EPISODE 38
விக்கி, தான் கல்லூரியில் சந்தித்த நிலானியைப் பற்றிக் கதிரிடம் சொல்லவும், கதிர், “இப்போ என்ன? உனக்கு உன் ஆளு இந்த நேரம் என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் அவ்வளவுதானே?” என்று கூற.
விக்கி அவனை அதிசயம் போலப் பார்த்து, “என்னடா சொல்ல வர? எனக்கு புரியல,” என்று விக்கி கூற, “இன்னுமாடா புரியல? இப்போ உனக்கு உன் ஆளு உன்னை நெனச்சிட்டு இருக்காளா இல்ல என்ன பண்ணிட்டு இருக்கான்னாவது தெரியனும் அப்படித்தானே?” என்று கதிர் கேட்க, விக்கி ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினான். “அப்ப பேசாம என் கூட வா,” என்று கூறி கதிர் முன்னே செல்ல, அவன் பின்னாலேயே யோசனையுடன் விக்கியும் சென்றான்.
கதிர் அங்கிருந்து கிளம்பி நேராக கீர்த்திகாவின் அறைக்கு வந்து அவள் அறைக் கதவைத் தட்ட, விக்கி பதறிப் போய், “டேய்! உன் ஆளைப் பாக்குறதுக்கு வரணும்னா நேரா நீயே வந்திருக்க வேண்டியதுதானே? அதுக்காக என்னை ஏன் கூட்டிட்டு வந்தே? என் ஆள் என்ன பண்றான்னு சொல்றேன்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்க. நீதான் டா இங்க வரணும், என்னை ஏண்டா புடிச்சி இழுத்துட்டு வந்திருக்க? இந்த நேரத்துல கீர்த்திகாவோட அம்மாவோ அப்பாவோ நம்மைப் பார்த்தா, உன்னையும் என்னையும் பத்தி என்ன நினைப்பாங்க? நீயாவது சொந்தக்காரன்னு ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம். நான் சும்மா கூட வந்துட்டு என்னைப் பார்த்தா என்ன நினைப்பாங்க? ஒரு வயசுப் பொண்ணு இருக்கிற இடத்துல இந்த நேரத்தில் வந்து கதவைத் தட்டினா நம்மள பத்தித் தப்பா எடுக்க மாட்டாங்க,” என்று கதிர் கூற.
“டேய்…. கொஞ்ச நேரம் வாய் மூடிட்டுப் பேசாம இருடா,” என்று கூறியவன் திரும்பவும் கதவைத் தட்டப் போக, அப்போது கீர்த்திகாவின் அப்பா கதவைத் திறந்தார்.
அவர் கதவைத் திறந்து பார்க்க, எதிரே கதிரும் விக்கியும் நின்றிருப்பதைப் பார்த்ததும் எதுவும் புரியாமல், “என்ன தம்பி, இந்த நேரத்துல வந்திருக்கீங்க? இப்போதான கீர்த்திகாவும் அங்கிருந்து வந்தா. ஏன் தம்பி, தான் முக்கியமான விஷயமா?” என்று அவர் பேச, “ஆமாம் அங்கிள்! துர்கா தான் கீர்த்திகாவை அவங்க ரூமுக்கு எங்களை அழிச்சிட்டு வரச் சொன்னாள். நேர்ல வந்து தான் கீர்த்திகாவைக் கூப்பிடுறதா சொன்னா. இந்த நேரத்தில் தனியா வரணும் அப்படின்னு சொல்லிட்டு நாங்களே போய்க் கூட்டிட்டு வரோம்னு வந்துட்டோம் அங்கிள்,” என்று கதிர் கூற.
“அப்படியா! சரி தம்பி, இருங்க நான் கீர்த்திகாவை அனுப்பி வைக்கிறேன்,” என்று கூறியவர் திரும்பி கீர்த்திகாவை அழைக்க, அவள் “என்னப்பா….” என்று கேட்டுக்கொண்டே வந்தவள், வாசலில் கதிரும் விக்கியும் நிற்க, அவர்களைப் புரியாமல் பார்த்துவிட்டு, அவள் அப்பாவைப் பார்க்க, “துர்கா உன்னை வரச் சொன்னா போல. அதனாலதான் தம்பி இங்க உன்னைப் பார்க்க வந்திருக்காங்க. நீ என்னன்னு கேட்டுட்டு வாடா,” என்று அவர் கூற.
“ஏன் பா…. துர்காவே பேசாமல் நமக்கு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமே? இவங்க ரெண்டு பேரையும் எதுக்கு இப்ப அனுப்பி வச்சிருக்கா….?” என்று புரியாமல் கீர்த்திகா கேட்க.
கீர்த்திகா சொன்னதில் லாஜிக் இருப்பதைப் புரிந்துகொண்ட விக்கி, கதிரிடம், “ஆஹா….. இவ சரியான உஷார் பார்ட்டியாத்தான் இருப்பா போல இருக்கு. அவளை நீயே நேர்ல வந்து எதுவும் சாக்கு சொல்லி கூப்பிட்டாலும் வரக்கூடாது என்கிற எண்ணத்திலேயே கரெக்ட்டா பாயின்ட் எடுத்து அவங்க அப்பனுக்குக் கொடுக்கிறாளே! நீ இவ கிட்ட கொஞ்சம் உஷாராவே இருக்கணும் டா மச்சான். இவளை நம்பி எதையும் செய்ய முடியாது. உன்னை கால வாரி விட்டுடுவா….,” என்று சொன்னான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ கொஞ்சம் வாய மூடிட்டுச் சும்மா இருக்கியா? உனக்கு உன் ஆள் என்ன பண்ணிட்டு இருக்கான்னு தெரியனுமா வேண்டாமா?” என்று கதிர் கேட்க, “கண்டிப்பா தெரியணும்,” என்று விக்கி சொல்ல.
“அப்போ வாயை மூடிட்டு நான் என்ன பண்ணாலும் பேசாமல் எனக்கு ‘ஆமாம் சாமி’ போட்டுட்டு நில்லு. ஓகேவா?” என்று சொல்ல, “சரிங்க சாமி,” என்று சொல்லிவிட்டுப் பேசாமல் நின்றான் விக்கி.
கீர்த்திகாவின் அப்பா கீர்த்திகாவிடம், “ஏதோ அவசரம்ன்னு சொல்லி அனுப்பி வச்சிருக்காமா. நீ போ. அங்கதான் போற. நீ அங்கேயே போய்க் கேட்டுக்கோ. சீக்கிரமா போயிட்டு சீக்கிரமாக வந்துரு,” என்று சொல்லிவிட்டு அவளை அனுப்ப, அவளும் வேறு வழியில்லாமல் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு இவர்களுடன் சென்றாள்.
இவர்கள் மூவரும் செல்லும் வரை பார்த்துவிட்டு கீர்த்திகாவின் அப்பா கதவைச் சாத்திவிட்டு உள்ளே செல்ல. அவர் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டதும் தான் தாமதம்.
அவர்களுடன் நடந்து கொண்டிருந்த கீர்த்திகா சட்டென்று அவர்கள் முன்னால் வேகமாக எட்டுக்களாக எடுத்து வைத்து, திரும்பி இவர்களைப் பார்த்துக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றவள், “இந்த நேரத்துல எதுக்கு என்னைப் பார்க்க வந்தீங்க நீங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டாள்.
“அடே அப்பா! சரியான போலீஸ்காரியா இருப்ப போல இருக்கே நீ….. உங்க அக்காவா உன்னைக் கூப்பிடல, நாங்கதான் உன்னைப் பார்க்க வந்தோம்னு எப்படி கண்டுபிடிச்ச தங்கச்சிமா?” என்றான் விக்கி.
“முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும்னு சொல்லுவாங்க. அந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் எங்க அக்கா கூப்பிட்டான்னு சொல்லி என்னைக் கூட்டிட்டுப் போக வந்தப்பவே நான் நினைச்சேன். எங்க அக்கா கண்டிப்பா என்ன வர சொல்லி இருக்க மாட்ட. அப்படியே இருந்தால் அவன் என்கிட்டயே ஃபோன் பண்ணி கேட்டுப்பாள். அதை விட்டுட்டு உங்க ரெண்டு பேரையும் என்னைக் கூட்டிட்டு வர அனுப்பி வைத்தால் என்றால், இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?” என்று கீர்த்திகா சொல்ல.
“நம்பற மாதிரி தான் இல்ல. என்ன பண்றது? எங்களுக்குக் காரியம் ஆகணுமே. அதனால தான் அப்படி சொல்லி உன்னைக் கூப்பிட்டோம்,” என்று கதிர் சொல்ல.
“என்னது! என்னால உங்களுக்குக் காரியம் ஆகணுமா? அப்படி என்ன உங்களுக்குக் காரியமாக வேண்டி இருக்கு?” என்று கீர்த்திகா கேட்க.
“இப்படி என் கையைக் கட்டி போலீஸ்காரன் மாதிரி நின்னு கேள்வி கேப்பியா? அப்படி வா, கொஞ்சம் ரிலாக்ஸாக உட்கார்ந்து பேச வேண்டிய விஷயம் இது. சும்மா போற வழியில் பேசிட்டுப் போற விஷயம் இல்ல,” என்று கூறியவன் கீர்த்திகாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு பெஞ்சில் சென்று அமர. கதிரும் கீர்த்திகாவும் அமர.
அவர்கள் எதிரே கை கட்டி நின்ற விக்கி, “ஏண்டா, நீ உன் ஆள் கூட உட்கார்ந்து கடலை போடறதுக்கு நான் தான் கிடைச்சேனா? என்ன சொல்லி என்னை இங்க கூட்டிட்டு வந்த…. ஆனா, இப்ப எதுக்கு கீர்த்திகாவை கூட்டிட்டு வந்து இப்படி நீங்க ரெண்டு பேரும் ஒக்காந்துட்டு என்னைப் பார்க்க வெச்சு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க?” என்று விக்கி கேட்க.
“டேய் விக்கி! கொஞ்ச நேரம் நீ பேசாம இருக்கியா? அப்பதான் நீ கேட்ட விவரம் எல்லாம் உனக்குக் கிடைக்கும். இல்லை இப்படியே என் தொண தொணன்னு பேசிட்டு இருந்தேன்னா நான் உனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டேன்,” என்று கதிர் கூற.
“சரி சரி கோபப்படாதடா….. நான் எதுவுமே பேசல. நீ உன் ஆள் கூடப் பேசு. நான் கையைக் கட்டி நின்னு நீங்க ரெண்டு பேரும் பேசுவதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்,” என்று பெருமூச்சுவிட்டு கூறிவிட்டு நின்றான்.
கதிர் கீர்த்திகாவைப் பார்த்து, “கீர்த்திகா, உங்க காலேஜ்ல படிக்கிற ஒரு பொண்ணைப் பற்றி எங்களுக்கு டீடைல்ஸ் வேணும். அது எந்த ஊரு? என்ன பண்றா? எந்த டிபார்ட்மென்ட்ல படிக்கிறாள் அப்படிங்கறது தெரியணும்.”
“டேய் விக்கி! என்னடா பேசாம நிக்கிற? வாய் திறந்து சொல்லுடா. நீ சொன்ன அந்தப் பொண்ணு கீர்த்திகா காலேஜ்ல தான படிக்கிறா?” என்று சொல்லவும், இப்போதுதான் கதிர் எதற்காகத் தன்னை இங்கே அழைத்து வந்திருந்தான் என்று முழுதாகப் புரிந்த விக்கிக்கு ஒரே சந்தோஷமாகப் போய்விட்டது.
“டேய்! இதை நான் யோசிக்கவே இல்ல டா. அந்தப் பொண்ணைப் பார்த்த அப்போ நம்ம கீர்த்தியும் இங்கதான் படிக்கிறான்னு நினைச்சே ஒழிய, அதுக்கப்புறம் நான் கீர்த்தியாகிட்ட இதைப்பற்றி கேட்கணும்னு நினைக்கவே இல்லை. அப்படியே கேட்டிருந்தாலும், என் தங்கச்சி என்னைப் பத்தி ஏதாவது தப்பா நினைச்சுக்குமோன்னு யோசிச்சு தான் கேட்காமல் இருந்தேன்,” என்று விக்கி சொல்ல.
“எல்லாம் சரிடா! வளவளன்னு கதை அடிக்காத. நைட் ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுச்சு. டீடைல் சொல்லு. உனக்கு காலையில் எல்லா விவரத்தையும் கீர்த்திகா வாங்கி கொடுத்துடுவா….,” என்று சொன்னவன், கீர்த்திகாவிடம் திரும்பி, “என்ன கீர்த்திகா, காலையில் எல்லா டீடெயில்ஸையும் வாங்கிடுவியா?” என்று கேட்டான்.
அதுவரை அவர்கள் இருவரும் பேசுவதைத் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திகா, “என்னங்கடா ரெண்டு பேரும் என்ன உட்கார வெச்சிட்டு பேசிட்டு இருக்கீங்க? நீங்க சைட் அடிக்கிறதுக்கு நான் தான் கிடைச்சேனா… என்னால உங்களுக்கு எல்லாம் எதுவும் செய்ய முடியாது. போங்கடா,” என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து போக.
விக்கி உடனே கீர்த்திகாவின் கையைப் பிடித்துக் கொண்டு, “தங்கச்சி, அண்ணன் உன் லவ்வுக்கு எல்லாம் ஹெல்ப் பண்னேன் இல்லயா…..? உன் அண்ணன் பாவம் இல்லையா? எனக்குன்னு யாரு இருக்கா உன்னை விட்டா?” என்று அழுவது போல முகம் வைத்துக் கொண்டு, “இந்த அண்ணன் லவ்வுக்காக நீ ஹெல்ப் பண்ண மாட்டியா?” என்று கேட்க, அவன் முகத்தைப் பார்த்ததும் பாவமாக இருக்க, “சரி, சொல்லித் தொலைங்க,” என்று திரும்பவும் வந்து மேஜையில் அமர்ந்தாள்.
“முதல்ல, அந்தப் பொண்ணு எங்க காலேஜ் தான் என்பது கன்ஃபார்மா தெரியுமா? அவ பேர் என்ன?” என்று கீர்த்திகா கேட்க.
“எனக்கு கன்ஃபார்மா தெரியும். அன்னைக்கு நீ கதிர் கூடப் போன பிறகு நான் உங்க காலேஜுக்கு எதிரில் இருக்குற காஃபி ஷாப்பில் தான் உட்கார்ந்து காபி குடிச்சிட்டு இருந்தேன். அப்போதான் என் தேவதை அங்கே உள்ள வந்தா…. என் தேவதை வந்தப்ப உங்க காலேஜ் ஐடி கார்டு தான் கழுத்துல போட்டு இருந்தா,” என்று சொல்லியவன், அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க, “சரி, இத்தனை சொன்னீங்களே, உங்க தேவதையைப் பற்றி, அவ பேர் என்னன்னு முதல்ல சொல்லுங்க,” என்று கீர்த்திகா கேட்க, “அவ பேரு…. அவ பேரு….” என்று வெட்கப்பட்டு கொண்டு விக்கி நின்றிருக்க.
அவனைப் பார்த்த கதிர், “டேய்! பார்க்க சகிக்கலடா உன்னை….. ரொம்பப் பண்ணாத. முதல்ல அந்தப் பொண்ணு பேரு சொல்லு. இப்படியே நீ பண்ணிட்டு இருந்தேன்னு வை…… நான் எந்திரிச்சு கிளம்பிப் போயிருவேன். கீர்த்திகாவையும் ரூமுக்கு போக சொல்லிவிடுவேன்,” என்று சொல்லிவிட்டு அவனை முறைக்க, “சரி சரிடா கோவிச்சுக்காத கோச்சுக்காத! என் தேவதை பேரு நிலானி,” என்றான் விக்கி.
நிலானி என்ற பெயரைக் கேட்டதும் கீர்த்திகா ஒரு நிமிடம் யோசித்தவள், “அண்ணா! அந்தப் பொண்ணு எந்த டிபார்ட்மென்ட்ல படிக்கிறான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க.
“ம்ஹும்….. தெரியாதே தங்கச்சி. அந்தப் பொண்ணு உங்க காலேஜ்ல மட்டும்தான் படிக்கிறான்னு தெரியும். அதுவும் அவள் கழுத்துல போட்டு இருந்த ஐடி கார்டு வெச்சு தான் உங்க காலேஜுனே நான் கன்ஃபார்மா சொல்றேன். மற்றபடி அவ எந்த டிபார்ட்மென்ட் அப்படிங்கறதெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது,” என்று கூற.
“சரி, அவ கழுத்துல போட்டு இருந்த ஐ.டி. கார்டோட கலர் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கீர்த்திகா கேட்க, அப்போது கதிர், “ஏய் கீ…. அவன் அந்தப் பொண்ணைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. அது எல்லாம் எப்படி ஞாபகம் வச்சுட்டு இருப்பான்? ஐடி கார்டு கலர்லாம் கேட்டுட்டு இருக்க லூசு மாதிரி,” என்று கதிர் கூறிக் கொண்டிருக்கும் போதே, “பச்சை கலர்,” என்றான் விக்கி.
அவனை அதிசயமாய்த் திரும்பிப் பார்த்த கதிர், “என்ன மச்சான்! கலர், ஐடி கார்ட் கலர் எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறாயா? அந்த அளவுக்கு நீ உன் ஆளை நோட் பண்ணி இருக்கியா?” என்று கேட்க.
“ஆமாண்டா! நான் அவளையூதான். முதலாகப் பார்த்த அன்று அவ சிவப்பு கலர்ல சுடிதார் போட்டிருந்தா. ஒரு நெட் ஷால் போட்டு இருந்தா. அதுக்கு மேட்ச்சாக இருக்கிற மாதிரி பொட்டு, கம்மல், வளையல் என எல்லாமே போட்டு இருந்தா. அவளோட வாட்ச் ஸ்டாப் கலர் மட்டும் சிவப்பு கலர்ல இல்ல. அது ஒரு மாதிரி ஸ்கின் கலர் போல. கலருக்கும் அந்த வாட்ச் ஓட ஸ்டாப் கலருக்கும் வித்தியாசமே தெரியாத மாதிரி ஒரு கலர்ல ஸ்ட்ராப் போட்டு இருந்தா,” என்று விக்கி கூற.
அவன் கூறிய இதெல்லாம் கேட்டு கதிரும் கீர்த்திகாவும் ஒருவரை ஒருவர் பார்க்க, கீர்த்திகா அவனை, “நீயும்தான் இருக்கியே! எங்க சொல்லு பார்ப்போம், இன்னைக்குக் காலையில நான் என்ன கலர் டிரஸ் போட்டு இருந்தேன் அப்படின்னு சொல்லு பார்ப்போம்,” என்று கீர்த்திகா கேட்க.
“ஏய்! இப்ப அதுவாடி முக்கியம். நீ முதல்ல அந்தப் பொண்ணு உனக்குத் தெரியுமா இல்லையான்னு சொல்லு. இல்லைன்னா இன்னைக்கு நைட்டு இவன் என்னை தூங்கவே விடமாட்டான்,” என்று கதிர் பேச்சை மாற்ற.
“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டே அப்படித்தானே…. புரிஞ்சிடுச்சு. நல்லா தெரிஞ்சிருச்சு. உனக்கு எதுவுமே என்னைப் பத்தி ஞாபகம் இருக்காது. உனக்கு இருக்குடா. அப்புறம் பேசுகிறேன் உன்னை,” என்று சொன்னவள்,
விக்கிடம் திரும்பி, “அண்ணா! நல்லா யோசிச்சு சொல்லுங்க. அவ பச்சை கலர் ஐடி கார்டு தான் போட்டிருந்தாளா?” என்று கேட்க, சற்றும் தாமதிக்காமல், “நல்ல ஞாபகம் இருக்கு தங்கச்சிமா. என் தேவதை பச்சை கலர் ஐடி கார்டு தான் போட்டு இருந்தாள். அவளோட சிவப்பு கலர் சுடிதாருக்கும் அவளோட கலருக்கும் அந்தப் பச்சை கலர் தனியா எடுப்பா தெரிஞ்சுச்சு…..” என்று சொல்ல, “ஓஹோ! அப்படியா?” என்று அவனை மேலும் கீழாகப் பார்த்தவள்,
“ஆமா! அன்னிக்கு நீங்க என்னையும்தான் பார்த்தீங்க. அப்ப நான் என்ன கலர் ஐ.டி கார்டு போட்டு இருந்தேன்? நீங்க கவனிச்சீங்களா?” என்று கேட்க, “இல்லை தங்கச்சிமா. நான் எங்கடா உன்னைக் கவனிச்சேன்,” என்று சொல்ல.
விக்கியை முறைத்தவள், “அதானே! நீங்க இவனோட பிரண்டு தானே! அப்புறம் எப்படி இருக்கும்? அவனை மாதிரி தானே இருப்பீங்க,” என்று சொன்னவள். “நீங்க சொல்ற சிவப்பு கலர் சுடிதார் போட்டுட்டு, அந்தப் பச்சை கலர் ஐடி கார்டு போட்டு இருந்த அந்த நிலானி என்னோட டிபார்ட்மென்ட் தான். உங்க தேவதை என்னோட கிளாஸேதான். இதை விட முக்கியமான விஷயம், அவ என் பக்கத்துல தான் எப்பவும் உட்கார்ந்து இருப்பா,” என்று சொல்ல.
கதிரும் விக்கியும் ஆச்சரியமாக கீர்த்திகாவையே பார்க்க. “என்ன ரெண்டு பேரும் என்னை அப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க.
“ஆஹா தங்கச்சிமா! வெண்ணைய கையிலேயே வெச்சிட்டு இத்தனை நாளா அது தெரியாம சுத்திட்டு இருந்தேனே! என் தேவதை உன் பக்கத்துல தான் உக்காந்து இருக்கான்னா, அவ அப்ப உனக்கு நல்லாப் பழக்கப்பட்டவளா தானே இருப்பா? உனக்கு நல்லா தெரிஞ்சுருக்கும் தானே அவளைப் பத்தி?” என்று கேட்க, “கண்டிப்பா தெரியும். ஏன்னா உங்க தேவதை, அவ என்னோட பெஸ்ட் பிரண்டு,” என்றால் கீர்த்திகா.
கீர்த்திகா கூறியதைக் கேட்டதும் ஆச்சரியமான இருவரும், நிலானி அவளுடைய நெருங்கிய தோழி என்று தெரிந்ததும் இன்னும் ஆச்சரியமாகிவிட, விக்கி கீர்த்திகாவின் அருகில் வந்து அமர்ந்தவன், “அப்ப தங்கச்சிமா, என் ஆளோட ஃபோன் நம்பர் உன்கிட்ட கண்டிப்பா இருக்குமே! ப்ளீஸ் என் ஆளோட ஃபோன் நம்பர் மட்டும் எனக்குக் கொடுடி! ப்ளீஸ்,” என்று கேட்டான்.
சற்று நேரம் கீர்த்திகா யோசிப்பதைப் போலப் பாவனை செய்ய, “என்ன தங்கச்சி, ஒரு ஃபோன் நம்பர் குடுக்குறதுக்கு, அதுவும் இந்த அண்ணனை நம்பிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு யோசிக்கிறியே,” என்று விக்கி கேட்க.
“குடுக்கலாம் குடுக்கலாம். நான் எங்க வேணா போகப் போறேன்? இங்க தானே இருக்கேன். பொறுமையா கொடுக்கல,” என்று கீர்த்திகா சொல்ல, “என்னது! பொறுமையா கொடுக்கலாமா? அதெல்லாம் முடியாது! எனக்கு இப்பவே என் ஆளோட ஃபோன் நம்பர் வேணும்! ப்ளீஸ் தங்கச்சி, கொடுடா,” என்று விக்கி கேட்க.
“முடியாது. காலைல வர வெயிட் பண்ணுங்க. நான் காலைல வந்து உங்களுக்கு ஃபோன் நம்பர் கொடுக்கிறேன். எனக்கு இப்போ ரொம்பத் தூக்கம் வருது. நான் போயிட்டு வரட்டுமா?” என்றவள், கதிரைப் பார்த்து, “கதிர் மாமா! நான் போய்த் தூங்குறேன். குட் நைட்,” என்று அவன் கன்னத்தை தன் கைகளால் உரசிவிட்டு, கதிரை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள் அங்கிருந்து ஒரே ஓட்டமாக அவள் சென்று விட்டாள்.
இப்போது கதிர், கீர்த்திகா தன்னை இப்படி ‘கதிர் மாமா’ என்று கூறி, தன் கன்னம் தொட்டுச் சென்றதும் அதிர்ச்சிலேயே அமர்ந்திருக்க, கீர்த்திகா தனக்கு ஃபோன் நம்பர் காலையில் தருகிறேன் என்று சொன்னதும், நன்றியும் அதே அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். எப்படியும் கீர்த்திகா காலையில் நிலானியின் ஃபோன் நம்பரைக் கொடுக்கும் வரை விக்கிக்குத் தூக்கம் வராது. அதே போல கதிரைச் சும்மா இருக்காமல், அவன் உணர்வுகளைத் தூண்டிவிட்டுச் சென்றுவிட்டாள். அதனால் அவனுக்கும் கீர்த்திகாவின் நினைப்பாகவே இருக்கும். ‘இவர்கள் இருவரும் இன்று நைட்டு கண்டிப்பாகத் தூங்க மாட்டார்கள்’ என்று நினைத்துக் கொண்ட கீர்த்திகா, ‘நான் போய் நிம்மதியாப் படுத்துத் தூங்கப் போறேன்,’ என்று அவள் அறைக்குப் போகும்போது யோசித்துக் கொண்டு சென்று விட்டாள்.
சங்கவியைப் பார்த்துவிட்டுத் தன் அறைக்கு வந்த ஆதி, துர்கா அருகில் இருப்பாள் என்று வந்தவன், அறை லாக் செய்யப்பட்டிருக்க, தன் கையில் இருந்த ஒரு சாவியைக் கொண்டு அறையைத் திறந்தவன் உள்ளே செல்ல, ‘இங்க தானே வந்தா? எங்க போயிருப்பா?’ என்று துர்காவின் நினைவாகவே உள்ளே வந்தவன், பாத்ரூமுக்குள் சென்று ரெப்ரெஷாக சென்றுவிட்டான்.
ஆதி பாத்ரூமுக்குச் சென்ற சிறிது நேரத்தில் துர்கா உள்ளே வந்தாள். அறை திறந்திருக்கும் ஆதிதான் வந்திருப்பான் என்று உள்ளே வர, அவன் ஷூ அங்கேயே இருப்பதைப் பார்த்தவள், பாத்ரூமில் சத்தம் வர ஆதி குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தவள், அவன் வருவதற்குள் உடை மாற்றிக் கொள்ளலாம் என்று ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று உடை மாற்றி விட்டு வந்து கட்டிலில் அப்படியே படுத்துக் கொண்டாள்.
கட்டில் படுத்துக் கொண்டிருந்தாலும், அவளுக்குத் தூக்கம் வரவில்லை. சங்கவி கூறியதெல்லாம் தன் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, அதை நினைத்த அவளின் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்தது. பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியே வந்த ஆதி, துர்கா கட்டிலில் படுத்திருப்பதைப் பார்த்ததும், அவளிடம் ஆசையாகப் பேசலாம் என்று அவள் அருகில் போக, அவள் அழுது கொண்டு படுத்திருப்பதைப் பார்த்ததும் ஆதி அப்படியே நின்று விட்டான்.
சற்றுத் தாங்கினாலும், மெல்ல துர்கா அருகில் சென்றவன், அவள் தோலைத் தொட்டு, “துர்கா,” என்று அழைக்க, அவன் தன்னைத் தொட்டதும் சட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள், படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள், “இப்ப எதுக்கு என்னைத் தொட்ட ஆதி?” என்று கேட்க.
“ஏன் துர்கா? நான் உன்னைத் தொடக் கூடாதா? இப்ப ஏன் நீ அழுதுட்டு இருக்க? நான் மேடையில் சொன்னதெல்லாம் கேட்டு அழுதுட்டு இருக்கியா? நான் சொன்னதோட உள் அர்த்தம் உனக்குப் புரியவே இல்லையா? நீ தப்பா புரிஞ்சுட்டு அழுதுட்டு இருக்கியா?” என்று ஆதி கேட்க.
“ஆமாம் ஆதி! நான் உன்னை இத்தனை நாளும் தப்பாத்தான் புரிஞ்சுட்டு இருந்திருக்கிறேன். அதை நினைச்சு தான் நான் அழுதுட்டு இருக்கேன். உன்னைத் தப்பா தான் நான் புரிஞ்சுட்டேன் ஆதி. என்னை மன்னிச்சிடு. இனிமேல் என் பக்கத்துல நெருங்கி வராத. என்னைத் தொட்டுப் பேசாத. தயவுசெய்து நான் சொல்றது புரிஞ்சுக்கோ,” என்று துர்கா கூறிவிட்டு அழ.
“ஹே… துர்கா! ஏன் இப்படி எல்லாம் பேசுற? முதல்ல அழுவதை நிப்பாட்டு. நான் சொல்ல வரதை நீ கொஞ்சம் புரிஞ்சுக்க,” என்று ஆதி கூற.
“முதல்ல நான் சொல்றதை நீ கேளு ஆதி,” என்றவள். படுக்கையில் இருந்து எழுந்தவள், “நீ எவ்வளவு சீக்கிரமா எனக்கு டைவர்ஸ் கொடுக்க முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் எனக்கு டைவர்ஸ் கொடுத்திரு ஆதி. என்னால இங்க யாருக்கும் பிரச்சனை வேண்டாம். நான் யார் வாழ்க்கையிலும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை,” என்று துர்கா சொன்னதும் தான் தாமதம், ஆதி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
