EPISODE 51
ஆதி, துர்காவிற்கும், கீர்த்திகாவிற்கும் சேலைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு, கீர்த்திகாவிடம் துர்காவுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள, துர்காவை இம்ப்ரெஸ் பண்ண அவளிடம் ஐடியா கேட்டான்.
கீர்த்திகாவும் அவனுக்கு உதவுவதாக வாக்கு கொடுத்தவள், துர்காவுக்குத் தெரியாமல் அவள் டைரியை எடுத்து ஆதியைப் படிக்கச் சொல்லி அவனுக்கு ஐடியா கொடுத்தாள்.
இன்று எப்படியாவது துர்காவின் டைரியைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்ட ஆதி, அனைவரும் வர அவர்களுடன் எழுந்து சென்றான்.
துர்கா கதிருடன் இவர்கள் இருக்கும் செக்ஷனுக்கு வர, அவர்களைப் பார்த்ததும், “அக்கா, மாமா சேலை எடுத்து கொடுத்தார்” என்றாள்.
அவளை ஆச்சர்யமாகப் பார்த்த கீர்த்து, “யாருக்கு?” என்று பொதுவாகவும், “எனக்கும் எடுத்து இருக்கிறாரா?” என்ற ஆவலுடனும் கேட்டாள். துர்கா சிரித்தாள்.
கீர்த்திகா “நம் இருவருக்கும்” என்று சொல்ல வர, அதற்குள் ஆதி கீர்த்திகாவிடம் சொல்ல வேண்டாம் என்று கண் ஜாடை செய்துவிட, கீர்த்திகா துர்காவிடம், “எனக்குத்தான் அக்கா… மாமா எடுத்து கொடுத்தார்” என்றாள்.
“ஓ… உனக்கு மட்டும் எடுத்து கொடுத்தானா ஆதி?” என்று மனதில் நினைத்தவள், “சரி” என்று மட்டும் தலையை ஆட்டினாள்.
கீர்த்திகா நிலானியைத் தனியே விட்டுவிட்டு, ஆதியுடன் சேலைகள் எடுத்துக்கொண்டு இருக்க, இதுதான் சந்தர்ப்பம் என்று விக்கி நிலானியின் அருகில் வந்தவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தன்னை குரு குருவென பார்ப்பது நிலானிக்கு சங்கடமாக இருக்க, பொறுக்க முடியாமல் அவனிடம் திரும்பி, “ஹலோ… இப்போ எதுக்கு என்னை இப்படி பார்த்துட்டு இருக்கீங்க?” என்றாள் கோபமாக.
“அப்போ நான் இவ்ளோ நேரம் உன்னை சைட் அடிச்சது உனக்கு தெரியும்; ஆனாலும் தெரியாத மாதிரியே நின்னுட்டு இருக்கே, அப்படித்தானே?” என்றான் விக்கி.
“அய்யய்யோ…. கண்டு பிடிச்சுட்டானே” என்று நினைத்த நிலானி, “சரி சமாளிப்போம்” என்று தனக்குத்தானே சமாதானம் செய்தவள், “பக்கத்துல ஒருத்தர் வந்து நின்னுட்டு என்னையே பார்க்குறது தெரியாம இருக்க முடியுமா? அதான், ‘என்னைத்தான் பார்க்குறாங்களா?’ன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டு கேட்டேன்” என்றாள் நிலானி.
“நம்ம ஆள் பயங்கர உஷாராதான் இருக்கிறாள்” என்று நினைத்த விக்கி. “சரி… சரி. ஏதோ காரணம் சொல்ற, பரவாயில்லை. டிரெஸ் செலக்ட் பண்ணிட்டியா?” என்றான்.
“ஓ…. எடுத்துட்டேனே. கீர்த்திகாவுக்காக வெயிட். அது ‘ஓகே’ சொல்லிட்டான்னா, நான் அதைக் கன்ஃபார்ம் பண்ணி விடுவேன்” என்றாள்.
“கீர்த்திகா வந்து சொன்னால்தான் நீ செலக்ட் பண்ணுவியா? உனக்கு என்ன வேணுமோ நீயே செலக்ட் பண்ண மாட்டியா? இல்லை, உனக்கு செலக்ட் பண்ணத் தெரியாதா?” என்றான் விக்கி.
அவன் அப்படி கேட்டதும், அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த நிலானியின் முகம் சுருங்கிவிட்டது.
“ஓய்… நிலாக்குட்டி, என்ன ஆச்சு உனக்கு? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா? நான் சும்மா உன்னைக் கலாய்க்கத்தான் சொன்னேன்” என்றான்.
“நீங்க தப்பா எல்லாம் எதுவும் சொல்லலை. நான் கீர்த்துவை மீட் பண்றதுக்கு முன்னவரை, எனக்கு வேணும் என்பதை நானே எடுத்துப்பேன். என் அக்காவுக்கு என் மேல் கொள்ளைப் பாசம். ஆனா, என் மாமாவுக்குப் பயந்துகிட்டே எனக்கு எதுவும் செய்ய மாட்டா… செய்ய ரொம்பப் பயப்படுவா. அதனால் நான் எப்பவும் யாருக்கும் இடைஞ்சலா இருக்கக் கூடாதுன்னு, எதுவும் யார்கிட்டயும் கேட்க மாட்டேன். எனக்கு வேணும்கிறதை நானே பாத்துப்பேன். ஆனா, கீர்த்து எனக்கு ஃப்ரெண்ட் ஆன பிறகு, அவ எனக்கு எது வேண்டும் என்றாலும் அவளே செலக்ட் பண்ணித் தருவா, அதான் கீர்த்துக்காக வெயிட் பண்றேன்” என்று விக்கியிடம் அவன் கேட்டதும் தன்னிடம் உள்ளதை அப்படியே சொல்லி விட்டாள். பின் ஏன் விக்கி கேட்டதும் எல்லாவற்றையும் சொல்கிறோம் என்று தோன்றியது நிலானிக்கு.
நிலானி கூறியதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட விக்கி, “சரி, இனிமேல் உனக்கு யாரும் இல்லை என்று நினைக்காதே. உனக்கு எந்த நேரத்திலும் என்ன வேண்டும் என்றாலும், நான் இருக்கிறேன், என்னைக் கேள்” என்றான்.
அவன் இப்படி சொன்னதும் நிலானியின் கண்களில் கண்ணீர் துளிர்த்து விட, அதை அவனுக்குத் தெரியாமல் துடைத்தவள், பின் அவனிடம், “நான் ஏன் உங்ககிட்ட கேட்கணும்? நீங்க யாரு எனக்கு?” என்றாள்.
“நான் யாரா…. நீதான் என்னோட பொண்டாட்டி ஆகப்போறவ. சோ… என்னைத்தான் நீ கேட்கணும். இனிமேல் யார்கிட்டயும் நீ கேட்கக் கூடாது” என்றான் ஸ்ட்ரிக்ட்டாக.
அவன் இவ்வாறு மிரட்டுவது போலச் சொல்லவும், நிலானி ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், “என்ன சொன்னீங்க? நான் உங்களுக்குப் பொண்டாட்டி ஆகப் போறேன்னு யார் சொன்னது உங்களுக்கு? இப்படி எல்லாம் பேசக் கூடாதுனு நேத்தே சொன்னேனா இல்லையா உங்ககிட்ட?” என்றால் நிலானி.
“நானும் பேசக் கூடாதுனுதான் பார்த்தேன், ஆனால் உன்கிட்ட உரிமை எடுத்துக்காம என்னால இருக்க முடியலை. உன்னை இப்பவே என் கூட வெச்சு பார்த்துக்கணும்னு தோணுது. உன்னோட ஆசை எல்லாம் கேட்டு கேட்டு செய்யணும்னு எனக்கு தோணுது. நான் என்ன செய்வேன்?” என்றான் விக்கி.
விக்கியின் இந்த அதிரடியாலும், அன்பான பதிலாலும் அவனிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்த நிலானியைப் பார்த்து சிரித்தவன்.
“சரி வா, நான் உனக்கு டிரெஸ் செலக்ட் பண்ண ஹெல்ப் பண்றேன்” என்று கூறி அவள் அருகில் செல்ல, “இல்லை, ஒன்றும் வேண்டாம். நான் கீர்த்திகா வந்ததுக்கு அப்புறமே டிரெஸ் செலக்ட் பண்றேன்” என்று நிலானி சொல்ல.
“நான் தான் சொல்றேன் இல்ல…. நான் சொன்னா கேட்க மாட்டியா?” என்று கூறியவன், அவளை சட்டை செய்யாமல் நிலானி தேர்ந்தெடுத்து வைத்த ஆடைகளில் இருந்து அவளுக்குப் பொருத்தமாக இருக்கும் ஆடைகளாகப் பார்த்து எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அது போதாது என்று வேறு சில ஆடைகளையும் எடுத்து கொடுக்க, “இதெல்லாம் எதுக்கு?? இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு இதுவே போதும்” என்று தான் கையில் இருக்கும் ஆடையைக் காட்டி அவனிடம் சொன்னாள்.
அவள் கையில் இருந்த ஆடைகளைப் பார்த்து, “இது நீ உனக்காக செலக்ட் பண்ணது. என் கையில் இருக்கிற இந்த டிரெஸ் எல்லாம் நான் உனக்காக செலக்ட் பண்ணது. ‘இது வேண்டாம்’ என்று சொல்லாமல் மாமா கொடுக்கிறதை வாங்கி போட்டுக்கனும் ஏன் நிலாக்குட்டி…. ஓகேவா….” என்று விக்கி அவளைப் பார்த்து சொல்ல.
“இங்க பாருங்க, நீங்க கீர்த்திகாவுடைய அண்ணா அப்படிங்கறனால தான் உங்ககிட்ட சண்டை போடாம நான் பொறுமையா போய்க்கொண்டு இருக்கிறேன். சும்மா என்ன ‘நிலாக்குட்டி’ன்னு கூப்பிடாதீங்க. உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது?” என்று அவனைப் பார்த்து முறைத்தவள்.
“எனக்கு நீங்க வாங்கி கொடுத்த டிரெஸ் எல்லாம் ஒன்னும் வேண்டாம். என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் டிரெஸ் எடுத்துட்டேன். உனக்கு யாரோட அக்கறையும் தேவை இல்லை” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
அவள் தான் எடுத்துக் கொடுத்த ஆடையை வாங்க மறுத்துவிட்டுச் சென்றதும் விக்கிக்கு முகம் சுருங்கிப் போய்விட, அப்போது அவன் அருகில் வந்த கணேஷ், “என்ன விக்கி, நீ எடுத்துக் கொடுத்த டிரெஸ் நிலானி வேண்டாம்னு சொல்லிட்டாளா? நான் எல்லாத்தையும் தூரத்துல இருந்து பார்த்துட்டுத்தான் இருந்தேன்” என்று கேட்க.
“ஆமா பிள்ளையாரப்பா! எப்படியாவது என் ஆள் இந்த டிரெஸ் வாங்கிக்க வையேன், ப்ளீஸ்!” என்று கணேஷிடம் கெஞ்ச, “சரி, பொறு பொறு… அந்த டிரெஸ் எல்லாத்தையும் கொடு நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு, விக்கியின் கையில் இருந்து ஆடைகளை வாங்கிக்கொண்டு கணேஷ் வேகமாக நிலானியின் அருகில் சென்று, “இந்தா, இதையும் சேர்த்து பில் போடு” என்று சொன்னான்.
“டேய், இதெல்லாம் அவரு எடுத்தது. அதை ஏண்டா நீ வாங்கிட்டு வந்த? நானே அவர்கிட்ட வேண்டாம்னு சொல்லிட்டுத்தானே வந்தேன். நீ… ஏன் அவர்கிட்ட இருந்து இதெல்லாம் வாங்கிட்டு வந்தே?” என்று கணேஷிடம் நிலானி கோவித்துக் கொள்ள.
“கோச்சுக்காத அக்கா. அந்த மாமா ரொம்ப பாவம். நீ இந்த துணி எல்லாம் வாங்கலைன்னு ரொம்ப சோகமா முகத்தை வச்சுட்டு அங்க ஒரு மாதிரியா உட்கார்ந்திருந்தார். அதனாலதான், அவர் பார்த்த பாவமா இருக்கேன்னு வாங்கிட்டு வந்து உன்கிட்ட கொடுத்தேன். பாவம் தானே அந்த மாமா?” என்றான் கணேஷ்.
“அவர் முகத்தைப் பாவமாக வெச்சுக்கிறாருங்கறதுக்காக, அவர் எடுத்துக் கொடுத்ததையும், வாங்கிக் கொடுக்குறதையும் நான் வாங்கிக் முடியுமோ? போட்டுக்க முடியுமா? மத்தவங்க எல்லாம் என்ன பத்தி என்ன நினைப்பாங்க? அவர்தான் அப்படி இருக்காருன்னு உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?” என்று கணேஷைத் திட்ட.
“உனக்கு அந்த மாமாவை பிடிச்சிருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன் முகத்தைப் பார்த்தாலே எனக்குத் தெரியுது, அக்கா” என்றான் கணேஷ்.
அவன் கூறியதைக் கேட்டு ஒரு நிமிடம் பேசாமல் இருந்தவள். “நீ சின்ன பையன், உனக்கு அதெல்லாம் ஒன்னும் தெரியாது. நீ பேசாம இருடா” என்று சொன்னவள், அவன் கொடுத்த ஆடைகளையும் சேர்த்து பில் போட்டாள்.
❤️
விசாலாட்சி நாளை கோவிலுக்குச் செல்வதற்காக ஏற்பாடுகள் செய்துகொண்டு இருந்தார்.
பூஜைக்குத் தேவையான பொருட்களைச் சிலவற்றைத் துர்காவிடம் வாங்கச் சொல்லி இருக்க, மற்ற வேலைகளை அவரே பார்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது வாசலில் இருந்து “அண்ணி….” என்று குரல் கேட்க. வேலையில் கவனமாக இருந்தவர், திடீர் என்று ‘அண்ணி’ என்று அழைக்கும் சத்தம் கேட்டதும் ஏதோ பழக்கப்பட்ட குரல் போல இருக்க, யார் என்று அடையாளம் கண்டவர் வேகமாக வாசலைத் திரும்பிப் பார்க்க, அங்கே கையில் பெட்டியுடன் நின்றிருந்தார் விசாலாட்சியின் தம்பி, அவர் மனைவியும், அவர்களின் மகள்கள் சிவன்யா என்கிற சிவுவும், ராதாவும் நின்றிருந்தனர்.
சிவு மூத்தவள், ராதா இளையவள். இவர்களைப் பற்றிப் போகப்போகப் பார்க்கலாம் ஃப்ரெண்ட்ஸ்.
இவர்கள் நால்வரும் ஆதியின் திருமணத்திற்கு அழைத்தும் வராமல், ஊரில் முக்கியமான வேலை இருக்கிறது என்று சொந்த அக்கா மகனின் திருமணத்திற்கு வராமல் இருந்து விட்டனர்.
அப்படி ஒன்றும் முக்கியமான காரணம் என்று எதுவும் இல்லை ஃப்ரெண்ட்ஸ். விசாலாட்சியின் தம்பி துரைக்கு, தன் மூத்த மகள் சிவுவை ஆதிக்குத் திருமணம் முடிக்க முடியாமல் வேறு பக்கம் பெண் பார்த்து விட்டார்கள் என்ற கோபம்தான். அதனால் தான் வரவில்லை.
அவர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் விசாலாட்சி வாசலுக்குச் சென்று அனைவரையும் வரவேற்றார்.
துரையின் மனைவி கனகாவும் விசாலாட்சியும் நல்ல உறவில் இருக்கின்றனர். இருவரும் தோழிகள் போல நெருக்கமானவர்கள். இவர்களைப் போலவே கனகாவின் இரண்டாவது மகள் ராதாவும் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவாள்.
ஆனால் விசாலாட்சியின் தம்பி துரையும், மூத்த மகள் சிவுவும் ஒரே குணம் கொண்டவர்கள். இவர்கள் இருவருக்கும் பணம், பணம், பணம்….. ஒன்றே வாழ்க்கையின் குறிக்கோள். அதற்காக எவ்வளவு எல்லைக்கும் செல்பவர்கள்.
ஆதியின் திருமணம் நின்றுபோய், அதே மணவறையில், அதே முகூர்த்தத்தில் வேறு திருமணம் செய்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதில் இருந்து, துரைக்கும், சிவுவுக்கும் தாங்கள் திருமணத்திற்குப் போகாமல் பெரிய தவறு செய்து விட்டோம் என்று தோன்றியது.
திருமணத்திற்கு வந்திருந்தால், வேறு பெண்ணை ஆதிக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்குப் பதிலாக தன் மகளையே திருமணம் செய்து வைத்திருக்கலாமே என்று துரைக்கு அடித்துக்கொண்டது. அதேபோலத்தான் சிவுவுக்கும், தான் ஆதியைத் திருமணம் செய்துகொள்ளக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பைத் தாங்களே வராது, கௌரவத்தால் நழுவ விட்டுவிட்டோமே என்று அடித்துக் கொண்டு இருக்கிறது.
“எப்படியும் ஆதிக்குத் திடீர் கல்யாணம் என்பதால், அவன் இப்போது திருமணம் செய்து இருக்கும் பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்காது.”
இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் அருகில் இருந்து எப்படியாவது ஆதியின் மனதை மாற்றி அவனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிவுவும், தன் மகள்கள் இருவரில் யாரேனும் ஒருவரை அல்லது வாய்ப்பு கிடைத்தால் இருவரையும் ஆதிக்கோ அல்லது கதிருக்கோ திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தில் தான், இப்போது திடீர் என்று சொல்லாமல், கொள்ளாமல் துரை தன் குடும்பத்துடன் இங்கு வந்து விட்டார்.
அவர்களை அழைத்துக்கொண்டு வந்து ஹாலில் அமர வைத்தவர், அனைவருக்கும் சாப்பிட ஜூஸ் கொடுத்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து கொண்டார்.
“கனகா, எப்படி இருக்க? தம்பிதான் கல்யாணத்துக்கு வராம, சொந்த அக்கா பையன் கல்யாணம் கூட நினைக்காம வராம இருந்துட்டான். ஆனா, நீயாவது அவன்கிட்ட எப்படியாவது சொல்லி சமாதானப்படுத்தி ஆதி கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று வருத்தப்பட்டார். தாய்மாமன் என்ற உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு அவன் தான் வராமல் விட்டுவிட்டான் என்றால், நீயாவது அவனிடம் சொல்லி புரிய வைத்திருக்கலாமே என்றார்.
இவர்கள் பேசுவதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துரை, “அப்படித் தாய் மாமன் என்ற உரிமை இருந்திருந்தால், உன் பையனை என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும். அதை விட்டுட்டு வேற பக்கம் தானே பொண்ணு எடுத்தீங்க? தாய் மாமன் உரிமை இல்லாமல் நீங்கள் எங்களை நினைக்கும்போது, நாங்க எதுக்குத் தாய் மாமன் உறவைக் கொண்டாடிட்டு உங்க பையன் கல்யாணத்துக்கு வரணும்?” என்று வெட்டுக்கென்று கேட்டார் துரை.
அவர் அப்படி கேட்டதும் விசாலாட்சியின் முகம் வாடி விட, அதைக் கவனித்த கனகா, “ஏங்க! கொஞ்சம் சும்மா இருங்க. இப்பத்தான வந்திருக்கீங்க. அதுக்குள்ள அண்ணியைக் கஷ்டப்படுத்தாதீங்க. அவங்க என்னன்னு பார்ப்பாங்க. பையனோட விருப்பம் என்னவோ அவங்க அதுப்படிதானே செய்வாங்க. நீங்க சும்மா அதை இதையும் சொல்லி அண்ணியை சங்கடப்படுத்தாதீங்க” என்று கனகா சொல்ல.
“எங்க அவங்க பையனோட விருப்பப்படியா கல்யாணம் நடந்துச்சு? வேற பொண்ணுதானே அப்பவும் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க? அப்பவாவது நம்மளோட நினைப்பு அவங்களுக்கு இருந்திருக்கனுமே! நம்ம தம்பி பொண்ணு இருக்கா, அவளை நம்ம பையனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கொஞ்சமாவது நம்மைப் பற்றி நினைப்பு இருந்திருக்கணும். அது என் அக்காவுக்குத் தோணியிருக்கனுமே” என்று துரை விடாமல் பேச.
“ஏங்க……” என்று கனகா பேச வர, அவரின் கைப்பிடித்து தடுத்த விசாலாட்சி, “விடு கனகா. அவன் பேசிட்டு போகட்டும். அவன் பேசுவதிலும் நியாயம் இருக்கத்தானே செய்யுது? தம்பி வீட்டில் ஒன்றுக்கு இரண்டு பொண்ணு இருக்கிறப்போ, நாங்க வேற பக்கம் பொண்ணு எடுக்கும்போது அவனுக்கு அது கஷ்டமாத்தானே இருக்கும்? அவனோட உரிமை அவன் கேட்கிறான். அவன் கேட்டதுலயும் எந்தத் தப்பும் இல்ல கனகா. விடு பரவால்ல. சரி வாங்க, நீங்க ஊர்ல இருந்து வந்து ரொம்ப நேரமா உங்களை ரெஸ்ட் எடுக்க விடாமல் நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன். களைப்பா இருக்கும். முதல்ல போய் எல்லாரும் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க. உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிறேன், சாப்பிடலாம்” என்று கூறி அவர்களே அனுப்பி வைத்துவிட்டு, அவர்களுக்காகச் சாப்பாடு எடுத்து வைக்கச் சென்றார் விசாலாட்சி.
