EPISODE 43
அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, கீர்த்திகாவும் கதிரும் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். விக்கி அவன் அருகில் அமர்ந்துகொண்டு, சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தன் போனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு, துர்கா அவர்களுடன் சாப்பிட உட்கார்ந்தாள். அவள் கீர்த்திகாவின் அருகில் அமர… அதுவரை துர்கா தன்னிடம் வந்து அமர்வாள் என்று அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
துர்கா அனைவருடனும் பேசிக்கொண்டு சாப்பிட, ஆதி அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு சாப்பிட்டான். இதைக் கவனித்த விக்கி, “ம்ஹுக்கும்….” என்று தன் தொண்டையைக் கணைக்க… அவன் சத்தம் கேட்டு, “என்னடா?” என்பது போல அவனை முறைத்தான் ஆதி.
“ஏய் அப்பா… நான் ஒண்ணும் சொல்லலைடா… நீ உன் வேலையை கண்டினியூ பண்ணுடா,” என்று சைகையில் ஆதியிடம் சொன்னவன், “கலி முத்திடுத்து… பகவானே… கலி முத்திடுத்து…” என்று ஆதி பாஷையில் பேசியவன், ஆதியைப் பார்த்துப் பெருமூச்சொன்றை விட்டு, “பொண்ணுங்கன்னா என்னனு தெரியாதவனுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு. அதுகூட பரவாயில்லை, அவன் எல்லாம் இன்னைக்கு ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்,” என்று கூறிக்கொண்டே தன் பக்கத்தில் இருக்கும் கதிரைப் பார்க்க… அவன் தீவிரமாக எங்கேயோ பார்த்துக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
கதிர் எங்கே பார்க்கிறான் என்று விக்கி அவன் பார்த்துக்கொண்டிருந்த திசையைப் பார்க்க… அங்கே கீர்த்திகா அமர்ந்திருந்தாள். சுத்தம்… அண்ணனாவது கல்யாணம் பண்ணிட்டு, உரிமையா இத்தனை பேர் முன்னாடி அவன் பொண்டாட்டியை சைட் அடிச்சுட்டு இருக்கான். ஆனா இவன் என்னடான்னா, அவனோட அண்ணன் முன்னாடியே அவன் மச்சினியை சைட் அடிக்கிறான். ஆளாளுக்கு ஆள் வெச்சுட்டு என்னைப் வெறுப்பேத்துறானுங்களே! விநாயகா… இது எல்லாம் உனக்கே நியாயமாகுமா? என்னைவிட சின்னப் பையனுக்கு எல்லாம் லவ் செட் ஆகிருச்சு. ஆனா, நான் பேச ஆள் கிடைச்சும் எனக்கு அதுவும் செட் ஆகாம போயிடும் போலவே…
“விநாயகா… தயவு செஞ்சு என்னை என் ஆள கூட சேர்த்து வெச்சிருங்கப்பா… எப்படியாச்சும் நான் என் ஆள கூடப் பேச எனக்கு ஒரு வழி சொல்லுங்கப்பா…” என்று கெஞ்ச…
“ஏன்டா… டேய்… விக்கி…” என்று ஒரு குரல் கேட்டது. தன்னை யார் இவ்வளவு உரிமையாய் பெயர் சொல்லி அழைப்பது என்று நிமிர்ந்து, தனக்கு எதிராக இருந்த ஆதியையும், பக்கத்தில் இருந்த கதிரையும் பார்க்க… அவர்கள் இருவரும் காரியமே கண் என தங்கள் வேலையை மிகச் சிரத்தையாகச் செய்துகொண்டிருந்தார்கள். வேற என்னங்க, அவங்க அவங்க ஆளை சைட் அடிச்சுட்டே சாப்பிட்டு இருக்காங்க.
இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா நான் ஒருத்தன் இங்க இருக்குறதே இவனுங்களுக்கு தெரியாது போலவே, என்று நினைத்தவன், இவங்க இங்க பிஸியா இருக்க… அப்போ என்னை வேற யாரு கூப்பிட்டிருப்பா? அதுவும் மரியாதை இல்லாம? என்று நினைத்தவன், தன்னைச் சுற்றிலும் சுற்றும் முற்றும் பார்க்க…
மறுபடியும், “டேய் விக்கி…” என்று அவன் மிக அருகில் சத்தம் கேட்க… திடுக்கிட்டவன், தன் இடது புறம் சத்தம் வரவும் திரும்பி அவன் இடது புறம் பார்க்க… அவன் அருகில், நல்ல சாம்பல் நிறத்தில் சற்றுச் சிறியதாக, வயிறு பெருத்து, யானை முகத்தோடு, சாட்சாத் மிஸ்டர். விநாயகர் தான் அமர்ந்திருந்தார்.
(என்ன ஃபிரெண்ட்ஸ், புதுசா ஒரு கேரக்டர் இன்ட்ரோடுயூஸ் பண்ணி இருக்கேன்னு பார்த்தீங்களா? யாருனு பாக்குறீங்களா? அதாங்க நம்ம விக்கி கூட கொஞ்ச நேரம் முன்ன விநாயகா… என்று தீவிரமாக எதையோ சொல்லி அவரிடம் கேட்டுக்கிட்டு இருந்தானே… அவன் வேண்டுதலைக் கேட்டுட்டு அந்த விநாயகரே அவனைப் பார்க்க நேர்ல வந்துட்டாரு பாத்தீங்களா… இந்தக் கதையில் அப்போ அப்போ நம்ம மிஸ்டர். விநாயகர் வரப்போறாருங்க. சோ… எல்லா கேரக்டரையும் போல இவரையும் வெல்கம் பண்ணி நம்ம விநாயகருக்கு சப்போர்ட் பண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் )
(இது கற்பனைக் கதை. அதனால யாரு வேண்டுமானாலும் என் கதையில் வரலாம். ஏன் என் கதையைப் படிச்சுட்டு கமெண்ட் பண்ற தோழிகள் கூட இந்தக் கதையில் இடம்பெறலாம், . உடனே நீங்க எப்படி இப்படி எல்லாம் கேரக்டரைக் கொண்டு வரலாம் என்று எல்லாம் சொல்லக் கூடாது, ஓகேவா ஃபிரெண்ட்ஸ் . உங்க சப்போர்ட் இருந்தால் தான் நான் என் கதையைச் சரியா, அழகா கொண்டு போக முடியும். அதனால என்னோட ஃபிரெண்ட்ஸ் சப்போர்ட் பண்ணுங்க என்னோட கதைக்கு, ஓகேவா 🌹
விக்கி தன் அருகில், தொந்தியும் தொப்பையுமாக, யானை முகத்துடன், அழகாக வெள்ளை நிற டீ-ஷர்ட் மற்றும் குட்டியாக முட்டிவரை வெள்ளை நிற ஷார்ட்ஸ் அணிந்து அமர்ந்திருந்த பிள்ளையாரைப் பார்த்ததும் அதிர்ச்சியானவன், “நீ… நீ… நீங்க…” என்று இழுக்க…
“என்ன… நீ… நீ… நீங்க… ஆமாண்டா… நான்… நான்… நான்தான்! நீ இப்போ கொஞ்ச நேரம் முன்ன நல்லா சாப்பிட்டுத் தூங்கிட்டு இருந்த என்னைக் கூப்பிட்டு ஏதோ புலம்பிட்டு இருந்தியே. அதான் என்னனு கேட்டுட்டுப் போலாம்னு நேர்லயே வந்துட்டேன்,” என்றார் நம் விநாயகர்!
“என்னது, நான் கூப்பிட்டேன்னு நேர்ல வந்தீங்களா?” என்று விக்கி வாயைப் பிளக்க… “ஆமாண்டா… நான் நேர்ல வரலைன்னு வை, நீ என் பேரைச் சொல்லி ஏதாவது புலம்பிட்டே இருப்ப. அப்பறம் எனக்குத்தான் டிஸ்டர்பா இருக்கும். அதான் உன்னை நேர்ல பார்த்து என்னனு கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்,” என்றார்.
“என்னது, நான் கூப்பிட்டேன் என்பதற்காக எனக்கு நேர்லயே காட்சி தர வந்துட்டீங்களா விநாயகா?” என்று ஆச்சர்யமாகக் கேட்க… “ஆமாண்டா… இல்லைன்னா உன்னோட புலம்பலை யாரு கேட்டுட்டே இருக்குறது? அப்பறம் நான் எப்போ தூங்குறது? அதான் நேர்ல வந்து உன் புலம்பல் என்னனு கேட்டுட்டு, அதைச் செஞ்சுட்டுப் போயிட்டா நான் போய் நிம்மதியா தூங்கலாமே. காலையில வேற எனக்கு ஏர்லி மார்னிங் அரச மரத்தடியில் டியூட்டி இருக்கு. எல்லாரும் என்னைப் பார்க்க நேரமே வந்திருவாங்க. நான் சீக்கிரம் போய்த் தூங்கினா தான் சீக்கிரம் எழுந்திருக்க முடியும். உன்னை மாதிரி என்னைக் ‘வெட்டிப் பையன்’னு நினைச்சுட்டு இருக்கியா? ஐ அம் ட்வென்டி ஃபோர் இன்டு செவன்… த்ரீ சிக்ஸ்டி ஃபைவ் டேஸ் பிஸிடா…” என்று கெத்தாகத் தன் டீ-ஷர்ட் காலரை உயர்த்தியவர் அவன் பார்க்க…
“யோவ் பிள்ளையாரே…. இது நிஜமா நீதானா? இல்லை நான் எதுவும் தூங்கிட்டு இருக்கேனு என் கனவில் வந்திருக்கியா?” என்று விக்கி கேட்க…
“டேய்…. என்னடா… மரியாதை தேயுது? போன போகட்டுமே. ரெண்டு மூனு நாளா பார்க்க பாவமா, டல்லா இருக்கியேன்னு பாவப்பட்டு ஹெல்ப் பண்ண வந்தா, என்னையே சந்தேகப்படுறியா? போடா…. உனக்கு ஹெல்ப் பண்ண வந்ததுக்கு, அங்க பக்கத்துத் தெருவுல நடு ரோட்ல ஒருத்தன் நின்னு ‘போர் அடிக்குது, கம்பெனி கொடுக்க வா’ன்னு என்ன ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கான். அவனைப் பார்க்கப் போயிருக்கலாம்,” என்றவர், “சரி, நீ என்னை நம்பலை. உன்கிட்ட இனி எனக்கு என்ன பேச்சு? நான் பக்கத்தில் இருக்குற தெருவுக்குப் போய்ட்டு வரேன். நீ… இப்படியே இவனுங்க ரெண்டு பேரும் அவங்க ஜோடி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குறதைப் பார்த்துட்டுப் புலம்பிகிட்டு இரு… நான் கிளம்பறேன். பை…” என்று சொல்லிவிட்டு, அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்திருந்தவர் எழுந்திருக்கப் போக…
“ஐயோ பிள்ளையாரப்பா…. விநாயகா… எங்க அப்பனே…. போயிராத! போயிராத! எனக்கு ஹெல்ப் பண்ண பெரிய மனசு பண்ணி இவ்வளவு தூரம் வந்துருக்க… ப்ளீஸ் போகாத பிள்ளையாரப்பா…” என்று விக்கி அவர் கையைப் பிடித்துக் கெஞ்ச…
அவனை ஏற இறங்கத் தன் அழகான குட்டி யானை முகத்தை மேலும் கீழும் ஆட்டி, கண்கள் மின்னப் பார்த்த விநாயகர், “அப்படி வா… வழிக்கு… சொல்லு, எதுக்கு என்னைக் கூப்பிட்ட?” என்று கேட்டார்.
“அது ஒண்ணும் இல்லை பிள்ளையாரே…” என்று இழுக்க… “என்னது ஒண்ணுமில்லையா? அப்பறம் எதுக்குடா தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பிவிட்ட? சரி அப்போ நான் கிளம்பறேன். யூ கண்டினியூ…” என்று சொல்லிவிட்டு, சேரில் இருந்து வேகமாக விநாயகர் எழ… “ஐயோ நோ…. பிள்ளையாரே,” என்று எங்கே அவர் கிளம்பிவிடுவாரோ என்று பதட்டப்பட்ட விக்கி, சத்தமாக “போகாதே….” என்று கத்த…
அவன் சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த எல்லோரும் விக்கியைப் பார்க்க… விக்கி எங்கோ பதட்டமாகப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த ஆதி, “டேய் விக்கி, என்னடா பண்ணிட்டு இருக்க? அங்க என்ன பார்த்துட்டு நிக்குற? யாரைப் பார்த்து ‘போகாதே’ன்னு சொல்லிட்டு இருக்க?” என்று விக்கி பார்த்த திசையைப் பார்த்துக் ஆதி கேட்க…
“என்ன ஆதி? என் எதிர்ல நிக்குற விநாயகரைப் பார்த்து ‘யாரு நிக்குறாங்கன்னு’ கேட்குறானே. அவனுக்கு ஒரு வேலை இவரைத் தெரியலையோ…” என்று விழித்தவன், அவன் எதிரே பார்க்க… அவன் எதிரே விநாயகர், “என்னடா பார்க்கிற? நான் உனக்கு மட்டும் தான் தெரிவேன். அவங்களுக்கு எல்லாம் தெரிய மாட்டேன்,” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட, “என்னடா முழிக்கிற? அதான் கேட்குறான்ல உங்கிட்ட. அவன்கிட்ட எதையாவது சொல்லிச் சமாளிச்சுட்டு, உன்னோட ரூமுக்கு வா. நான் அங்க வெயிட் பண்றேன். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. காலையில இருந்து சரியான வேலை எனக்கு,” என்றவர், “நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். சீக்கிரம் வா,” என்றுவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்.
அவர் மறைந்ததும் சற்று நிதானித்த விக்கி, ஆதியைப் பார்க்க… அவனை அனைவரும் கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்க… ஆதி மறுபடியும், “யாரைடா… பார்த்துட்டு இருக்க? யாரைப் ‘போகாதே’ன்னு சொல்லிட்டு இருக்க?” என்று கேட்க…
“அது… அது…” என்று யோசித்தவன், சட்டென்று தன் கையில் இருந்த போனை எடுத்து காதில் வைத்தவன், “என் ஃபிரெண்ட் தான்டா… அவன் கூட தான் பேசிட்டு இருந்தேன். அவன் ஊருக்குப் போறேன்னு சொன்னான். ‘நானும் வரேன்னு’ சொன்னா, ‘இல்லை நான் இப்பவே கிளம்பிடுவேன்னு’ சொன்னான். அதான் ஒரு ஆர்வத்துல சத்தமா ‘போகாதே’ன்னு கத்திட்டேன்,” என்றான்.
“அப்படி யாருடா உனக்கு ஒரு ஃபிரெண்ட், இந்த நேரத்துல கூப்பிட்டு ஊருக்குப் போறேன்னு உங்கிட்ட சொல்லிட்டு இருக்காங்க? அதுவும் எங்களுக்குத் தெரியாம அப்படி ஒரு ஃபிரெண்ட்?” என்று கதிர் கேட்க…
“டேய், இவ்வளவு நேரம் என்ன வேலை பார்த்தியோ அந்த வேலையை ஒழுங்கா பாரு…. இப்படி என்னைக் குடைஞ்சு கேள்வி கேட்டேன்னா, நான் உங்க அண்ணா கிட்டயும் துர்காகிட்டயும் நீயும் கீர்த்திகாவும் லவ் பண்றதைச் சொல்லிருவேன். நானே எப்படி உங்க அண்ணனைச் சமாளிக்கிறதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்கேன். இதுல நீ வேற இடையில வந்து உங்க அண்ணாவுக்குப் பாயிண்ட் எடுத்துக் கொடுக்குறியா? பேசாம சாப்பிட்டுட்டே உன் ஆளை சைட் அடி போ…” என்று அவன் கதிரின் அருகில் அமர்ந்து, அவன் காதில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூற…
விக்கி சொன்னதைக் கேட்ட கதிர், எனக்கு எதற்கு வம்பு? என்று நினைத்தவன், “ஆதி, நம்ம விவேக் தான் கால் பண்ணி இருக்கான். அவனை நம்ம கொடைக்கானல் ஆஃபிஸிற்குப் போகச் சொல்லி இருந்தோமில்லையா? அதைத்தான் பேசிட்டு இருக்காங்க போல,” என்று ஏதோ கூறி கதிர் சமாளிக்க…
“அப்படியா…. சரி சரி, சீக்கிரம் பேசிட்டுச் சாப்பிடு,” என்றான் ஆதி. “நான் சாப்பிட்டுட்டேன் ஆதி. நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. நான் விநாயகர்… இல்லை இல்லை… விவேக் கிட்ட பேசிட்டு வரேன்,” என்றவன், போனில் பேசுவது போலப் பாவனை செய்து சமாளித்துவிட்டு, அங்கிருந்து எஸ்கேப் ஆகி தன் ரூமிற்கு வந்தான்.
தன் அறைக்கு வந்தவன், கதவை மெல்லத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்க… அங்கே இருந்த ஒரு டேபிளின் மீது, ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து ஹாயாகச் சாய்ந்துகொண்டு, தன் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டு கண்களை மூடிப் படுத்திருந்தார் விநாயகர்.
“எவ்வளவு நேரம் தான் வாசல்ல நின்னு என்னைப் பார்த்துட்டு இருப்ப? உள்ள வாடா…” என்றார் கண்ணைத் திறக்காமலேயே.
அவர் கண் திறக்காமல் தான் நிற்பதைக் கணிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை என்று நினைத்தவன், உள்ளே வந்து கதவைச் சாற்றிவிட்டு, அவர் அருகில் வந்து பணிவாக நிற்க…
“என்னடா… மரியாதை எல்லாம் பலமா இருக்கு? இப்போதான் கோபத்துல என்ன ‘யோவ்’ன்னு எல்லாம் சொன்ன,” என்று விநாயகர் நக்கல் அடிக்க…
அவர் முன் கை எடுத்துக் கும்பிட்டு, “விநாயகா… போதும். என்னை ரொம்ப ஒட்டாத விநாயகா. வெளிய அவனுங்களையே என்னால சமாளிக்க முடியலை. இந்தக் உலகத்துக்கே முதல் கடவுள் உன்னை என்னால சமாளிக்க முடியுமா? நான் உங்கிட்ட சரண்டர் ஆகிடுறேன் விநாயகா…” என்று அவர் முன் விழ…
“ம்ம்… அப்படி வா… வழிக்கு,” என்றவர், “சரி சரி எழுந்திரு. உன்னால சமாளிக்க முடியாது… என்று தெரிந்துதான் நான் கதிருக்கு ஐடியாவை வரவெச்சு உனக்கு எஸ்கேப் ஆக ஹெல்ப் பண்ணினேன்,” என்றார்.
“அப்பா…. விநாயகா….” என்று எழுந்து கைகூப்பியவன், “தெரியாம உன்னைத் திட்டிட்டேன். என்னை மன்னிச்சிருப்பா…” என்றவன், அவர் அருகில் வந்து நின்று தைரியத்தை வரவழைத்தவன், “விநாயகா…” என்றான். கண்களை மூடிக்கொண்டே, “என்ன?” என்றார். “நிஜமா நீங்கதான் வந்திருக்கீங்கன்னு நம்புறேன் விநாயகா…” என்றான் விக்கி.
“ஓகே.. ஓகே…” என்றார் தும்பிக்கையை ஆட்டிக்கொண்டே. மறுபடியும் “விநாயகா…” என்றான் விக்கி. “சீக்கிரம் சொல்லுடா.. எனக்கு தூக்கம் வருது,” என்றார் சற்று கடுப்பாக. “சரி சரி கோச்சுக்காத பிள்ளையாரே,” என்றவன்.
“என் ஆளு….” என்றான். “என்ன? சொல்லு. உன் ஆளு….” என்றார் அவரும் விக்கியை போலவே. நக்கலைப் பார்த்தியா? என்னை மாதிரியே பேசிக்காட்டுறதை! என்று நினைத்தவன் அவரை முறைக்க…
“என்னடா முறைப்பு… உன்னை மாதிரி இல்லை, உன் பாட்டன் பூட்டான் மாதிரியும் நான் பேசுவேன்,” என்றார். என்ன, மனசுல நினைச்சதை அப்படியே சொல்லிட்டாரு! என்று நினைத்தவன், அவர் வந்து அவர் அணிந்திருந்த ஷார்ட்ஸைப் பிடித்து இழுத்துக்கொண்டே, “பிள்ளையாரே.. பிள்ளையாரே.. என் ஆளு என்கூட பேசமாட்டேன்னு சொல்லி என் போன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டா பிள்ளையாரே… நீயே பார்த்தியில்ல, அங்க டைனிங் டேபிளில் வெச்சு அவனுங்க ரெண்டு பேரும் எப்படி அவனுங்க ஆளுங்களை சைட் அடிச்சுட்டு இருந்தாங்கன்னு. ஆனா நான் மட்டும் தனியா சிங்கிளா இருக்கே… உன்னை மாதிரியே…” என்று அவரையும் சிங்கிள் என்று கூறி துணைக்கு இழுக்க…
“டேய், என்னையும் உன்கூட சேர்க்காத,” என்றவர். “இதுக்கு எதுக்குடா… என்னைக் கூப்பிட்ட? என் தம்பி முருகனைக் கூப்பிட்டிருக்கலாமே? அவன்தான் இதுல எல்லாம் பயங்கர எஸ்பர்ட்,” என்றார்.
“ஆனா, அவருக்கே அவர் லவ்வுக்கு நீதானா ஹெல்ப் பண்ணின? அப்போ நான் உன்னைத் தானே கூப்பிடணும்?” என்றான் விக்கி.
“பரவாயில்லையே… கொஞ்சம் அறிவா… லாஜிக்கா… தான் பேசுற நீயும். இப்போ உனக்கு என்ன பண்ணனும் சொல்லு,” என்றார். “ஒண்ணுமில்லை பிள்ளையாரே. என் ஆளு என்னை அன்ப்ளாக் மட்டும் பண்ண வெச்சிடு. மற்றதை எல்லாம் நான் பார்த்துக்கறேன்,” என்றான்.
“அப்போ உன் ஆளை உன்னை அன்ப்ளாக் பண்ண வெச்சுட்டா போதுமா.. வேற எதுவும் வேணாமா?” என்றார். விக்கியும் வேகமாக “அது மட்டும் பண்ணு பிள்ளையாரப்பா போதும். நான் எப்படியாவது அவ கிட்ட கெஞ்சியாச்சும் என்கூடப் பேச வெச்சிருவேன்,” என்றான்…
அவ்வளவு நேரம் கண்மூடிப் படுத்திருந்தவர், “அப்போ உன் ஆளை உன்னை அன்ப்ளாக் பண்ண வெச்சுட்டா, நீ என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டே. அப்படிதானே?” என்றார். “ஆமாம்…. ஆமாம்….” வேகமாகத் தலையை ஆட்டினான் விக்கி.
“சரி, நான் அப்படிச் செஞ்சுட்டா எனக்கு என்ன செய்வே?” என்றார் பிள்ளையார். “என்ன பிள்ளையாரே? உங்கிட்ட இல்லாததா என்கிட்ட கேட்குறே?” என்று அவர் தோளில் இடித்துக் கேட்க…
“டேய் விக்கி! என்கிட்ட என்ன இருந்தாலும், என்ன நம்பி வந்து என்கிட்ட வேண்டிகிட்டு எனக்கு அவங்கனால முடிஞ்சது ஒரு சாக்லேட் ஆவது கொடுத்து கும்பிடறாங்களே, அதுவே எனக்கு போதும்டா,” என்றவர்.
“சரி…சரி…. சீக்கிரம் சொல்லு. என்ன தரேன்னு?” என்றார். “நீயே சொல்லுப்பா என்ன வேணும்னு?” என்றான் விக்கி. “சரி, அப்போ நாளைக்கு எனக்கு லட்டு செஞ்சு வை… அதுவும் வெளியே இருக்காளே என்னோட பக்தையான துர்கா, அவ கையால லட்டு செஞ்சு வாங்கி வை. நான் வந்து சாப்பிடுறேன்,” என்றவர் அங்கிருந்து செல்லப் போக…
“பிள்ளையாரப்பா எங்க போறீங்க? நான் கேட்டதுக்குப் பதிலே சொல்லாம போறீங்க,” என்று விக்கி கேட்க… “டேய் மக்கு! உன்னோட போன்ல மெசேஜ் சவுண்ட் வந்துச்சில்ல? எடுத்துப் பாரு. உன் ஆளுதான் உனக்கு மெசேஜ் பண்ணி இருக்கா,” என்று சொல்ல… வேகமாகத் தன் கையில் இருந்த போனைப் பார்க்க… அதில் நோட்டிஃபிகேஷனில் நிலானியிடம் இருந்து மெசேஜ் வந்திருக்க… அதைப் பார்த்ததும் ஓடி வந்து சந்தோஷத்தில் பிள்ளையாரைக் கட்டிப்பிடித்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தவன், “தேங்க்ஸ் விநாயகா… என் செல்லம்! தேங்க்யூ….” என்று மறுபடியும் அவர் கன்னத்தில் முத்தம் வைக்க…
“டேய்… டேய்…. போதும்டா… ரொம்பச் சந்தோஷப்படாத, சரியா? நீ என்ஜாய் பண்ணு. நான் போய்ப் ரெஸ்ட் எடுக்கிறேன்,” என்று கூறிவிட்டு, அவன் கையைத் தன் மீது இருந்து விளக்கிவிட்டு, “நாளைக்கு லட்டு ரெடியா இருக்கணும்,” என்று கூறிவிட்டு, சட்டென்று விக்கியின் அறையில் இருந்து மறைந்துவிட்டார்.
அவர் சென்றதும் போனை எடுத்துக்கொண்டு, நிலானி அனுப்பிய மெசேஜைப் பார்த்துக்கொண்டே வந்து கட்டிலில் விழுந்தான் விக்கி.
