News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

என்னோட உழைப்புக்கு நீ கொடுத்த கிப்ட் மூர்க்கன் 48

by Layas Tamil Novel
284 views
A+A-
Reset

மூர்க்கன் 48

கேமரா நொறுங்கி, லேப்டாப் திரை சட்டென கருமையாக மாறிய கணத்தில், ரக்ஷணாவின் கைகள் விசைப்பலகையின் மீது இறுகின. விசைப்பலகையின் பிளாஸ்டிக் பொத்தான்கள் உடையும் அளவுக்கு அவளது விரல் நகங்கள் அதில் அழுந்தின.

திரையில் ஈஸ்வரின் முகம் மறைந்திருந்தாலும், “அடுத்து நீ தான்…” என்ற ஈஸ்வரின் இறுதி எச்சரிக்கை இன்னும் அவளது காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அறைக்குள் நிலவிய மயான அமைதியில், அந்த எச்சரிக்கை அவளது ரத்த நாளங்களில் ஆத்திரத்தை ஏற்றியது.

ஆனால், அவள் முகத்தில் பயத்தின் சுவடு கூட இல்லை; மாறாக, ஒரு கொடூரமான, வக்கிரமான புன்னகை அவள் இதழ்களில் அரும்பியது.

தன் ஒரே தம்பி மோகன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததையும், பல கோடி ரூபாய் செலவில் தான் பார்த்துப் பார்த்து உருவாக்கிய அதிநவீன லேப் தவிடுபொடியானதையும் நேரலையில் பார்த்த பின்பும், அவளால் எப்படி இவ்வளவு நிதானமாக, அசைவற்று இருக்க முடிகிறது என்பது அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த அவளது அடியாட்களுக்கே புரியாத புதிராகவும், அதே சமயம் பெரும் பயத்தையும் தந்தது.

சாய்வு நாற்காலியில் இன்னும் அழுத்தமாகப் பின்னோக்கி அமர்ந்தவள், தன் இடது கையில் இருந்த ஒயின் கிளாஸை மெதுவாகச் சுழற்றினாள். அந்தச் சிவப்பு நிற ஒயின், தன் தம்பியின் உடலிலிருந்து வழிந்த ரத்தத்தைப் போலவே அவளுக்குக் காட்சியளித்தது.

“ஈஸ்வர்… என் தம்பியை சாகடிச்சிட்டு, என் லேப்பையும் அழிச்சிட்டு, இப்போ என்கிட்டயே வந்து சவால் விடுறியா? உன் ஆட்டம் இன்னும் கொஞ்ச நாள் தான். மித்ராவை மீட்ட சந்தோஷத்துல மிதக்குற உனக்கு, இன்னும் சில நாட்கள்ல நீ அழப்போற அழுகை சத்தம் உன் குடும்பத்தையே அதிர வைக்கப் போகுது. சீக்கிரமே உங்க எல்லாரோட கதைக்கும் நானே என் கையால தான் முடிவு கட்டப்போறேன். அப்போ தெரியும் இந்த ரக்ஷணா யாருன்னு, அவளோட விஸ்வரூபம் என்னன்னு!” என்று தனக்குள்ளே வன்மத்தோடு பற்களைக் கடித்தபடி முணுமுணுத்தாள்.

அவளது ஆத்திரத்தின் வேகம் தாங்காமல், கையில் இருந்த ஒயின் கிளாஸ் மேஜையின் மீது ஓங்கி வைக்கப்பட, அதிலிருந்து சிதறிய ஒயின் துளிகள் அவளது முகத்தில் தெறித்தன. அதைத் துடைக்கக் கூட முற்படாமல், அவள் கண்கள் மீண்டும் லேப்டாப் திரையை நோக்கின. விரல்கள் விசைப்பலகையில் அதிவேகமாகச் செயல்பட, அடுத்த டேப் பக்கத்திற்குத் திரை மாறியது.

அங்கே, மற்றொரு ரகசிய சிசிடிவி கேமராவின் நேரலைக் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

அது ஒரு அழகான, பனி மூடிய மாலை நேரம். உலகத்தின் எந்தப் பக்கத்தில் என்ன கலவரம் நடந்தால் நமக்கென்ன என்பது போல், தங்களின் தனி உலகத்தில், தேனிலவுக்காக உலகத்தையே மறந்து, தங்களுக்குரிய காதலில் மகிழ்ச்சியாக வலம் வந்துகொண்டிருந்தனர் ராவணும் இளங்கிளியும்.

பனிப்பொழிவுக்கு நடுவே இளங்கிளியின் கைகளைப் பற்றி இழுத்து, அவள் நெற்றியில் ராவண் முத்தமிடும் காட்சி திரையில் மிகத் துல்லியமாக, உயர் தரத்தில் தெரிந்தது.

அவர்களின் அந்த நிம்மதியான, மகிழ்ச்சியான முகங்களைப் பார்த்ததும் ரக்ஷணாவின் முகம் சுருங்கி, கண்கள் சிவந்தன. கோபத்தில் அவளது தாடை எலும்புகள் இறுகின. தன் தம்பியை இழந்து தான் இங்கே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது, அவன் குடும்பம் மட்டும் சொர்க்கத்தை அனுபவிப்பதா என்ற எண்ணம் அவளது மூளையைக் குடைந்தது.

“ராவணும் அவன் பொண்டாட்டியும் சந்தோஷமா இருக்கப்போற கடைசி நாட்கள் இதுதான்! உன்னை எப்படி வதைக்கணும், எந்த இடத்தில் அடித்தால் நீ துடிதுடித்துச் சாவாய்னு எனக்கு நல்லா தெரியும். உன் குடும்பத்தோட சந்தோஷத்தை ஒவ்வொண்ணா நான் எப்படி சிதைக்கிறேன்னு மட்டும் பொறுத்திருந்து பாரு!” என்று திரையை உற்றுப் பார்த்துக் கூறினாள்.

அப்போது அவளது அறைக்கதவு மெதுவாகத் திறக்கப்பட, அவள் முக்கிய அடியாளான மதன் பயந்தபடியே உள்ளே வந்தான். “மேடம்… மோகன் சார் பாடி அங்கேயே…” என்று அவன் இழுக்க…

“அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை மதன்!” என்று கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள் ரக்ஷணா. அவள் குரலில் இருந்த நிதானம் மதனின் முதுகெலும்பில் குளிரைக் கடத்தியது.

“நம்ம ஆட்கள் நாலு பேரை உடனே அந்த ஐலாண்டிற்கு அனுப்பு. ராவணும் இளங்கிளியும் அங்கே எந்த ஹோட்டல்ல தங்கியிருக்காங்க, அவங்களோட நடமாட்டம் என்னங்கிற முழு விபரமும் எனக்கு அடுத்த ஒரு மணி நேரத்துல வேணும். அவங்க போற வர்ற பாதையில நம்ம ஆட்கள் கழுகுப் பார்வையோட காத்துட்டு இருக்கணும். நான் சொல்ற அந்த ஒரு நொடியில, அவங்க ரெண்டு பேரோட சந்தோஷமும் அங்கையே முடியணும்!” என்று கட்டளையிட்டாள்.

“சரிங்க மேடம், இப்போவே ஆட்களைக் கிளப்புறேன்” என்று மதன் வேகமாக வெளியேறினான்.

அவள் கண்கள் மீண்டும் திரையில் இருந்த ராவண் மற்றும் இளங்கிளியின் மீது வன்மத்தோடு நிலைத்து நின்றன. அந்தப் பனிப்பொழிவிலும் அவர்களின் காதல் அவளுக்கு அனலாய் சுட்டது. அடுத்த வேட்டைக்கான கொடூரமான திட்டத்தை, அந்த இருள் சூழ்ந்த அறைக்குள் தன் மனதில் மிக நுணுக்கமாகத் தீட்டத் தொடங்கினாள் ரக்ஷணா.

மறுபுறம், அந்த அழகிய தீவின் பனி படர்ந்த மாலைப் பொழுது, ராவணுக்கும் இளங்கிளிக்கும் ஒரு தேவலோகத்து அனுபவத்தைத் தந்து கொண்டிருந்தது. ஒருவரையொருவர் உணர்ந்து சந்தோசமாக ஒவ்வொரு தருணங்களையும் அனுபவித்துத் திளைத்திருந்தனர்.

அன்று இரவு, ராவண் அவள் கரங்களை மென்மையாகப் பற்றிக்கொண்டு, அந்தத் தீவின் மற்றொரு பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான். அது அலைகளின் ஓசையும், பனிமலையின் குளிர்ச்சியும் ஒருசேரச் சங்கமிக்கும் ஒரு பிரம்மாண்டமான பள்ளத்தாக்கு.

சுற்றிலும் மின்மினிப் பூச்சிகளைப் போல எரியும் சிறிய வண்ண விளக்குகள், பாறைகளின் மீது பட்டுப் பிரதிபலிக்க, அந்த இடமே ஒரு மாயாஜால உலகம் போலக் காட்சியளித்தது. இயற்கை தன் கைகளால் செதுக்கிய அந்த அழகைக் கண்டு இளங்கிளி வியப்பில் வாய் பிளந்தாள். அந்த ரம்மியமான சுற்றுச் சூழல் இரவில் விளக்கொளியில் அந்த தீவும் அதை சுற்றி இருந்த அழகையும் ரசித்தவள். அங்கே இருந்த வில்லாவையும்  ஆசையாக பார்த்தவள்

“என்னங்க… என்ன இது? இவ்வளவு அழகான ஒரு இடத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை!” என்று அவள் கண்கள் மின்ன, பரவசத்தோடு கூறினாள்.

அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட ராவண், “உன் மனசை விட, உன் அழகை விட இந்த உலகத்துல வேற எதுவுமே அழகு இல்லை டி. ஆனா, இந்தத் தீவோட இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உன்கூட இங்க வந்து, நம்ம மனசுல இருக்கிற அத்தனை காதலையும் பேசணும்னு நினைச்சேன்,” என்றான் அவன் குரலில் காதலின் கனம் ததும்ப.

இருவரும் அங்கிருந்த ஒரு மர இருக்கையில் அமர்ந்து, குளிர்காற்றின் நடுவே ஒருவரையொருவர் தழுவியபடி பேசத் தொடங்கினர். வார்த்தைகளை விட, அவர்களின் மௌனமும் மூச்சுக்காற்றுமே அதிகக் கதைகளைப் பேசின.

“எனக்கு இந்த நொடியே இப்படியே உறைஞ்சு போயிடக் கூடாதான்னு இருக்குங்க. உங்க கூட சேர்ந்து இந்தக் குளிரை ரசிக்கிறதுல கிடைக்கிற சுகமே தனி,” என்று அவன் தோளில் முகம் புதைத்தாள்.

“என்ன டி.. இன்னிக்கு ஒரு மார்க்கமா பேசுற..” என்று அவள் தலையைக் கோதி, நெற்றியில் இதழ் பதித்தான் ராவண்.

“தெரியல பேச தோணுதே.. இந்த இடம் அப்படி போல.. மனசுல இருக்கறதை எல்லாம் அப்படியே சொல்ல வைக்குது.. ” என்று சிரித்தாள்.

தன் மடியில் படுத்திருந்தவளை மென்மையாக அணைத்த படி ராவண் அமர்ந்து இருக்க.. இருவரும் கதை பேசிக்கொண்டே.. அந்த எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.

அவனோடு பேசிக்கொண்டிருந்த இளங்கிளி மெல்லிய குளிர் காற்றின் தீண்டலில் தன்னையும் மறந்து உறங்கி விட்டாள்.

நேரம் நள்ளிரவை நோக்கி நகர்ந்தது. மணி சரியாகப் பன்னிரண்டைத் தொட்ட கணத்தில், ராவண் மெல்ல எழுந்து, அங்கே இருந்த வீட்டிற்குள் நுழைந்தவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன். அந்த மேஜையில் தூங்கிக்கொண்டிருந்தவளை மெல்ல காதருகே குனிந்து “சிணுங்கி.. எழுந்திரு.. ” என்று அவளை எழுப்பினான்.

கண்களை சுருக்கிக்கொண்டு எழுந்தவன் “தூங்கிட்டேனா?” என்றாள்.

“ம்ம்ம்.. ஆமா டி..” என்றவன் சட்டென்று அவளை அள்ளி அணைத்து தன் கைகளில் ஏந்தியவன். “உள்ள போலாமா?” என்றான்.

“என்னங்க என்ன பண்றீங்க?” என்று இளங்கிளி சிரித்துக்கொண்டே அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்டாள்.

“உன்னை தான் பண்ண போறேன்” என்று அவளை நெருங்கி அவள் இதழ்களில் முத்தம் கொடுத்துக்கொண்டே அந்த வில்லாவிற்குள் நுழைந்தான் . அங்கே ஏற்கனவே அவன் ஏற்பாடு செய்திருந்த மேஜையின் முன்னால் நிறுத்தினான் இளங்கிளியை.

அங்கே ஒரு அழகான வெண்ணிற பனிப்பொழிவு போன்ற தீமில் வடிவமைக்கப்பட்ட கேக் இருந்தது. அதில் “ஹேப்பி பர்த்டே என் கிளி” என்று எழுதப்பட்டிருந்தது.

“இந்த உலகத்துல நான் உன்னை அடைஞ்சதுக்கு அப்புறம் வர்ற உன்னோட முதல் பிறந்தநாள். இதை நம்ம ரெண்டு பேர் மட்டும், இந்த இயற்கையோட சாட்சியா கொண்டாடணும்னு நினைச்சேன்,” என்றான் ராவண்.

இளங்கிளியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தது. “எனக்கே என் பிறந்தநாள் ஞாபகம் இல்லைங்க… இதுவரை கொண்டாடினதும் இல்லை நான். ஆனா நீங்க எனக்காக…” என்று வார்த்தைகள் வராமல் தவித்தவள், அவனது காதலில் கரைந்து உருகினாள்.

“இருவருமாகச் சேர்ந்து கேக்கை வெட்டி, ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.

அப்போது ராவண் தன் கோட் பையிலிருந்து ஒரு சிறிய, விலைமதிப்பற்ற வைர நெக்லஸ் அடங்கிய பெட்டியை எடுத்தான். “இது என் சிணுங்கிக்கு என்னோட பிறந்தநாள் பரிசு,” என்று அதை அவளுக்குக் கொடுக்க நீட்டினான்.

ஆனால் இளங்கிளி அந்தப் பரிசை வாங்கிக் கொள்ளாமல், ராவணின் கண்களை ஆழமாக நோக்கினாள். அவளது முகத்தில் ஒரு புதிய பிரகாசமும், அதே சமயம் ஒருவித நாணமும் கலந்திருந்தது.

“உங்க பரிசு இருக்கட்டும் ராவண்… ஆனா, இந்தத் தருணத்துல, உங்களோட ஆயுசுக்கும் மறக்க முடியாத, இந்த உலகத்திலேயே யாரும் உங்களுக்கு கொடுக்காத ஒரு பரிசை நான் உங்களுக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதை முதல்ல நீங்க வாங்கிக்கணும்,” என்றாள்.

ராவண் குழப்பத்துடன், “நீயா? எனக்குப் பரிசா? என்ன சொல்ற சிணுங்கி? உன்னோட பர்த்டே இது .நான் தானே உனக்கு கிப்ட் கொடுக்கணும். ஆனா நீ என்ன எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்குற..” என்றான்.

இளங்கிளி தன் பின்னால் மறைத்து வைத்திருந்த ஒரு சிறிய, நீள வடிவப் பெட்டியை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள். “இதை ஓபன் பண்ணிப் பாருங்க…” என்று அவள் இதயம் படபடவென அடிக்க, ஆவலோடு ராவணின் முகத்தையே பார்த்தாள்.

ராவண் விந்தையாக அவளைப் பார்த்தபடியே, அந்தப் பெட்டியை மெதுவாகத் திறந்தான். அதற்குள் இருந்த பொருளைப் பார்த்த அடுத்த நொடி… அவனது ஒட்டுமொத்த உலகமும் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது போல் இருந்தது.

அங்கே இருந்தது ஒரு பிரெக்னன்சி டெஸ்ட் ஸ்டிக் . அதில் இரண்டு சிவப்பு நிறக் கோடுகள் மிகத் தெளிவாக, அழுத்தமாகத் தெரிந்தன!

அவன் கண்கள் சட்டென அகல விரிந்தன. இதயத் துடிப்பு மும்மடங்காக எகிறியது. திரண்டிருந்த கண்ணீர் அவனது விழியோரங்களில் கசிந்தது. தன் வாழ்நாளில் எதற்கும் அசையாத அந்த வீரன், அந்த இரண்டு கோடுகளைப் பார்த்ததும் அப்படியே உறைந்து போனான்.

“கிளி… இது… இது நிஜமாவே…?” என்று அவனால் வார்த்தைகளை முழுமையாக உச்சரிக்கக் கூட முடியவில்லை. அவன் குரல் சந்தோஷத்தின் உச்சத்தில் நடுங்கியது.

இளங்கிளி கண்களில் கண்ணீர் வழிய, தலை அசைத்து, “ஆமாங்க… நம்ம காதலோட அடையாளம்… உங்களுக்குள் நான், எனக்குள் நீங்கன்னு இருந்த நம்ம வாழ்க்கையில, இப்போ நமக்குள்ள ஒரு உயிர் உருவாகியிருக்கு. நான் அம்மாவாகப் போறேன்… நீங்க அப்பாவாகப் போறீங்க!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினாள்.

அந்த வார்த்தைகள் ராவணின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. அவனுள் ஏற்பட்ட அந்தப் பேரானந்தத்திற்கு இந்த உலகத்தில் எந்த ஒரு சொல்லும் ஈடாகாது. ஒரு குழந்தையைப் போலத் துள்ளிக் குதித்தவன், அடுத்த கணமே இளங்கிளியை ஆவேசமாகவும், அதே சமயம் பூவைப் போல மென்மையாகவும் தன் பலமான கரங்களால் இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவள் உடலின் வெப்பம் ராவண் நெஞ்சில் இறங்கியது. அவளது நெற்றியில், கண்களில், கன்னங்களில் எனத் தன் ஒட்டுமொத்தக் காதலையும், நன்றியையும் முத்தங்களாகப் பொழிந்தான். அந்த இரவின் குளிர்ச்சி அவர்களைச் சுற்றிலும் தழுவிக் கொண்டிருக்க, ராவண் அவள் நெற்றியில் நீண்ட, ஆழமான முத்தம் ஒன்றை அழுத்தமாகப் பதித்தான்.

“என்னோட உழைப்புக்கு நீ கொடுத்த கிப்ட் டி இது..” என்று அவள் கண்ணங்களை பற்றிக்கொண்டு சிரித்தான்.

இருவரும் தங்களின் புதிய உலகத்தின் தொடக்கத்தை அந்தப் மலையின் உச்சியில், அளவற்ற மகிழ்ச்சியோடு கொண்டாடினர். தங்களைச் சுற்றிப் பின்னப்பட்டுக் கொண்டிருக்கும் ரக்ஷணாவின் வன்ம வலைகளைப் பற்றிய எந்த ஒரு சிந்தனையுமின்றி, தங்களின் வரவிருக்கும் புதிய உயிருக்கான கனவுகளில் அவர்கள் மூழ்கியிருந்தனர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.