News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

எனை மாயம் செய்யும் ராட்சசன் 5

by Layas Tamil Novel
291 views
A+A-
Reset

EPISODE 5

காலேஜிற்கு சேர்ந்த மறுநாளே  மீனு,பூஜா இருவரும் லீவ் போட்டுவிட்டு அவர்கள் பெரியப்பா வீட்டிற்கு சென்றனர்.

குரு  பதட்டமாக  தன் அண்ணன் வீட்டிற்கு கிளம்பினார். சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு ரயில்  வழியாக பயணம் செய்து இரண்டே முக்கால் மணி நேரத்தில் ஸ்டேஷனுக்கு வந்து இறங்கினர்.

அவர்கள் ஸ்டேஷனுக்கு வரும் பொழுதே குருவின் அண்ணன் பரமன் வீட்டில் இருந்து கார் அவர்களுக்காக காத்திருந்தது.

நால்வரையும் அழைத்துக் கொண்டு பருமனின் டிரைவர் அவர்கள் வீட்டிற்கு சென்றான்.

பரமன் குரு இருவருமே சேர்ந்து முதலில் சென்னையில்தான் கட்டுமான பணிகளுக்கான பிசினஸை தொடங்கியிருந்தனர். பிறகு நாளடைவில் அது நன்கு வளர்ச்சி அடைந்திருக்க அதனுடைய கிளைகளை மற்ற ஊர்களில் திறக்க வேண்டும் என முடிவு செய்து சென்னைக்கு அருகில் இருக்கும் காஞ்சிபுரத்தில் குருவிற்காக தனியாக ஒரு கிளையை திறந்து அதை பார்த்துக் கொள்ள குருவை நியமித்திருந்தார்.

அன்றிலிருந்து இருவருமே அவரவர்களுக்கான வேலையை தனித்தனியே பார்க்க ஆரம்பித்தனர். முதலில் கிளையாக பிரிந்து இருந்த அலுவலகத்தை தன் தம்பியின் கடின உழைப்பை மனதில் கொண்டு அவருக்கு அதை முழுவதுமாக கொடுத்துவிட்டார் பரமன்.

இருவருமே தனித்தனியாக பிசினஸில் ஆரம்பித்து அவரவர் வழியில் கொடி கட்டி பறந்து கொண்டு இருக்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் வசதியில் சளைத்தவர்கள் அல்ல… குருவின் தொழில் காலப்போக்கில் பரமனை விட அதிகமாக பிரபலமடைய அதை பொறுத்துக் கொள்ள முடியாத பரமனுடைய மனைவி சாந்தா குருவின் வீட்டிற்க்கே வந்து “எங்களால்தான் இவ்வளவு வசதியான வாழ்க்கை உனக்கு அமைந்திருக்கிறது” என அவரை அவரிடம் சண்டை இட்டு அந்த தொழிலுக்கான உரிமைத்தையும் தனக்கு எழுதி வாங்கிக் கொண்டார்.

அன்றிலிருந்து குரு பரமனின் பிசினஸ் விஷயத்தில் எதிலுமே தலையிட்டுக் கொள்வதில்லை எவ்வளவோ முறை பரமன் தன்னுடைய தொழிலை பார்த்துக் கொள்ள குருவை அழைத்தாலும் தன் அண்ணி சாந்தாவின் விஷப் பேச்சுக்களை தாங்கிக் கொள்ள இனி மேலும் முடியாது என அதை மறுத்துவிட்டார்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து தனியாக மீனு கன்ஸ்ட்ரக்ஷன்ஸை தன் மனைவியின் நகைகளை எல்லாம் வைத்து தன்னுடைய கட்டுமான தொழிலை ஆரம்பித்தார். அவர் உழைப்பு வீண் போகவில்லை நாளடைவில் அவருடைய கன்ஸ்ட்ரக்சன்ஸ் பிசினஸில் மெல்ல மெல்ல வளர்ந்து உயர்ந்தது .

என்னதான் வசதி வாய்ப்புகள் என இருந்தாலும் குரு அவர் பிள்ளைகளையும் தன் மனைவியையும் சாதாரண வாழ்க்கையையே வாழ வைத்தார். குருவும் மிகவும் எளிமையாக தான் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே செய்து கொள்ளவும்  யாரையுமே எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதையும்  தன் குடும்பத்திற்கு கற்றுக் கொடுத்தார்.

இன்று வரை அதுபோலத்தான் இவர்கள் நால்வருமே மிகவும் எளிமையாக வாழப் பழகி இருந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தன் அண்ணனின் வீட்டிற்கு குரு அவர் குடும்பத்துடன் வர..

வாசலிலேயே நீண்ட நேரமாக தன் தம்பிக்காக காத்திருந்த பரமன் அவருடைய கார் வந்து நின்றதும் வேகமாக வந்து கார் கதவை திறந்து  வெளியே வந்த குருவை அணைத்துக் கொண்டு “குரு எப்படி டா இருக்க? நல்லா இருக்கியா? உன்ன பாத்து எவ்வளவு வருஷம் ஆச்சு” என தழுதழுக்க தன் தம்பியின் உடல் நலம் பற்றி விசாரித்தார்.

“நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றார் குரு..

“இருக்கேன் பா..” என்று சாதாரணமாக பதில் அளித்துவிட்டு அதன் பின்பு காரிலிருந்து இறங்கிய ஜனனி,மீனு, பூஜா மூவரையும் பார்த்து அவர்களின் நலம் விசாரித்தவர். மீனு பூஜாவிடம் ” என் தம்பி பொண்ணுங்க இவ்வளவு பெரிய ஆளுங்களா வளர்ந்துட்டாங்களா? ” என ஆச்சரியமாக கேட்டார்.

“ஆமா நீங்க பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியா இன்னமும் நாங்க இருப்போம் . நாங்க எவ்வளவு பெருசா வளர்ந்துடும் பாத்தீங்களா பெரியப்பா “என பூஜா சிரித்த முகமாக அவரிடம் பேச…

!இன்னமும் உனக்கு இந்த துடுக்குத்தனம் போகலையா?” என சொல்லி பூஜாவின் தோளை தட்டிக் கொடுத்தவர் “மீனுவை பார்த்து மீனு வாடா… நல்லா இருக்கியா? உன் படிப்பு எல்லாம் எப்படி போகுது” என்றார்.

” பெரியப்பா நான் நல்லா படிக்கிறேன் எனக்கு பிடித்த படிப்பு தான் எடுத்து படிச்சிட்டு இருக்கேன்” என்றாள் மீனு.

“சரி வந்தவங்கள்ல வாசலிலேயே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன். வாங்க எல்லாரும் உள்ள போகலாம்” என்று சொல்லி” ஜனனி வாமா உள்ளே “என அவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல..

சிரித்து முகமாக அனைவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் வரவும் அங்கே பரமனின் மனைவி சாந்தா இவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஒரே குடும்பமாக பேசி சிரித்து வருவதை பார்த்து எரிச்சல் அடைந்தவர்,” வந்துட்டாங்க எப்படா இந்த வீட்டுக்கு வரணும்னு வாய்ப்பு கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்திருப்பாங்க போல காரணம் கிடைச்சது முதல் ஆள கிளம்பி வந்தாச்சு “என அவர்கள் முகத்தில் அடித்தார் போல பேச.

“ஏய் சாந்தா வாய மூடு தேவை இல்லாம வார்த்தையே வளர்க்காத வந்தவங்களுக்கு குடிக்க எதுவும் கொண்டு வா போ ”என அவரை பரமன் அதட்ட.

” என் வாயை மட்டும் அடக்குங்க.நான் சொல்றத என்னைக்கு தான் நீங்க கேட்டு இருக்கீங்க ” என புலம்பிக்கொண்டே அவர் கிச்சனுக்கு செல்ல.. அவரின் குணம் அதுதான் என அனைவருக்கும் தெரிந்ததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் வந்து  அமர்ந்தனர்.

அப்போதுதான் தன் அறையில் இருந்து வந்த ரியா ஹாலில் தன் சித்தப்பா குடும்பம் அமர்ந்திருப்பதை பார்த்ததும் வேகமாக அவர்களிடம் ஓடி வந்து” சித்தப்பா எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க? ” என்றால் ரியா. ” இப்போதாண்டா வரும் உனக்கு கல்யாணம் வச்சத இப்படித்தான் எங்களுக்கு சொல்லுவீங்களா? சித்தப்பா உன் மேல கோபமா இருக்கேன்” என்றார் குரு.

அவர் கல்யாணம் என்று சொன்னதுமே சிரித்து முகமாக இருந்த ரியாவின் முகம் கருத்து விட்டது. ரியா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க.. அதை கவனித்து விட்டு ஜனனி ”  கல்யாணம்னு சொன்னதும் ஏன் உன் முகம் இப்படி மாறிடுச்சு” என்று கேட்டார்.

”சித்தி அது வந்து… இந்த கல்யாணத்துல… ” என ரியா ஏதோ சொல்ல வர அதற்குள் குறுக்கே புகுந்த பரமன் 

“அதுவா என் பொண்ணுக்கு திடீர்னு கல்யாணம் முடிவானதும் அவளுக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு.அதனால தான் அவன் முகம் அப்படி இருக்கு” என்று சொல்லி  ரியாவை பார்த்து கண்களால் ஏதோ ஜாடை செய்ய..அதன் பிறகு ரியா எதுவும் பேசாமல் அமைதியானாள்.

” இப்படியே என் பொண்ண பேசிப்பேசி ஏதாவது சொல்லி அவ வாயை அடைச்சிடுங்க. நீங்க பண்ணுன காரியத்துக்காக என்னோட பொண்ணோட வாழ்க்கை தான் இப்போ அந்தரத்துல ஊஞ்சலாடுது” என்று கையில் காபி கப்புடன் அங்கே வந்தார் சாந்தா.

“சாந்தா உனக்கு எதுவும் தெரியாது உன் வாய மூடு வந்த வேலை என்னவோ அதை பார்த்துட்டு நீ உள்ளே போ… நடந்த அத்தனையும் உன்னால வந்ததுதான் நீ மட்டும் ஒழுங்கா நான் சொன்னபடி நடந்திருந்தா இவ்வளவு கஷ்டம் நமக்கு வந்து இருக்காது ” என்றார்.

அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குருவிற்கு ஜனனிக்கும் எதுவுமே புரியவில்லை. குரு தன் அண்ணனிடம்” அண்ணா என்ன பேசுறீங்க எனக்கு எதுவுமே புரியல இந்த கல்யாணத்தில் எதுவும் பிரச்சினை இருக்கா? இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா? ” என்று வெளிப்படையாக கேட்டார் குரு.

“ஒன்னும் இல்ல குரு அவ ஏதோ உளறிட்டு இருக்கா.. அதை கேட்டுட்டு நீ எதுவும் யோசிக்காத” என்று அவர் ஏதோ சொல்லி சமாளிக்க கூற…

“என்ன நான் உளறிட்டு இருக்கேனா?கிட்டத்தட்ட கோடிக்கணக்கில் கடனை வாங்கி வச்சிட்டு அதை திருப்பி கட்ட முடியாம அத சரி செய்யறதுக்காக என் பொண்ணு வாழ்க்கையை நீங்க அந்த ரியல் எஸ்டேட்காரன் கிட்ட அடமானம் வச்சுட்டீங்க. இப்போ என் பொண்ணோட வாழ்க்கை தான் வீணா போயிடுச்சு உங்ககிட்ட இருந்து தொழில் கத்துட்டு போனவங்க எல்லாம் இன்னிக்கி ஆகா ஓகோன்னு கொடி கட்டி பறக்கிறாங்க… அவங்க எல்லாம் நல்லா வசதி வாய்ப்போட இருக்காங்க.  ஆனா நீங்க மட்டும் உங்க கௌரவத்தை குறைக்க கூடாதுன்னு யாருகிட்டயும் வாய் திறந்து எதையும் கேட்கிறதில்லை.அதனால் தான் இன்னைக்கு என் பொண்ணு இந்த ரியல் எஸ்டேட்காரன் பையன கல்யாணம் பண்ணிக்க போறா…” என புலம்பினார் சாந்தா .

சாந்தா சொன்னதை கேட்டு அதிர்ந்த குரு “அண்ணி என்ன சொல்றாங்க? அண்ணா நீங்க கடன் வாங்கி இருக்கீங்களா?அந்த கடனை அடைக்க தான் நம்ம ரியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறீங்களா? ” என்று கேட்டார்.

அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பரமன் தலை குனிந்து அமர்ந்திருக்க…

“சொல்லுங்க அண்ணா நீங்க எவ்வளவு கொடுக்க வேண்டி இருக்கு கடனுக்காக நம்ம பொண்ணோட வாழ்க்கையை இப்படி அடமானம் வைக்கலாமா? சொல்லுங்க எவ்வளவு கொடுக்கணும் அத நான் கொடுக்கிறேன்” என்றார் குரு.

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் என்னோட கஷ்டம் என்னோட போகட்டும். நீ வீனா இதுல தலையிட்டு பிரச்சனையில் மாட்டிக்காத. அந்த ரியல் எஸ்டேட் காரன் லேஸ்பட்டவன் கிடையாது.  அவன சமாளிக்க வேற வழியே தெரியாமத்தான் நான் என் பொண்ண அவனோட பையனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேனு ஒத்துக்கிட்டேன் ”என்றார்.

“ஏங்க சொல்ல வந்தது முழுசா சொல்லுங்க அந்த ரியல் எஸ்டேட்காரனோட பையனுக்கு ரெண்டு காலும் வராது அவனே வீழ்ச்சேர்ல தான் வாழ்க்கையே நடத்திட்டு இருக்கான். அப்படிப்பட்டவனுக்கு என் பொண்ணு கட்டிக்குடுக்குறீங்களே அதையும் சொல்ல வேண்டியது தானே” என்றார் சாந்தா.

அவர் சொன்னதை எல்லாம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியாகினர்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.