு.
இப்படி எல்லாரையும் கூட்டி சபையில நின்னு உன்னை எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கும் படியா நாங்க பண்ண காரியத்தினால் தானே நடந்துச்சு?” என்று வருத்தப்பட்டார் விசாலாட்சி.
அவர் வருத்தப்பட்டு ஆதியைப் பார்த்துக்கொண்டிருக்க, அப்போது அவர் அருகில் வந்த வெங்கடாசலம், “விசாலாட்சி, நீ வருத்தப்படாத. இப்பவே இந்த மண்டபத்துல ஒரு நல்ல பொண்ணைப் பார்த்து நம்ம ஆதிக்குக் கல்யாணம் பண்ணி வச்சிரலாம்.”
“அவன் கல்யாணம்தான் இப்போ நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்” என்று கூறியவர், “இந்த மண்டபத்தை விட்டு வெளியே போகும்போது, ஆதி தனியாக இல்லாமல் திருமணம் செய்து கொண்டு, தன்னுடன் தன் ஜோடியை அழைத்துக்கொண்டு மண்டபத்தில் இருந்து நம் வீட்டுக்கு வரவேண்டும்” என்று தீவிரமாகப் பேசினார் வெங்கடாசலம்.
“ஆதி, நீ சரி என்று சொல்லு. இங்கே எந்தப் பொண்ணு உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லு. அந்தப் பொண்ணை நான் எப்படியாவது அவங்களோட அம்மா, அப்பா கிட்ட பேசி உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றார் வெங்கடாசலம்.
அவர் அவ்வாறு கூறியதும் ஆதி, “அப்பா, என்ன விளையாடுறீங்களா? இப்போதான் எனக்கு இங்கே கல்யாணம் நின்னுச்சு. அது நின்னு கொஞ்ச நேரம் கூட ஆகாம, அதுக்குள்ள மறுபடியும் ஒரு பொண்ணைப் பார்த்து எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றீங்களே. இது உங்களுக்கு நல்லா இருக்கா?… என்ன இப்படியே விட்டுருங்க. நான் இப்படி நிம்மதியா இருந்துக்கிறேன். எனக்கு இனிமேல் கல்யாணம் அப்படிங்கற வட்டத்துக்குள்ள இருக்க விரும்பல. என் வாழ்க்கையில் கல்யாணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்றான் ஆதி.
அவன் அவ்வாறு விரக்தியாகப் பேசியதைக் கேட்ட விசாலாட்சி மேலும் வெடித்து அழ ஆரம்பித்தார். “டேய் ஆதி, அப்படி எல்லாம் சொல்லாதடா. எவளோ ஒருத்தி பண்ணினதுக்காக எல்லாரும் அதே மாதிரி இருப்பாங்கன்னு மட்டும் நீ மனசுல நினைச்சுக்காத” என்று கூறியவர், “நான் உன்கிட்ட இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்லை. இந்த அம்மாவுக்காக எனக்கு ஒன்னே ஒன்னு செய்வியா?” என்று அழுதுகொண்டு, தன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவனிடம் கேட்டார்.
அவர் அவ்வாறு சிரமப்பட்டு பேசுவதைப் பார்த்து துர்கா, “அம்மா எதுக்குமா இப்படி அழறீங்க? எல்லாம் சரியாயிடும். ஆதி, நீங்க சொன்னா கேட்பான். நீங்க இப்படி எல்லாம் உங்களை போட்டு வருத்திக்காதீங்க” என்று மிகவும் வருந்தினாள் துர்கா.
தன்னை ஆறுதல்படுத்திய துர்காவைத் திரும்பிப் பார்த்தவள், “அவனிடம் கேட்கிறது இருக்கட்டும்மா, நான் உன்கிட்ட இப்ப கேட்கிறேன்” என்று கூறியவர், துர்காவின் பின்னால் நின்று இருந்த அவள் குடும்பத்தைப் பார்த்தவர், அவர்களைத் தன் அருகில் வருமாறு தலையை அசைத்து சைகை செய்தார்.
தங்களை ஏன் அழைக்கிறார் என்று புரியாமல் துர்காவின் அம்மாவும், அப்பாவும் அவளிடம் வந்து நிற்க, அவர்களைப் பார்த்து விசாலாட்சி, “நான் என் மகன்கிட்ட கேட்கிறதை விட, துர்காகிட்ட கேட்கிறதை விட உங்க கிட்ட கேட்கிறது தான் முறை. என் மகனைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்.
அவன் சொக்கத்தங்கம். அப்படிப்பட்ட என் பையனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி குடுப்பீங்களா?” என்று கேட்டவர், “இதை நான் ஒரு பையனோட அம்மாவா முறையா கேட்காம, மடிப்பிச்சை செய்யக் கேட்கிறேன். என் பையனுக்கு உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணி தர்றீங்களா?” என்று தன் முந்தானையை எடுத்து மடிப்பிச்சை எடுப்பது போல அவர்கள் முன் நீட்டினார்.
விசாலாட்சி, துர்காவின் பெற்றோரிடம் துர்காவைத் தன் மகன் ஆதிக்குத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி மடிப்பிச்சை கேட்டதைப் பார்த்த ஆதியின் அப்பா வெங்கடாசலம், விசாலாட்சியின் அருகில் வந்து, அவரும் சேர்ந்து, “நாங்க ரெண்டு பேரும் முழு சம்மதத்தோட தான் கேட்கிறோம். உங்க பெண் துர்காவை என் பையன் ஆதிக்கு இப்பவே இங்கேயே கல்யாணம் பண்ணி கொடுக்க உங்களுக்கு சம்மதமா?” என்று கேட்டார்.
அவர்கள் இவ்வாறு கேட்பதைப் பார்த்த ஆதி, “அப்பா……” என்று அதிர்ச்சியாக, “ஆதி, நீ பேசாம இரு. உனக்கு எதுவும் தெரியாது” என்று அவனை அதட்டி அமைதிப்படுத்திவிட்டு,
துர்காவின் பெற்றோரைப் பார்க்க, அவர் இவ்வளவு பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் தன் மகளைத் திருமணம் செய்துகொடுக்கச் சொல்லி மடிப்பிச்சை கேட்பதைப் பார்த்ததும், என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்றனர்.
அவர் தயங்கி நிற்பதைப் பார்த்த விசாலாட்சி, “என்னடா, இவ்ளோ பெரிய ராஜ வம்சத்தைச் சேர்ந்தவங்க உங்க வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி கேட்கிறேன்னு நீங்க நினைக்காதீங்க. பணம் எதுவுமே இங்கே முக்கியமில்லை.
எனக்கு துர்காவை முதலிலிருந்து ரொம்ப பிடிக்கும். அவளோட குணமும், அவளோட அன்பு தான் என்னை அவளை இப்படி உரிமையா உங்ககிட்ட என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்க வச்சது” என்று கூறியவர், “நீங்க தைரியமா உங்க பொண்ணை என் பையனுக்குக் கல்யாணம் பண்ணி குடுங்க. அவளை நான் என் துர்காவை மருமகளா பார்க்கல, என் மகளா தான் பார்க்கிறேன். நான் அவளைத் தங்கத்தட்டுல வச்சுத் தாங்குவேன். இது சத்தியம்” என்று துர்காவின் கையில் சத்தியம் செய்து கூறினார் விசாலாட்சி.
அவர் அவ்வாறு கூறியதும் பதறிய துர்காவின் பெற்றோர், “அம்மா, என்ன இப்படி எல்லாம் கேட்கிறீங்க?” என்று துர்காவின் தாய் அன்னம் விசாலாட்சியின் கையைப் பிடித்தவர், ஒருமுறை தன் கணவரைத் திரும்பிப் பார்த்தவள், அவர் சம்மதம் வேண்டவே, அவரும் “சரி” என்பது போலத் தலையை ஆட்டினார்.
அன்னம் விசாலாட்சியிடம், “எங்கள் எல்லாருக்கும் எங்க பொண்ணு துர்காவை உங்க பையன் ஆதிக்குக் கல்யாணம் செஞ்சு கொடுக்க சம்மதம்” என்று கூறினார்.
இதைக் கேட்ட விசாலாட்சிக்கும், வெங்கடாசலத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியானது. “ஆதி, போ, போய் மணமேடையில் உட்காரு” என்றார் வெங்கடாசலம்.
“அப்பா….” என்று ஆதி அவரைப் பார்க்க, “பேசாம போய் உட்காரு” என்று அவர் அவனை அதட்ட, அனைவர் முன்னிலையிலும் தன் அப்பாவை எதிர்த்து பேசத் துணிவில்லாமல், வேறு வழி இன்றி மணமேடையில் சென்று அமர்ந்தான் ஆதி.
தன் மடியில் இருந்த விசாலாட்சியைப் பார்த்து, “என்ன அம்மா இப்படி செய்துவிட்டீர்கள். ஆதி என்னோட ஃபிரெண்ட். அவனை எப்படி நான்…” என்று இழுத்த துர்காவின் கையைப் பிடித்துத் தன் தலை மேல் கொண்டு வைத்தவர், “அம்மா மேல சத்தியமா சொல்லு. உனக்கு ஆதியைப் பிடிக்கலை என்று சொல்லு” என்று அவர் கேட்கவும்,
“அம்மா….” என்று அவர் தலையிலிருந்து கையை எடுத்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “எனக்குத் தெரியும் துர்கா, உனக்கு என் பையனைப் பிடிக்கும் என்று. நீ அந்தஸ்து, அது இது என்று யோசித்துவிட்டுத்தான் இப்படி அவனிடம் ‘நண்பன்’ என்று மட்டுமே உரிமையோடு பேசுகிறாய் என்று எனக்குத் தெரியும்” என்றவர், “போ… போய் சந்தோசமாக என் பையனைத் திருமணம் செய்துகொண்டு என் வீட்டிற்கு சீக்கிரம் வாடிம்மா… என் துர்கா குட்டி” என்று அவர் கொஞ்ச, இவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால் என்ன என்று மட்டும் யாருக்கும் தெரியவில்லை.
விசாலாட்சியை கைத்தாங்கலாக அங்கிருந்தவர்கள் ஒரு சேரில் அமர வைக்க, ஹாஸ்பிடல் போகலாம் என்று கூற, “என் மகனின் திருமணத்தைப் பார்த்தாலே எனக்கு எல்லாம் சரி ஆகிவிடும்” என்று ஹாஸ்பிடல் செல்ல மறுத்துவிட்டார்.
தன் தோழி அமிர்தத்தை அழைத்தவர், “என் மருமகளை அழைச்சுட்டுப் போய் என் அறையில் இருக்கிற நகைகளில், என் மருமகள் அழகுக்கு ஏற்றதை எடுத்து அவளுக்குப் போட்டுவிட்டு அழைத்து வா…” என்று கூறித் தன் அறை சாவியை அவரிடம் நீட்டினார்.
துர்காவை அழைத்துக்கொண்டு சென்ற அமிர்தம், சிறிது நேரத்தில் அவளைச் சிம்பிளாக, அழகாக அலங்காரம் செய்து அழைத்து வந்து ஆதிக்கு அருகில் மணமேடையில் அமர வைத்தார்.
மணமேடையில் அமர்ந்த துர்கா நிமிர்ந்தும் ஆதியைப் பார்க்கவில்லை. ஆதிக்கும் கோபத்தோடு தன் அப்பா இப்படி செய்துவிட்டாரே என்ற ஆதங்கத்தோடு அமர்ந்திருந்தான்.
அவர்கள் இருவரையும் பார்த்த ஐயர், “இப்போதாம்பா ஜோடி பேசாம அமைஞ்சிருக்கு. அருமையான பொண்ணு போங்கோ. உங்க ஆத்துக்கு அந்த மகாலட்சுமியே வரப்போறா…” என்று கூறியவர், “இந்தாங்க தம்பி, முகூர்த்த நேரம் முடியப்போறதுக்குள்ள சீக்கிரமா அந்தப் பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டுங்கோ….” என்று கூறி ஆதியின் கையில் தாலியை நீட்ட, அவரை முறைத்துக் கொண்டு தாலியை வாங்கிய ஆதி திரும்பி தன் அருகில் அமர்ந்திருந்த துர்காவைப் பார்த்தான்.
தலை குனிந்து பதட்டத்தோடு அமர்ந்திருந்தா அவள் விழிகள் படபடப்பதைப் பார்த்த ஆதியின் மனதிற்குள் ஏதோ சொல்ல முடியாத உணர்வு தோன்ற, தன்னை மறந்து துர்காவையே பார்த்துக்கொண்டிருந்தவனை, “கெட்டி மேளம்…. கெட்டி மேளம்…” என்று ஐயர் கூறியதும் தான் நினைவுக்கு வந்தவன், எதுவும் புரியாமலேயே துர்காவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.
இருவரும் ஜோடியாக அமர்ந்திருந்ததை திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் பார்த்து, “ஜோடிப் பொருத்தம் அருமையாக அமைந்துவிட்டது. விசாலாட்சி, நீ நினைச்ச மாதிரியே உனக்கு மருமகள் வாய்ச்சுட்டா” என்றனர் அவரது தோழிகள்.
தன் மகனுக்குத் தான் நினைத்தது போலவே திருமணம் நடந்து விட்டதை எண்ணி விசாலாட்சியும், வெங்கடாசலமும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
மற்ற சடங்குகளை எல்லாம் முடித்த பிறகு, மேடையில் இருந்து இறங்கி வந்து ஆதியின் பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள்,
துர்காவின் பெற்றோரிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கப் போக, அவர்கள் “வேண்டாம் ஆதி” என்று தயங்கி அவனைத் தடுக்க, அவர்களைப் பார்த்த ஆதி, “பரவாயில்லை மாமா… அப்படி வேண்டாம் என்று சொல்லாதீர்கள்” என்று கூற, அவன் தன்னை “மாமா” என்று கூறியதும் அதுவரை இருந்த தயக்கம் அவருக்கு விட்டுப்போனது போல இருந்தது.
இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிய பின், விசாலாட்சியின் அருகில் வந்த துர்கா, “வாங்க அம்மா, போகலாம்” என்று கூற, “எங்கே?” என்பது போல அவளை அவர் நிமிர்ந்து பார்க்க, “ஹாஸ்பிடல் போகலாம்” என்று அவரை அழைக்க, “எனக்கு ஒன்னும் இல்லைடா, இப்போ நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவர் கூற,
“அதெல்லாம் முடியாது. முதல்ல உங்க உடம்புக்கு என்னன்னு பாக்கணும்” என்று துர்கா பிடிவாதமாக கூற, “சரிடா, நாம நல்ல நேரம் முடியறதுக்குள்ள நம்ம வீட்டுக்கு போகலாம். அங்கேயே நம்ம ஃபேமிலி டாக்டரை வரவழைச்சுப் பாத்துக்கலாம்” என்று வெங்கடாசலம் கூற, “சரிங்க சார்…” என்று துர்கா கூற, “இன்னும் என்ன சார் என்று என்னை கூப்பிட்டுக்கொண்டு? மாமா… என்று கூப்பிடுமா” என்றார். அவர் கூறியதைக் கேட்டுச் சிரித்தவள், “சரிங்க மாமா…” என்றாள்.
அனைவரும் கிளம்பி ஆதியின் வீட்டிற்குச் சென்றனர்.
