EPISODE 7
கண்கலங்க வைக்கும் ஒரு குரல் மாடியில் இருந்து கேட்டது.
“குருசாமி…” ஆபீஸுக்குக் கிளம்பிக் கிளம்பிக் கொண்டிருந்த குருசாமியின் அறைக்குள் கேட்கும்படி அந்த வீடே அதிரும்படி அவன் பெயரைச் சொல்லி அழைத்தார் குருசாமியின் அப்பா. தன் அப்பாவின் குரல் கேட்டுப் பதட்டமாக வெளியே வந்தான் குருசாமி. தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்றிருந்த காவேரியும் சத்தம் கேட்டு வீட்டுக்குள் வேகமாக வந்தாள்.
குருசாமியும் காவேரியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி மாடிக்கு வர, அப்போது மாடிப்படிகளில் இருந்து கோபமாகக் கைத்தடியை ஊன்றியபடி கீழே இறங்கி வந்துகொண்டிருந்தான் குமரன், தமிழின் தாத்தா. அவன் கோபமாக வருவதைப் பார்த்த இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“என்ன ரெண்டு பேரும் அப்படிப் பார்க்குறீங்க? நான் ஏன் இவ்வளவு கோபமா இருக்கேன்னு தானே ரெண்டு பேரும் யோசிக்கிறீங்க?” என்று கேட்டான்.
அவன் என்ன சொல்கிறான் என்று எதுவும் புரியாமல் “ஆமாம்” என்பதுபோல குருசாமியும் காவேரியும் தலையை ஆட்டினர்.
“உங்க செல்ல மகன், உங்க ஆசை மகன் தமிழ் என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கான்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றான் குமரன்.
அவன் சொன்னதைக் கேட்ட குருசாமி, “தமிழா? அவன் மலேசியாவில் இருக்கானே, அவன் என்ன செய்தான்?” என்று கேட்டான்.
“பெத்த மகன் எங்கே போறான், என்ன செய்கிறான் என்று கூடத் தெரிஞ்சுக்காம நீங்க ரெண்டு பேரும் அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றான் கோபமாக.
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல் குருசாமி திரும்பி தன் அருகில் நின்றிருந்த காவேரியைப் பார்த்து, “உனக்கு எதுவும் தெரியுமா?” என்று ஜாடை செய்துக் கேட்க, காவேரியும் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல உதட்டைப் பிதுக்கினாள்.
“என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசுகிறீர்கள்? நீங்கள் பேசுவதைப் பார்த்தால் உங்க ரெண்டு பேருக்கும் உண்மையாகவே விஷயமே தெரியாது போல இருக்கு” என்றான் கோபமாக குமரன்.
“சத்தியமா நீங்க என்ன பேசுறீங்கன்னு எங்க ரெண்டு பேருக்கும் புரியல. நீங்களே சொல்லிடுங்க, தமிழ் அப்படி என்ன செய்தான்?” என்று கேட்டான் குருசாமி.
“என்ன செய்தானா? உன் மகன் தமிழ் பிசினஸ் பேச மலேசியா போனதும் பிசினஸ் மட்டும் பேசிட்டு, போன வேலையை மட்டும் பார்த்துட்டு வராம… அங்கே நடக்கிற கள்ளச் சந்தையில் ஏலத்திற்கு வந்த ஒரு பெண்ணை ஏலம் எடுத்து காசு கொடுத்து வாங்கி வந்திருக்கான். இது கூடத் தெரியாம நீங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கீங்க” என்றவன், “அவன் ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறான்? இது என்ன புதுப் பழக்கம்? நம் பரம்பரையிலேயே இப்படி யாரும் இதுவரை இருந்தது இல்லையே… பொண்ணுங்களை எல்லாம் மதிச்சு நடத்துற நம்முடைய குடும்பத்துல, பொண்ணுங்களை எல்லாம் தெய்வமா நினைச்சு வழிபடுற நம்மளோட குடும்பத்தில இவன் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு வந்திருக்கான். இவனால் நம்ம பரம்பரைக்கு, நம்ம குடும்ப மானத்துக்கும் கெட்ட பெயர்” என்று கோபத்தில் தமிழின் அப்பா அம்மாவிடம் பொரிந்து தள்ளினான் குமரன்.
