EPISODE 54
துர்காவுக்குக் காலில் அடிபட்டு விட்டதால், இரவு ஆதியின் பெரிய வீட்டிற்குப் போக வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அங்கு போயே ஆக வேண்டும் என்று துர்கா அடம் பிடிக்க, வேறு வழி இல்லாமல் அவன் வீட்டிற்குச் செல்லச் சம்மதம் சொன்னான்.
அவன் ‘சரி’ என்று சொன்னதும் தான் தாமதம், வலியுடனேயே எல்லா வேலைகளையும் செய்ய, அவன் “இப்படி நீயே அணைத்து வேலைகளையும் செய்வது என்றால் நான் அங்கே வர மாட்டேன்” என்று ஆதி முறுக்கிக் கொள்ள.
வேறு வழி இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை வைத்து வேலை வாங்கினாள். மாலை ஆனதும் அவர்கள் வீட்டிற்குப் போகலாம் என்று, சேலையை வேலை ஆள் உதவியுடன் கட்டிவிட்டு வந்து நின்றவளை ஏகத்திற்கும் முறைத்து வைத்தான் ஆதி.
‘நான் மாற்றி விடுகிறேன் என்று வந்தால், என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு பெண்ணை வைத்துச் சேலை மாற்றிக்கொண்டாள்’ என்று அவளிடம் கோபம் கொள்ள.
அதற்கு அவளோ, “சேலை மாற்றி விடுகிறேன் என்று நீ செய்யும் அலம்பல் எல்லாம் எனக்குத் தெரியும். அதனால் நானே பார்த்துக் கொள்கிறேன்” என்று ஸ்ட்ரிக்ட்டாக அவனிடம் சொல்லி விட்டாள்.
“சரி ஆதி… நான் ரெடியாகிட்டேன், கிளம்பலாமா?” என்று துர்கா கேட்டாள். “ஓ… எஸ்… போலாமே” என்றவன், அவளைத் தன் கைகளில் தூக்கிக்கொள்ள, “ஆதி, இறக்கி விடு. எனக்கு இப்போ பரவாயில்லை. நான் நல்லா தான் இருக்கேன், என்னால் நடக்க முடியும்” என்று அவனை விட்டு இறங்க முயற்சிக்க.
“துர்கா…. கொஞ்சம் அமைதியா இரு. நானே உன்னைக் கூட்டிக்கொண்டு போய் காரில் விடுகிறேன்” என்று அவள் பதிலுக்குக் காத்திராமல் துர்காவைத் தூக்கி வந்து காரில் அமர வைத்தான்.
அவன் செயல்கள் எல்லாம் முன்பை விட நிறைய மாறி இருப்பதை உணர்ந்த துர்கா எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டாள்.
அவளுக்கும் அவன் இப்படி இருப்பது பிடிக்கத்தான் செய்தது. அவன் மேலான தன் காதலை அவனிடம் இவ்வளவு நாள் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தவள், சில நாட்களுக்கு முன் ஆதியிடம் இருந்து பிரிய வேண்டும் என்று நினைத்த எண்ணத்தை கூட இப்போது முற்றிலுமாக மறந்து போன துர்கா, அவனின் சின்ன சின்னத் தீண்டலும், ஆதியின் அருகாமையும் மேலும் அவனிடம் நெருக்கம் கொள்ளத் தூண்டி விட்டது.
தன்னைத் தூக்கியதில் இருந்து காரில் கொண்டு வந்து அவளை அமர வைக்கும் வரை அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை அமர வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்த ஆதி, அவள் இன்னமும் தன்னையே பார்ப்பதைப் பார்த்தவன், அவள் கன்னம் கிள்ளி, “போதும் துர்கா, என்ன சைட் அடிச்சது. மிச்சத்தை அங்க போய் வைத்துக்கொள்ளலாம்” என்று அவன் கூறவும்.
துர்காவுக்கு வெட்கம் வந்திவிட, சிவந்த முகத்தை அவனிடம் காட்டாமல் தலையைக் கீழே குனிந்து கொண்டாள். அவ்வாறு அவள் செய்ததும், “நீ வெட்கப்படுற, அப்போ இன்னும் அழகாக இருக்கே துர்கா…” என்றவன். “ஒரு நிமிஷம் இரு. நான் என்னோட போனை மேலேயே வெச்சிட்டு வந்துட்டேன், போய் எடுத்துட்டு வரேன்” என்றவன் மேலே சென்றான்.
மேலே வந்த ஆதி அறை முழுவதும் ஒரு இடம் விடாமல் தேடினான். எங்கும் இல்லாமல் போகவே டிரெஸ்ஸிங் ரூம் சென்று தேடினான், அங்கேயும் இல்லாமல் போகவே ஸ்டடி ரூம் சென்று தேடினான், அங்கே ஒரு டேபிள் டிராயரைத் திறந்ததும் அவன் கண் பளச்சென்று மின்னியது.
தான் இவ்வளவு நேரம் தேடிய டைரி அதற்குள் தான் இருந்தது. துர்காவின் டைரியைப் பார்த்ததும், அதை கையில் எடுத்து அதன் மேல் பக்கம் பார்த்தவன், கீர்த்திகா சொன்னது போல அது பல வருடமாகத் துர்கா பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்தது.
அதை எடுத்துத் தன் கோட் பாக்கெட்டில் மறைத்தவன், துர்காவுக்குத் தெரியாமல் நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டான்.
துர்காவிடம் போனை எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தவன், இந்த டைரியை எடுப்பதற்காகத்தான் போய் சொல்லிவிட்டு மேலே வந்தான்.
கீழே வந்த ஆதி துர்காவிடம், “போலாமா?” என்று கேட்க, அவளும் அவனுக்காகக் காத்திருந்தவள், ‘போகலாம்’ என்று மெதுவாகத் தலையை மட்டும் ஆட்டினாள்.
டிரைவரை காரை எடுக்கச் சொல்லிவிட்டு காரின் மறுபுறம் வந்து கதவைத் திறந்து உள்ளே அமரப் போக, அவன் போன் அடித்தது. போன் சத்தம் கேட்டு அப்படியே நின்றவன், போனை எடுத்துப் பார்த்தான். அதில் வந்திருந்த நம்பரைப் பார்த்ததும் ஆதியின் இரு புருவங்களும் சுருங்கியது. அவனைக் கவனித்த துர்கா, “ஆதி” என்று அவனை அழைக்க.
ஒரு நிமிடம் யோசனையில் இருந்த ஆதி, “துர்கா… நீ முதலில் கிளம்பு. எனக்கு ஒரு முக்கியமான வேலை திடீர் என்று வந்து விட்டது” என்றான்.
அவனுக்கு இப்படித் திடீர் திடீர் என்று வேலைகள் அவன் பிசினஸில் சகஜம் என்று துர்காவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், அவன் சொன்னதும் ‘சரி’ என்று சொன்னாள்.
“சரி, நீ பார்த்துப் போய்க்க. அங்க போய் எதுவும் வேலை செய்றேன்னு இழுத்து போட்டுட்டு எதுவும் செய்துட்டு இருக்காதே” என்று அவளிடம் ஒரு முறைக்கு பல முறை சொல்லிவிட்டுத் துர்காவைத் தனியே அனுப்ப மனமில்லாமல் அனுப்பி வைத்தவன், துர்கா சென்றதும் தன் போனை எடுத்துத் தனக்கு வந்திருந்த நம்பருக்குத் திரும்ப அழைத்தவன், எங்கே சந்திக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
❤️
துர்காவின் கார் வெங்கடாசலம் வீட்டின் முன் வந்து நின்றதும், அதுவரை துரையுடனும் அவர் குடும்பத்துடனும் பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியும், வெங்கடாசலமும் துர்கா வந்ததும், அவள் காலில் அடிபட்டு விட்டது என்று ஏற்கனவே அவர்களுக்கு ஆதி சொல்லி விட்டதால், அவளை வாசல் வரை சென்று வரவேற்றனர்.
வாசலுக்கு வந்து பார்த்த விசாலாட்சி, துர்கா காரில் இருந்து இறங்கச் சிரமப்படுவதைக் கவனித்தவர், சக்கர நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி, துர்கா அதில் அமர உதவி செய்தவர், அவளை அவரே தள்ளிக்கொண்டு வந்து ஹாலில் வீல் சேரை நிறுத்தி விட்டுத் துர்காவிடம், “ஏன் மா… பார்த்து இருக்குறதில்லையா நீ… இப்படியா அடிபடுற அளவுக்கு ஜாக்கிரதையாக இல்லாமல் இருப்பே?” என்று துர்காவை உரிமையுடன் கண்டித்துக்கொண்டார்.
“அப்படி இல்லை அத்தை. நான் கவனமாத் தான் உட்கார்ந்து இருந்தேன். எப்படி அடிபட்டது என்று எனக்கே தெரியவில்லை” என்றாளே ஒழிய, ஆதி வண்டியைச் சரியாக ஓட்டவில்லை என்று சொல்லவே இல்லை.
“என்னவோ போ மா…” என்றவர் ஹாலில் அமர்ந்திருந்த அவரது தம்பி குடும்பத்தை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைத்தார்.
கனகாவிற்கும், ராதாவிற்கும் பார்த்ததுமே துர்காவைப் பிடித்து விட்டது. துர்காவுக்கும் அவர்கள் இருவரையும் மிகவும் பிடித்துவிட, அதை விட ராதாவைத் தன் தங்கை போலவே எண்ணும் அளவு பிடித்துவிட்டது.
சிவுவையும் அதே அளவு பிடித்திருந்தாலும், அவள் ராதா அளவிற்கு துர்காவுடன் நெருக்கமாகப் பழகாமல் ஒதுங்கியே இருந்தாள்.
துரைக்கும், சிவுவுக்கும் துர்காவைக் கண்டதுமே பிடிக்கவில்லை. ஆதிக்குக் கல்யாணம் நின்ற அதே முகூர்த்தத்தில் வேறு பெண்ணை அவசரமாகத் திருமணம் செய்து வைத்துவிட்டனர் என்று கேள்விப்பட்டதும், ஏதோ கிடைத்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருப்பார்கள் என்று நினைத்தனர். ஆனால் இப்போது துர்காவை நேரில் பார்த்ததும், அவள் அழகாக இருப்பதைப் பார்த்துச் சிவுவுக்குப் பொறாமை வந்து விட்டது.
ஆதியை அவள் வலையில் சுலபமாகச் சிக்க வைத்து விடலாம் என்று நினைத்த சிவுவுக்கு, இப்போது துர்காவைப் பார்த்ததும் அது கொஞ்சம் சிரமம் போல அவளுக்குத் தோன்றவே, துர்காவைப் பார்த்த மாத்திரத்தில் சிவுவுக்கு துர்காவைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கையில், விக்கியும், கதிரும் உள்ளே வந்தவர்கள், முதலில் துர்காவை விசாரித்துவிட்டுத் தான் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தனர்.
அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததில் நேரம் போனதே அவர்களுக்குத் தெரியவில்லை. கதிரைப் பார்த்ததும் துரை தனது இரு மகன்களில் யாரேனும் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார்.
சிவு எப்படியும் ஆதியைத் தன் கைக்குள் போட்டுக்கொள்வாள் என்று அவள் மீது அவருக்கு அதீத நம்பிக்கை இருந்ததினால், அடுத்து ராதா தான் இருக்கிறாள், அவளை எப்படியும் கதிருக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று இப்போதிருந்தே கணக்கு போட ஆரம்பித்து விட்டார்.
இரவு ஆகிவிட்டதால் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் அவர் அறைக்குச் சென்று விட, ஹாலில் கனகா, விசாலாட்சி, ராதா, துர்கா மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
கனகா துர்காவிடம், “ஆதி உன்கிட்ட நல்லா பேசுறானா துர்கா? நீயும் அவனும் நல்லா அன்யோன்யமாக இருக்கீங்களா? உங்களுக்கு நல்லபடியா எல்லாமே நடக்குதா?” என்று அவர் நாசூக்காகக் கேட்க.
அவர் கேட்ட கேள்வியில் துர்காவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க. “ஏன் அத்தை, நானும் துர்காவும் சந்தோசமா இருக்கோமா இல்லையான்னு எங்க அம்மா உங்களை விட்டு கேட்கச் சொன்னாங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஹாலிற்குள் வந்தான் ஆதி.
அவனைப் பார்த்ததும் சந்தோசமாக முகம் மலர்ந்த கனகா, “டேய்…. ராஜாக்குட்டி! எப்படி டா.. இருக்கே? நல்லா இருக்கியா… என்ன டா.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி பெரிய ஆளா வளர்ந்து நிற்குறே” என்று அவர் ஆதியின் கையைப் பிடித்துக்கொண்டு ஆதியை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
“இப்படி என்னை கொஞ்சிட்டு பேச்சை மாற்றலாம் என்று நினைச்சுட்டியா அத்தை? நான் எதையும் அவ்வளவு லேசில் விட மாட்டேன்” என்றான்.
“எனக்குத் தான் உன்னைப் பத்தி நல்லா தெரியுமே டா ராஜாக்குட்டி… உங்க அம்மா எதுவும் என்கிட்ட துர்காவிடம் பேசச் சொல்லி சொல்லலை டா… என்ன இருந்தாலும் துர்காவும் என் பொண்ணு தானே? அவள் மனசுல என்ன இருக்குன்னு பேசித் தெரிஞ்சுக்கிட்டா தானே எனக்கும் தெரியும்? அவளும் இங்க நல்லா வாழணும்னு நினைச்சுத் தாண்டா நான் கேட்டேன்” என்றார் கனகா.
“அதெல்லாம் உங்க பொண்ணை நான் சந்தோசமாத் தான் வெச்சுப்பேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? என் பொண்டாட்டி கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க” என்றான் ஆதி.
அவன் இப்படிச் சொன்னதும் பதறிய கனகா, “உன்மேல நம்பிக்கை இல்லாமல எல்லாம் நான் துர்கா கிட்ட கேட்கலை ராஜா குட்டி. சும்மா தெரிஞ்சுக்கலாம்னு சொல்லித் தான் கேட்டேன். நான் இனிமேல் உன் பொண்டாட்டிகிட்ட எதுவுமே கேட்கலைப்பா. உன் பொண்டாட்டியை எதுவும் சொல்லிடக் கூடாது போலவே பாரு, எப்படி மூக்குக்கு மேல என் செல்லத்துக்குக் கோபம் வருது” என்று அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினார் கனகா.
அவர் அப்படிச் சொல்லி அவனை கிள்ளியதும் அவரைப் பார்த்துச் சிரித்த ஆதி, “நானும் சும்மாத் தான் அத்தை உன்கிட்ட வம்பு பண்ணினேன். அப்புறம் சொல்லுங்க, எப்படி இருக்கீங்க? மாமா, சிவு எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று கேட்டான். “எல்லாரும் நல்லா இருக்கோம்டா கண்ணு. நீ எப்படி இருக்க?” என்று கேட்டார் கனகா.
பின், “சரி கண்ணா, நீ போய் சாப்பிடு. வந்து ரொம்ப நேரம் ஆகுது பாரு” என்று சொல்ல, “இல்லை அத்தை, நான் வெளியிலேயே சாப்பிட்டு வந்துட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான். “எல்லாரும் சாப்பிட்டோம் கண்ணா” என்றார்.
“சரி அத்தை, நீங்களும் போய் படுத்துத் தூங்குங்க. நானும் துர்காவும் ரூமுக்கு போறோம்” என்றவன், ஒருவரையும் எதிர்பார்க்காமல் துர்காவைத் தன் கையில் தூக்கிக்கொண்டு அவன் ரூமுக்குச் செல்லப் போக, அனைவரும் அவனை வாய் பிளந்து கொண்டு ‘ஆ’வென பார்த்தனர்.
“என்ன எல்லாரும் அப்படிப் பார்க்குறீங்க? என் பொண்டாட்டியைத் தானே நான் தூக்கிட்டுப் போறேன்? நீங்கதானே சொன்னீங்க, நாங்க ரெண்டு பேரும் அன்யோன்யமா இருக்கோமா இல்லையான்னு? உங்களுக்கு எப்படித் தெரியும்? அதனாலதான் நாங்க இங்கிருந்து அன்யோன்யமா இருக்கோம்ன்னு உங்ககிட்ட காமிச்சுக்கறதுக்காகத் தான் என் பொண்டாட்டியை நான் தூக்கிட்டுப் போறேன்” என்று சொல்லிச் சிரித்த ஆதி, துர்காவைத் தூக்கிக்கொண்டு அவன் ரூமிற்குச் சென்றான்.
உள்ளே வந்ததும் துர்காவை நேராக டிரெஸ்ஸிங் ரூமிற்குத் தூக்கிச் சென்றவன், அவளை உடை மாற்றச் சொல்லிவிட்டு, சேலை பின்னை மட்டும் அவளுக்குக் கழட்ட உதவி விட்டு வெளியே வந்து விட்டான்.
ஆதி ஏதோ போல இருக்க, அவனைப் புரியாமல் பார்த்த துர்கா, உடைகளை மாற்றிக்கொண்டு கதவைத் திறக்க, கதவருகே நின்றிருந்த ஆதி, துர்கா கதவைத் திறந்ததும் அவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, மருந்தை எடுத்து வந்து அவள் சம்மதம் கேட்காமல் அவள் முட்டியிலும், இடுப்பிலும் மருந்தை தேய்த்து விட்டவன். பின் சென்று மாத்திரையை எடுத்துக்கொண்டு வந்து துர்காவின் கையில் கொடுத்துவிட்டு, தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்து நின்றான்.
அவன் செயல்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு இருந்த துர்கா, அவன் கையில் கொடுத்த மாத்திரைகளை விழுங்காமல் அவனையே பார்க்க.
“என்ன துர்கா பார்த்துட்டு இருக்க? மாத்திரையைப் போடு” என்றான். அவள் எதுவும் பேசாமல் அவனையே பார்க்க, துர்காவை கேள்வியுடன் பார்த்த ஆதி, “உனக்கு ஏதாவது வேணுமா?” என்றான். அவள் ‘ஆம்’ என்பது போல தலையை ஆட்டினாள்.
“என்ன வேணும் துர்கா?” என்றான் ஆதி. “எனக்கு எதுவும் வேணாம் ஆதி. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள். “என்ன கேட்கணும் துர்கா?” என்றான். “நீ வரும்போது கனகா அம்மா கிட்ட நல்லா தானே பேசினே? ஆனா இங்கே ரூமிற்குள் வந்ததும் ஏன் ஏதோ மாதிரி இருக்கே?” என்று கேட்டாள்.
அவள் அப்படி கேட்டதும், “நான் ஒரு மாதிரி இருப்பதற்குக் காரணமே நீதான்” என்றான் ஆதி. அவன் அப்படிச் சொன்னதும் அதிர்ந்து போய் அவனையே பார்த்தால் துர்கா.
“நானா? நான் என்ன செய்தேன் ஆதி?” என்று புரியாமல் கேட்ட துர்காவை முறைத்த ஆதி. “நீயான்னு கேட்கிற? என்ன பண்றேன்னு உனக்குத் தெரியாதா என்ன?” என்றவன் அவளைக் கோபமாக முறைத்துக்கொண்டே அவள் அருகில் வந்தான்.
