Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 7

உன் ரகசிய ரசிகை நான் 7

by Layas Tamil Novel
895 views

EPISODE 7

தூக்கத்திலிருக்கும் துர்காவின் மூச்சுக் காற்று பட்டு, பெட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஆதி சட்டென்று கண் விழிப்பதை உணர்ந்த துர்கா, உறங்குவதுபோல் படுத்துக்கொண்டாள்.

தன்மேல் விழுந்த காற்றின் உணர்வு ஆதியை ஏதோ செய்ய, ‘இதுநாள் வரை இந்த அறையில் இப்படி ஒரு வாசம், உணர்வு தனக்கு ஏற்பட்டதில்லையே’ என்று யோசித்தவன், திரும்பி துர்காவைப் பார்க்க அவள் உறங்கிக்கொண்டிருப்பதுபோல் படுத்திருந்தாள். அது ஆதிக்குத் தெரியாது. அவள் அருகில் மெல்லச் சென்று, அவள் முகத்தருகே குனிந்து அவள் தூங்குகிறாளா என்று பார்க்க, அப்போது அவளது மூச்சுக் காற்று ஆதியின் மேல் பட, ‘இதே மூச்சுக்காற்றுதான் சற்றுமுன் தன் மேல் பட்டது’ என்பதை உணர்ந்தான் ஆதி.

‘துர்கா உறங்கிக்கொண்டுதான் இருக்கிறாளா? இவள் வாசம் இங்கே படுத்திருக்கும்போது என்மீது எப்படி வந்தது?’ என்று யோசித்துக்கொண்டே அவளைப் பார்க்க, அவன் தன்மேல் இவ்வளவு அருகாமையில் இருப்பது துர்காவால் உணர முடிந்தது.

ஆதியின் மூச்சுக்காற்று துர்காவின் முகத்தில் வருட, அவனின் அருகாமையால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல், துர்கா என்ன செய்வது என்று தெரியாமல் கண்களை இறுக்க மூடி படுத்திருந்தாள்.

ஆதி தன்னிடம் இருந்து விலகுவதாகத் தெரியவில்லை என்று உணர்ந்தவள், ‘இதற்கு மேல் தன்னால் முடியாது’ என்று துர்கா கண் விழிக்க, துர்கா திடீரென்று கண் விழித்த அதிர்ச்சியில் ஆதி அவளிடமிருந்து விலகப்போக, நிலை தடுமாறி அவள் மேலேயே ஆதி விழ, அவன் முகமும் அவள் முகமும் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ள, இருவரின் உதடும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது.

இதை எதிர்பாராத இருவருமே அதிர்ச்சியில் தங்கள் கண்களை விரிக்க, ஒருவர் கண்களும் ஒருவர் மிக நெருக்கமாகப் பார்த்ததில், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் துர்காதான் முதலில் சுயநினைவு வந்தவளாக அவனைப் பிடித்து தன் மேலிருந்து தள்ளிவிட, ஆதியும் அவள் அருகில் பெட்டில் ‘பொத்’தென்று விழுந்தான்.

பெட்டில் விழுந்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு பெட்டிலிருந்து எழுந்து அமர, துர்காவும் எழுந்து அமர்ந்தாள். சிறிது நேரம் இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.

ஆதி துர்காவைப் பார்க்கவும், துர்கா ஆதியைப் பார்க்கவும் இருவரும் ஒன்றாக தங்கள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, துர்கா அவன் முகத்தைப் பார்த்ததும் வெட்கப்பட்டுக்கொண்டு தலை குனிந்துகொண்டாள்.

முதன்முதலாக அந்தச் சிறிய விளக்கொளியில், வெட்கப்பட்டு தன்னைப் பார்த்து தலைகுனிந்து கொண்டிருக்கும் துர்காவைத் தன் தோழியாக அல்லாமல், தன்னிடம் பணிபுரிபவளாக அல்லாமல், வேறு ஒரு கோணத்தில் அவளைப் பார்த்தான் ஆதி.

தன் இந்த நிலை வித்தியாசமாக இருந்தது ஆதிக்கு. அவளை வைத்த கண் வாங்காமல் ஆதி பார்த்துக்கொண்டிருக்க, வெட்கப்பட்டு தலைகுனிந்தவள் வெகுநேரமாய் ஆதியும் எதுவும் பேசாமல் இருக்க, தலை நிமிர்ந்து அவனைப் பார்க்க, இப்போது அவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்த துர்கா, என்ன கூறுவது என்று தெரியாமல், “ஆதி…..” என்று தயங்கிக்கொண்டே அவனை மெதுவாக அழைத்தாள்.

துர்கா தன் பெயர் சொல்லி அழைத்ததும் தான் அவளை அப்படிப் பார்ப்பதை உணர்ந்தவன் சட்டென்று தன் தலையைக் குலுக்கிக்கொண்டு, “துர்கா…. அது வந்து… துர்கா நான் ஏதோ காற்று… வாசம்…. நீ…. பக்கத்தில்…..” என்று வார்த்தை முழுதாக வராமல் பேசினான் ஆதி.

அவன் நிலையைப் புரிந்துகொண்ட துர்கா மனதுக்குள் சிரித்துக்கொண்டவள், “என்ன ஆதி சொல்ற, எனக்கு எதுவுமே புரியல” என்ற துர்கா வேண்டுமென்றே கூற, “அது ஒன்னும் இல்ல துர்கா. நீ படுத்து தூங்கு. சாரி, தெரியாம உன் மேல வந்து….” என்று சொன்ன ஆதி அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் திரும்பி, போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கொண்டான்.

‘என்ன ஆதி? ஆபீஸ்ல அவ்வளவு கம்பீரமா, எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் எதிர்த்து ஃபேஸ் பண்ணி நிற்பாய். ஆனா இப்போ என்ன? உன்னால ஃபேஸ் பண்ண முடியலையா?’ என்றும் மனதுக்குள் நினைத்து சிரித்துக்கொண்டவள், “இன்னும் போகப்போக நிறைய இருக்கு ஆதி, எனக்கு உன்னை பிடிக்கும் என்று உனக்குத் தெரிய வைப்பேன். அதேபோல, உனக்கும் என்னை பிடிக்க வைப்பேன்” என்று தனக்குத் தானே கூறிக்கொண்டவள், திரும்பி பெட்ஷீட்டைப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்கினாள்.

துர்கா இப்போதுதான் நன்றாகத் தூங்க ஆரம்பித்தாள். அவள் தன்னை மறந்து அசந்து தூங்கிக்கொண்டிருக்க, இங்கு ஆதியின் நிலைதான் பெரும்பாடாகிவிட்டது.

தான் பிறந்ததிலிருந்து பெண்களின் வாடையே அறியாமல் வளர்ந்த ஆதி, தன்னிடம் யாரையும் நெருங்கவிடாமல் இருந்தவன், இன்று இவ்வளவு நெருக்கத்தில் துர்காவைப் பார்த்ததும் அவளுக்கு முத்தமிட்டதும் அவன் மனதிற்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது.

ஆதியால் நன்றாகப் படுத்து உறங்கவும் முடியவில்லை. தூக்கம் வராமல் இங்கும் அங்கும் புரண்டு புரண்டு படுத்தவன், திரும்பி படுக்கும்போது துர்காவைப் பார்த்து படுத்துக்கொண்டான்.

துர்கா நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்க…. அவளைப் பார்த்து படுத்துக்கொண்டிருந்த ஆதி அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். இவ்வளவு நாள் அவன் துர்காவின் முகத்தை இவ்வளவு நெருக்கத்தில் ஒருபோதும் பார்த்ததும் இல்லை. ஆனால் இன்று இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும்போது ஆதிக்கு மனதிற்குள் ஏதோ செய்தது. ‘தனக்கு ஏன் ஒரு மாதிரியான உணர்வு துர்காவைப் பார்க்கும்போது ஏற்படுகிறது?’ என்று அவன் மனதிற்குள் அவனைக் கேட்டுக்கொண்டான்.

அவளைப் பார்த்துக்கொண்டே படுத்திருந்த ஆதியின் மேல் திடீரென்று ஏதோ வந்துவிட, ‘என்ன?’ என்று திரும்பிப் பார்க்க, துர்காவின் கால் அவன் கால் மேல் வந்து ‘பொத்’தென்று விழுந்து இருந்தது.

தன் மேல் காலைப்போட்டுப் படுத்திருந்த துர்காவைப் பார்த்தவன் மெதுவாக எழுந்து, அவள் காலை தன் மீது இருந்து நகர்த்தி கீழே வைத்துவிட்டுப் படுக்க, துர்காவின் கை அவன் வயிற்றின் மேல் விழுந்தது.

“துர்கு…..” என்று அவளைக் கடுப்புடன் அழைக்க, ஆனால் அவளோ நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள். ஆதியும் அவள் தன் மேல் போடும் கையையும் காலையும் விலக்கிக்கொண்டே இருக்க, அவள் தூக்கத்தில் இங்கேயும் அங்கேயும் நெளிந்து படுத்துக்கொண்டும் அவன் மேல் கை கால்களைப் போட்டுக்கொண்டும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தாள்.

பாதி இரவுக்கு மேல், ‘இனியும் இவளுடன் படுத்திருந்தால் நான் தூங்க முடியாது’ என்று எழுந்து சென்று சோபாவில் படுத்துக்கொண்டான். அதன் பிறகே அவனால் தூங்க முடிந்தது.

❤️

இரவு முழுவதும் தூங்காமல், தன்னை அவமானப்படுத்திவிட்டு, துர்காவை திருமணம் செய்து கொண்ட ஆதியையும், தன் அந்தஸ்திற்கு நிகரில்லாதவளை தன் இடத்தில் வைத்துக்கொண்டு திருமணம் செய்திருக்கும் துர்காவின் மீதும் பழி உணர்ச்சியோடு இருந்தாள் சங்கவி.

காலையில் அவளுக்கு காபி கொண்டுபோய் கொடுக்க பயந்துகொண்டு வேலைக்காரர்கள் யாரும் அவள் ரூமிற்கு போகாமல் இருக்க, சங்கவியின் அப்பா தானே அவளுக்கு காபி கொண்டு சென்று அவள் அறைக்கதவை தட்ட, கதவைத் திறந்து கொண்டு அவள் அப்பா காபியுடன் உள்ளே வந்தார். உள்ளே வந்தவர், இரவு எந்த இடத்தில் என்ன கோலத்தில் பார்த்தாரோ அதே இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளை இப்படிப் பார்க்கவே சங்கவியின் அப்பாவிற்கு சங்கடமாக இருந்தது. காபியை ஒரு மேஜை மேல் வைத்துவிட்டு, அவள் அருகில் போய் அமர்ந்தவர், “சங்கவி?” என்று அழைத்தார். அவர் அழைத்ததும் அவரை நிமிர்ந்து பார்க்க, “ஏன்டா…. இப்படியே நைட் முழுக்க உக்காந்துட்டு இருந்தியா நீ….” என்றார்.

அவள் “ஆமா” என்று தலையை ஆட்டினாள். “இப்படி உன்னையே வருத்திட்டு இருக்குறதுனால யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லடா. முதல்ல நீ எழுந்திருச்சு பிரஷ் ஆகிட்டு வந்து இந்த காபியை குடி” என்றார்.

அவள் எதுவும் பேசாமல், அவரையே பார்க்க, “ஏண்டா அப்படி பாக்குற? அப்பாவை முதல்ல பிரஷ் ஆகிட்டு வாடா. நாம மத்ததெல்லாம் பேசிக்கலாம்” என்று கூற, “சரி” என்று தலையை ஆட்டியவள், எழுந்து பாத்ரூம் சென்று பிரஷ் ஆகிவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வந்ததும் வேறு காபி கொண்டு வர சொல்லிவிட்டு, அவளைத் தன் அருகில் அமர செய்து, தலையை வருடிக் கொடுத்தவர், “இங்க பாரு சங்கவிமா. இப்ப எதுக்கு நீ இவ்வளவு ஃபீல் பண்ற? உனக்குத்தான் ஆதியைப் பிடிக்கலைனு நேத்து அவ்வளவு பேர் முன்னாடி தைரியமா சொன்னியே? இப்போ எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்க முடியலைன்னு இவ்வளவு ஃபீல் பண்ணி நைட் முழுக்க தூங்காம இருக்க?” என்றார்.

“இப்போ நீ நினைச்ச மாதிரிதானே உனக்குக் கல்யாணம் நடக்கலை” என்று கேட்டார். “அப்பா… நான் எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தில் இருந்து கிளம்பத்தானே போனேன்? நீங்கள்தான் என்னை சமாதானம் செய்து திரும்ப என்னை மனமேடையில் அமர வைத்தீர்கள். நானே சம்மதமாகி திருமணத்திற்கு சம்மதித்து வந்து அமர்ந்திருக்கும்போது, அவன் எப்படி அவ்வளவு பேர் முன்னாடி என்னைக் கேவலப்படுத்தி, அவமானப்படுத்தி, ‘அவர்கள் குடும்பத்திற்கு நான் ஏற்றவள் இல்லை’ என்று முடிவு செய்யலாம்? என்னுடைய அந்தஸ்து பற்றி பேசிய அந்த ஆதி, எனக்கு அந்தஸ்தில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத அந்தத் துர்காவை அவன் கல்யாணம் பண்ணியிருக்கான். என்னால் இதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.”

“நம்முடைய அந்தஸ்து எங்கே? அந்த ஏழை அடுத்தவரிடம் கைகட்டி வேலைபார்க்கும் அந்தத் துர்கா எங்கேப்பா?” என்றாள் ஆத்திரத்துடன்.

“என்னை அவமானப்படுத்திய அந்த ஆதியையும், எனக்கு சமம் இல்லாத அந்தத் துர்காவையும் நான் சும்மா விடப்போவதில்லை. எப்படியும் அந்த ஆதிக்கு இந்த கல்யாணம் பிடிக்காமல் தான் பண்ணி வைத்திருப்பார்கள். அவனால் அந்தத் துர்காவைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்ள முடியாது.”

“என்னதான் என்னை வேண்டாம் என்று சொன்னாலும், அந்த ஆதி என்னைக் காதலித்திருக்கிறான். அவன் மனதில் நிச்சயமா நான் இருப்பேன். அவனிடம் மீண்டும் எப்படியாவது நான் நெருங்கிப் பழகி, அவனே வந்து என்னிடம் ‘என்னை திருமணம் செய்துகொள்’ என்று அவனை கெஞ்ச வைக்க வேண்டும் அப்பா” என்றாள் சங்கவி.

“அந்த ஆதிக்கு எப்படி இந்த கல்யாணம் பிடிக்காமல் தான் பண்ணியிருப்பான். அப்பா, என்னை எப்படியாவது ஆதியின் பிசினஸ் கூட நம்ம பிசினஸையும் மறுபடியும் நான் உள்ளே நுழைய ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணுங்க. அப்பத்தான் நான் பக்கத்துல இருந்து ஆதியும் அந்தத் துர்காவும் என்ன பண்றாங்க என்று பார்க்க முடியும். அது மட்டும் இல்லாம அந்தத் துர்கா, ஆதி பணக்காரன்னு சொல்லி அவனை வளைச்சுப் போடுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு. அதை நான் நடக்க விடக்கூடாது. என்னதான் அவளைக் கல்யாணம் பண்ணி இருந்தாலும், எல்லோர் முன்னாடி என்னை வேண்டாம்னு சொன்ன அவனோட வாழ்க்கை நல்லா இருக்க நான் விடமாட்டேன். தெரிஞ்சோ தெரியாமலோ அவங்க ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்துடக்கூடாது. எனக்கு முதல்ல ஆதி கூட கம்பெனியில் திரும்பவும் நான் போறதுக்கு நீங்க ஒரு வழி பண்ணிக் கொடுங்க அப்பா” என்று கூறினாள் சங்கவி.

“நீ சொல்றதும் சரிதாம்மா. கொஞ்சம் பொறுத்துக்கோ. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நான் எப்படியாவது ஏதாவது ஒரு ஐடியா பண்ணி, நம்ம பிசினஸோட அவங்க கிட்ட இருக்கிற டீலை கேன்சல் பண்ணாம முதல்ல பார்த்துக்கிறேன். அதுக்கப்புறம் உனக்கு நான் நம்ம பிசினஸோட எல்லா உரிமையும் கொடுத்து, நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கிற மாதிரி நான் பண்றேன். அப்பத்தான் உன்னால லீகலா அவங்க கம்பெனிக்குள்ள போக முடியும்” என்றார் சங்கவியின் அப்பா.

❤️

இரவு வெகு நேரமாக சரியாகத் தூங்காததால் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்த துர்கா, திரும்பி ஆதியைப் பார்க்க, ஆதி அங்கு இல்லை.

எழுந்து குளித்து முடித்து கீழே வர, அங்கே டைனிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ‘அச்சோ! வந்த முதல் நாளே இவ்வளவு லேட்டா வந்துட்டேனே’ என்று நினைத்துக்கொண்டு டேபிளுக்கு வந்தவள், அனைவர்க்கும் உணவு பரிமாறிக்கொண்டிருந்த விசாலட்சியிடம், “அம்மா… குடுங்க, நான் பரிமாறுகிறேன் எல்லோருக்கும்” என்று அவர் கையிலிருந்து உணவை வாங்க, அதற்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த கீர்த்திகா, “அக்கா… வந்தது லேட், இப்போ அத்தை கிட்ட ஐஸ் வச்சு நல்ல பெயர் வாங்கலாம் என்று பார்க்குறியா நீ…? ஆமா, ஏன் இவ்வளவு நேரம் தூங்கிட்ட நீ?” என்று கேட்க, “அது…. நைட் தூங்க லேட்டா ஆகிவிட்டது” என்று துர்கா சொல்ல, அவள் சொன்னதன் அர்த்தம் என்னவோ வேறு…. ஆனால் அங்கிருந்தவர்கள் புரிந்துகொண்டது வேறு. “லேட்டா ஆகிருச்சா நைட்? நீ சீக்கிரம் தூங்கிடுவியே எப்போதும்” என்றாள் கீர்த்தி.

“அது…. அது வந்து… தூக்கம் வரலடி…. அதான் லேட்டா தூங்கி லேட்டா எழுந்தேன்” என்றாள் துர்கா. “தூக்கம் வரலையா? இல்ல, மாமா உன்னை நைட் முழுக்கத் தூங்க விடலையா?” என்று கண்ணடித்து கீர்த்தி கேட்க, அவள் அவ்வாறு கேட்டதும் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆதிக்கு புரை ஏறியது. அவனுக்கு அவசரமாகத் தண்ணீர் கொடுத்த துர்கா, “ஏய் வாலு…. கொஞ்ச நேரம் வாய வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியாடி…. பேசாம சாப்பிடு” என்று அவளை அதட்ட, “நான் இப்போ என்ன கேட்டுட்டேன்? உண்மையதானே கேட்டேன்?” என்று முகத்தைச் சிறுபிள்ளையை யாரேனும் திட்டிவிட்டால் குழந்தையின் முகம் சோகமாவதைப்போல கீர்த்தியின் முகம் இருக்க, அதைப்பார்த்து அவளுக்கு வக்காலத்து வாங்க நம்ம கதிர் வந்துட்டாரு.

“ஹே துர்கு! கீர்த்தி என்ன இப்போ தப்பா கேட்டுட்டா? சரியா தான கேட்டா?” என்றவன், “ஆமா ஆதி… உன் கண்ணெல்லாம் ஏன் சிவந்திருக்கு? நீயும் நைட் சரியா தூங்கலையா?” என்று கதிர் கேட்க, “ஆமாடா…. நைட் சரியா தூங்கலை” என்றான். “ஏன் தூங்கலை?” என்று கதிர் கேட்க, சாப்பிடும் மும்முரத்தில், “துர்காவாலதான்டா நைட் எல்லாம் நான் தூங்கலை” என்று சொல்ல, டைனிங் ஹாலில் இருந்த அனைவரும் எதுவும் பேசாமல் தலைகுனிந்து சிரித்துக்கொண்டு சாப்பிட, “என்ன திடீர் என்று அமைதியாக இருக்கிறது?” என்று யோசித்து ஆதி தலை நிமிர்ந்து பார்க்க, அவனையும் அவன் அருகில் இருந்த துர்காவையும் பார்த்து அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, தான் கூறியதன் அர்த்தம் இப்போதுதான் ஆதிக்கு புரிய, அவன் திரும்பி கதிரை முறைக்க, “என்னை ஏன்டா…. முறைக்குற? நான் ஒன்னும் தப்பா கேக்கலையே, கண்ணு ஏன் சிவந்திருக்கு என்றுதானே கேட்டேன்?” என்றவன் குனிந்து அமைதியாக சாப்பிட, அவனை யாரோ குருகுருவென பார்ப்பதுபோல இருக்க, தன்னை சுற்றிப்பார்க்க, எதிரே இருந்த கீர்த்திதான் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். சரியாக கதிர் கீர்த்தியைப் பார்க்க, கீர்த்தி தலையை அவன் பார்க்காததுபோல திருப்பிக்கொண்டாள்.

அம்மா

“சரி சரி…. கிண்டல் செய்தது போதும், சீக்கிரம் சாப்பிடுங்க. நேரம் ஆகுது. நல்ல நேரம் முடிவதற்குள் கிளம்ப வேண்டும்” என்றார் விசாலட்சி. “கிளம்பணுமா அம்மா? எங்கே கிளம்பணும்? எனக்கு ஆஃபீஸில் ஏகப்பட்ட வேலை பெண்டிங்கில் இருக்கிறது” என்று கூற, “இங்க பாரு…. இன்னும் ஒரு பத்து நாளைக்கு நீ ஆபீஸ் பக்கமே போக வேண்டாம். எல்லாத்தையும் கதிரும் விக்கியும் பார்த்துக்கொள்வார்கள்” என்றார். “அம்மா…. 10 நாள் நான் ஆபீஸ் போகாமல் எப்படிம்மா இருக்க முடியும்?” என்றான். “இப்போதான் புதுசா கல்யாணமாகியிருக்கு. நிறைய வேலை எல்லாம் இருக்கு. நான் சொல்ற வர நீ ஆபீஸ் போகக் கூடாது. இது இந்த அம்மாவிடம் ஆர்டர்” என்றார். ஆதிக்கும் வேறு வழியில்லாமல் “சரி” என்று கூறி சாப்பிட ஆரம்பித்தான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured