Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 14

உன் ரகசிய ரசிகை நான் 14

by Layas Tamil Novel
1.1K views

EPISODE – 14

துர்காவிடம் சொல்லிவிட்டு அலுவலகம் சென்ற ஆதி, தன் காரைவிட்டு கீழே இறங்கியதும் அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்த அவனுடைய மேலாளர் குமார், ஆதி காரிலிருந்து இறங்கியதும் நேராக அவனிடம் ஓடிவந்தார். “சார்…” என்று ஏதோ கூற வர, அவரைப் பார்த்து, “எல்லாம் எனக்குத் தெரியும்” என்று அவரிடம் சொல்லிவிட்டு, நேராகத் தன் கேபினுக்குச் சென்றான் ஆதி.

கேபின் கதவைத் திறந்து உள்ளே சென்றவன், தன் அறையில் இருந்த முக்கியமான கோப்புகள் அனைத்தும் சிதறிக் கிடப்பதைக் கண்டான். அவற்றைச் சிதறடித்துவிட்டு, பேய்போல் அவன் அறையில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த சங்கவியைப் பார்த்ததும் ஆதிக்கு ஆத்திரமாக வந்தது.

தன் மேலாளரை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, அறைக்குள் வந்து கதவைச் சாத்திவிட்டு நேராகச் சங்கவியிடம் வந்தவன், “உன் மனசில் நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? திறந்திருக்கும் வீட்டுக்குள் ஏதோ ஒன்று வந்து நுழைந்ததுபோல், என்னுடைய அலுவலகத்திற்குள், அதுவும் என் கேபினில் வந்து இத்தனை அட்டகாசம் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.

அவன் தன்னை நாய் என்று சொல்லாமல் சொன்னதும், “ஆதி!” என்று கத்திக்கொண்டு எழுந்தவள், “என்ன சொன்னாய்? நான் எதுக்கு உன் அலுவலகத்திற்கு வந்தேன் என்று கேட்டாயா? எங்கள் நிறுவனத்துடனான திட்டத்தைத்தான் உங்களுடன் சேர்ந்து நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். நான் காலையில் இருந்து அதுசம்பந்தமான கோப்புகள், விவரங்கள் வேண்டும் என்று கேட்டால், உன் மேலாளர் உட்பட, அத்தனை பேரும், கதிர், விக்கி என்று யாருமே எடுத்துத்தர மாட்டேன்கிறார்கள். அதனால்தான் நானே எடுத்துக்கொள்ளலாம் என்று உன் அறைக்குள் வந்து தேடினால், இங்கேயும் இல்லை. அப்படி எதற்காக அதை ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?” என்று சங்கவி கேட்டாள்.

அவளை முறைத்துவிட்டுத் தன் நாற்காலியில் போய் அமர்ந்தவன், அதில் இருந்த லாக்கரைத் திறந்து, அவள் கேட்ட கோப்பை எடுத்து அவளிடம் தூக்கிப் போட்டான். அதை கையில் எடுத்துக்கொண்டு, “சரி, இதை முதலிலேயே கொடுத்திருந்தால் இவ்வளவு சேதாரம் வந்திருக்காது” என்று கூறிவிட்டு எழுந்த சங்கவி வெளியே செல்ல, அவளைச் சொடுக்கிட்டுக் கூப்பிட்ட ஆதி, “இனிமேல் இந்த அலுவலகத்திற்கு வரும் வேலையை வைத்துக்கொள்ளாதே. உன்னை யார் உள்ளே விட்டது? முதலில் நீ எதற்காக இங்கு வந்து, இப்பொழுது இந்தக் கோப்பிற்காக இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருக்கிறாய்? உங்களுடைய நிறுவனத்தின் விவரங்கள் எல்லாமே நாங்கள் உன் அப்பா கூடத்தான் வைத்திருக்கிறோம். உனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும், நான் ஏன் அந்தக் கோப்பை உன்னிடம் கொடுத்தேன் தெரியுமா? ‘அதையும் இதையும் காரணம் சொல்லிக்கொண்டு என் நிறுவனத்திற்குள் திரும்பவும் வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டுதான் இதைக் கொடுத்தேன்” என்று கூறினான்.

அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்த சங்கவி, “என்ன சொன்னாய்? எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லையா? என் அப்பா அவருடைய நிறுவனம் மற்றும் இந்த வணிகத் திட்டத்தின் எல்லாப் பொறுப்பையும் என் பெயரில் எழுதி வைத்துவிட்டார். என் அப்பா அவர் நிறுவன விஷயமாவும், இந்தத் திட்ட விஷயமாவும் உன்னிடம் எதுவுமே பேச மாட்டார். இந்த நிறுவனத்திற்கும் வர மாட்டார். எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் தான் கேட்டுச் செய்ய வேண்டும்” என்றாள் சங்கவி.

அவள் கூறியதைக் கேட்டதும் ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “என்ன?” என்று கேட்க, “ஏன், உன் அப்பா உன்னிடம் எதுவுமே சொல்லவில்லையா? என் அப்பா, உன் அப்பாவிடம் போன் செய்து நேற்று எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். இந்தத் திட்டம் முடியும் வரைக்கும் நான் தான் இந்தத் திட்டத்தின் எல்லா விவரங்களையும் கவனிக்கப் போகிறேன். இனிமேல் நீ எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட கேட்டுட்டு செய். உனக்கு நீயாக முடிவு எடுக்காதே” என்றாள் சங்கவி.

அதைக் கேட்டதும் கடுப்பான ஆதி, “என்ன ஓ… நீதான் இந்த வணிகத் திட்டத்தைக் கவனிக்கப் போகிறாயா?” என்று கூறியவன், தன் செல்போனை எடுத்து, தன் தந்தைக்கு அழைப்புச் செய்ய, “அப்பா, சங்கவி கூறிய விஷயத்தைச் சொல்லி, இதெல்லாம் உண்மையா?” என்று கேட்டான். “ஆமாம் ஆதி. நான்தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு கதிர் கிட்டயும், விக்கி கிட்டயும் சொல்லியிருந்தேன். நீயே ஏற்கனவே பயங்கர அழுத்தத்தில் கல்யாணம் பண்ணியிருக்கிறாய். உன்னை எதுவும் சொல்லி டென்ஷன் பண்ண வேண்டாம்னுதான் பார்த்தேன். ஆனா உனக்கு எப்படி இந்தச் செய்தி தெரிஞ்சுச்சு?” என்று கேட்டார். “அதை நீங்க கதிர் கிட்டயும், விக்கி கிட்டேயும் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. இனிமேல் என்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா? ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் என்கிட்ட கேட்காம முடிவு எடுக்க மாட்டீங்க நீங்க. ஆனா இந்த விஷயத்தை மட்டும் ஏன் என்கிட்ட கேட்காமலே முடிவெடுத்தீங்க?” என்று கேட்டான் ஆதி.

அவன் அப்படி கேட்டதும் அவனிடம் பதில் கூற முடியாமல் வெங்கடாசலம், “என்னை மன்னிச்சுடு ஆதி. நான் கேட்காம முடிவெடுத்தது தப்புதான். இருந்தாலும் சில விஷயங்களை உன்னிடம் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் சொல்லலை. எப்படி உனக்குத் தெரியத்தானே போகுது? பத்து நாள் கழித்து அலுவலகம் வந்துருவேன்னு சொல்லிட்டு நான் உன்கிட்ட இதைச் சொல்லாமல் விட்டுட்டேன். எதுவும் நினைத்துக்காதே” என்று அவர் வருத்தப்பட, அவர் குரலில் அவர் வருத்தப்படுவது தெரியவும், ஆதி அதற்கு மேல் எதுவும் கேட்காமல், “சரி பரவாயில்லை அப்பா” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

திரும்பிச் சங்கவியைப் பார்க்க, அவள் ஏளனமாக அவனைப் பார்த்துச் சிரிக்க, “என்ன ஆதி, உங்க வீட்ல எல்லாமே உன்னைக் கேட்டுதானே முடிவு எடுப்பாங்க? இந்த விஷயம் மட்டும் எப்படி உனக்குத் தெரியாம போயிடுச்சு?” என்று கிண்டல் செய்தவள், அவன் அருகில் வந்து, “அப்புறம் எப்படி இருக்கு உன் புதுப் பொண்டாட்டி?” என்று கேட்டாள். அவள் அப்படி கேட்டதும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த ஆதியைப் பார்த்து, “பைத்தியக்காரி அவள். உன்னைப்போய் கல்யாணம் பண்ணியிருக்கிறாள் பார்த்தேன். இப்படி முகம் முழுக்கத் தடிப்புத் தடிப்பாக, எத்தனை புண்ணும், கொப்புளமும் கூட இருக்கிற உன் முகத்தைப் பார்த்து எப்படித்தான் அவள் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாளோ தெரியல” என்று கூறிவிட்டு அருவருப்பாக இருப்பதுபோல தன் முகத்தை வைத்துக்கொண்டு, “சரி, அவள் எப்படியோ கல்யாணம் பண்ணிட்டாள். உன் சொத்துக்காகவும், உனக்கு இருக்கிற பணம், அந்தஸ்துக்காகவும் எப்படியோ உன்னையும் உங்க அம்மாவையும் மயக்கிக் கல்யாணம் பண்ணிட்டாள். அவள் மனசுல அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருந்திருந்தால், உங்க அம்மா அவளிடம், ‘ஆதியைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’ அப்படின்னு கேட்ட உடனே அவள் எப்படி உடனே ‘சரி’ன்னு சொல்லுவாள்? எல்லாம் திட்டம் தானே பைத்தியக்காரி” என்று திரும்பவும் கூறியவள், “என்னவோ உன்னை பிடிச்சு, உன்னைக் காதலிக்கிற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு இருந்து, கல்யாணம் பண்ணணும்னு நினைத்தாயே… இப்ப என்ன ஆச்சு? கடைசியில உன்னுடைய பணத்துக்காக உன்னைக் கல்யாணம் பண்ணித் தானே இப்போ உனக்கு மனைவியா வந்திருக்கிறாள்? இங்கே பாரு ஆதி, நீ வேணா நினைக்காதே. பணம், காசுக்கு ஆசைப்படாமல் மனசு மட்டும் பார்த்து கல்யாணம் பண்ற பெண்கள் இருக்காங்க. நீ இதெல்லாம் நம்பி உன் நேரத்தை ரொம்ப வீணடித்துவிட்டாய். அப்படி எல்லாம் யாருமே இந்தக் காலத்தில் கிடையாது. பணம், காசு என்பதுதான் இங்கு முக்கியமா இருக்கு. பாசம், காதல் அப்படிங்கறது ஒண்ணுமே கிடையாது. நீ இன்னுமும் அதை நம்பிட்டு இருந்தேன்னா, உன்னைப் போல ஒரு முட்டாள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது” என்று கூறிவிட்டு, “முட்டாள் ஆதி” என்று சத்தமாகச் சிரித்தவள், அவளிடம் திரும்பப் பேச முடியாமல் அமைதியாக நின்ற ஆதியை விட்டு வெளியே சென்றாள்.

அவள் துர்காவைப் பற்றிக் கூறியதும் முதலில் ஏனோ அவனுக்குக் கோபம் வந்தது. அவளைப் பற்றிப் பேச அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதுபோல, ‘தனக்கு உரிமையானவள் துர்கா’ என்ற எண்ணம் அவன் மனதில் சிறிது தோன்றியது. அதன் பிறகு அவள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் உண்மைதான் என்பதுபோல அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. தன்னிடம் இருக்கும் அந்தஸ்துக்கும், பணத்திற்காகவும்தான் துர்கா தன்னைத் திருமணம் செய்திருக்கிறாள். அதனால்தான், என் அம்மா அவளிடம் ஒருமுறை கேட்டதும் ‘சரி’ என்று திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டாள். இத்தனை வருடம் என்னுடன் இருக்கிறாள், அனைத்து விஷயமும் அவளுக்குத் தெரியும். அதனால்தான் ‘வேறு வழியே இல்லை. எனக்குத் திருமணமே ஆகாது’ என்று நினைத்துவிட்டாள். அப்படி நினைத்துதான் என்னைக் கல்யாணம் செய்துகொண்டாள் என்று தனக்குத்தானே நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதி.

“இன்றைக்கு என்ன ஆனாலும் சரி, துர்கா ஊருக்குத்தான் அவள் என் மனைவி. ஆனால் அவள் எப்போதும் என் மனதிற்குள்ளும், என் வாழ்க்கைக்குள்ளும் நுழையவே முடியாது” என்று மனதில் உறுதியாக முடிவெடுத்துவிட்டான். அவனுக்குத்தான் தெரியவில்லை, அவள் கழுத்தில் இவன் எப்போது தாலி கட்டினானோ, அன்றே இவன் வாழ்க்கைக்குள் அவள் வந்துவிட்டாள் என்று. ஆனால் அவன் மனதிற்குள் வரத் துர்கா அச்சாரம் போட்டுவிட்டாள், அதுதான் அவனுக்குத் தெரியவில்லை. அவன் மனதில் அவள் இருக்கிறாள் என்று அவன் உணரும்போது, அவன் மனநிலை எந்த நிலையில் இருக்கும் என்று அவனே அறியாதது.

கதிரும், விக்கியும் இரவு விருந்திற்காக ஒரு பிரபல ஹோட்டலுக்குச் சென்றிருந்தனர். அங்குச் சென்று கதிரின் பிற நண்பர்களையும் வரச் சொல்லி இருந்தனர். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து விருந்து அமோகமாக ஆரம்பிக்க, கதிர் மட்டும் சோகத்தில் அமர்ந்து ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

சோகத்தில் அமர்ந்தவன், நாலு ரவுண்டுக்கு மேல் ட்ரிங்க்ஸ் அருந்த, அவனை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டிருந்த விக்கி அவனிடம் வந்து, “டேய் கதிர், என்னடா ஆச்சு? ஏன் இன்னைக்கு இவ்வளவு சோகமா இருக்க? அந்தச் சங்கவியை நாம் தான் லெஃப்ட், ரைட் வெளுத்து வாங்கிட்டோமே, அதுக்கப்புறமும் ஏன் ஒரு மாதிரி சோர்வாகவே இருக்க?” என்று கேட்டான். “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை விக்கி. நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடு” என்று கூறினான். நண்பர்களைப் பார்த்துவிட்டு, “டேய், வாங்கடா, நாம் போய் விருந்தை அனுபவிக்கலாம்” என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு, நடனம் நடந்துகொண்டிருந்த ஓர் இடத்திற்குச் சென்று நடனமாடிக்கொண்டிருந்தார்கள். விக்கி வேகமாக எழுந்து வந்தவன், கதிரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய், ஒரு நாற்காலியில் அமர வைத்தவன், “ஒழுங்காகச் சொல்லிவிடு. ஏன் உன் முகமே சரியில்லை? என்னன்னு சொல்லப்போறியா, இல்லை நடப்பதே வேற?” என்று அவன் அவனை உரிமையாகக் கேட்க, “நான் உன்கிட்ட சொன்னா நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டியே. ஏன்டா, போதையில் விக்கியைப் பார்த்துக் கதிர், “என்னைப்பார்த்து உனக்கு எப்படித் தெரியுது? இத்தனை வருஷம் நான் உன்னுடன் இருக்கேன். உன்னையும், உன் அண்ணனையும் தவிர்த்து எனக்கு வேறு யாரும் இல்லை. யாராவது என் கழுத்தில் கத்தி வைத்து, ‘உங்க ரெண்டு பேர் பற்றிச் சொல்லு, இல்லை என்றால் கழுத்தை அறுத்துவிடுவேன்’ என்று சொன்னாலும், உங்களைப் பற்றி என் வாயில் இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது. நான் வெளியே விடமாட்டேன்” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்த கதிர், விக்கியைக் கட்டிக்கொண்டு, “மச்சான்” என்று கூறி அழுதான். “டேய், என்னடா ஆச்சு? இவ்வளவு நேரம் சோகமாக இருந்தேன்னு பார்த்தேன், இப்ப எதுக்குடா அழுக ஆரம்பிக்கிற?” என்று கேட்க, “என்ன ஒருத்தி அடிச்சுட்டாள் மச்சான்” என்று கூறினான் கதிர்.

“என்னடா சொல்ற? உன்னை ஒருத்தி அடிச்சிட்டாளா? யாருடா? அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் ஃபிரெண்ட் மேல் கையை வைத்திருப்பா? யாருடா மச்சான் அவள்?” என்று விக்கியும் சற்றுப் போதையில் பேச, “அவள் வேறு யாருமில்லடா. நம்ம துர்கா இருக்காளே? ஆமா, நம்ம துர்கா… அவளுக்கென்னடா? என்னை அடித்தது நம்ம துர்காவோட தங்கச்சி கீ…தான்டா…” என்று கூறிவிட்டு மீண்டும் ஓவென அழுதான்.

“என்னடா சொல்ற? கீ…யா?” என்று புரியாமல் விக்கி கேட்க, “ஆமாடா. கீர்த்திகாவைத்தான் நான் சுருக்கி ‘கீ’ என்று சொன்னேன்” என்று கூறிவிட்டு மறுபடியும் குடிக்க ஆரம்பித்தான் கதிர்.

“அடேய், அவ உன்னை அடிச்சான்னு அழுகிறாய். ஆனா அவளுக்குச் செல்லப் பெயர் வேற வெச்சுச் சொல்றாய். என்னடா நடக்குது இங்க?” என்று புரியாமல் விக்கி கேட்க, “ஆமாடா, அவளை நான் காதலிக்கிறேண்டா… மச்சான்” என்று கூறிவிட்டு மறுபடியும் ஒரு கிளாஸ் விஸ்கியைக் குடித்தவன், “நீயே சொல்லுடா மச்சான். நான் காதலிக்கிற பொண்ணுக்கு முத்தம் கொடுக்கிறது தப்பா?” என்று கதிர் கேட்க, “ம்ஹும், நாம் காதலிக்கிற பொண்ணுக்கு முத்தம் கொடுத்தது தப்பில்லை” என்றான்.

“அதுதான் நான் என்ன. என் காதலினு சொல்லு உரிமை கட்டி அணைச்சு முத்தம் கொடுத்தேன். அதுவும் உதட்டில் இலேசா… இம்மாம் தண்டு கொடுத்தேன். என்னவோ நான் உதட்டு முத்தம் பண்ணுன மாதிரி கோவிச்சுட்டு என்னை அறைஞ்சுட்டாள்டா மச்சான்” என்று மறுபடியும் அழுக ஆரம்பிக்க, “டேய், அழாதேடா…” என்று அவனைச் சமாதானம் செய்த விக்கி, “ஏண்டா, இருவரும் காதலிக்கிறீங்க. அவளுக்கு முத்தம் கொடுத்தால் பிடிக்குமா, பிடிக்காதான்னு தெரிஞ்சுட்டு கொடுக்க மாட்டியா?” என்று விக்கி கேட்க, “அதுதான் மச்சான். அவளுக்கு என்னைப் பிடிக்கும்னு நினைச்சிட்டு நான் அவளுக்கு முத்தம் கொடுத்துட்டேண்டா. அதுக்கு அவள் என்னை அடிச்சது மட்டும் இல்லாம, என்னை ‘பெண்களுக்குப் பின்னாடி சுத்துபவன்’னு சொல்லிட்டு அவமானப்படுத்திட்டாள்டா” என்று கதிர் கூறினான்.

அதுவரை இருவரும் காதலிக்கிறார்கள் என்று நினைத்த விக்கிக்கு அதிர்ச்சியாக, “என்னடா சொல்ற? நீ மட்டும் தான் கீர்த்தியைக் காதலிக்கிறியா? அவள் உன்னைக் காதலிக்கலையா?” என்று கேட்க, “ஆமாம்டா” என்று தலையை போதையில் ஆட்டினான்.

“அடப்பாவி! அங்கே என்னடான்னா ஒருத்தன், தன் பக்கத்திலேயே அவனை ரொம்ப வருடமாக காதலித்துக்கொண்டிருக்கிற பெண்ணைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் அவளுக்குத் தாலியைக் கட்டியிருக்கிறான். இங்கே என்னடான்னா அவன் தம்பி, தன் அண்ணன் பொண்டாட்டியோட தங்கச்சிக்கு, அவள் இவனைக் காதலிக்கிறாளா, இல்லையான்னு எதுவுமே தெரியாமல் அவளுக்கு முத்தம் கொடுத்திருக்கிறான். அதுவும் உதட்டில் முத்தம்… என்னமோ போங்கடா…” என்று தலையைத் தொங்கப்போட்டவன், “எனக்கு மட்டும் ஏன்டா எதுவுமே சரியாக மாட்டேங்குது? நான் மட்டும் தனியாகச் சுத்திக்கொண்டு இருக்கேன். இவனுங்க ரெண்டு பேரும் இப்படி இருக்கானுங்க” என்று புலம்பிக்கொண்டிருக்க, அவன் தோளில் ஒரு கை பலமாக அவனை அடிக்க, “யாருடா அது? என்னை அடிக்கிறது?” என்று கூறி கோபத்தில் நிமிர்ந்து பார்க்க, அவன் எதிரே ஆதி கோபமாக நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் “ஆத்தி…! இவன் எப்படி இங்கே வந்தான்? இவனை விட்டுட்டு நாங்க இங்க குடிச்சுட்டு இருக்கிறது தெரிஞ்சிருச்சே. இனி என்ன பண்ணப் போறானோ?” என்று ஜெர்க் ஆன விக்கி, ஆதியைப் பார்த்து, “டேய் ஆதி, வாடா. எப்படி இருக்க? ஆமா, நீ துர்கா வீட்லதானே இருந்த? இங்க எங்கே?” என்று கேட்க, “ஏன், நான் துர்கா வீட்டில் இருந்தால் அங்கேதான் இருக்கணுமா? இங்கே வரக்கூடாதா?” என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டான் ஆதி. “நான் அலுவலகத்திலிருந்து வரேன்” என்று கூற, “என்னடா சொல்ற? அலுவலகம் போனாயா நீ? அங்கே எதுக்குடா போன?” என்று கேட்க, “உங்களை” என்று கூறி, இப்போது போதையில் இருக்கும் இவர்களிடம் எதுவும் பேசி பிரயோஜனம் இல்லை என்று அமர்ந்தவன், “ஏண்டா, என்கிட்ட சொல்லாம நீங்க ரெண்டு பேரும் மட்டும் இங்க வந்தீங்க?” என்று கேட்டான். “இல்லைடா, உனக்கு இப்பதான் கல்யாணம் ஆகியிருக்கு. நீ உன் மனைவியுடன் அவர்கள் வீட்டில் இருக்கிறாய். அதுவும் அப்படி. நாங்க விருந்து பண்ணப் போறோம்னு சொல்லி உன்னை அங்கிருந்து கூப்பிட்டு வந்தா நல்லா இருக்காது இல்லையா? அதனாலதான் நானும் கதிர் மட்டும் வந்து உன்கிட்ட எதுவுமே சொல்லாமல் வந்தோம்” என்று கூறினான் விக்கி.

“ஓஹோ, எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு அப்படின்னா என்னைக் கழட்டிவிட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் மட்டும் இந்த வேலையைப் பார்க்க வந்திருவீங்களா? எப்போது குடிக்கப் போனாலும் நாம் மூன்று பேரும் ஒன்றாகப் போவோம்னுதானேடா? ஆனா என்னை விட்டுட்டு இப்போ நீங்க மட்டும் வந்து குடிக்கிறது நல்லா இருக்கா?” என்று கூறிவிட்டு, “வேறு” என்று கூறி அவனுக்குத் தேவையான ட்ரிங்ஸை ஆர்டர் செய்தான்.

என்ன நண்பர்களே, பார்க்கிறீர்கள்? “நம்ம ஹீரோ ரொம்ப நல்லவர்”னு நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அவர் ரொம்ப ரொம்ப நல்லவர்தான் நண்பர்களே. ஆனால் அவரிடம் இருக்கும் ஒரே ஒரு கெட்ட பழக்கம் ட்ரிங்க்ஸ் சாப்பிடுவது மட்டும்தான். அதுவும் தினமும் சாப்பிட மாட்டார். ஆனால் ட்ரிங்க்ஸ் சாப்பிட ஆரம்பித்தால், அவரைத் தடுப்பது ரொம்பக் கஷ்டம். குடிகாரனாகவே மாறிவிடுவார் நம்ம ஆதி. அவரிடம் இந்த பழக்கம் நம்ம விக்கிக்கும் கதிக்கும் தவிர வேறு யாருக்குமே தெரியாது. ஏன், இத்தனை வருடமாக உடன் இருக்கிற நம்ம துர்காவுக்குக்கூடத் தெரியாது. அவ்வளவு ரகசியமாகப் பராமரித்து வருகிறார்கள்.

ஆதிக்கு ஆர்டர் பண்ணிய ட்ரிங்க்ஸ் வந்ததும் குடிக்க ஆரம்பித்தான். அவன் நிற்காமல் கோபமாகக் குடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்த விக்கி, “டேய், அளவா குடிடா. நீ இருக்கிறது உன் மாமனார் வீட்டில். வந்த அன்றைக்கு குடித்துவிட்டு அங்க போனன்னு வை, அவங்க எல்லாம் உன்னைப்பற்றி என்ன நினைப்பாங்க தெரியுமா? ‘தெரியாமல் குடிகாரப் பையனுக்கு என் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டோமே’ன்னு யோசிக்க மாட்டாங்களா? போதும்டா, அளவாகக் குடி” என்று கூறி அவன் கையில் இருந்த கிளாசை வாங்கி கீழே வைத்தவன், “இப்ப எதுக்குடா நீ இப்படி நான்-ஸ்டாப்பாகக் குடிக்கிறாய்? நீ சந்தோஷமாக இருக்கணும் இல்லைன்னா ரொம்பக் கோபமாக இருந்தா தானே குடிப்பாய்? எதுக்கு இப்படி குடிக்கிறாய்? சந்தோஷமாக இருக்கியா, இல்ல கோபமாக இருக்கியா?” என்று கேட்டான். “உன்னைப் பார்த்தால் சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரியலை. அப்போ கண்டிப்பா கோபமாகத்தான் இருப்பாய். அப்படி என்ன ஆச்சு, நீ கோபப்படுற அளவுக்கு?” என்று கேட்டான் விக்கி.

“என்ன ஆச்சா? ஏன்டா, எங்கப்பா தான் என்கிட்ட இருந்து அந்தச் சங்கவியைப் பற்றி மறைத்துவிட்டார் என்றால், நீங்கள் இருவரும் என்கிட்ட எதுவுமே சொல்லாம விட்டுட்டீங்க. அவள் காலையிலிருந்து நம்ம அலுவலகத்தில் வந்துட்டு எல்லாரையும் ரொம்பப் படுத்திட்டு இருந்தாளாமே? அவள் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள், அதுவும் நம்ம பார்ட்னராக வந்திருக்கிறாள் அப்படின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல. எப்படி எனக்குத் தெரியாமலே போகப்போகுது இந்த விஷயம்? பத்து நாள் கழித்து சொன்னா என்ன, இப்பவே சொன்னா என்ன? நான் அலுவலகத்திற்குப் போனால் அவள் அவ்வளவு தெனாவெட்டாக என்கிட்டயே அப்படிப் பேசிட்டு போறாள்” என்று ஆதி பேசினான்.

“என்னடா, நீ அலுவலகத்திற்கு அதுக்குத்தான் போனாயா? சங்கவியைப் பார்த்தாயா? என்னடா சொன்னாள் அவள்?” என்று விக்கி கேட்க, ஆதி சங்கவியிடம் அலுவலகத்தில் நடந்த உரையாடல் அனைத்தையும் சொன்னான். ஆனால், திருமணத்தைப் பற்றியும் துர்காவைப் பற்றியும் மட்டும் உஷாராக யாரிடமும் சொல்லவில்லை. துர்காவைப் பற்றிச் சங்கவி கூறியது சரியா தவறா என்று எண்ணத்திலேயே இன்னும் மனதில் குழப்பத்தோடு இருந்தான் ஆதி. அதனால் தனக்குத் தெளிவில்லாத போது அதை எதற்கு வெளியில் சொல்ல வேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டான்.

அவன் கூறியதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட கதிர், “சரி விடுடா, அவளைப் பற்றித் தெரியும் நம்மளுக்கு முதலிலேயே. அவள் அந்த ஆட்டம் ஆடுவாள். இப்ப சொல்லவா வேணும்? இந்தத் திட்டம் முடியும் வரைக்கும் பல்லைக் கடிச்சுட்டு கொஞ்சம் பொறுமையாக இரு. அதுவும் நம்ம அப்பா வாக்கு கொடுத்துட்டாரங்கறதுக்காகத்தான். இல்லன்னா அவளை நானே ஒரு வழி பண்ணி இருப்பேன்” என்றான் விக்கி.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அரைப் போதையில் கேட்டுக் கொண்டிருந்த கதிர், “டேய், அவளை அப்படியேவாடா விட்டீங்க? அவள் கன்னத்தில் விக்கி அறைந்த மாதிரி நீயும் நாலு அறை விட்டுக் கொள்ளலாம் இல்ல? அவளை வெளியே தட்டி அனுப்பி இருக்கலாம் இல்ல ஆதி?” என்று குளறிக்கொண்டு கேட்டான் கதிர்.

“சரி விடுடா மச்சான், பார்த்துக்கலாம். அவள் திரும்பவும் நம்மளிடம் மாட்டாமலா போய்விடுவாள்? அன்றைக்கு இருக்கிறது அவளுக்கு. திரும்பவும் ஏதோ ஒரு விஷயம் கிடைக்கட்டும். அதைச் சாக்காக வைத்து அவளை நான் என்ன பாடு படுத்துகிறேன் என்று பார். சரி வாங்க நம்ம கிளம்பலாம். இரவு ரொம்பத் தாமதமாகப் போகிறது” என்று விக்கி கூற, “டேய், நீங்க எல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு. நான் இப்பதான் வந்திருக்கேன். இப்பவே கிளம்பி என்னடா பண்ணப் போறீங்க? இருங்க போலாம்” என்று ஆதி சொல்ல, “டேய், நாங்க எப்ப வேணா வீட்டுக்குப் போலாம்டா. ஆனா நீ இப்போ புதிதாகக் கல்யாணம் ஆனவன். அதுவும் உன் மாமனார் வீட்டில் இருக்கே. மறுவீட்டுக்கு போயிருக்க. அப்படிப் போற இடத்துல, நீ வந்த அன்னைக்கு ராத்திரி வெளியில் போய் குடிச்சுட்டு வந்து அவங்க வீட்டுக்கு போறேன்னு வைத்துக்கொள், அங்கே என்ன நினைப்பாங்க? நீ குடித்த வரைக்கும் போதும். இதுக்கு மேல குடிச்சா உனக்கு போதை ஆகிடும். இதை ஏன் எப்படியாவது சமாளிச்சுட்டு உள்ளே போய்க்கலாம். பேசாம கிளம்பி வா” என்று வலுக்கட்டாயமாக ஆதியை அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

விக்கியும், கதிரும் ஒரு காரிலும், தங்கள் டிரைவரை ஆதியின் காருக்கு அனுப்பிவிட்டு, அவனைப் பத்திரமாக அவர்கள் வீட்டில் சேர்க்கும்படி அனுப்பிவிட்டு, இருவரும் கிளம்பினர்.

ஆதி துர்காவின் வீட்டிற்கு வரும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது. ஹாலில் துர்காவும், கீர்த்திகாவும் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்க, அவளுடைய பெற்றோர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். லேசாகத் தள்ளாடியபடி நடந்து வந்த ஆதி, ஹாலில் அமர்ந்திருந்த துர்காவையும், கீர்த்தியையும் பார்த்தவன் எதுவும் கூறாமல் அமைதியாகவே வர, அவனைப் பார்த்ததுமே துர்காவுக்கு அவன் சரியாக இல்லை என்பது மட்டும் புரிந்தது. உடனே அவள், “கீர்த்தி, நீ உள்ளே போய் படு. அவர் வந்துவிட்டார் பார். நான் அவருக்குச் சாப்பிட வைத்துவிட்டு, நான் தூங்குகிறேன்” என்று கூற, “இவ்வளவு நேரம் ‘என்ன, போகாதேடி, தூங்கப் போகாதே. எனக்குத் தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு. கூட இருந்து தூக்கம் வந்தால் என்னைப் பிடித்து உட்கார வைத்துவிட்டு, இப்பொழுது மாமா வந்ததும் என்னைக் கழட்டி விடுகிறாயா?’ என்ஜாய்!” என்று கூறிச் சிரித்துக்கொண்டே கீர்த்தி எழுந்து அவள் அறைக்குச் சென்றுவிட்டாள்.

ஆதி லேசாகத் தள்ளாடியபடி துர்காவிடம் வர, தன் பக்கத்தில் அவன் வந்ததுமே அவனிடமிருந்து ஒரு வாடை வீச, அவன் குடித்திருக்கிறான் என்பதை உணர்ந்த துர்காவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “ஆதி, வா ஆதி, சாப்பிடலாமா?” என்று கூறி அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கப் போக, “இல்லை வேண்டாம். நான் வெளியில் சாப்பிட்டு வந்துட்டேன். என் நண்பர்களைப் பார்க்கப் போயிருந்தேன்” என்று கூறிவிட்டு, “அறை எங்கே இருக்கு? நான் போய் அங்கே புத்துணர்ச்சி பெற வேண்டும்” என்று கூற, அவள் தன் அறையைக் காட்ட, “முன்” என்று தலையாட்டிவிட்டு, அவள் அறைக்குச் சென்றான் ஆதி.

அவன் தனக்குச் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, துர்கா அறைக்குச் சென்றதும், வாசல் கதவைச் சாத்திவிட்டு, லைட்டை அணைத்துவிட்டு, துர்கா அவன் பின்னே சென்றாள். உள்ளே வந்ததும் அவனுக்குத் தேவையான துணியையும், துண்டையும் எடுத்துக்கொடுத்து அவனைப் புத்துணர்ச்சி பெற வரச் சொல்லிவிட்டு, அவள் வந்து கட்டிலில் படுத்தவள் களைப்பில் அப்படியே தூங்கிவிட்டாள்.

புத்துணர்ச்சி பெற்றுவிட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தவன், அந்த அறையைச் சுற்றிப் பார்க்க, இப்போதுதான் அவனுக்கு லேசாக நினைவு வந்ததாக, அவன் துர்கா வீட்டில் இருப்பது ஞாபகம் வந்தது. அந்த அறையில் துர்காவை அவன் கண்கள் தேடியது.

துர்கா கட்டிலில் படுத்து உறங்கிக்கொண்டிருக்க, அவள் அருகில் வந்து குனிந்து அவள் முகத்தைப் பார்த்தவன், மாலையில் சங்கவி அவனிடம் கூறியதெல்லாம் நினைவுக்கு வர, அவளைப் பார்க்கப் பிடிக்காமல் தன் தலையைக் கோபத்தில் திருப்பிக்கொண்டான் ஆதி.

‘இவள் என்னுடைய பணத்திற்காகத்தானே என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டாள்? இவளை ஏன் நான் இப்படிப் பார்க்கணும்? நான் பார்க்க மாட்டேன். காலையில் இவள் எழுந்ததும், இந்தக் கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டிவிட்டுதான் என் பணத்திற்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு என் அருகில் யாரும் இருக்கக் கூடாது’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

காலையில் எழுந்ததும் துர்காவிடம் பேசி இந்தக் கல்யாணத்துக்குச் சீக்கிரமே ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தவன், சென்று கட்டிலின் மறுபக்கம் படுத்தவன், போதையிலும், களைப்பிலும் தூங்கிவிட்டான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured