Home Uncategorizedஉன் ரகசிய ரசிகை நான் 55

உன் ரகசிய ரசிகை நான் 55

by Layas Tamil Novel
649 views

EPISODE 55

துர்காவைத் தனது ரூமிற்குத் தூக்கிக் கொண்டு வந்த ஆதி, அவளிடம் சரியாகப் பேசாமல் இருக்க, ஏன் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்று துர்கா ஆதியிடம் கேட்டாள். அவளால் தான் ஆதி கோபமாக இருப்பதாகச் சொன்னான்.

“என்னாலயா? நான் என்ன செய்தேன் ஆதி?” என்று துர்கா கேட்டதற்கு, “நீ என்ன செய்தாய் என்று உனக்குத் தெரியவில்லையா?” என்று கோபமாக அவளிடம் குனிந்தவன், “நான் ஏன் கோபமாக இருக்கிறேன் நிஜமாவே உனக்குத் தெரியலையா?” என்று துர்காவிடம் நெருங்கி பெட்டில் அமர்ந்தவன், படுத்திருந்த அவள் இருபுறமும் கையைப் போட்டு கேட்டான்.

துர்கா தன் மிக அருகில் நெருக்கமாக இருந்த ஆதியைப், இமைகள் பட்டாம்பூச்சி போலப் படபடக்கப் பார்த்து, ‘தெரியாது’ என்பது போலத் தலையை இட வலமாக அசைத்தாள்.

“நீதான் இங்கே வீட்டிற்கு வருவதற்கு முன் என்னோட ஹெல்ப் வேணாம் என்று சொல்லி, அங்கே உனக்கு டிரெஸ் மாற்றுவதற்கு உதவி செய்யவிடாமல் வேறு யாரையோ வைத்து மாற்றிக்கொள்ளச் சொல்லி என்னை வெளியே போகச் சொன்னியே. அதனால்தான் நான் இங்கேயும் அதே போல உன்னை டிஸ்டர்ப் பண்ணாம இருக்க ட்ரை பண்றேன். நீ அப்படி என்னை ஒதுக்கி வைப்பதனால்தான் நான் உன்மேல் கோபமாக இருக்கிறேன்” என்றான் ஆதி.

‘இதற்கெல்லாமா ஒருவன் நம்மிடம் கோபப்படுகிறான்?’ என்று ஆச்சர்யமாக ஆதியைப் பார்க்க. அவனோ நிமிடத்திற்கு ஒரு முறை முகபாவங்களை மாற்றிக்கொண்டு இருக்கும் துர்காவை ரசித்துக் கொண்டு, கோபமாக இருப்பவன் போல நடித்துக் கொண்டு ரசித்துக் கொண்டு இருந்தான் துர்காவை.

ஆதி கூறியதைக் கேட்டு, “நான் அப்படி எல்லாம் உன்னை ஒதுக்கவில்லை ஆதி. அது அது வந்து…. நான் டிரெஸ்…. நீ… என்னை கண்ணாடியில்…. அதனால் தான்….” என்று வார்த்தைகளை விழுங்கி விழுங்கி அவனிடம் பேசினாள்.

அவள் கூற வருவதைப் புரிந்துகொண்ட ஆதி, “அப்போ நீ வேணும்னே அப்படி செய்யலை, அப்படி தானே?” என்றான். அவளும் ‘ஆம்’ என்று தலையை ஆட்ட. “அப்போ என்னை நீ ஒதுக்கி வைக்கவில்லை, அப்படி தானே?” என்று அவன் கேட்க, துர்காவும் வேகமாக ‘ஆம்’ என்று தலையை ஆட்டினாள்.

“சரி, அப்போ நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நன்றாக அவள் அருகில் அவளை இடித்துக்கொண்டு அமர்ந்த ஆதி துர்காவையே பார்க்க.

“என்ன பேசணும் ஆதி?” என்றால் துர்கா. “நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறே?” என்று கேட்டான் ஆதி. “என்ன நினைக்கிறேன்னு புரியல ஆதி” என்றாள் துர்கா.

“நமக்குக் கல்யாணம் ஆகுறதுக்கு முன்ன வரை நான் உனக்கு ஒரு ஃப்ரெண்ட் ஆஹ் இருந்தேன். நமக்கு இப்போ கல்யாணம் ஆகிருச்சு. நீ உன்னோட கல்யாணம் இப்படி எல்லாம் நடக்கணும், உன்னை கல்யாணம் பண்ணிக்கிறவங்க இந்த மாதிரி இருக்கணும், இப்படி நடந்துகணும் என்று நிறைய ஆசை இருந்திருக்கும். ஆனால் திடீர் என்று என்னுடன் உனக்குத் திருமணம் ஆகிவிட்டது. அப்போ உன்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும்? நீ என்ன செய்வது என்று தெரியாமல் வேறு வழி இல்லாமல் என் அம்மாவின் வற்புறுத்தலினால் என்னை திருமணம் செய்து கொண்டாய். அது சரியோ தவறோ, நாம் இருவரும் திருமணம் என்றால் உறவுக்குள் வந்துவிட்டோம். நானும் நமக்குத் திருமணம் ஆன புதிதில் உன்னிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டேன். ஆரம்பத்தில் உன்னிடம் நானும், என்னிடம் நீயும் ‘இருவருக்கும் ஒத்து வராது, பிரிந்து சென்றுவிடலாம்’ என்றெல்லாம் ஏதோ ஒரு கோபத்தில் பேசிவிட்டோம். இனி அந்த மாதிரி எண்ணங்கள் இருவருக்குமே வேண்டாம் துர்கா… முதலில் நாம எப்படி நண்பர்களாக இருந்தோமோ அப்படியே இருக்க ஆரம்பிப்போம். பிறகு என்னை நீயும், உன்னை நானும் ஒருவர் பற்றி ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகு கணவன் மனைவி என்றால் பந்தத்திற்குள் செல்லலாம். அதுவும் உன் விருப்பம் இருந்தால் மட்டுமே. இல்லை என்றால் நாம் இருவரும் நண்பர்களாகவே இருக்கலாம்” என்றான்.

இவ்வளவு நேரமாக ஆதி பேசியதை எல்லாம் அதிசயம் போலக் கேட்டுக்கொண்டு இருந்த துர்கா. ஆதி கூறியதையெல்லாம் கேட்டவள் தன் மனதிற்குள் ‘அட மக்கு ஆதி, நமக்குக் கல்யாணம் ஆகிருச்சு டா… இன்னமும் நண்பர்கள் மாதிரி இருக்கலாம்னு சொல்ற. அப்புறம் என்கிட்ட ஏன் இவ்வளவு நெருக்கமா வந்து என் உணர்ச்சியைத் தூண்டி விடுறே. என்னைப் பார்த்தால் பாவமாக இல்லையா? நான் மட்டுமே உன்னைக் காதலிக்க வேண்டுமா? நீ எப்போது என் காதலை உணர்ந்து என்னைக் காதலிக்கப் போறே?’ என்று அவனை மனதிற்குள் கேள்விகளால் துளைத்துக்கொண்டு இருந்தாள்.

தான் இவ்வளவு கூறியும் எந்த ஒரு பதிலும் சொல்லாமல் துர்கா அமைதியாக இருப்பதைப் பார்த்த ஆதி. ‘துர்காவுக்குத் தன்னை முன்பு போல நண்பனாகக் கூற ஏற்றுக்கொள்ள மனமில்லை போல’ என்று எண்ணி வருத்தப்பட்ட ஆதி, அவள் அருகில் இருந்துத் தன் கைகளைப் பிரித்து எழுந்திருக்கப் போனான்.

அப்போது, “ஃப்ரெண்ட்ஸ்…” என்று துர்காவின் குரல் கேட்டது. துர்காவை நிமிர்ந்து பார்த்த ஆதி, துர்கா சிரித்த முகமாக அவனிடம் தன் கையை நீட்டி, “ஃப்ரெண்ட்ஸ்” என்று மறுபடியும் கூற. அவள் தன்னை நண்பனாக ஏற்றுக்கொண்டால் என்று எண்ணிய ஆதி, சந்தோசமாக அவள் கையைப் பிடித்து “ஃப்ரெண்ட்ஸ்” என்று குலுக்கினான்.

“நீ சொன்ன மாதிரியே இனிமேல் நாம ஃப்ரெண்ட்ஸ் ஆஹ் நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணுவோம் ஆதி. எனக்கு டபுள் ஓகே” என்றால் துர்கா சிரித்துக் கொண்டே.

ஆதியும் சந்தோசமாக துர்காவின் கைகளைக் குலுக்கியவன், அவள் தன்னிடம் நட்பாகப் பழக ஒத்துக்கொண்டால் என்று சந்தோசத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், துர்காவின் கன்னத்தில் எட்டி நச்சென்று ஒரு முத்தம் வைத்தான்.

அவன் முத்தம் வைத்ததும் அதிர்ச்சியுடன் பார்த்த துர்காவைப் பார்த்தவன், “என்ன துர்கா அப்படிப் பார்க்குற? ஃப்ரெண்ட்ஸ் தான், ஆனால் இது உன்னோட புருஷன்ங்குற உரிமையில கொடுக்கிறது. அதனால இதெல்லாம் நீ கண்டுக்கக் கூடாது, ஓகேவா?” என்று சிரித்தவனை ஆச்சர்யம் விலகாமல் பார்த்தாள் துர்கா.

அவள் கன்னம் கிள்ளி, “நான் மட்டுமே எப்போதும் உன்னிடம் உரிமை எடுத்துக் கொள்கிறேன். நீயும் என்கிட்ட உரிமை எடுத்துக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். நீயா உன்னோட உரிமையை என்கிட்ட எடுத்துக்கணும்னு நான் நினைக்கிறேன். டேக் யுவர் டைம்” என்றவன், மறுபடியும் அவள் இதழில் ஒரு முத்தத்தைப் பதித்து விட்டு, “சரி, தூங்கு துர்கா. காலையில் சீக்கிரம் கிளம்பனுமில்லையா” என்று அவளைப் படுக்க வைத்து போர்வையைப் போர்த்தி விட்டவன், லைட்டை அணைத்து விட்டு வந்து அவனும் படுத்துக்கொண்டான்.

வெளியில் சென்று வந்ததிலும், துர்காவுடன் செல்லமாக உரையாடியதிலும் துர்கா எழுதிய டைரியைப் படிக்க மறந்தே போனான் ஆதி. அதைப் படித்திருந்தால் இன்னும் அவனுக்குத் துர்காவின் மனம் தெளிவாகப் புரிந்திருக்குமோ என்னவோ… பின்னாளில் ஆதிக்கும் துர்காவுக்கும் இடையில் வரும் மனக்குழப்பத்திற்கும் ஒரு தீர்வாக அந்த டைரி இருந்திருக்கும்.


சங்கவியின் சதிவலை

ஆதி தன் குடும்பத்துடன் நாளை கும்பகோணம் செல்கிறான் என்று சங்கவியின் அப்பா மூலம் அவளுக்குத் தகவல் கிடைக்க.

தன்னை இந்த நிலைக்குத் தள்ளி விட்டு ஆதி மட்டும் அவன் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பது சங்கவிக்கு எரிச்சலாக இருந்தது. அவன் சந்தோசத்தையும், அவன் குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தவளாக, அவள் அப்பாவிடம் சொல்லி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வேதாசலத்துடன் பேசினாள்.

அப்போது அவள் ரூமிற்கு வந்த பங்கஜம், “ம்கூம்…. அப்பாவும் பொண்ணும் ஆரம்பிச்சுட்டாங்களா? அடுத்தவங்க குடும்பத்தை எப்படி எல்லாம் பிளான் போட்டு கெடுக்கலாம் என்றால் இவங்க ரெண்டு பேர் கிட்டத் தான் கேட்கணும். அப்படி என்னதான் கூடிக் கூடிப் பேசுறாங்களோ தெரியலை. நான் வந்தா மட்டும் அப்படியே அமைதி ஆகிட வேண்டியது” என்று முணுமுணுத்தவர், அவர்களுக்குக் கொண்டு வந்த பாலை வைத்துவிட்டு அறையை விட்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் சங்கவியும் அவள் அப்பாவும் சிறிது நேரம் பேசிவிட்டு, பாலைக் குடித்துவிட்டுத் தூங்கச் சென்றனர்.

அடுத்த நாள் சூரியன் உதிக்கும் முன்னரே, ஆதியும் ஆசான் குடும்பமும், துரையும் அவர் குடும்பமும் கும்பகோணம் கிளம்பினர். வெங்கடாசலத்தை வழுக்கட்டாயமாகத் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

கீர்த்திகாவும் அவள் குடும்பத்துடன் கும்பகோணம் வருவதற்க்கு விசாலாட்சி காரையும், டிரைவரையும் இரவே அனுப்பி இருக்க, அவர்களும் நேரமே கிளம்பி இருந்தனர்.

அனைவரும் கோவிலுக்கு வந்துவிட, இவர்களுக்காகச் செய்யப்பட்ட பூஜைக்கு நேரத்துடன் கலந்து கொள்ள அனைத்தையும் ஏற்கனவே தயாராக வைத்திருந்தனர், ஏற்கனவே கோவிலுக்கு வந்திருந்த வெங்கடாசலத்தின் வேலை ஆட்கள்.

கோவிலுக்கு வந்ததும் அவரவர் இறங்கி கோவிலுக்குள் செல்ல, துரையுடன் காரில் இருந்து இறங்கிய சிவு, ஆதியைப் பார்த்து கிட்டத்தட்டப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், அவனைக் காணும் ஆவலில், “அப்பா, நீங்க முன்னாடி போங்க. நான் ஆதி மாமாவை பார்த்துவிட்டு அவருடன் வருகிறேன்” என்று சொல்ல.

தன் மகள் வந்த வேலையைக் கச்சிதமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டாள் என்று எண்ணி சிவுவை நினைத்துப் பெருமை கொண்டவர், அவளை அனுப்பி வைத்துவிட்டு கோவிலுக்குள் சென்றார்.

ஆதி மாஸ்க் அணிந்து கொண்டு காரை விட்டு இறங்கியவன், துர்காவைச் சக்கர நாற்காலியில் தூக்கி அமர வைத்துக்கொண்டு கொண்டிருக்க, அப்போது சிவு ஆதி வந்த காருக்கு அவனைப் பார்க்க, அவளுடன் வந்தவள் அவன் மாஸ்க் அணிந்திருப்பதைப் பார்த்தவள், ‘என்ன மாமா மாஸ்க் போட்டிருக்காங்க’ என்று யோசித்தபடி அவனை நெருங்கியவள், “மாமா…” என்று துள்ளிக் குதித்து அவன் முன்னாள் வந்து நின்றவள் ஆதியைப் பார்க்க.

துர்காவைச் சக்கர நாற்காலியில் அமர வைத்து விட்டு நிமிர்ந்த ஆதி, சிவுவைப் பார்த்தவன் அவளை அடையாளம் கண்டு கொண்டு தன் மாஸ்க்கைக் கழட்டி விட்டு, அவளைப் பார்த்துச் சிரித்த முகமாகச் “சிவு” என்று ஆதி அழைக்க வர, அப்போது அவன் முகத்தில் தெரிந்த தழும்புகளும் கொப்புளங்களும் பார்த்த சிவு, முகத்தைச் சுளித்தவள், சிரித்த முகமாக இருந்த சிவுவின் முகம் ஆதியின் முகத்தை இப்படிப் பார்த்ததும் அப்படியே சுருங்கி விட்டது.

இதை நன்கு கவனித்த ஆதி, சட்டெனத் தன் முகத்தைச் சிவுவிடம் இருந்து மறைக்க மாஸ்கைப் போட்டுக்கொண்டவன். அவளிடம் தன் முகத்தைக் காட்டி அசிங்கப்பட விரும்பாமல் அவன் தன் முகத்தை மறைக்கத் திரும்பிக்கொள்ள, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த துர்கா ஆதியின் கையை ஆதரவாகப் பிடிக்க.

தன் கையை துர்கா பிடித்ததும் அவளை ஒரு முறை பார்த்தவன், பின் எதுவும் கூறாமல் துர்காவின் சேரைத் தள்ளிக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்.

உள்ளே செல்லும் ஆதியையே கேவலமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த சிவு, “ச்சீ… என்ன இது ஆதி முகம் இப்படி இருக்கு? அவன் கையில் கூட முகத்தில் இருந்தது போலவே இருக்கே” என்று யோசித்தவள். “இவன் என்ன இப்படி இருக்கிறான்? இவனைப் போய் எப்படி இந்த துர்கா கல்யாணம் பண்ணிக்கிட்டா? ஒருவேளை ஆதியிடம் இருக்கும் பணத்திற்காக அவனை கல்யாணம் பண்ணி இருப்பாளோ, இல்லை விசாலாட்சி அத்தை பணத்தைக் காட்டி அவளை விலைக்கு வாங்கி இருப்பாங்களோ. இவ இருக்க அழகுக்கு ஆதியை கல்யாணம் பண்ண எப்படி சம்மதம் சொன்னாள்?” என்று தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்க, “நீ சொல்வது, யோசிப்பது எல்லாமே சரி தான். அந்த துர்கா ஆதியின் பணத்திற்காகத் தான் அவனை கல்யாணம் பண்ணி இருக்கா. வேற எந்த ஒரு நல்ல எண்ணத்திலும் இது எல்லாம் நடக்கவில்லை” என்று ஒரு குரல் சிவுவின் அருகில் கேட்டது.

தான் பேசியதைச் ‘சரி’ என்று சொல்வது யார் என்று திரும்பிப் பார்க்க, அவள் அருகில் நின்றிருந்தவரை ‘யார்’ என்று அடையாளம் தெரியாமல் அவரை மேலும் கீழும் பார்த்தாள் சிவு.

“என்ன, என்னைப் அப்படிப் பார்க்குறீங்க? என்னை யார் என்று தெரியாமல் தானே அப்படிப் பார்க்குறீங்க. நான் எதுக்கு நீங்க சொன்னது சரிதான்னு சொன்னேன்னு யோசிச்சுட்டு தானே என்னைப் பார்க்கிறீங்க. உங்களுக்கு எப்படி அந்த துர்காவை பிடிக்கவில்லையோ, எனக்கும் அதே தான். அந்த துர்காவைத் துளியும் பிடிக்கவில்லை. நீ எப்படி அவள் ஆதியின் பணத்திற்காகத் தான் அவனைத் திருமணம் செய்து இருக்கிறாள் என்று நினைக்கிறாயோ…. நானும் அப்படித் தான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

“இதெல்லாம் நீங்க எப்படிச் சரியா சொல்றீங்க? என்னைப் போலவே நீங்க ஏன் துர்காவைக் கண்டாலே பிடிக்கலைனு சொன்னீங்க?” என்று சந்தேகமாகக் கேட்ட சிவுவிடம்.

“சாரி… நான் வந்ததில் இருந்து என்னை நானே இன்ட்ரோட்டியூஸ் பண்ணவில்லை. ஹாய்” என்று சிவுவின் முன் கை நீட்டி, “ஐயம் சங்கவி” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

You may also like

Leave a Comment

About Me

லயாஸ் தமிழ் நாவல் தளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்.
இந்த தளத்தில் எழுதப்படும் கதைகள் அனைத்தும் கற்பனையே.
மிதமிஞ்சிய ரொமான்ஸ் நிறைந்த காதல் கதைகளை இந்த தளத்தில் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். எனது கதைகளை களவாட நினைப்பாவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Featured