Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 33

உன் ரகசிய ரசிகை நான் 33

by Layas Tamil Novel
675 views

EPISODE 33

சிவகாமி அழுதுகொண்டே தன் அறைக்குச் சென்று கொண்டிருக்க, அப்போது வெளியே ஃபோன் பேச வந்த ஆதி, சிவகாமி அழுதுகொண்டு வருவதைப் பார்த்தவன் அவரிடம் சென்று பேசலாமா வேண்டாமா என்று யோசித்தவன், அவரைப் பார்க்க அவரும் ஆதியைப் பார்த்துவிட்டார். இனி அவரைத் தவிர்க்க முடியாது என்று நினைத்தவன் அவரிடம் சென்றான்.

ஆதியைப் பார்த்த சிவகாமி, “தம்பி, நல்லா இருக்கியா?” என்று கேட்டார்.

“நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நீங்க…?” என்று இழுத்தவன், “ஏன் அழுதுட்டு வரீங்க? அங்கிள் உங்களை ஏதும் சொல்லிட்டாரா?” என்றான்.

“அது ஒண்ணுமில்லை தம்பி. அவருக்கு என்னை அழ வைத்துப் பார்க்கிறதுல ஒரு சந்தோஷம். அவன் கிடக்கிறான் வீணாப்போனவன். அவனுக்கும், என் பொண்ணுக்கும் அவ்வளவுதான் அறிவு. நீ நல்லவேளை என் பொண்ணைக் கல்யாணம் பண்ணாமல் தப்பிச்சிட்டே. இல்லையென்றால், அவளை எல்லாம் உங்களால சமாளிக்கவே முடியாது தம்பி,” என்றார்.

“ஆன்ட்டி! நீங்களே… இப்படி எல்லாம் சங்கவியைப் பற்றிப் பேசலாமா? என்ன இருந்தாலும் அவள் உங்க பொண்ணு இல்லையா?” என்று ஆதி கேட்டான்.

ஆதி இப்படி கேட்டதும் சற்றும் யோசிக்காமல், “அவள் என் பொண்ணே இல்லை தம்பி,” என்றார் உடனே.

சிவகாமி சங்கவியை தன் பெண்ணே இல்லை என்று ஆதியிடம் சொன்னதும், இதைக் கேட்ட ஆதி மிகவும் அதிர்ச்சியாகி, “என்ன ஆன்ட்டி சொல்றீங்க? சங்கவி உங்க பொண்ணு கிடையாதா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டான்.

“ஆமாம் தம்பி. அவளை நான் என் வயித்துலதான் பெத்தேனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு. நான் பெத்த பிள்ளையா இருந்தா, என்னோட இரத்தம் அவள் உடம்பில் ஓடுறதுதான் இருந்தா, இப்படி ஒரு ராங்கி நான் பெத்து வச்சிருப்பேனா? அவள் நடந்துகொள்வதும், அவள் அப்பன் கூட சேர்ந்து அவள் பண்ற வேலை எல்லாம் கேட்கும்போது எனக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு. இவள் இப்படிப்பட்டவள் என்று முதலிலேயே தெரிந்திருந்தால் என் வயிற்றில் உருவானபோதே இவளை அழிச்சிருப்பேன் தம்பி. இப்படிப் பெரியவளாக வளர்த்துவிட்டு, இவளால் எனக்கு நிம்மதியில்லை. கூட இருக்கிறவங்க யாருக்குமே நிம்மதியில்லை. என் பொண்ணு எப்பதான் திருந்தி ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வாளோனு எனக்கு ஆசையா இருக்கு தம்பி. மத்த பொண்ணு மாதிரி இவளும் நல்ல பையனைப் பார்த்து கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டின்னு சந்தோஷமா இருக்கணுமா வேண்டாமா? 

இப்படி அடுத்தவங்களைப் பழிவாங்கணும்னு நினைச்சுட்டு சுத்திட்டு இருந்தா எவ்வளவு நாளைக்கு யார் தான் பிடிக்கும்? இவளை யார் தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க? கொஞ்சம்கூட மனசுல நல்ல எண்ணமே இல்லை தம்பி அவளுக்கு. அவள்தான் அப்படி இருக்கிறாளா, அவளை அடித்துத் திருத்தி வளர்க்க வேண்டிய என் புருஷன், அந்த வீணாப்போனவன், அவனும் அப்படித்தான் இருக்கான். அவள் கொஞ்சமாவது ஏதாவது தப்புப் பண்ணப் போனா, இந்த ஆளு அதையும் இதையும் சொல்லி ஏற்றிவிட்டு, அவளை மொத்தமாகவே வில்லியாக மாற்றிவிட்டார். 

அவளுக்கு யாராவது நல்லா இருந்தா பிடிக்கிறதே இல்லை. வயித்தெரிச்சலுடைய சுத்திட்டு இருக்கா. எதுக்கும் நீங்களும் உங்க குடும்பமும் அவள் கண்ணுல படாமல், அவளிடம் இருந்து ஒதுங்கிக் கொஞ்ச நாளைக்கு இருங்க தம்பி. அவள் உங்கள் மேலேயும் உங்க குடும்பத்தின் மேலேயும் ரொம்பக் கோபத்தில் இருக்கா. உங்களைப் பழிவாங்கணும்னு சொல்லிட்டு அவள் அப்பனும் அவளும் ஏதோ கூடி கூடி பேசிக்கிறாங்க. எது நடந்தாலும் ஜாக்கிரதையாக, அவளிடம் இருந்து மாட்டிக்காமல் தப்பிச்சுக்கற வழியை மட்டும் பாருங்க. அவள் என்ன சொன்னாலும், எப்படி நடந்துகிட்டாலும் அவளை மட்டும் நம்பவே நம்பாதீர்கள் தம்பி. என் பொண்ணுதான், நான் இல்லைன்னு சொல்லல. இருந்தாலும் சொல்றேன், 

அவளுக்கு நல்ல எண்ணமும் நல்ல மனசே கிடையவே கிடையாது,” என்றவர், “சரி தம்பி, நான் ரூமுக்குப் போறேன். இந்நேரம் அந்த வீணாப்போனவன் வந்தான்னா, என்ன வந்து கண்டதும் பேசி, என்னை அடிக்க ஆரம்பிச்சிடுவான். நான் போறேன் தம்பி,” என்று சொல்லிவிட்டு சிவகாமி அங்கிருந்து சென்றார்.

ஆதியைத் தாண்டி சிறிது தூரம் நடந்தவர், திரும்பி ஆதியைப் பார்த்து, “தம்பி, ஒரு நிமிஷம்” என்று கூறினார். உள்ளே செல்லப்போன ஆதி அவர் அழைத்ததும் நின்று, அவரைத் திரும்பிப் பார்த்து, “என்ன ஆன்ட்டி சொல்லுங்க?” என்று கேட்க, அவர் வேகமாகச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு ஆதியின் அருகில் வந்தவர், “எனக்கு நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

“என்ன ஆன்ட்டி, என்ன வேணும்னு கேளுங்க. நான் மறக்காம செய்றேன். நீங்க இப்படி எல்லாம் என்கிட்ட கேட்கலாமா?” என்றான் ஆதி.

“ரொம்ப சந்தோஷம் தம்பி. இந்த கல்யாணம் எல்லாம் முடிச்சுட்டு நம்ம ஊருக்குப் போனதுக்கு அப்புறம் நான் உங்களுக்குப் ஃபோன் பண்றேன். நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். முக்கியமா, நம்ம ரெண்டு பேரும் சந்திச்சுக்கறது எங்க வீட்டிலேயோ உங்க வீட்டிலேயோ யாருக்குமே தெரிய வேண்டாம் தம்பி. குறிப்பா, என் புருஷன் அந்த வீணாப்போனவன், அவனுக்குக் கண்டிப்பா தெரியவே கூடாது,” என்றார் சிவகாமி.

“சரிங்க ஆன்ட்டி. நான் அங்கிளுக்குத் தெரியாமல் பார்த்துக்கிறேன். எங்க வீட்லயும் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கிறேன். நீங்க ஊருக்குப் போன பிறகு, எப்போ என்கிட்ட பேசணும்னு நினைச்சாலும் நீங்க மறக்காம கூப்பிடுங்க. நான் உங்களைப் பார்க்க வந்து விடுவேன்,” என்றவன் ஆதி அவரிடம் சொல்லிவிட்டு, “சரிங்க ஆன்ட்டி, நான் போயிட்டு வரேன்,” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சிவகாமி, ‘ரொம்ப நல்ல பையன். இவனைக் கல்யாணம் பண்ணி நல்லா வாழ என் பொண்ணுக்குக் கொடுத்து வைக்கலை. அந்த துர்கா பொண்ணு மனசுக்கு இவன் கூடச் சந்தோஷமாக வாழட்டும்’ என்று இருவரையும் மனதார வாழ்த்திவிட்டுத் தன் அறைக்குச் சென்றார்.

*****

துர்கா, கீர்த்திகாவின் அம்மா அப்பா இருவரையும் ரெடியாகச் சொல்லிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட்டாள். கீர்த்திகா, துர்கா சென்றதும் அறையை விட்டு வெளியே வந்தவள், அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டே செடிகளின் அருகில் நடந்து வந்து கொண்டிருக்க, அப்போது அந்தச் செடிகளுக்குப் பின்னால் அவ்வளவு நேரம் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்த கதிர், சுற்றிலும் யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு, கீர்த்திகாவின் கையைப் பிடித்து இழுத்துச் செடியின் அருகில் யாருக்கும் தெரியாமல் மறைந்தவாறு அவளை நிறுத்தி வைத்தான்.

கதிரைப் பார்த்ததும் கீர்த்திகா, “டேய்! இப்ப எதுக்குடா என் கையைப் பிடிச்சு இங்கே இழுத்துட்டு வந்தே?” என்று கோபமாகக் கத்த, அவள் வாயைப் பொத்தியவன், “இப்ப எதுக்குடி இப்படி கத்துற? நான்தானே உன்னை இழுத்தேன்னு பார்த்தே இல்ல? அப்புறம் எதுக்கு வேற யாரோ உன்னைக் கையைப் பிடிச்சு இழுத்த மாதிரி நினைச்சுக் கத்திட்டு இருக்க?” என்று கதிர் சத்தம் போட…

அவனை முறைத்தவள் தன் வாயிலிருந்து அவன் கையை எடுத்து வைத்தாள். “இப்ப எதுக்குடா என்ன இங்க கூட்டிட்டு வந்த?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“உன்னை எதுக்கு நான் இங்கே, யாருக்கும் தெரியாமல் உன்னைக் கூட்டிட்டு வந்தேன்னு உனக்குச் சத்தியமாத் தெரியாது அப்படித்தானே?” என்றான் கதிர்.

அவன் தன்னைப் பார்ப்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறான் என்று கீர்த்திகாவுக்குப் புரிந்தது. இருந்தும் அவனிடம் வேண்டுமென்றே தான் கோபப்படுவது போலப் பேசினாள்.

“நீ எதுக்குக் கூப்பிட்டேன்னு எனக்குத் தெரியும். அதுக்காக இங்க நம்ம சுற்றியும் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்க யாராவது உன்னையும் என்னையும் இப்படிச் சேர்த்து வைத்துப் பார்த்தார்கள் என்றால் அவங்க என்ன நினைப்பாங்க நம்மளைப் பற்றி?” என்று கேட்டாள் கீர்த்திகா.

“யார் என்ன நினைச்சா எனக்கென்ன? என் ஆளை நான் பார்க்க எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் நான் வந்து விடுவேன்,” என்று காலரைத் தூக்கிக்கொண்டு கதிர் கூற, அவன் கூறியது கேட்டுச் சிரித்தவள், “இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. அப்படி இருக்கிறவன், நேரா என் ரூமுக்கே வந்து எங்க அம்மா அப்பா முன்னாடியே என்னைப் பார்த்துப் பேசிட்டுப் போக வேண்டியதுதானே? இப்படி எதுக்கு யாருக்கும் தெரியாமல் மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சு நின்னுட்டு இருக்கணும்?” என்று கீர்த்திகா அவனைக் கிண்டல் செய்தாள்.

“சரி சொல்லு. இப்ப எதுக்கு என்னைப் பார்க்க வந்த?” என்று கேட்க, “உன்னை எப்படிப் பார்க்க வருவேன்? எல்லாரும் ரிசப்ஷன்னுக்கு ரெடியாகிட்டு இருக்காங்க. சரி, நீயும் ரிசப்ஷனுக்கு எப்படியும் ரெடியாகி இருப்பே. அதனால உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்,” என்று கூறியவன், அவளை மேலிருந்து கீழாகப் பார்க்க, “சும்மா சொல்லக் கூடாதுடி, இந்த டிரஸ்ல நீ செம்மையாக இருக்க,” அவளை அங்கமங்கமாக ரசிக்க…

அவன் பார்வையின் ஆழத்தைத் தாங்க முடியாமல், உடல் கூச, நெளிந்து கொண்டே நின்றவள், “இப்ப எதுக்குடா என்னை இப்படிப் பார்க்கிற? எனக்குக் கூச்சமாக இருக்கு,” என்று அவனைப் பார்க்காமல் திரும்பி நின்றுகொண்டாள்.

“முன்னாடி பார்த்து ரசிச்சது பத்தவில்லை என்று சொல்லிட்டு, பின்னாடி பார்த்து ரசிக்கச் சொல்லி திரும்பி நின்னுட்டியா? சரி, அதையும் பார்த்துட்டா போச்சு…” என்று அவன் கூறிக் முடிப்பதற்குள் கீர்த்திகா திரும்பி அவனைப் பார்த்து முறைக்க…

“அச்சோ! என்னடி இப்படி முறைக்கிற? இப்படி எல்லாம் முறைச்சா நான் எப்படி உன்னை சைட் அடிக்கிறது? என் செல்லத்தை நான் பார்த்து ரசிக்காமல் வேற யார் பார்த்து ரசிக்கப் போறாங்க? சொல்லு! கரெக்ட் தானே?” என்றான் கதிர்.

அவள் அவன் கூறியது எல்லாம் கேட்டுச் சிரித்தவள், “ஆமாம், நீதான் பார்த்து ரசிக்கப் போற. அதுக்காக இன்னைக்கு மொத்தமாப் பார்த்து ரசிச்சு என்ன பண்ணப் போற?” என்று கேட்க, “என்னடி சொல்ற? மொத்தமாகப் பார்க்கிறேன்? நான் எங்க மொத்தமா பார்க்கிறேன்? ஏதோ அங்கங்கே தெரியுற மிச்சத்தை மட்டும் தானே பார்க்கிறேன். மொத்தமாப் பார்க்க என்னைக்கு எனக்குக் கொடுத்து வச்சிருக்கோ தெரியலையே,” என்று ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டான் கதிர்.

“போடா லூசு! இப்படியா பேசுவ? கொஞ்சம்கூட அறிவே இல்லை. ஒரு பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசணும்னு தெரியாதா உனக்கு?” என்று கீர்த்திகா வேண்டுமென்று கோபிப்பது போல நடிக்க…

“யாராவது பொண்ணுங்க கிட்டவாடி அப்படி பேசினேன்? நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுகிட்ட தானே பேசினேன்? நான் அப்படிதான் பேசுவேன். என்னடி பண்ணுவே?” என்றான் கதிர்.

அவன், ‘நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகும் பெண்ணிடம் தான் அப்படிப் பேசுகிறேன்’ என்று சொன்னதும், கீர்த்திகாவுக்கு காலையில் கதிரின் அம்மா, ‘ஒரே வீட்டில் பெண்ணெடுக்க மாட்டேன்’ என்று சொன்னது ஞாபகம் வர அவள் முகம் உடனே சுருங்கிவிட்டது.

அவள் முகம் வாடியது கண்ட கதிர், “கீர்த்து! என்ன ஆச்சு? ஏன் இப்படி முகத்தை வச்சுட்டு இருக்க? இவ்வளவு நேரம் சந்தோஷமாகத் தானே இருந்த?” என்று கேட்க…

“இல்லை கதிர். காலையில் உங்க அம்மா பூமிகா அக்கா கிட்ட பேசுறது நீ கேட்டியா?” என்று கீர்த்திகா கேட்டாள்.

“கேட்டுட்டுதான் இருந்தேன் கீர்த்து. அம்மா அப்படி சொன்னதும் எனக்கு முதலில் வருத்தமாகத் தான் இருந்துச்சு. அதுக்காக அவங்க அப்படி நினைக்கிறார்கள் என்பதற்காக நீயும் நானும் காதலிக்கிறதை விட்டுக்கொடுக்க முடியுமா? அம்மாவும் சரி அப்பாவும் சரி, என்ன சொன்னாலும் எனக்கு நீதான் பொண்டாட்டி. உனக்கு நான் தான் புருஷன். நீ மாறுவதை யாராலயும் முடியாது. நீ அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாதே. ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அம்மா ஏன் அப்படி சொன்னாங்க? அதுக்கான காரணம் என்னன்னு தெரிஞ்சிட்டு அதைச் சரி செய்யப் பார்க்கிறேன். சரியா? நீ அதைப் பற்றி எல்லாம் ஃபீல் பண்ணாமல் என்னை எப்படி லவ் பண்றதுன்னு மட்டும் யோசிக்கணும். சரியா?” என்றவன், மறுபடியும் ஒரு முறை பார்த்தவன், “ஏய் கீர்த்துமா! உன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கேனே. எனக்கு எதுவும் கொடுக்க மாட்டியா?” என்று கேட்டான் கதிர்.

“என்னடா இப்படி கேட்கிற? என்ன வேணும்? பசிக்குதா உனக்கு? நான் போய் ரூம்ல சாப்பிட்டு ஏதாவது இருக்கும் எடுத்துட்டு வரட்டுமா?” என்று கீர்த்திகா கேட்க…

‘இந்தத் தத்தியை வச்சுட்டு நான் இப்படித்தான் குடும்பம் நடத்தப் போறேன், கல்யாணம் பண்ணப் போறேன், தெரியலையே’ என்றவன், “ஏய் லூசு! நான் சாப்பிடவாடி உன்கிட்ட கேட்டேன்?” என்று கதிர் கேட்க, “அப்ப வேற என்னடா வேணும்? சீக்கிரம் சொல்லு. நான் ரூமுக்கு போறேன். யாராவது வந்துரப் போறாங்க,” என்று கீர்த்திகா அவனை அவசரப்படுத்த…

மறுபடியும் தன்னைச் சுற்றிப் பார்த்த கதிர், தன்னைப் பார்க்குமாறு கீர்த்திகாவின் முகத்தைப் பிடித்துத் திருப்பியவன், “ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடுடி,” என்று கேட்டான்.

அவன் அப்படி கேட்டதும், தன் முகத்தைப் பிடித்திருந்த அவன் இரண்டு கைகளையும் பிடித்துக் கீழே இறக்கியது, “என்னடா சொல்ற? எங்க வச்சு கிஸ் கேட்கிறேன்? அதெல்லாம் என்னால கொடுக்க முடியாது. நான் உள்ளே போகிறேன்,” என்று உள்ளே செல்லப் போக, அவள் கையைப் பிடித்து இழுத்தவன், “ப்ளீஸ் டி கீர்த்தி. ஒரே ஒரு கிஸ் தானே கேட்கிறேன்,” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கதிர் கெஞ்ச…

அவனைப் பார்ப்பதற்கு கீர்த்திகாவுக்கும் பாவமாகத்தான் இருந்தது. “சரி, நீ கண்ணு மூடு. அப்பத்தான் நான் கிஸ் பண்ணுவேன்,” என்று கீர்த்திகா சொல்ல, “எதுக்குடி கண்ணு மூடணும்?” என்று கேட்க, “எனக்கு வெட்கமா இருக்குடா. உன் முகத்தைப் பார்த்துட்டு நான் எப்படி முத்தம் கொடுக்கிறது? நீ கண்ணை மூடு. நீ என்னை குறுகுறுன்னு பார்த்துக்கிட்டே இருக்க,” என்று கீர்த்திகா சொல்ல, சிரித்தவன், “சரி,” என்று கூறி வேகமாக கண்களை மூடியவன், தன் உதட்டை முத்தம் கொடுப்பது போலக் கொடுத்து வைத்து அவளிடம் தன் முகத்தைக் கொண்டு வர…

சிரித்துக்கொண்டே அவன் முகத்தடியில் வந்தவள், அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு, “இப்போதைக்கு இது போதும்,” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

“அடிப்பாவி! இப்படி என்னை ஏமாத்திட்டியே!” என்று அவளைத் திட்டியவன், ‘வந்ததுக்குக் கன்னத்துலயாவது ஒரு கிஸ் கிடைச்சது. ‘மாட்டேன்’னு சொல்லாமல் அதையாவது கொடுத்துட்டுப் போனாளே! அதுவரைக்கும் சந்தோஷம்’ என்று நினைத்தவன் அங்கிருந்து சென்றான்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured