EPISODE 9
ஆதிக்கும் துர்காவுக்கும் தனியாக இருப்பதற்காக ஒரு புதிய மாளிகை, அவனது அப்பா ஏற்கனவே அவனது திருமணப் பரிசாகக் கொடுப்பதற்காகத் தயார் செய்து வைத்திருந்ததால், அவர்கள் இருவரையும் அங்கு அழைத்து வந்திருந்தனர். அழைத்து வந்து வீட்டிற்குப் பால் காய்ச்சிவிட்டு, அனைவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்க, கீர்த்திகா மட்டும் தனியாக அவர்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க, அவள் பின்னாலேயே கதிரும் அவள் செல்லும் இடமெல்லாம் அவளுக்குத் தெரியாமல் சென்றுகொண்டிருந்தான்.
ஒவ்வொரு அறையாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த கீர்த்திகா, கடைசியாக ஆதியின் அறைக்கு வரவும், உள்ளே சென்று பார்க்க, அங்கே பால்கனியில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் “ஐ…” என்று அங்கே சென்று ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள்.
வீட்டில் சந்தோஷமாக ஊஞ்சல் இல்லாமல் இருந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்த கதிர், ‘ஓஹோ… நம்ம ஆளுக்கு ஊஞ்சல்னா ரொம்ப பிடிக்கும்போல இருக்கே! ஃபியூச்சர்ல அவளை இம்ப்ரஸ் பண்றதுக்கு இந்த ஐட்டமும் தேவைப்படும்’ என்று யோசித்துக்கொண்டவன், “நோட் பண்ணுடா…. நோட் பண்ணுடா….” என்று தன் மனதிற்குள் தானே குறித்துக்கொண்டான்.
பின், சிறிது நேரம் அவள் சந்தோஷமாக ஊஞ்சல் ஆடுவதை ஏறிட்டு நின்று ரசித்தவன், அவள் அருகில் வந்து ஆடிக்கொண்டிருந்த ஊஞ்சலைத் தன் கையால் பிடித்து நிறுத்தினான். தன்னை யார் நிறுத்தினார்கள் என்று ஊஞ்சலிலிருந்து திரும்பிப் பார்த்த கீர்த்திகா, கதிர் ஊஞ்சலைப் பிடித்துக்கொண்டு சிரித்த முகமாக அவளைப் பார்த்ததால், உள்ளுக்குள் ஏதோ செய்தது.
‘என்ன இவன் சிரிக்கிற சிரிப்பு நமக்குள்ள என்னமோ செய்ற மாதிரி இருக்கு. ம்ஹும்…. இவனைப் பார்க்கக் கூடாது’ என்று நினைத்த கீர்த்திகா, ‘இவனைக் கண்டுக்காம நாம பாட்டுக்கு இந்த ரூமை விட்டு வெளியே, இவனைப் பார்க்காத மாதிரியே வெளியே போய்விடு கீர்த்து’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள், ஊஞ்சலிலிருந்து இறங்கி கதிரைத் திரும்பியும் பார்க்காமல் அந்த அறையைவிட்டு வெளியே செல்ல, கதவு அருகில் சென்றாள்.
தன்னைத் திரும்பியும் பார்க்காமல் ஊஞ்சலிலிருந்து இறங்கிச் சென்ற கீர்த்திகாவைப் பார்த்து, ‘இவளுக்கு எவ்வளவு கொழுப்பு! நான் இப்படி ஒருத்தன் பிடிச்சிட்டு இருக்கேன். என்ன, ஏதுன்னு கேட்காம இவ பாட்டுக்கு இறங்கிப் போறா’ என்று அவளைப் பார்த்தவன், ‘இருடி செல்லக்குட்டி, வரேன்’ என்று மனதில் நினைத்து, வேகமாக அவளைத் தாண்டிச் சென்று கீர்த்திகாவின் எதிரில் வேகமாக வந்து நின்றான்.
கதிரைப் பார்க்காததுபோல ஊஞ்சலிலிருந்து இறங்கி வெளியே செல்லப் போன கீர்த்திகா, தன் எதிரே புயலியைவிட வேகமாக வந்து நின்ற கதிரைப் பார்த்ததும் திடுக்கிட்டு, அப்படியே பின்னால் நகரப்போக, தன்னைச் சமாளித்துக்கொண்டு நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழப்போக, கதிர் வேகமாக வந்து அவள் இடுப்பில் கை கொடுத்து அவளைத் தூக்கி தன்னோடு சேர்த்து நிறுத்தினான்.
கதிரின் முகத்தை அவ்வளவு நெருக்கமாகப் பார்த்த கீர்த்திகாவின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவளை தன்னோடு சேர்த்து அணைத்திருந்ததால், அவளின் இதயத்துடிப்பும் கதிரால் உணர முடிந்தது. ஒரு பெண்ணின் உடல் தன்னுடன் இவ்வளவு நெருக்கமாக முதன்முதலில் இருக்கவும், அவளுடைய இதயத்துடிப்பையும் உணர்ந்த கதிருடைய இதயத்துடிப்பு வேகமாக ஆரம்பித்தது.
வேகமாகத் துடிக்கும் அவள் இதயத்தோடு போட்டி போட்டுக்கொண்டு கீர்த்திகாவின் இமைகளும் படபடத்துக்கொண்டே அவனைப் பார்க்க, கதிரின் பார்வையும் அவள் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்துவிட, இருவரும் அப்படியே அசையாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர். எவ்வளவு நேரம் இப்படி இருந்தார்கள் என்று இருவருக்குமே தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே தங்களை மறந்து நின்றிருக்க, கீர்த்திகாதான் முதலில் சுயநினைவுக்கு வந்தவளாக வேகமாக அவனைத் தள்ளிவிட்டு, அவனை விட்டுப் பிரிந்து தள்ளி நின்றாள்.
தன்னைவிட்டு திடீரென்று பிரிந்து நின்ற கீர்த்திகாவை பிரிய மனமில்லாமல், தள்ளி நிற்க வைக்க முடியாமல் கதிர் வேண்டுமென்று அவள் அருகில் நெருங்கி வர, கீர்த்திகா அவனை முறைத்தவாரே இரண்டு அடி பின்னால் தள்ளி நின்று, கையை நீட்டி “அங்கே நின்னு பேசுங்க. இப்ப எதுக்கு என் பக்கத்துல வரீங்க?” என்று கதிரைப் பார்த்து கூறினாள்.
“நான் அப்படி ஒன்னும் உன் பக்கத்துல வரலையே. கொஞ்சம் பக்கத்துல வந்து நின்னேன், அது ஒரு தப்பா?” என்று கதிர் கேட்க, “எப்படி? உங்க ஊர்ல ஒரு பொண்ணு கிட்ட பையன் இவ்வளவு நெருக்கத்தில் வந்து நின்னுதான் பேசுவானா? இப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே” என்றாள் கீர்த்திகாவும் அவனிடம் விடாப்பிடியாக.
“சரி, வழி விடுங்க. நான் முதல்ல போகணும். நான் சுற்றிப் பார்க்கறதுக்காகத்தான் வந்தேன். உங்க கூட பேசிட்டு இருக்க வரலை” என்று கூறியவள் அவனை விலக்கி, அவனைத் தாண்டிச் செல்லப்போக, அவள் முன் சென்று நின்ற கதிர், “எங்கே மேடம்? இப்படி என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிப் போறதிலேயே குறியா இருக்கீங்க. கொஞ்சம் பொறுங்க மேடம்” என்று கூறியவன், “கார்ல வரும்போது நம்ம ரெண்டு பேரும் பேசிட்டு வந்தோமே, ஞாபகம் இருக்கா? இல்லை இல்லை, சண்டை போட்டுட்டு வந்தோமே…. ஞாபகம் இருக்கா…? நீங்க என்கிட்ட பெட் கட்டினீங்க, அதுவாவது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான்.
“சண்டையா…? நான் எதுக்கு கார்ல உங்க கூட சண்டை போட்டுட்டு வந்தேன்? அப்படி எல்லாம் நான் எதுவும் செய்யலையே” என்று தெரியாதவள்போல கீர்த்திகா பேச, அவளைப் பார்த்துக் குறும்பமாக முறைத்த கதிர், “கார்ல பாட்டுப் போட சொன்னீங்க. எங்க அண்ணன் உங்களைப் பார்த்து முறைச்சதும் பயந்துட்டு அமைதியா இருந்துட்டு, கடைசில என்னை என்னவெல்லாம் கேள்வி கேட்டு, அசிங்கப்படுத்தி, ‘தைரியம் இருந்துச்சுன்னா பாட்டுப் போடுங்க பார்ப்போம்’னு நீங்க சொன்னீங்க. அதே மாதிரி நானும் பாட்டு போட்டு விட்டுட்டேனா…? அப்படி நான் பாட்டுப் போட்டு விட்டுட்டா, நான் என்ன சொன்னாலும் நீ கேட்கணும் அப்படிங்கறதுதானே நம்ம பெட்டே?” என்றான் கதிர்.
“ஆமா, அது நான் தெரியாம சொல்லிட்டேன். அதுக்காக இப்படி என் பின்னாடியே வந்து, என்னை துரத்தி, என்கிட்ட இப்படியெல்லாம் வம்பு பண்ணணுமா?” என்று கேட்டாள் கீர்த்திகா.
“என்னது வம்பு பண்றேனா…? நான் இன்னும் வம்பு பண்ண ஸ்டார்ட் பண்ணவே இல்லை மேடம். ஜஸ்ட் உன் பக்கத்துல நின்னு பேசிட்டுதான் இருக்கேன். நான் வம்பு பண்ண ஆரம்பிச்சா, அப்புறம் உன்னாலே தாங்க முடியாது” என்று நக்கலாகக் கூறிய கதிர், “சரி, நான் அதையும் இதையும் பேச வரல. நேரடியா விஷயத்துக்கு வரேன்” என்று தன் பின்னால் யாரும் இருக்கிறார்களா என்று ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, அவள் அருகில் மெதுவாக நடந்து வர, அவனைப் பார்த்துப் பயந்து கீர்த்திகா, “இப்ப எதுக்கு என் பக்கத்துல இப்படி வரீங்க? எதுவாக இருந்தாலும் அங்கேயே நின்னு பேசுங்க. இப்படிப் பக்கத்தில் வந்து பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க” என்றாள்.
“அட இருமா. நான் பெட் கட்டினதுல என்கிட்ட நீ தோத்து போயிட்ட. ‘நான் என்ன சொன்னாலும் செய்றேன்னு’ சொல்லி இருக்க. அப்ப, நீ என்ன செய்யணும்னு நான் உன்கிட்ட சொல்ல வேண்டாமா?” என்று கூற, அவன் கூறியதைக் கேட்டு, “கெட்டியா? எதுவா இருந்தாலும் அங்க நின்னு சொல்லுங்க. இவ்வளவு பக்கத்துல எல்லாம் வந்து ஒன்னும் சொல்லணும்னு அவசியம் இல்லை” என்று கூறினாள்.
“அப்படியே நீ சொல்ற மாதிரி இவ்வளவு தூரத்தில் இருந்து எல்லாம் சொல்ல முடியாது. நான் எதுவா இருந்தாலும் உன் பக்கத்தில் வந்து உன் காதில் தான் சொல்லுவேன்” என்று கூறியவன், அவள் பதிலுக்கும் காத்திருக்காமல் மெதுவாக அவள் அருகில் வந்தான்.
அவள் அருகில் வந்தவன், கீர்த்திகாவின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, அவள் காதருகே குனிந்து, காதோரம் விழுந்திருந்த முடியைத் தன் ஒற்றை விரலால் ஒதுக்கிவிட்டு, அவள் காதில் மிக மெதுவாக, “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ?” என்று முத்து படத்தில் ரஜினி சொன்ன பாணியில் அவள் காதில் மெதுவாகக் கதிர் கூற, அவன் இவ்வாறு சொன்னதும் அதைக் கேட்ட கீர்த்திகா அதிர்ச்சியாகி, அவனிடமிருந்து வேகமாக விலகிப் பின்னே தள்ளி நின்றாள். அவனைப் பார்த்து முறைக்க, “என்ன முறைக்கிற? ‘நான் என்ன சொன்னாலும் செய்கிறேன்’னு சொன்னேதானே? அதானே பெட்டு?” என்று கேட்டான்.
“கெத்துதான். அதுக்காக என்னை கட்டிப்பிடிச்சு முத்தம் எல்லாம் கொடுக்கச் சொல்றீங்க? நீங்க யாரு? நான் யாரு? நான் எதுக்கு உங்களை கட்டிப்பிடிக்கணும்? எதுக்கு முத்தம் கொடுக்கணும்?” என்று கேட்க, “ஏய், என்னை பார்த்து ‘யாரு’னு கேக்குற? நான் உன் அக்கா வீட்டுக்காரரோட தம்பி. அப்படிப் பார்த்தா நான் உன்னைக் கட்டிக்கிற முறைதான். சொல்லப்போனால், நான் தான் உன்னைக் கல்யாணமா பண்ணிக்கப் போறேன்” என்று கூற, அதைக் கேட்ட கீர்த்திகா, “என்ன விளையாடுறீங்களா? இந்த மாதிரி பேசுறதெல்லாம் இனிமேல் என்கிட்ட வெச்சுக்காதீங்க. நான் எதுக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்? எனக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது. இந்த மாதிரி இனிமேல் பேசிட்டு என் பக்கத்துல வராதீங்க” என்று அவனை வேகமாகத் தள்ளிவிட்டு, அந்த அறையைவிட்டு ஓடிவிட்டாள்.
‘இங்கிருந்து தப்பித்தால் போதும்’ என்று ஓடியவளைப் பார்த்து சிரித்த கதிர், “எங்கே போகப்போற? இன்னைக்கு நீ இங்கிருந்து போறதுக்குள்ள உன்கிட்ட இருந்து நான் முத்தம் வாங்காம உன்னை அனுப்பப் போறதே இல்ல” என்றான் அவளுக்குக் கேட்கும்படி. அவளை விட்டு ஓடியவள் நின்று, அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அவனைப் பார்த்து, “அது உங்களால முடியாது. அதையும் தான் பார்க்கிறேன் நான்” என்றாள்.
“என்னால முடியாதுன்னு சொன்னே பாக்கறியா நீ…? என்னால முடியாது என்கிற விஷயமே என் வாழ்க்கையிலும் என் அண்ணா வாழ்க்கையிலும் கிடையாது. அதைத் தெரிந்துகொள் முதல்ல. நான் உனக்கு முத்தம் கொடுக்கலைனா, என் பேரு கதிர் இல்லை” என்றான் தன் மீசையை முறுக்கியவாரே.
“அதையும் நான் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கியவள் மனதிற்குள் சிரித்துக்கொண்டாள். சிரித்தவளை, ‘ஏய் கீர்த்து, நீ அவன்கிட்ட நல்லாவே மயங்கிப்போற. கவனமா இரு’ என்று அவளின் இன்னொரு மனம் எச்சரித்தது.
அனைவரும் வீடு சுற்றிப் பார்த்துவிட்டு வர, கீர்த்திகாவும் கதிரும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். துர்காவையும் ஆதியையும் அருகே சோபாவில் அமர வைத்து, துர்காவின் பெற்றோர் அவளுக்காக அவர்கள் செய்ய இருந்ததாகச் சொன்ன நகைகளைப் போட்டு, ஆதிக்கும் அவர்களால் முடிந்ததைச் செய்து அவர்கள் இருவரையும் அழகு பார்த்தனர்.
தன் மகனைத் துர்காவோடு சேர்த்து இப்படிப் பார்த்த விசாலாட்சிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரின் அருகில் வந்தவர், அவர்கள் இருவருக்கும் நெட்டி முறித்து திருஷ்டி சுற்றியவர், “என் கண்ணே பட்டுடும் ராஜாத்தி. என் மகன் கூட சேர்ந்து உட்கார்ந்து இருக்கிறப்போ எவ்வளவு அழகா இருக்கு தெரியுமாடி துர்கா?” என்று அவளைக் கன்னம் பிடித்துக் கொஞ்சினார்.
அவர் கூறியதும் வெட்கப்பட்டு துர்கா, “போங்க அத்தை” என்றாள். அவள் வெட்கப்படவும், அவள் அருகில் வந்து கீர்த்தி, “அக்கா, ரொம்ப வெட்கப்படாதே. அப்புறம் மாமா உன் சிவந்த முகத்தைப் பார்த்து அப்படியே மயங்கி விழுந்துடப் போறாரு” என்று கூறினாள்.
கீர்த்திகா கூறியதைக் கேட்ட ஆதிக்கு, துர்கா வெட்கப்பட்டால் முகம் சிவந்துவிடும் என்பதை உணர்ந்தவன், அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று உந்துதல் ஏற்பட, அதைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், அவள் புறமே திரும்பாமல், மனதிற்குள், ‘டேய் ஆதி, இது என்ன புதுசா இப்படி எல்லாம் பழகுற? இவ்வளவு நாள் நீ துர்காவைப் பார்க்காதவனா? இப்ப மட்டும் எதுக்கு அவ முகத்தைப் பார்க்கணும்னு கீர்த்திகா சொன்னது உனக்கு ஆர்வமா இருக்கு? பேசாம இரு’ என்று அவன் மனம் அவனைத் தடை போட்டது.
இருவருக்கும் சீர்வரிசை சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து முடித்த துர்காவின் பெற்றோர், அனைவரையும் பார்த்து, “நாளைக்கு நல்ல நாளா இருக்கு. மாப்பிள்ளை, பொண்ணு நீங்க ரெண்டு பேரும், மற்ற எல்லாரும் எங்க வீட்டுக்கு மறுவீட்டு விருந்துக்கு கண்டிப்பா வரணும்” என்று அழைத்தனர்.
அவர் கூறியதும் “ஐ” என்று கைதட்டிய கீர்த்தி, “அப்ப, அக்கா, மாமா நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு வருவீங்கதானே?” என்று கூற, துர்கா “ஆம்” என்று தலையாட்டிவிட்டு ஆதியைத் திரும்பிப் பார்க்க, ஆதி அவளை என்ன சொல்வது என்று தெரியாமல் பார்க்கவும், “நீ அவளுடைய தாயிடம், “அம்மா, நாளைக்கே நாங்க மறுவீட்டுக்கு வரணுமா?” என்று கேட்க, துர்காவின் தாய், “இது என்னடி? நாளைக்கே வரணுமான்னு கேக்குற? அப்புறம் நாளைக்கு வராம வேற எப்ப வரப் போறீங்க? மறுவீட்டுக்கு வந்த பிறகுதான் நீங்க எங்கேயும் வெளியில் போக முடியும், வர முடியும். அதுவரைக்கும் நீங்க எங்கேயும் போகக் கூடாது” என்று அவர் கூறவும், ‘ஆதிக்கு இப்போது இதுதான் சரியான சமயம், நாளைக்கு மறுவீடு போய் வந்துவிட்டால், அதன் பிறகு எப்பொழுதும் போல ஆபீஸ் சென்று வரலாம்’ என்று நினைத்தவன், “சரி அத்தை, நாங்கள் நாளைக்கே வருகிறோம்” என்றான்.
ஆதி நாளை துர்காவின் வீட்டிற்கு மறுவீடு செல்கிறேன் என்று சொன்னதும், அதை நம்பாத அனைவரும் அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து எழுந்து தன்னுடைய அறை எங்கே என்று பார்ப்பதற்காக மாடிக்குச் சென்றுவிட்டான். அவன் வெட்கப்பட்டுக்கொண்டு செல்வதாக நினைத்த மற்றவர்கள் சிரித்துக்கொண்டு எதுவும் பேசாமல் இருக்க, துர்கா மனதிற்குள் மட்டும், ‘அவன் எதற்காகச் சொல்லி இருப்பான்? மறுவீடு போயிட்டு வந்தாதானே அவனால் ஆபீஸ் போக முடியும்னு நினைச்சுத்தானே சொல்லி இருப்பான்? எங்க வீட்டுக்கு வரேன்னு இவனுக்கு என்ன என் மேல ஆசைப்பட்டா என் வீட்டுக்கு வரேன்னு சொல்லப் போறான்?’ என்று மனதில் நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.
துர்காவிடம் விசாலாட்சி, “போம்மா, நீயும் போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறமா கீழ வா. நாங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறோம். எனக்கு மாத்திரை போட்டதிலிருந்து ஒரு மாதிரி டயர்டா இருக்குது” என்று விசாலாட்சி கூற, “சரி அத்தை” என்று கூறி மாடிக்குச் சென்றாள் துர்கா.
ஆதியின் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த முத்து தாத்தாவைக் கார்த்திக்கின் புது வீட்டுக்கு வரவழைத்த விசாலாட்சி, “மதியத்துக்கு எல்லோருக்கும் உணவு சமைச்சிடுங்க” என்று கூறி, செல்வதற்கு முன், துர்காவின் பெற்றோருக்கும் ஒரு அறையைக் கட்டி, அங்கே ரெஸ்ட் எடுக்கச் சொல்ல, கீர்த்திகாவும் அவர்களுடனே சென்றாள்.
ஹாலில் இருந்த கதிர் விக்கியிடம், “வா விக்கி… நாம ஆபீஸ் போயிட்டு வந்துரலாம். அண்ணாவும் வர நாள் ஆகுமில்லையா? நாம போயிட்டு வந்துரலாம்” என்று இருவரும் கிளம்பி ஆபீஸ் சென்றனர்.
ரெஸ்ட் எடுப்பதற்காக துர்கா அவர்கள் அறைக்கு மேலே வர, உள்ளே வந்த துர்கா ஆதி எங்கே என்று தேட, பாத்ரூமில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க, அவன் அங்கிருக்கிறானா என்று அறைக்குள்ளே வந்து மெதுவாக தங்கள் அறையை நோட்டமிட ஆரம்பித்தாள். அந்த அறையின் அளவே அவர்கள் வீட்டின் அளவு இருந்தது. பெரியதாக இருந்த அதன் வேலைப்பாடுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்த விதத்தையும் பார்த்த துர்கா, ஒவ்வொரு பொருளாக நோட்டமிட்டவள், அங்கே ஃபிரேம் செய்து பெரிதாக மாற்றப்பட்டிருந்த அவர்களின் திருமணப் புகைப்படத்தைப் பார்த்தாள்.
அதன் அருகில் வந்தவள், அதில் முகத்தில் மாஸ்க் போட்டுத் தன் அருகில் அமர்ந்திருந்த ஆதியைப் பார்த்து, “உன்னோட கல்யாணத்துக்குக் கூட நீ இந்த மாஸ்க்கை கழட்ட மாட்டியாட நீ….. மாஸ்க் இல்லாம இருந்தாலும் எவ்வளவு அழகா இருக்கன்னு உனக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? எதுக்காக இந்த அழகான முகத்தை அந்த மாஸ்க் போட்டு மூடி வெச்சுக்கிற?” என்று ஆதியைக் கேட்டதாக நினைத்து, அந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஆதியிடம் கேட்டாள்.
சுவற்றில் மாற்றப்பட்டிருந்த தங்கள் திருமணப் புகைப்படத்தையே சிறிது நேரம் பார்த்த துர்கா, ஒரு நிமிடம் திரும்பிப் பாத்ரூமில் பார்க்க, இன்னும் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் சத்தம் கேட்கும் ஆதி இப்போதைக்கு வெளியே வரமாட்டான் என்பதை உறுதி செய்துகொண்ட துர்கா, சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படத்திற்கு அருகில் வந்தவள், தன் பாதத்தை உயர்த்தி புகைப்படத்தில் இருந்த ஆதியின் முகத்தில் முத்தமிட்டாள்.
சரியாக அவள் முத்தமிடவும், ஆதி பாத்ரூம் கதவைத் திறந்துகொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. பாத்ரூம் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் துர்கா பதறிப் போனவள், அங்கிருந்து நகரப்போக, கால் தவறி அப்படியே கீழே விழப் போக, அவள் வருவதைப் பார்த்த ஆதி ஓடி வந்து அவளைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.
அவளை கீழே விழாமல் பிடித்து நிறுத்திய ஆதியின் மீது மோதி, ஆதியின் உடலோடு மோதி நின்றாள் துர்கா. அவளைப் பிடித்து நிறுத்தியவன், “ஏன்? என்னாச்சு உனக்கு? இப்ப எதுக்கு இப்படி அவசரமா நகரப்போன?” என்று கூறி அவன் முகம் பார்த்து கேட்க, ஆதிக்கு இவ்வளவு அருகில் பார்த்ததும் துர்காவின் முகம் சிவந்துவிட்டது.
துர்காவின் முகம் சிவந்திருப்பதைக் கவனித்த ஆதி, அவள் முகத்தைப் பார்த்தவன், “ஏய் துர்கு, ஏன் உன் முகம் இப்படி சிவந்து போயிருச்சு? என்ன ஆச்சு உனக்கு? உடம்பு ஏதும் சரியில்லையா?” என்று அவள் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, ஏற்கனவே வெட்கத்தில் சிவந்திருந்த துர்காவின் முகம் ஆதி இப்படி கேட்டுத் தன்னைத் தொட்டுப் பார்க்கவும் மேலும் சிவந்துவிட, அவன் கையைத் தட்டிவிட்டவள் வேகமாகப் பாத்ரூமுக்குள் ஓடி, கதவைச் சாற்றிக்கொண்டு அதன் மேலே சாய்ந்துகொண்டு மூச்சு வாங்கினாள்.
‘அம்மாடியோ… எப்படி எல்லாம் கவனிச்சு கேக்குறான் பாரு’ என்று மனதில் நினைத்து துர்கா அவன் கூறியதை நினைத்துச் சிரித்தாள். அவள் ஓடிச் சென்று கதவைச் சாற்றிக்கொண்டதைக் கவனித்த ஆதி, ‘இப்ப நான் இவள்கிட்ட என்ன கேட்டுட்டேன்? இவ இப்படி என் கையைத் தட்டிவிட்டு ஓடிவிட்டாள்?’ என்று யோசித்தவன், ‘அவன் முகமே அப்படி சிவந்திருந்தது’ என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, சற்று நேரத்துக்கு முன்பு கீர்த்திகா, ‘துர்காவின் முகம் சிவந்து அழகாக இருந்தது’ என்று சொன்னாளே, ‘ஒருவேளை அவள் முகம் சிவந்தால் இப்படித்தான் இருக்குமோ?’ என்று யோசித்தவன், அவள் சிவந்த முகத்தை ஒருமுறை தன் மனக்கண்ணுக்குள் கொண்டு வந்து, துர்காவின் சிவந்த முகத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க, அவள் முகம் சிவந்து அவனைப் பார்த்த பார்வை ஒரு கணம் அவன் கண்முன் வந்து செல்ல, தன் உடல் சிலிர்த்து ஒருவித உணர்வு தோன்றுவதை உணர்ந்த ஆதி, தலையைக் குலுக்கிக்கொண்டு, ‘என்ன இப்படி ஒரு உணர்வு?’ என்று யோசித்தவன், அவள் நின்றிருந்த இடத்தை திரும்பிப் பார்க்க, அங்கே இவர்கள் இருவரின் திருமணப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்ததைக் கவனித்தான்.
அதன் அருகில் வந்து துர்காவின் முகத்தைப் பார்க்க, அந்தப் ஃபோட்டோவில் ஆதி துர்கா கழுத்தில் தாலிக் கட்டும் புகைப்படம் இருந்தது. அதில் துர்கா லேசாகக் கண்களைத் தாழ்த்தி, அழகான சிறிய மெல்லிய புன்னகை ஒன்று உதிர்த்து அமர்ந்திருந்தாள். துர்காவைப் பார்த்து, ‘ரெண்டு பேர்கிட்டயும் அப்போதானே சம்மதம் கேட்டு கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சாங்க? அம்மாவுக்காகத்தானே இவ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா? ஆனா இந்த ஃபோட்டோல நான் தாலிக் கட்டும் போது அவள் சிரிச்ச முகமாகத்தானே இருக்கா? அப்படின்னா அவளுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்தான்?’ என்று ஏதோ ஒன்று அவனுக்குப் புரிவதுபோல இருக்க, அருகில் இருந்த அவன் புகைப்படத்தைப் பார்த்தான்.
அவன் புகைப்படத்தைப் பார்க்க, அதில் ஏதோ ஈரமாக இருப்பதைப் பார்த்து, அதன் அருகில் வந்து நன்றாக உற்றுப் பார்க்க, அதில் முத்தம் கொடுத்ததற்கு அடையாளமாக லிப்ஸ்டிக்குடன் படிந்திருந்த முத்தக்கறை, அவன் புகைப்படத்தில் அவன் மாஸ்கின் மேல் இருந்தது. இதைப் பார்த்ததும் ஆதியின் கண்கள் பளிச்சென விரிந்தது. அவனுக்கு ஏதோ ஒன்று புரிவதுபோல இருக்க, ‘இந்த முத்தக்கறை இங்கே எப்படி வந்திருக்கும்? அதுவும் ஈரம் காயாம இருக்கு. அப்படின்னா இந்த ரூமுக்குள்ள இப்போ இருந்தது துர்கா மட்டும்தான். அப்போ, அவளுக்கு என்னைப் பிடித்துதான் இருக்கா? உண்மையாகவே? அதனாலதான் என் ஃபோட்டோவுக்கு முத்தம் கொடுத்திருக்காளா?’ என்று யோசித்தவாரே வந்து கட்டிலில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்தவன், அப்படியே யோசனையிலேயே இரண்டு நாட்களாக இருந்த களைப்பில் உறங்கிவிட்டான்.
சிறிது நேரம் அறைக்குள் அமைதியாக இருப்பதை உணர்ந்த துர்கா, பாத்ரூம் கதவை லேசாகத் திறந்து, ஆதி என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று எட்டிப் பார்க்க, அவன் பெட்டில் படுத்து, உட்கார்ந்த வண்ணம் தலை சாய்ந்து அப்படியே உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். வந்தவள் அவன் அருகில் வந்து அவன் மாஸ்க் அணியாத முகத்தை உற்றுப் பார்த்தாள். ‘எவ்வளவு அழகாக இருக்கிறது அவன் முகம்! ஆங்காங்கே சிவந்திருந்த கொப்பளங்களையும் தாண்டியும் அழகாக இருந்த அவன் முகத்தை ரசித்துப் பார்த்தவள், அவன் உதட்டைத் தொடாமல் கிள்ளுவதுபோல காற்றில் செய்து, தன் உதட்டால் அவன் உதட்டைக் கிள்ளிய தன் விரல்களுக்கு ‘உம்மா……’ என்று முத்தமிட, அவள் முத்தமிட்ட சத்தம் அமைதியாக இருந்த அந்த அறையில் நன்றாக எதிரொலிக்க, துர்கா செய்வதறியாமல் அப்படியே திகைத்துப்போய் நின்றாள்.
