- Joined
- Oct 6, 2024
- Messages
- 412
முதலிரவிற்காக மீனுவின் அறை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்க ஜெய்யை வீல்சேரில் தள்ளி கொண்டு வந்த சந்தோஷ்."அண்ணாஆ!!!.... ம்ம்..." என்று அந்த அறையை தன் கண்களால் ஜாடை காட்டினான்.
சூர்யாவோ அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்து "டேய் மச்சான் என்னடா ஏற்படலாம் ரொம்ப பலமா இருக்கு..." என்று கூறி சூர்யா ஜெய்யை பார்த்து கண்ணடிக்க.. "டேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட டீசன்சி கிடையாதா? இப்படித்தான் பேசுவீங்களா?" என்று ஜெய் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு.
"டேய் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னைக்கு உனக்கு சிஸ்டருக்கும் முதலிரவு. நீ என்னடா இன்னுமும் முகத்தை இப்படி கடுகடுனு வெச்சிட்டு இருக்க. அந்த பொண்ணு உன் முகத்தை பார்த்தா பயந்துட போகுது" என்றான் சூர்யா.
"சூர்யா நல்லா சொல்லு இவருகிட்டே... எப்ப பாரு முகத்தை இப்படி உம்முன்னு வச்சுட்டு இருந்தா யாருதான் இவர்கிட்ட வந்து பேசுவாங்க. இவர் இப்படி இருக்குறத பாத்தாலே பயந்து ஓடிட மாட்டாங்களா?" என்றான் சந்தோஷ்.
"விடுடா நம்மகிட்ட தான் இப்படி இருக்கான். ஒருவேளை அவன் பொண்டாட்டிகிட்ட நல்லா சிரிச்சு பேசுவானா இருக்கும். பார்ப்போம் அதையும் எங்க போயிடப் போறான்" என்று சொல்லிவிட்டு... "சரி வா நேரம் ஆயிடுச்சு இங்கே நின்னு பேசிகிட்டு இருந்தா அப்புறம் இவனோட வைஃப் வந்து நம்ம ரெண்டு பேரு பிரண்ட்ஷிப்பையும் முதல்ல கட் பண்ண சொல்லிட போறாங்க வா போகலாம்" என சந்தோஷை இழுத்துக் கொண்டு சூர்யா அங்கிருந்து சென்றான்.
அவர்கள் இருவரும் சென்றதை பார்த்தவன் " இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை.." என்று
தன் வீல் சேரை திருப்ப… மீனுவின் அறையை அப்போதுதான் பார்த்தான் ஜெய் . அவள் அறை முழுவதும் பறவைகளின் போட்டோக்கள் விதவிதமாக படம் பிடிக்கப்பட்டு அவை கயிற்றில் கட்டி தோரணங்களாக தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த அறையில் பாதி, பறவைகளின் போட்டோ நிறைந்திருக்க பெட்டிற்கு நேராக உள்ள சுவற்றில் மீனு அழகாக சிரித்தபடி சிவப்பு நிற புடவை அணிந்து தலையை பின்னி மல்லிகை பூ சரம் வைத்து அதில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆள் உயரத்திற்கு அந்த போட்டோ பிரேம் செய்யப்பட்டு அவள் அறையில் மாட்டப்பட்டு இருந்தது. தன் எலக்ட்ரிக் வீல் சேர் பட்டனை அழுத்தி அந்த போட்டோ இருந்த திசையை நோக்கி சென்றான் ஜெய்.
மீனுவின் போட்டோவை மிக அருகில் வந்து பார்த்த ஜெய் அவள் முகத்தை அப்போதுதான் நன்றாக கவனித்தான். மணமேடையில் இருவரும் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை.
அழகான உருண்டையாக சிறிய குழந்தை முகம் ,கூரிய மூக்கு,வரைந்து வைத்தது போல உதடுகள் அதில் அவள் சிரித்திருந்ததில் கன்னங்களில் குழி விழ... அது அவளுக்கு மேலும் அழகூட்டியது. கிட்டத்தட்ட ரியாவை ஒத்து இருந்தது மீனுவின் முகம். ஆனால் ரியாவின் முகம் எப்போதுமே சிடுசிடுத்தபடி இருக்கும். மீனுவின் முகத்தில் ஒரு சாந்தமும் அமைதியும் இருந்தது.
அவள் போட்டோவை பார்த்தபடியே குழப்பத்தில் இருந்தான் ஜெய். தன்னை ஆறு மாதமாக துரத்தி துரத்தி காதலித்த ரியா தனக்கு கால் உடைந்த ஒரே காரணத்திற்காக திருமணத்தையே நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு ஓடி இருக்க தன்னை ஒருமுறை கூட பார்த்திடாமல் தன்னை பற்றியோ தன் குடும்பத்தை பற்றியோ எந்த விபரமும் தெரியாமல் எப்படி தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தால் என புரியாமல் குழம்பினான் ஜெய்.
"என்ன பத்தி எதுவுமே தெரியாது. எனக்கு கால் இல்லைங்கிற விவரம் மட்டும் தானே அவளுக்கு தெரியும். என்ன முன்ன பின்ன பார்த்தது கூட இல்ல அப்படி இருக்கும்போது எந்த ஒரு விபரமும் தெரியாம என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு எப்படி இவளாவே முன்வந்து சொன்னா. ஒருவேளை என்ன என்னோட நிலைமையை பார்த்து பாவப்பட்டு போனால் போகுதுன்னு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டாளா? அப்படி எந்த பொண்ணாவது செய்வாளா?" என தனக்குள்ளே கேள்விகள் எழுந்து கொண்டே இருக்க அதை மீனு வந்தால் அவளிடமே கேட்டு விட வேண்டும் என முடிவு செய்தான் ஜெய்.
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மீனு அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.
கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென தன் வீல் சேரை இயக்கி அவள் போட்டோவில் முன் நின்றிருந்தவன் அங்கிருந்து தள்ளி வந்து பறவைகளை போட்டோ எடுத்து மாட்டி இருந்த இடத்திற்கு வந்து அதை பார்ப்பது போல பாவனை செய்தான்.
மீனு கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள் படுக்கையில் ஜெய் இருப்பான் என்று பார்க்க அவன் அங்கு இல்லாமல் போக... அறைக்குள் திரும்ப... தான் எடுத்த போட்டோ முன்பு நின்று அவன் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக அவன் இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றாள்.
மீனு தன் பின்னால் நடந்து வருவது அவள் கொலுசின் சத்தம் வைத்து கணித்துக்கொண்ட ஜெய் அவள் வரும் திசையை நோக்கி தன் சேரை திருப்ப..
ஜெய்யை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த மீனு ஜெய்யின் பக்கம் திரும்பியதும் அப்படியே வந்த இடத்தில் நின்று விட்டாள்.
ஜெய்யை அப்போதுதான் மீனு முதன் முதலாக நேருக்கு நேராக சந்திக்கிறாள். மணமேடையில் அவன் வேஷ்டி அவிழ்ந்து நழுவிய போது கூட அவன் முகத்தை சரியாக மீனும் பார்க்கவில்லை இப்போது அவனை நேருக்கு நேராக பார்த்தவள் ஜெய்யும் தன்னை பார்க்கிறான் என்று அவனை பார்க்க முடியாமல் சட்டென்று தன் தலையை குனிந்து கொண்டாள்.
மெல்ல தன் சேர் இயக்கிய படி அவள் முன்பு வந்து ஜெய் நிற்க தலை கவிழ்ந்து இருந்த மீனு அவன் பாதங்கள் இரண்டையும் பார்த்தாள்.
அவன் பாதத்தில் மேல் புறம் இரு கால்களிலும் தழும்புகள் இருக்க அதை பார்த்தவளுக்கு ஜெய்யை நினைத்து பாவமாக போய்விட்டது.
அவன் பாதங்களை பார்த்தபடி மீனு நின்று இருக்க... அவளுக்கு முன்னால் வீழ்ச்சாரில் அமர்ந்திருந்த ஜெய் அவள் பார்வை பதிந்திருந்த திசையை குனிந்து பார்த்தான். தன் பாதங்கள் இரண்டிலும் இருந்த தழும்பை தான் அவள் பார்க்கிறாள் என்றதும் சட்டென தன் பாதங்கள் இரண்டையும் உள்ளே இழுத்துக் கொண்டான்.
அவன் அப்படிச் செய்ததும் மீனு சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க... அவன் மீனுவை பார்க்கும் பார்வையே அவளுக்கு ஊசி போல் இதயம் வரை துலைத்தது.
அவன் பார்வையில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நேருக்கு நேராக மீனுவின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் பார்வையை தவிர்க்க முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டு கையில் பால் சொம்புடன் நின்றிருந்தாள் மீனு.
"என் காலில இருக்க தழும்பையே இப்படி பாத்துட்டு இருக்காளே ஆக்சிடென்ட் நடந்த பிறகு என்னோட ரெண்டு கால்களிலும் உடைந்து அதுல ஏற்பட்ட காயங்களையும், என் உடம்புல இருக்க தழும்பயும் பார்த்தா இவ என்ன பத்தி என்ன நினைப்பா என்ன பத்தின அபிப்பிராயம் அவளுக்கு எப்படி இருக்கும்" என யோசித்தவாரே "நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் கராரான குரலில்.
"ம்ம்ம்... சொல்லுங்க" என்றாள் மீனு.
"நீ என் மேல இரக்கப்பட்டு தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" என்றான்
அவன் அப்படி கேட்டதும் திடுக்கிட்டு அவனைப் பார்த்தவள் "இல்லை சத்தியமா நான் உங்களை இறக்கப்பட்டு எல்லாம் கல்யாணம் செய்துக்கல " என்றாள்.
"அப்புறம் எப்படி முன்ன பின்ன ஒரு முறை கூட பார்க்காம என்னை பத்தி எந்த விபரமும் தெரியாம நீ என்ன கல்யாணம் செய்துக்க சம்மதித்த... அதுவும் உன் அக்காவுக்கு பிக்ஸ் பண்ணி என்னோட ஊனத்தை காரணம் காட்டி என் கல்யாணத்தை நிறுத்தின பிறகும் என்ன எப்படி கல்யாணம் செய்துக்கணும்னு உனக்கு தோணுச்சு " என்றான்.
"அது.. அது வந்து..." என மீனு ஏதோ கூறத் தயங்க..
"இங்க பாரு நீயும் நானும் ஒருத்தர ஒருத்தர் முழுசா தெரிஞ்சுகிட்டா தான் நம்ம பத்தி நம்ம வாழ்க்கையை பத்தி அடுத்தது என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். இப்படி நீ மனசுல எதையோ வச்சுக்கிட்டு என்கிட்ட எதையும் சொல்லாம மறைக்கணும்னு நினைக்கிறதுல எந்த பிரயோஜனமும் இல்ல. நீ சொல்லாட்டியும் சீக்கிரமாவே அதுக்கான காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியும்" என்றான் ஜெய்.
அதுவரை அமைதியாக இருந்த மீனு அவன் இப்படிச் சொன்னதும் தன் கையில் இருந்த பால் சொம்பை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தன் சேலை தலைப்பை எடுத்து இடுப்பில் சொருகியவாறு அவன் முன்பு வந்து நின்றவள்.
" தெரிஞ்சுக்கலாமே... அதுக்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கு" என்று தன் கழுத்தில் ஜெய் கட்டிய தாலியை தூக்கி அவன் முன்பு காட்டி கூறினாள் மீனு.
"அப்போ என்னன்னு சொல்லு என்ன கல்யாணம் செய்துக்க என்ன காரணம் சொல்லு அது எனக்கு தெரிஞ்சு ஆகணும்" என்றான் ஜெய்.
"இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீங்க என்ன சொன்னீங்க நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லாம போனாலும். அதை எப்படி தெரிஞ்சுக்கணும்னு உங்களுக்கு தெரியும்னு தானே சொன்னீங்க.. அப்போ நான் உங்களை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேங்குற காரணத்தை நீங்களே கண்டுபிடிங்க பார்க்கலாம்" என்றாள் மீனு சிரித்த முகமாக.
அவள் தன்னிடம் நேருக்கு நேராக சவால் விடும்படி பேசுவதை பார்த்த ஜெய் அவளை நீ பார்த்து "என்ன என்னிடம் சவால் விடுறயா? நீ என்ன காரணத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கு தெரியாம போயிடும்னு நினைச்சியா?" என்றான்.
"இல்ல இல்ல அப்படி நான் நினைக்கவே இல்ல... சொல்ல போனா நானே உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கான காரணத்தை சொல்லலாம்னு தான் உள்ளே வந்தேன்.அதுக்குள்ள நீங்களே கேட்டுட்டீங்க.. நான் எதுக்காக உங்களை கல்யாணம் செய்திருக்க காரணத்த நீங்களே கண்டுபிடிங்க அதுவரை என் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது" என்றாள் குறும்பாக சிரித்தபடி.
அவள் சிரித்த முகத்தை பார்த்த ஜெய்யிக்கு "இவ என்கிட்டே சொல்லமாட்டேன்னு வீம்பு பிடிச்சிருந்தா கூட இவளை மிரட்டி உருட்டி எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சாங்கிற காரணத்தை நான் எப்படியாவது தெரிந்திருப்பேன். ஆனா இவ இப்படி சிரிச்சு முகமா என்ன பார்த்து பேசுறப்போ என்னால இவகிட்ட வேற எதையுமே அழுத்தி கேட்க முடியலையே "என யோசித்தவாறு மீனுவை பார்த்தான்.
"என்ன பாக்கறீங்க உங்களால கண்டுபிடிக்க முடியாதா?" என்றாள் கேலியாக .
அவளை முறைத்தவன் "நாளைக்கு காலையில நீ எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நான் உன்கிட்டே சொல்லுவேன்" என்றான் தீர்க்கமாக.
"ஓ அவ்வளவு நம்பிக்கையா?" என்றாள் மீனு.
மீனு பேசுவதை கண்டுகொள்ளாமல் தன் கையில் இருந்த மொபைலை எடுத்துக்கொண்டு அவள் அறையில் இருந்த பால்கனியை நோக்கி வீல் சேரை இயக்கிக் கொண்டு ஜெய் செல்ல...
அவனைப் பார்த்து " பார்க்கிறேன் நீங்க எப்படி கண்டுபிடிக்குறீங்கன்னு" என்று சொன்னவள் தூக்கம் வரவே சென்று கட்டிலில் ஓரமாக படுத்து உறங்க ஆரம்பித்தாள்.
இங்கே பால்கனிக்கு வந்த ஜெய் தன்னுடைய பிஏ மகேஷிற்கு கால் செய்து மீனுவை பற்றிய விபரங்களை எல்லாம் எதுவும் மிஸ் ஆகிவிடாமல் தனக்கு வேண்டும் என சொல்லிவிட்டு போனை வைத்தான்.
Author: layastamilnovel
Article Title: ராட்சசன் 11
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: ராட்சசன் 11
Source URL: Layas Tamil Novel-https://layastamilnovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.